Friday, November 29, 2013

ஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்

                                           



இன்ட்ரோ  
                          பேண்டஸி படங்களின் சீசன் இது. இரண்டாம் உலகத்தை தொடர்ந்து மேல் லோகத்திற்கு மக்களை நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் அழைத்துச் செல்கின்றனர். (அனேகமாக அதிசய பிறவிக்குப் பின் இதுதான் என்று நினைக்கிறேன்). அதுவும் முருகன் "டெம்பிள் ரன்" விளையாட ஐ-பேட், விநாயகர் தொந்தியை குறைக்க ட்ரெட் மில், நாரதருக்கு கிடார், பார்வதிக்கு ஐ-போன் மற்றும் மக்களை பார்க்க சிவபெருமானுக்கு ஆப்பிள்-மேக் என  "ஹைடெக் கைலாயத்தை" வடிவமைத்திருக்கிறார்கள். நகைச்சுவையை மட்டுமே பிரதானமாக கொண்டு மாடர்ன் சிவபெருமான் நடத்தும் திருவிளையாடலே நவீன இந்த சரஸ்வதி சபதம்..


கதை         
                            குடிப்பழக்கம் இன்றைய காலகட்டத்தில் அநேகமாக எல்லா இளைஞர்களிடமும் பரவிக் கிடக்கிறது. குடிப்பது நாகரீகமாகவே கருதப்படும் நிலையும் உருவாகி வருகிறது. இன்றைய இளைஞர்களை வழிநடத்த, குடிப்பழக்கம் தவறானது என்று உணர்த்த கடவுள் நடத்தும் சித்து விளையாட்டு தான் படத்தின் கதை. இதனிடையே ஜெய்-நிவேதா தாமஸ் இடையே மெல்லியதாய் ஒரு காதல் கதையும்..

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              படத்தின் எதார்த்த ஹீரோ VTV கணேஷ் தான். மனிதர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் படத்தை நகர்த்திச் செல்வது இவர்தான். ஓரிரு படங்களுக்கு பிறகு இவர் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ராஜா ராணியின் வெற்றிக்கு பின் ஜெய் நடித்து வந்திருக்கும் படமென்பதால் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். சத்யன் இடையிடையே சிரிப்பை வரவழைத்தாலும் இன்னும் கொஞ்சம் உழைத்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.
                               
                              சுப்பு பஞ்சு சிவபெருமான் வேடத்திற்கு அருமையாக பொருந்தியிருக்கிறார். இவரும் மனோபாலாவும் வரும் காட்சிகள் கலகல.. பார்வதி வேடம் தேவதர்ஷினிக்கு, அம்மணி காமெடியில் கலக்குகிறார். கேரள இறக்குமதி நிவேதா தாமஸ் பெரிய வேடம் இல்லையென்றாலும் தமிழில் ஒரு ரவுண்ட் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளது. மனோபாலா, படவா கோபி, சித்ரா இலட்சுமணன், ராஜ்குமார் என ஒவ்வொருவரின் தேர்வும் அருமை.


                                "கோவை காமராஜ் சித்த வைத்தியசாலை", வாரிசு அரசியல், விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் என தற்போதைய தமிழ்நாட்டு நிலவரங்களை கிண்டல் செய்வதில் துவங்கி, நகைச்சுவையாய் நகர்ந்தாலும் நான்கே கதாபாத்திரங்கள் கொண்டு கதை நகர்த்த முற்படும் போது இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதை இருந்திருக்கலாம். வசனங்களில் சிக்ஸர்கள் அடித்த போதும் காட்சியமைப்புகள் சில இடங்களில் தள்ளாடுவதை தவிர்த்திருக்கலாம்.


இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட்  தயாரித்துள்ள இந்தப்படத்தில் பிரேமின் இசை பாடல்களில் இனிமையாக இருந்த போதும் பின்னணி, முன்னணியில் குறைவாகவே இருந்தது. தனித்தீவில் சிக்கிக் கொண்ட நால்வர் செய்யும் சேட்டைகளை துறுதுறு இசையால் இன்னும் சிறப்பாய் மீட்டியிருக்கலாம். சந்துருவின் இயக்கம் எழுத்தாளர் சந்துருவின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. ஆனால் நல்ல முயற்சி என்றே சொல்லலாம்.


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 தேங்காய் தலையில் விழுந்து செந்தமிழ் பேசும் கணேஷின் காமெடி. வைத்திய குடும்பத்தை கிண்டல் செய்து வரும் காட்சிகள். "தமிழ் கடவுள்" முருகன் ஆங்கிலம் பேசும் காட்சி என பல இடங்கள் நல்ல நகைச்சுவை. சில இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பேமிலி ஆடியன்ஸும் ரசித்திருக்க வாய்ப்பிருந்தது.

                  Aavee's Comments - Saraswathi's Challenge brings lots of fun.




Wednesday, November 27, 2013

ஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)

                   

                  இ.ஆ. பாலகுமாராவுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் பண்ணையாரும் பத்மினியும். காரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை என்று சொல்லப் படுகின்ற இந்தப் படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன். மறைந்த நம் வாலிபக் கவிஞர் வாலி பாடல்களை எழுதி இருக்கிறார். இசையமைப்பாளரும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். சோனி நிறுவனம் இதன் ஆடியோவை வெள்ளியன்று வெளியிட்டது.


                 1. SPB சரண் மற்றும் அனு ஆனந்த் பாடியிருக்கும் பாடல் "எனக்காக பொறந்தாயே" எனும் பாடல். இரைச்சல் இல்லாத இசையில் நமக்கு பழைய SPB பாடலை கேட்பது போல் இருக்கிறது. ஏ.ஆர். ரகுமானின் டச் ஆங்காங்கே தெரிகிறது.

                   2. இதே பாடல் மீண்டும் "ஒனக்காக பொறந்தேனே" என்று பல்ராம் மற்றும் சந்தியாவின் குரல்களில் ஒலிக்கிறது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமான இசை நம்மை இன்னும் கொஞ்சம் பழைய காலத்திற்கு அழைத்து செல்வதை உணரலாம்.

                   3. "பேசுறேன்..பேசுறேன்" பாடலை இசையமைப்பாளர் தன்னுடைய சொந்தக் குரலில் பாடி இசை விருந்து படைத்திருக்கிறார். இடையிடையே கிராமத்து பாட்டிகளின் ஒப்பாரியையும் டிஜிட்டலில் பதிவு செய்திருக்கிறார்.  ஒரு சாயலில் யுவனின் குரலை நினைவுபடுத்திப் போகிறார்.

                    4.  "எங்க ஊரு வண்டி" நெய்வேலி ஸ்ரீராம், அகிலேஷ், அல்லான், கௌதம், ஹரிப்ரியா, அஞ்சனா, யாழினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கும் குதூகலப் பாடல். காரின் பெருமை பேசும் இந்தப் பாடல் நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு ஒரு வித்தியாசமான பாடலாக இருக்கும்.

                     5.  காந்தக் குரலுக்கு சொந்தக் காரன் 'கார்த்திக்' மற்றும் பிரசாந்தினி பாடியிருக்கும் டூயட் "காதல் வந்தாச்சோ". கிராமத்தில் இருவருக்குள் காதல் தோன்றும் தருணம் பாடலாய் வருகிறது.

                      முதல் முறை கேட்கையிலேயே மனதை வருடிச் செல்கிறது.  குத்துப் பாடல்களோ, ஹீரோ இன்ட்ரோ சாங்கோ இல்லாமல் வந்திருக்கும் இந்த ஆல்பம் நிச்சயம் அந்த "பத்மினி" காரைப் போலவே பழையதாய் தோன்றினாலும் எப்போதும் "OLD is GOLD" அல்லவா?



                       

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-5)

பகுதி-1     பகுதி-2




                     அந்த 'அதிபயங்கர' கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தப்பித்த ஆனந்த் தன் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் கண் மறையும் தூரம் வரை சென்றான். பின் அந்த அடியாளிடமிருந்து கிடைத்த பேப்பரை எடுத்துப் பார்த்தான். வழக்கம்போல் ஒன்றும் விளங்காமல் போகவே அதை உள்ளே வைத்துவிட்டு மணி ஐந்தை காட்டியதால் மெரீனா பீச்சை நோக்கி சென்றான். அங்கு நின்றிருந்த லாவண்யா ஆனந்தின் சட்டையில் ஆங்காங்கே தெளித்திருந்த ரத்தத் துளிகளை பார்த்து அதிர்ச்சியுற்று "ஆனந்த் இதென்ன ப்ளட் ஸ்பாட்ஸ்?" என்றாள். "வர்ற வழில ஒரு கிடா வெட்டுக்கு போயிட்டு வர்றேன், அதான்." என்றதும் அவள் முறைக்க பின் அவளிடம் நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பின் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த அந்த பேப்பரை எடுத்து அவளிடம் நீட்டினான். அதில்

OUR NEXT TARGET
உன் உதட்டோரம் சிவப்பே..
காதலி, காதலி காதலால் தவிக்கிறேன்..
 ஒரு மணி அடித்தால். 

                         என்று எழுதியிருந்தது.  அதைப் படித்துவிட்டு லாவண்யா "ஒருவேளை பாட்டு பதிவு பண்ண கொடுத்திருப்பானோ?" என்றாள். "நோ..நோ.. அதுக்கு எதுக்கு OUR NEXT TARGETன்னு எழுதணும்.. 
இதுக்குள்ள யாரோ ஒருத்தர் பேர் இருக்கணும். 
அதைத்தான் நாம கண்டு பிடிக்கணும். 
அப்புறம் இந்த கேஸை முடிக்கணும்" 

                                என்று TR ஸ்டைலில் சொல்ல அதை ரசித்தபடி மெய்மறந்து நின்றாள் லாவண்யா.  "சரி சரி, என் டயலாக் டெலிவரிய ரசிச்சது போதும், இப்போ அந்த மூணு பாட்டும் எந்த படத்துல வருதுன்னு சொல்லு பார்ப்போம்" என்றான். அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு "அவ்வை ஷண்முகி, காலமெல்லாம் காதல் வாழ்க, அப்புறம் முதல் பாட்டு ... ம்ம் .. பாஞ்சாலங்குறிச்சின்னு நினைக்கிறேன். மூணு பாட்டிலையும் லவ் தான் மெசேஜ்" என்றாள்.  "ஆமா, அந்த கொலைகாரன் லவ் லெட்டர் எழுதியிருக்கான் போலிருக்கு போலிசுக்கு"  என்ற அவன் நக்கலை செல்ல கோபத்துடன் ரசித்த அவள் " இப்படி கிண்டல் பண்ணினா நான் ஹெல்ப் பண்ண வரமாட்டேன்" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.  "ஒக்கே, டார்லிங்.. கூல் டவுன்" என்று அவளை சமாதானப்படுத்திய ஆனந்த் "ப்ளீஸ் ட்ரை அகைன்" என்றான்.
  
                         சிறிது நேரம் தன் சுடிதாரின் நுனியை சுற்றியவாறே யோசித்தவள் திடீரென்று "வாவ்..ஆனந்த், ஒரு மேஜர் மேட்சிங் கண்டுபிடிச்சிட்டேன்." "வாட் ஈஸ் இட்" " மூணு பாட்டுமே தேவா சார் ம்யுசிக் பண்ணினது." " இல்லம்மா,  கொலைகாரன் இந்த முறை குறி வைக்கப் போறது H ல.. தேவா எப்படி வரு,,ம்.. வெயிட் எ மினிட்.. யெஸ் ஐ காட் இட்.. ஐ காட் ஹிம் லாவண்யா.." என்று அவளை தூக்கி சுற்றினான்.. "என்ன பேருப்பா" என்றாள் மை எழுதிய அவள் கண்கள் விரிய.."கொலைகாரன் இந்த முறை குறி வைக்கப் போறது H ல.மூணு பாட்டையும் பாடினது ஹரிஹரன். ஸோ ஹரிஹரன் தான் இன்னைக்கு கொலையாளியோட டார்கெட். இன்னொரு முக்கியமான விஷயம், கொலையாளி யாருன்னும் நான் கண்டுபிடிச்சாச்சு." என்றான் ஆனந்த். "யாரது?" என்றாள் அவள் ஆச்சர்யத்துடன். 

                          "ம்ஹூம், அவ்வளவு ஈசியா சொல்லிடுவேனா.. ஒரு கிஸ் பண்ணினாதான் சொல்லுவேன்" "நோ..நீங்க சொன்னாதான் கிஸ்" என்று இருவரும் மாறி மாறி கூறிக் கொண்டிருக்க கடைசியில் ஆனந்த் வென்றான். அவன் கொலையாளியின் பெயர் சொன்னதும் அவள் தன் ரெட்டினா டிஸ்ப்ளே ஒளிரக் கேட்டாள் "ரியலி? என்னால நம்பவே முடியலே." என்றாள். "பட் தட்ஸ் தி ட்ரூத்" என்று கூறிவிட்டு யமஹாவை கிளப்பினான். லாவண்யாவை விட்டுவிட்டு பின் நேராக சுந்தர் வீட்டை அடைந்தான். அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கியது. உடனே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் சித்து வேலையை காட்டியவுடன் மன்மோகன் சிங் போல் இறுகப் பூட்டியிருந்த பூட்டு பவர் ஸ்டார் வாய் போல் திறந்து கொண்டது. உள்ளே சென்று ஹாலின் ஓரத்தில் தொலைபேசிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அந்த டெலிபோன் டைரக்டரியை புரட்டினான். அதில் அவன் எதிர்பார்த்தபடியே ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அந்த ஏழு பேர் பெயரும் டிக் செய்யப்பட்டிருந்தது. அதில் H வரிசையில் ஹரிஹரன் என்ற தொழிலதிபரின் பெயருக்கு நேராகவும் டிக் செய்யப்பட்டிருந்தது. நடக்கவிருக்கும் அபாயத்தை உணர்ந்த ஆனந்த் அதைத் தடுத்து நிறுத்த வேண்டி உடனே யமஹாவிற்கு விரைந்தான். யமஹா ஹரிஹரன் வீடு நோக்கி செல்கையில் சூரியன் மெல்ல அஸ்தமித்துக் கொண்டிருந்தது.


அடுத்த பகுதியில் முற்றும்..



Sunday, November 24, 2013

அப்பாவின் ஸ்கூட்டி!

                 


                     விபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு செல்வதாயினும் அனாமிகாவுடன் (i20) மட்டுமே சென்று வந்தேன். மாலை அணிந்தபின் தினமும் காலையும் மாலையும் கோவில் செல்வது வழக்கம். கோவில் இருப்பது எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில். தினமும் காரில் செல்வது பெட்ரோல் விரயம், மேலும் கோவிலுக்கு அருகில் பார்க்கிங் செய்ய ஏதுவான இடம் இல்லை என்பதாலும் இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்தேன். விபத்திற்கு பிறகு பிரிஸ்ஸில்லாவை ( Passion Pro ) உபயோகிக்க வேண்டாம் என்றும், அதை விற்று விடுமாறும் நண்பர்களும், உறவினர்களும் கூற நானும் பிரிஸ்ஸில்லாவை தவிர்த்து விட்டேன். மீதம் வீட்டில் இருந்தது அப்பாவின் ஸ்கூட்டி மட்டுமே.

                     தங்கை ஓட்டுவதற்காக வாங்கியது என்றாலும் பெரும்பாலும் அப்பாதான் அதை அதிகம் பயன்படுத்துவார். நான் அந்த ஸ்கூட்டியை வாங்கியதிலிருந்து ஒருமுறை கூட ஒட்டியதில்லை. மேலும் ஸ்கூட்டி போன்ற சிறிய வாகனங்கள்  அதிகம் ஒட்டி பழக்கமும் இல்லை. நேற்று அப்பாவிடம் சாவி வாங்கிக் கொண்டு வண்டியை போர்டிகோவிலிருந்து வெளியே எடுத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு முதல் முறை வண்டியை எடுப்பதால் கைகள் வண்டியை தாங்கும் அளவிற்கு பலம் உள்ளதா என்று சுய பரிசோதனை ஒன்று செய்து கொண்டேன். பின்னர் கீயை நுழைத்து வண்டியின் செல்ப் ஸ்டார்ட்டை அழுத்த வண்டி ஒரு முக்கலோடு ஸ்டார்ட் ஆக மறுத்தது. மீண்டும் மீண்டும் அழுத்தியும் என் முயற்சி தோல்விதான். வண்டியை ஸ்டாண்ட் இட்டு கிக்கரை உதைத்தும் பயனில்லை. அப்போது உள்ளிருந்து வந்த அப்பா, 'இவ்வளவு வருஷமா வண்டி ஓட்டறே, ஸ்டார்ட் பண்ண தெரியல' என்றபடி  வந்து ஒரு உதை உதைத்தார். என்ன ஆச்சர்யம். ஸ்டார்ட் ஆகிவிட்டது. (அவர் கால்களில் செருப்பு இருந்தது, என் கால்களில் செருப்பில்லை என்பது வேறு விஷயம்)

                      வண்டியை நகர்த்திய மூன்றாவது நொடி மனதில் ஏதோ ப்ளாஷ் ஆக, பிரேக்கை அழுத்தினேன். உள்ளே சென்ற அப்பா வெளியே வந்து 'என்னாச்சு' என்றார். 'இல்ல, இங்க நீங்க ஸ்டார்ட் பண்ணி கொடுத்துட்டீங்க. அடுத்து கோவில்ல நான் நிறுத்திட்டு எடுக்கிறப்போ ஸ்டார்ட் ஆகலேன்னா என்ன பண்றது?' என்றேன். வேகமாக அருகில் வந்தவர் வண்டியை ஆப் செய்தார். மீண்டும் ஆன் செய்துவிட்டு 'இப்போ ஸெல்ப் ஸ்டார்ட் அமுக்கு' என்றார். நானும் அழுத்தவும் உடனே ஸ்டார்ட் ஆனது. நானோ ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று விட்டேன். இப்போது முழு திருப்தியுடன் வண்டியை கிளப்பி பொறுமையாக கோவிலை அடைந்தேன். கோவிலில் தொழுதுவிட்டு வெளிவந்து வண்டியை ஆன் செய்து ஸ்டார்ட் பண்ண நினைத்தவனுக்கு ஒரு சந்தேகம். வண்டி ஸ்டார்ட் ஆகுமா என்று.

                        ஒரு சிறு சப்தமும் இன்றி அழகாக ஸ்டார்ட் ஆனது. இந்த வண்டியப் போய் ஸ்டார்ட் ஆகலேன்னு திட்டினேனே.. எனக்கு தான் சரியா ஹேண்டில் பண்ணத் தெரியல என்று என்னை நானே திட்டிக் கொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தேன். ஒரு சிக்னல் கடந்த போது உள்ளே வந்துவிட்ட ஒரு ஆட்டோவின் மேல் இடித்துவிடாமல் இருக்க ஓரமாய் ரோட்டினின்றும் கீழிறக்க வண்டி நின்று போனது. மீண்டும் 'ஸெல்ப் ஸ்டார்ட்' டை அமுக்க ஸ்டார்ட் ஆகவில்லை. நான்கைந்து முறை ஸெல்ப் முயற்சித்தும் பயனில்லை. சென்டர் ஸ்டாண்ட் இட்டு வண்டியை அப்பா கிக் செய்தது போலவே உதைக்க ம்ஹும், இப்போதும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. என் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம். படபடவென பல முறை உதைத்தேன். பொறுமையாக சில முறை உதைத்தேன். எதற்கும் மசியவில்லை அது.

                           செருப்பில்லாத கால்கள் விண்ணென்று வலிக்க உதைக்கும் முயற்சியை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு செய்வதறியாமல் நின்றேன். என்ன சோதனை இது ஐயப்பா என்று மனதிற்குள் நினைக்க, அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் ஐயப்பனின் மெசஞ்சர் போல் தானே வந்து 'கொடுங்க நான் ட்ரை பண்றேன்' என்றார். அவரும் சில பல முறை உதைத்து பார்த்துவிட்டு முடியாமல் போகவே கடைசியில் வண்டியின் டேஷ் போர்டை பார்த்துவிட்டு என்னை நோக்கி நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தார். "தம்பி, வண்டி ஓடுறதுக்கு பெட்ரோல் வேணும். இங்க பாருங்க சுத்தமா காலியா இருக்கு' என்று அவர் சொன்ன பிறகே அதை கவனித்தேன். பெட்ரோல் அளவை காண்பிக்கும் முள் என்னைப் பார்த்து "E" என்று இளித்தது. 'கொஞ்சம் தள்ளிட்டு போனா ஒரு கிலோமீட்டர்ல பெட்ரோல் பங்க் இருக்கு' என்று கூறிவிட்டு சென்றார்.

                               நானும் வேறு வழியின்றி வண்டியை தள்ள ஆரம்பித்தேன். எப்போதும் வண்டிக்கு புல் டாங்க் பெட்ரோல் அடிக்கும் எனக்கு எனது தந்தையின் செய்கை வித்தியாசமாக இருந்தது. என் வண்டியில் பெட்ரோல் எப்போதுமே ரிசர்வுக்கு கீழ் செல்ல விடமாட்டேன். அப்பாவின் வண்டியில் எப்போதும் ரிசர்வுக்கு மேல் வந்து பார்த்ததில்லை. என் நண்பர்கள் சிலர் கூட இதுபோல் தான் வண்டிக்கு பெட்ரோல் ஊற்றுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் கொடுமை. பெட்ரோல் நிறைய இருந்தால் ஆவியாகிவிடும் என்பது. இப்போது என் ஆவி போக தள்ளிக் கொண்டு சிரமத்துடன் நடந்த எனக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் பார்த்து திட்ட வேண்டும் போல் இருந்தது. இவர்களுக்கு ரிசர்வ் என்ற ஒன்றின் பயனே புரியவில்லையே என்ற ஆதங்கம் வேறு.

                             ஒரு வழியாய் வியர்த்து வடிய பங்க்கிற்கு முன் வந்து நின்றபோது அப்பாவிடமிருந்து போன். பெட்ரோல் இல்லாமல் ஏன் வண்டியை கொடுத்தார் என்று  அப்பாவிடம்  கேட்க எண்ணி வாய் திறந்த என்னை பேச விடாமல் 'சொல்ல மறந்துட்டேன், வண்டில பெட்ரோல் இருக்காது. வழில நின்னுடுசுன்னா சீட் கவர ஒப்பன் பண்ணிப் பாரு, உள்ளே ஒரு பாட்டில்லே பெட்ரோல் வச்சிருக்கேன். ஊத்திகிட்டு வா.. அந்த கைய வச்சுகிட்டு வண்டிய தள்ளிட்டு வராதே.' என்றவரிடம் 'சரி' என்பதை தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.



இரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்?

                        தமிழ் சினிமாவின் இத்தனை வருட பாரம்பரியத்தின் பெயர் கெடுக்க வேண்டியே வெளிவந்திருக்கும் படம் இந்த இரண்டாம் உலகம். இதுக்கு மேல கழுவி ஊத்த முடியாத அளவுக்கு எல்லாராலும் கழுவி ஊற்றப்பட்ட பின்னாலும் பளபளன்னு இருக்கே ஏன். (ரொம்ப கழுவிட்டாங்களோ? ). செல்வராகவன் தமிழ் மக்களுக்கு படம் கொடுப்பதற்கு முன் யோசிக்க மறந்த சில விஷயங்கள்.



                     தப்பு 1. மிஸ்ஸிங் சந்தானம் - இரண்டில் ஏதாவது ஒரு உலகத்திலாவது ஆர்யாவின் முன் இரண்டு டம்ளர்களை வைத்து "டே, காதல்ன்றது அவ்ளோ சாதாரண மேட்டர் இல்லே. சரக்கை ராவா அடிக்கிறத விட குமட்டிட்டு வர்ற விஷயம்" ன்னு சந்தானம் சொல்ற மாதிரி ஒரு டயலாக் வைக்கலேன்னா அப்புறம் இவரெல்லாம் என்னப்பா டைரடக்கரு?

                      தப்பு 2. செல்வராகவன் படம்ன்னாலே நாயகனுக்கும் நாயகிக்கும் விரசமான ஒரு பாடல் காட்சி வைக்கணும். குறைஞ்ச பட்சம் "A" சர்டிபிக்கேட் வாங்குற அளவுக்கு காட்சிகளாவது வேண்டாமா? (தொலைதூர தேசத்தில் அதுவும் பெண்களை போகப் பொருளாய் பார்ப்பதாய் சொல்லும் ஊரில் கூட இதை காட்டவில்லையே..) சரி கடைசிக்கு ஒரு ஐட்டம் நம்பராவது இறக்கியிருக்கலாம். அதுவும் இல்லே.

                     தப்பு 3.  நம்ம ஹீரோ கொஞ்சம் கழண்ட கேஸ் போல சைக்கோத்தனத்துடன் உலவ வேண்டாமா? பேன்டஸி படம்கிறதுக்காக உங்களுடைய டிரேட் மார்க்கை விட்டுக் கொடுத்தா எப்படி செல்வா சார்?

                    தப்பு 4.   குத்துப்பாட்டு/டாஸ்மாக் சாங் இப்படி எதுவுமே இல்லையே.. அப்படி இருக்கிற ஒரு சாங்கும் பீலிங்க்ஸோட பாடி கெடுத்துட்டாரே தனுஷு.

                    தப்பு 5.  படத்துல வில்லன் எங்கேன்னு தேட வேண்டியிருக்குது. மூச்சு விடாம மூணு நிமிஷத்துக்கு பேசிட்டே போய் வில்லனுக்கு முன்னாடி இருக்கிற பெஞ்ச தட்டி தூசி கிளம்பி வில்லன் தும்ம தயாரா இருக்கும் போது ஹீரோ ஒரு பஞ்ச் டயலாக் சொல்ல வேணாமா?  இதைக் கூட செய்யாம "பஞ்ச்"மகா பாவத்தை செய்துட்டாரே இயக்குனர்.

                     இதெல்லாம் விடுங்கப்பா, கடைசிக்கு அருவாளால டயர வெட்டுறது, வெள்ளைச்சட்டை போட்டுகிட்டு பத்துபேரை வெட்டி சிவப்பு  சட்டையா மாத்திறது, ஸ்கார்ப்பியோவ தலைக்கு மேல பறக்க விடறது, கிளைமாக்ஸ் காட்சிய ரயில்வே ஸ்டேஷன்லேயோ, ஹாஸ்பிடல்லயோ வைக்காததுன்னு ஒரு நல்ல தமிழ் சினிமாவின் இலக்கணம் எதுவுமே இல்லாம சும்மா காதல்ன்ற ஒரு விஷயத்த மட்டும் சொன்னா நாங்க ஏத்துக்குவமா? போங்கப்பு.. போய் நல்ல கதையா ரெடி பண்ணிட்டு வாங்க.. முடிஞ்சா நாலு ஒலக சினிமாவ உல்டா பண்ணுங்க.. இல்லே பிளாக் காமெடின்னு சொல்லி எல்லாரையும் பைத்தியக்காரனாக்குங்க. இது எதுவுமே இல்லாம படம் பார்க்க சொன்னா நாங்க எப்புடி பார்க்குறதாம். இப்பல்லாம் முப்பது ரூபாயக்கு வித்துட்டு இருந்த டிவிடி நாப்பது ரூபாயக்கு விக்கிறாங்க.






Friday, November 22, 2013

ஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்


இன்ட்ரோ  
                          இயக்குனர் செல்வராகவனின் கனவுத் திரைப்படம் என பரவலாக பேசப்படும் இந்தப் படம் நிச்சயம் "Fantasy" திரைப்பட வரிசையில் ஒரு தனியிடம் பெறும் என்பதில் ஐயமில்லை. இன்னும் கொஞ்சம் தரமான CG மற்றும் பின்னணி இசை அமைந்திருந்தால் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருந்திருக்கும்.




கதை         
                             திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - இது பழமொழி. நிச்சயிக்கப்பட்ட இருவர் நிச்சயம் இவ்வுலகத்தில் சேர இயலாமல் போனாலும் இரண்டாவதாய் இருக்கும் மற்றொரு உலகத்தில் சேர்ந்தே ஆவார்கள் என்பதை காதலுடனும், கத்திரிக்காயுடனும் (அனுஷ்கா ஒரு காட்சியில் சாப்பிடுவார்)  விளக்குகிறது கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               'நான் கடவுள்' திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா 'நடித்திருக்கும்' படம் இது. ஆங்காங்கே செல்வராகவனின் வழக்கமான சைக்கோ கதாநாயகன் எட்டிப் பார்த்தாலும் இரு வேறு உலக ஆர்யாக்களும் சுமார் ஆறு வித்தியாசங்களுடன் வருகின்றனர்.  அதிலும் தற்கால ஆர்யா அனுஷ்கா மனதில் மட்டுமல்லாது நம் மனதிலும் இடம் பிடிக்கிறார். வேற்றுலக ஆர்யா கொஞ்சம் முரடன், மூர்க்கன், முட்டாள் என பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  அனுஷ்கா அசத்தல் நடிப்பு. மருத்துவராக வரும் அனுஷ்கா "தாண்டவம்" படத்தில் வருவது போலவே முகபாவங்களுடன் வந்த போதும் நடிப்பில் ஒரு படி முன்னேறி இருக்கிறார். கோவாவில் இவர் ஆர்யாவை வெறுக்கும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார். வேற்றுலக வர்ணாவாக பெண்ணடிமைத் தனத்தை எதிர்ப்பவராய் வரும் போது கண்களில் ஒரு கணம் ஜான்சி ராணியை நினைவு படுத்துகிறார்.



                                இவர்கள் இருவர் தவிர ஆர்யாவின் அப்பா, அனுஷ்காவின் தோழி, மேடம், ஆர்யாவின் நண்பர் (சுட்டகதை ஹீரோ), கடவுளாக வரும் பெண்  ஆகியோரும் சிறப்பாக செய்துள்ளனர். கெட்ட சக்திகளாக வரும் ஆட்கள் ஒவ்வொரு முறையும் அடிவாங்கி போவதால் அவர்களிடத்தில் ஒரு பயம் ஏற்படவே இல்லை. படத்திற்கு ஒரு முக்கிய கதாப்பாத்திரம் அது என்ற போதும் இயக்குனர் அதை கண்டுகொள்ளாமல் விட்டதேனோ?

                                                                                              CG        
                                    தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பார்த்ததை விட சிறப்பான தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது. ஆனாலும் ஹாலிவுட் தரத்தை ஒப்பிடும் போது நாம் இன்னும் பின்னில் தான் இருக்கிறோம். ஓரளவு தயாரிப்பாளரின் கையைக் கடிக்காத அளவிற்கு அதே சமயம் தான் கற்பனை செய்த அந்த இரண்டாம் உலகத்தை வடிவமைத்ததற்காக செல்வராகவனுக்கும், CG தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகள். மூன்றாண்டுகளுக்கு முன்னர் வந்த அவதார் திரைப்படத்தில் வரும் மிருகத்தை பார்க்கும்போது நமக்கு மனதிற்குள் பயம் வரும். ஆனால் ஒரு நாடே அடக்க பயப்படும் இராட்சத சிங்கம் எவ்வளவு டெர்ரர்ராக இருக்க வேண்டும். ஆனால் "நான் கடவுள்" ராஜேந்திரனுக்கு மோஷன் கேப்சர் செய்தது போல் இருந்தது. இரண்டு உலகங்களையும் ஒன்று சேர்த்த இடத்தில் CG கைதட்டல் பெறுகிறது.

இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 செல்வராகவனின் மிக மெச்சூர்டான ஒரு படைப்பாய் இதைப் பார்க்கிறேன். ஓரிரு வசனங்கள், காட்சியமைப்புகள் குறைபாடுகளைத் தவிர ஒரு நல்ல தெளிவான திரைக்கதை. ஆனால் இதுபோன்ற கமர்ஷியல் விஷயங்கள் குறைவாயுள்ள  படங்கள் வெற்றி பெறுவது ரசிகனின் அன்றைய மனநிலையை பொறுத்தே அமையும். இசை- பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ், பின்னணிக்கும் இரண்டு பாடல்களுக்கும் அனிருத்.  ஒரு பீரியட் படத்திற்கு அனிருத்தின் இசை கொஞ்சம் அமெச்சூர் தனமாக இருந்தது. ஏ.ஆர். ரகுமான் அல்லது இளையராஜாவின் கைவண்ணத்தில் இன்னும் சிறப்பாய் வந்திருக்கும் என்பது ஆவியின் எண்ணம். பாடல்கள் இளமை, இனிமை, குளுமை. தாராளமாய் செலவு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு ஒரு ஷொட்டு!

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 'கனிமொழியே' பாடல் காண்பவர் மனதை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. வர்ணாவுக்கும், மதுபாலகிருஷ்ணனுக்கும் இடையே அமைந்த காட்சிகள் அருமை. சில செல்வராகவன் "டச்" வசனங்கள். இரண்டாம் உலகம் கொஞ்சம் பொறுமையாய் இம்மை மறுமையில் நம்பிக்கையோடு நிதானமாக பார்க்க வேண்டிய படம். ஜாலியான பொழுதுபோக்கு சித்திரம் எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

Aavee's Comments -Selva's dreamworld not for common man!

Thursday, November 21, 2013

அஜித்-விஜய் மோதல்!!



                   திரை உலகை பொறுத்தவரை வெளியே நண்பர்களாக பழகினாலும் உள்ளே ஒரு போட்டி, பொறாமை எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு தலைமுறையிலும் இதுபோன்ற போட்டி தொடர்ந்து கொண்டே தான் வந்திருக்கிறது. எம்ஜியார்-சிவாஜி, ரஜினி-கமல் தாண்டி இப்போது அஜித்-விஜய் இருவருக்குமான போட்டி இன்று உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது.



                   வரும் பொங்கல் திருநாள் அன்று அஜித் நடித்த "வீரம்" திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே விஜய் மோகன்லால் இணைந்து நடிக்கும் "ஜில்லா" படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வீரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியிடுவது என ஆரம்பம் பட வெளியீட்டிற்கு முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒன்று. இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் அதே தினத்தில் வெளியிடுவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

                       ஆரம்பம் படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பின் கம்பீரத்துடன் பெயருக்கேற்றார் போல் களமிறங்குகிறது "வீரம்". இப்படத்தின் டிரைலர் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது எல்லோரும் அறிந்ததே.தலைவா சுமாராக ஓடிய போதும், மோகன்லால் உடன் நடித்திருப்பதால் ஜில்லா படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆகையால் வரும் பொங்கலுக்கு மக்களுக்கு சுவையான பொங்கலாக இருக்குமென்று தெரிகிறது.



                      திரையில் போட்டியும் பொறாமையும் நிறைந்திருந்த போதும் அஜித் மற்றும் விஜய் வெளியில் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். அவ்வப்போது குடும்பத்துடன் சந்தித்துக்கொண்டும், மகிழ்ச்சியான நேரங்களை பகிர்ந்துகொண்டும் தான் இருக்கின்றனர். ஆகையால் இரு படங்களும் வெற்றிபெற ஆவிடாக்கீஸ் சார்பில் வாழ்த்துகிறோம்.


Wednesday, November 20, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-4)

பகுதி-1 


                       
                      மாலையில் ஆனந்த் லாவண்யாவை ஹாஸ்டலில் டிராப் செய்துவிட்டு சுந்தர் வீட்டுக்குச் செல்ல அங்கு சுந்தர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ஆனந்தின் குரல் கேட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றான். ஆனந்த் அவனைப் பின்தொடர்ந்து தன் யமஹாவில் சென்றான். சுந்தர் பல நெடுஞ்சாலைகளை கடந்து ஒரு குறுகலான சந்தில் நுழைய, ஆனந்தும் பின்னாலேயே செல்ல அப்போது மறைவில் ஒளிந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் ஒரு உருட்டுக் கட்டை கொண்டு ஆனந்தின் மண்டையில் ஒரு போடு போட்டான். ஆனந்த் மயங்கியபடியே பைக்கை சுவற்றில் இடித்துவிட்டு கீழே விழுந்தான்.

                         அவன் கண்விழித்த போது ஒரு சேரில் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அவன் கைகள் ஒருசேர முன்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவன் எதிரில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனந்த் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு விசில் அடித்தான். ஒருவன் திரும்பி 'என்ன' என்றான். 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான். ஒரு டம்ளரில் எடுத்து வந்த அடியாளிடம் " ஏய், என்ன செய்யற நீ. இவனுக்கு சோறு தண்ணி எதுவும் கொடுக்காதீங்க.பட்டினி போட்டே சாகடிக்கணும்' என்றபடி கோட் சூட் அணிந்த தாடிவாலா ஒருவன் உள்ளே நுழைந்தான்."டேய் ஆனந்த், உனக்கு நான் ஏற்கனவே வார்ன் பண்ணினேன். நீ கேக்கலே. இப்போ அனுபவி. நீ சாகப் போறேங்கிறதுக்காக உன்கிட்ட என்னைப் பத்தி எல்லா உண்மைகளையும் வழக்கமா எல்லா வில்லன்களும் சொல்ற மாதிரி சொல்வேன்னு நினைக்காதே. நான் புத்திசாலி" என்றவுடன் ஆனந்த் கிண்டலாக சிரித்தான்.

                          'ஏண்டா சிரிக்கிற?' 'நிறைகுடம் நீர்தழும்பல் இல். புத்திசாலின்னு மனசில நினைசுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டீங்க. கொலை நடந்த இடத்துல யாருக்கும் கிடைக்காத தடயம் எனக்கு கிடைச்சிருக்கு.' என்று ஆனந்த் சொன்னவுடன் அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. 'நா.. எந்த தடயமும் விடலையே' என்றான். 'கொலைகளை நீ செஞ்சா தானே விடறதுக்கு' என்று ஆனந்த் சொல்லவும் அவன் முகத்தில் மேலும் கலவரம் சேர்ந்து கொண்டது. அவன் பதட்டத்தில் ஜன்னல் புறமாக திரும்ப ஆனந்த் கட்டை அவிழ்க்க முயற்சித்தான். சட்டென திரும்பிய அவன், 'டோன்ட் மூவ், தப்பிக்க நினைச்சே, சூட் பண்ணிடுவேன். ஹேண்ட்ஸ் அப் மேன்" உடனே ஆனந்த் "அடேய் அப்ரசண்டி, துப்பாக்கிய தூக்கினதும் ஹேண்ட்ஸ் அப் சொல்லிடறதா? கைய கட்டி வச்சிட்டு ஹேண்ட்ஸ் அப்புன்னா என்ன அர்த்தம். ம்ஹூம் உனக்கு ட்ரெயினிங் பத்தாது."  இதைக் கேட்ட அவன் அடிக்க வர அதற்குள் போன் சிணுங்கியது. அதை காதுக்கு கொடுத்து "ஹலோ, கிருஷ்ணா ஸ்பீக்கிங்" என்றபடி பேச ஆரம்பித்தான். ஆனந்தின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு.

                         அவன் பேசி முடித்ததும் ஆனந்திடம் வந்தான். "அப்ப உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு இல்லே. உன்ன உயிரோட விட்டா எங்களுக்கு ஆபத்து. நான் உன்னை வந்து கவனிச்சுக்கறேன்." என்று கூறிவிட்டு தன் உதவியாளன் ஒருவனிடம் "ராஜ், நம்ம அடுத்த டார்கட் இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன், நீ வழக்கம் போல ஏற்பாடுகள கவனி, மத்தத தலைவர் பாத்துக்குவார்." என்றபடி ஒரு பேப்பரை அவன் கைகளில் திணித்தான். பின்னர் அங்கிருந்த மூன்று அடியாட்களுடன் வெளியேறினான். அவர்கள் சென்றதும் ராஜ் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து ஸ்காட்ச் விஸ்கியை எடுத்து முன்பே குடித்துக் கொண்டிருந்த ஒரு கிளாசில் ஊற்றினான். பின்னர் ஆனந்துக்கு எதிரில் இருந்து ஒரு சோபாவில் அமர்ந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்தான்.

                           நான்கைந்து ரவுண்டுகளுக்கு பின்பு அவன் சற்று தள்ளாடுவதை கண்ட ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின், கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். தப்பி வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்து போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பி " ஹலோ பிரதர், குட் ஈவனிங் அண்ட் குட் பை" என்று கூறி இரண்டு குத்துவிட்டு அவனை ஒரு சேரில் உட்கார வைத்து அவன் கைகளை பின்பக்கமாக கட்டியபடி " டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்.."  என்று கூறிவிட்டு நகர முயன்ற போது அவன் மூளையில் ஒரு பிளாஷ் அடித்தது. திரும்பி வந்து ராஜின் சட்டை பாக்கெட்டில் இருந்த அடுத்த டார்கெட் என கிருஷ்ணா சொல்லிக் கொடுத்த பேப்பரை எடுத்துக் கொண்டான். "ஸீ யு லேட்டர்" என்று அவன் கன்னத்தில் தட்டியபடி வெளியே வந்த ஆனந்த் தன் யமஹா நிற்பதை பார்த்துவிட்டு "புத்திசாலி, புத்திசாலின்னு சொல்லிட்டு குடிகாரன காவலுக்கு வச்சிட்டு, பைக்கையும் வச்சிருக்கான். கிருஷ்ணா, யு ஆர் ரியலி கிரேட் டா கண்ணா" என்றபடி யமஹாவை கிளப்பினான்.

                               
தொடரும்..

Tuesday, November 19, 2013

திருடாதே பதிவை திருடாதே! (பதிவுலகில் Piracy)


                      ஒவ்வொருத்தரும் ஒரு பதிவு எழுதறதுக்குள்ள டங்குவார் அறுந்து போகுதுங்கிறது பதிவெழுதற ஒவ்வொருத்தருக்கும் தெரியும். கஷ்டப்பட்டு சுமந்து பிரசவித்த ஒரு குழந்தையை இன்னொருத்தன் சொந்தம் கொண்டாடுறது எந்த விதத்திலும் நியாயமில்லை.. பதிவு பிடிச்சிருந்தா அதை மற்றவர்களுடன் ஷேர் பண்றது தப்பில்லே.. ஆனா எழுதின பதிவருக்கு கிரெடிட் கொடுக்காம அத பிரசுரிக்கிறது திருடறதுக்கு சமம்.. சினிமா திருட்டு விசிடி ல ஆரம்பிச்சு இன்னைக்கு பதிவுகள திருடறதுல வந்து நிக்குது..


இனியவை கூறல் தளத்திலிருந்து (Apr 16, 2013)


பகிரப்பட்ட முகநூல் குழுமத்திலிருந்து.. ( Nov 18, 2013)

                      எல்லாருக்குமே தெரியும் நம்ம கலாகுமரன் சார் 'இனியவை கூறல்'  ங்கிற பேருல அறிவியல், அகழ்வாராய்ச்சி, வரலாறுன்னு பல பதிவுகள எழுதி இருக்கார். இது போன்ற பதிவுகள எழுதறதுக்கு பதிவு எழுதணும்ங்கற எண்ணம் மட்டும் போதாது. ஒவ்வொரு தகவலையும் பல்வேறு புத்தகங்களிலிருந்தோ, இணையத்திலிருந்தோ பல மணி நேரங்கள் செலவு செய்து பார்த்து புரிந்து கொண்டு, மக்களுக்கு பயன்படும் அறிய பல தகவல்களை, ஆச்சர்யமூட்டும் விஷயங்களை தர இவர் படும் உழைப்பு கண்டிப்பாக பாராட்டுக்குரியது. அதே சமயம் கொஞ்சம் கூட உழைக்காமல் இவர் பதிவை திருடி ( இவருக்கு கிரெடிட் கொடுக்காமல்) பதிவிட்டவர்களை கண்டிக்கவும் செய்கிறோம்.

இனியவை கூறல் தளத்தில் உள்ளது (March 8,2013)

பகிரப்பட்ட தகவல்.. (Today, Nov 19, 2013)



                        நேற்று இவர் வலைதளத்தில் இவர் எழுதிய "பூச்சியுண்ணும் தாவரம்" என்னும் கட்டுரையை முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அதை அப்படியே காப்பி எடுத்து தன் பெயரில் முகநூலில் பதிவு செய்துள்ளார்கள். இது என்னுடைய பதிவு என்று  அவர் இட்ட பின்னூட்டங்களையும் டெலீட் செய்துள்ளார்கள். (பார்க்க: மேலுள்ள படம்)  இது முதல் முறையல்ல. அது மட்டுமல்லாமல் அவரை ப்ளாக்கும் செய்துவிட்டார்கள். இதுபோல் பல பதிவுகளை எடுத்துக் கொண்டு முறையான அங்கிகாரம் அளிக்காமல் ஷேர் செய்யும் இவர்களை என்ன செய்யலாம் மக்களே? இதற்கு பதிவர்களாகிய நீங்கதான் ஒரு வழி சொல்லணும். தன் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரத்தை இழந்து வலியுடன் இருக்கும் நம் சக பதிவர் கலாகுமரன் அவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்.. சொல்லுங்க!!

           
                 

Saturday, November 16, 2013

ஆவி டாக்கீஸ் - வில்லா


இன்ட்ரோ  
                          இறப்பிற்கு பின் என்ன என்ற கேள்வி தொக்கி நிற்கும் காலம் வரை அமானுஷ்யங்களும், மூட நம்பிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். "Paranormal Activity" என்ற ஆங்கிலப் படத்தின் அத்துணை பாகங்களையும் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், வில்லா படத்தை இயக்கிய தீபன், ஒளிப்பதிவாளர் தீபக் குமார் மற்றும் 'இசைச்சிற்பி' சந்தோஷ் நாராயண் ஆகியோர் இணைந்து ஒரு தரமான த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளனர்.




கதை         
                            விபத்தில் சிக்கி இறந்து போகும் நாயகனின் தாய், தனக்கு சொந்தமாக ஒரு பெரிய வீடு இருப்பதை சொல்லாமல் மறைத்து இறந்து போகும் நாயகனின் தந்தை, எல்லாம் இழந்த போதும் உடன் பக்கபலமாய் நிற்கும் காதலி இவர்களுக்கு நடுவே ஒரு எழுத்தாளன் கம் காதலன் நம் கதாநாயகன். மிகவும் பணக் கஷ்டத்தில் இருக்கும் இவருக்கு ஒரு சொந்த வீடு (வில்லா) இருப்பதாய் தெரிய வர பர்கர் சாப்பிட்டுக்கொண்டே அந்த வீட்டை விற்க வருகிறார். வீட்டை விற்க முற்படுகையில் என்ன நேர்கிறது என்பதே படத்தின் கதை .

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              ஆவி, பேய் என்று எதையும் கண்களில் காட்டாமல் இடைவேளை இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா எனத் தோன்றும் அளவிற்கு நம்மை இயக்குனர் தன் திரைக்கதையால் கட்டிப் போட்டாலும் இது போன்ற படத்திற்கு அமைதியான அதே சமயம் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் நாயகன் தேவை. பீட்சாவில் விஜய் சேதுபதி கலக்கியது போலவே இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார் "சூது கவ்வும்" புகழ் அசோக் செல்வன். இவர் தலைவாரிய ஸ்டைல், அணிகின்ற உடை, உடல் மொழி, உச்சரிப்பு  என ஒவ்வொன்றும் டாப் கிளாஸ். இவருக்கு பக்க பலமாய் சஞ்சிதா. அம்மணி இரண்டாவது படத்திலேயே மனதை கவர்கிறார். (நடிப்பை சொன்னேங்க!) நாசர் சிறிது நேரமே வந்தாலும் திகிலூட்டுகிறார்.

                               பீட்சாவில் வந்த அதே முகங்கள் இதிலும் வந்த போதும் முற்றிலும் வேறுபட்ட கதாப்பாத்திரங்கள் என்பதால் நமக்கு அவர்களின் நடிப்பு சீக்கிரம் பிடித்துப் போகிறது. குறிப்பாக சைக்கியாட்ரிஸ்ட்டாக வரும் கதாப்பாத்திரம் மற்றும் வில்லாவின் முன்னாள் உடைமையாளராக வரும் தாடிவாலா. நாயகனின் நண்பனாக வரும் கதாப்பாத்திரமும் நம் மனசில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது. ஆயினும் கிளைமாக்ஸ் காட்சியில் நாசர் பேசும் வசனங்கள் தெளிவற்று இருக்கும்படி செய்தது திரைக்கதையின் பாகம் என்றாலும் "C" சென்டர் ரசிகனுக்கு கொஞ்சம் புரியாமல் போகலாம்.


இசை-இயக்கம்-ஒளிப்பதிவு
                                 பரிச்சயமில்லாத முகங்கள், மருந்துக்கு கூட இல்லாத நகைச்சுவை, வர்த்தக குத்து/ டாஸ்மாக் பாடல் இது எதுவும் இல்லாமல் "நச்" என்று ஒரு படம் கொடுத்த இயக்குனர் தீபனுக்கு பாராட்டுக்கள். இந்தப் படத்தின் எதார்த்த நாயகன் சந்தோஷ் நாராயண் தான். திரையில் வரும் காட்சியை விட பன்மடங்கு பயத்தைக் கூட்டுவது இவர் இசைதான். தியேட்டரில் இருந்த  கால்கள்  ( சீட் கால்கள் உட்பட) அத்தனையும் நடுங்கிச்சின்னா பாருங்க. "பாம்பாம்பாம்பாம் பபாம்" என்று கானா பாலா பாடி இவர் இசையமைத்த பாடல் வரும்போது அழுகின்ற குழந்தையும் வாயில் லாலிபாப் சொருகிக் கொள்கிறது. கூடவே குமாரின் ஒளிப்பதிவும் அருமை.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 இன்டர்வெல் ப்ளாக்- அமானுஷ்யத்தின் அருகாமையை விளக்கும் அந்தக் காட்சி- செம்ம சீன்.  "பூமியில்" பாடல் இசையும் படமாக்கப்பட்ட விதமும் இனிமை மற்றும் இளமை. கிளைமாக்ஸ் காட்சியில் பயணத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வரும் "அந்த" மர்ம நபர் விஜய் சேதுபதியாய் இருக்கக்கூடும் என்று பக்கத்து சீட்காரரை போலவே நம்பி ஏமாந்த ஆவி அதைத் தவிர திருப்தியுடன் வெளிவந்த போது சிந்தித்தது. 'இது பிரமாதமான த்ரில்லர் என்று சொல்ல முடியாவிட்டாலும் வழக்கமான மசாலாக்களை தவிர்த்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி. கண்டிப்பாக  நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள அரங்கில் போய் பார்க்கவும்!

                  Aavee's Comments - Paranormal Activity 5.0.




Wednesday, November 13, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-3)

பகுதி-1 
பகுதி-2 

                           காலை ஐந்து மணி சுமாருக்கு நன்கு உறங்கிக் கொண்டிருக்க நேற்றைப் போலவே போன் அலறியது. தூக்கம் கலைந்த எரிச்சலுடன் போனை எடுக்க போனில் அதே சிவஞானம். அவர் கூறியதை கேட்டுவிட்டு போனுக்கு விடை கொடுத்தான். அதே பரபரப்புடன் கிளம்பி ஹீரோ ஹோண்டாவை உசுப்பினான். அலுவலகத்தின் முன் நிற்கவும் எதிரில் ஆனந்த் வந்து சேரவும் சரியாக இருந்தது. "ஆனந்த், சீக்கிரம் ரெடியாயிடு, ராயப்பேட்டையில் சேம் மர்டரர் இன்னொரு தொழில் அதிபரை கொலை பண்ணியிருக்கான். பீ க்விக்." என்றான்.



                            இருவரும் சம்பவ இடத்தை அடைந்தனர்.இருவரும் வீட்டினுள் நுழைய வாசலில் தர்மராஜ் என்ற நேம் போர்டு அவர்களை வரவேற்றது. சடலத்தின் அருகே சிவஞானம் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தார். மறுபுறம் ஒரு பெண்மணி அழுது கொண்டிருந்தார். தர்மராஜின் மனைவியாக இருக்கலாம். தர்மராஜ் இதயத்தில் கத்தியை  வாங்கி  கடைசி உறக்கம் மேற்கொண்டிருந்தார். பல பிரமுகர்கள் மலர் மாலைகளை வைத்துவிட்டு நகர்ந்தனர். வழக்கமான விசாரணைகள், தேடுதல் போன்றவற்றிற்கு பிறகு எல்லோரும் மகத்தான தோல்வி கண்டனர். வழக்கம்போல் ஆனந்த் வீட்டின் பின்புறம் சென்று சுற்றிப்பார்க்க அங்கு ஒரு பகுதியில் சக்தி நிறைந்து காணப்பட்டது. ஆனந்த் அந்த சேற்றின் அருகே வந்தான். அங்கு ஒரு வண்டியின் டயர் நின்றதற்கான அடையாளம் தெரிந்தது. அதைத் தன் மனதில் குறிப்பெடுத்துக் கொண்டான்.

                             மாலை மெரீனா பீச்சில் ஆனந்தும் லாவண்யாவும் சுண்டலை கொறித்துக் கொண்டிருக்க, "ஆனந்த், எனக்கு புடிக்கல" என்றாள் லாவண்யா. "அப்ப கீழ போட்டுடு" என்றான் ஆனந்த். "அய்யோ நான் சுண்டலை சொல்லல. உங்க உத்தியோகத்தை சொன்னேன்." "ஏன்" "டெய்லி உயிருக்கு பயந்துகிட்டு வாழ்க்கை நடத்தணும்" "ஏய், இதுக்கே இப்படி சொல்றே, இன்னைக்கு காலைல எனக்கு வந்த ஒரு லெட்டர் பத்தி சொல்லட்டுமா?" "என்ன லெட்டர்?" "இந்த கேஸை எடுத்து நடத்தினால் இது உனக்கு கடைசி கேஸாக இருக்கும்ன்னு இருந்தது" என்றான். "மிரட்டல் கடிதம் உங்களுக்கா?" என்றாள் லாவண்யா.  "ம்" என்றான். "அவங்க உங்க பாஸுக்கு அனுப்பாம ஏன் உங்களுக்கு அனுப்பியிருக்காங்க?" என்று கேட்டாள். "இது கூடவா தெரியல?" "தெரியல" என்று அவன் கூறப் போவதை ஆவலுடன் எதிர்நோக்கினாள் லாவண்யா. அவன் "எனக்கும் தெரியல" என்றான். ஆனந்த் அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு கேஸ் விஷயமாக பேச சுந்தர் வீட்டுக்கு சென்றான். அங்கு பூட்டு தொங்கியது. ஏமாற்றத்துடன் திரும்பிய ஆனந்த் சட்டென்று சுந்தர் வீட்டு வாசலில் குப்பை தொட்டியில் 'அதை' பார்த்தான். உடனே சென்று 'அதை' எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.

                              ஒரு வாரம் ஓடியது. ஏழு நாட்களிலும் ஏழு கொலைகள். சிவஞானம் சுந்தர், ஆனந்த் இருவரையும் கேஸ் விஷயமாக வரச் சொல்லியிருந்தார். சிவஞானம் கவலையுடன் எதிரில் இருந்த இருவரையும் நோக்கி "சுந்தர், இன்னையோட ஏழு நாள், ஏழு கொலை நடந்திடுச்சு. கொலைகாரனைப் பத்தி உங்க ஒப்பினியன் என்ன?" என்றார். ஆனந்த் குறுக்கிட்டு " ஸார், கொலைகாரன் ஒரு எலிமெண்டரி ஸ்கூல் டீச்சரா இருக்கணும்.  பாருங்க, அழகேந்திரன், பத்ரிநாத், சின்னசாமி, தர்மராஜ், இளங்கோவன், பரூக் அப்துல்லாகான், கங்காதரன்னு ABCD வரிசையிலேயே கொலை செஞ்சுட்டு வர்றான்." என்றதும் "தட்ஸ் எ குட் பாயின்ட்" என்ற சுந்தர் "ஸார் பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டே தீரணும். எப்படியும் ஏதாவது ஒரு தடயத்தை விடாம போகமாட்டான்." என்று கூறினான்.

                              உடனே சிவஞானம் "அவன் தடயம் விடற வரைக்கும் நாம பொறுத்திருக்க கூடாது. ஏழு நாள் ஏழு கொலை, இத எப்படி தடுக்கிறது" ஆனந்த் குறுக்கிட்டு "ரொம்ப ஈஸி ஸார். வாரத்துக்கு ஏழு நாள்ங்கிறதை கொறச்சிட்டா கொலைகளும் கொறஞ்சிடும்" என்ற ஆனந்தை சுந்தர் முறைத்துவிட்டு "ஸார் இல்லேன்னா இப்படி பண்ணலாமே?  'H' ல ஆரம்பிக்கிற, கொலைகாரன் அடுத்து குறிவைக்கப்போற ஏதாவது தொழிலதிபர் இல்ல பெரிய பதவில இருக்கிற எல்லாருக்கும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்திடணும். போலிஸ் போர்ஸ் மூலம் இவ்வளவு பேருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாட்டா லோக்கல் செக்யுரிட்டி கன்செர்ன்களிலிருந்து ஆட்களை பாதுகாப்புக்கு அனுப்பனும்." "இட்ஸ் எ வெரிகுட் ஐடியா"  என்றார் சிவஞானம்.


தொடரும்..

Tuesday, November 12, 2013

ஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)

                              PVP சினிமாஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் செதுக்கத்தில் சாரி, இயக்கத்தில் ஆர்யா அனுஷ்கா நடித்து வெளிவரும் படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட நிலையில், இடையில் ஏற்பட்ட ஏதோ கசமுசாவால் அனிருத் பின்னணி இசையமைக்க நவம்பர் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.



                           கருப்பட்டியை கூட அனுஷ்கா காட்டிய குறியீடாக , தன் வண்டிக்கு கூட அனுஷ்காவின் பெயர் வைத்து அனுஷ்காவின் மேல் கொண்ட அபிமானத்தை வெளிப்படுத்திய உலக சினிமா ரசிகன் அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..

பழங்கள்ளா பாடல்.. (தனுஷ் பாடியது)


கனிமொழியே பாடல்..


மன்னவனே என் மன்னவனே..
                     

என்சாய்!!


விண்ணைத்தாண்டி வருவாயா?



வெண்ணிலவே,
உனைத் தோள்களில் தாங்கிப் பிடித்தேன்,
'அட்லஸாய்' மாற்றிவிட்டாய்..

ந்த்ரிகையே,
ஒரு சர்க்கிளுக்குள் சிறைப்படுத்த முயன்றேன்,
ஸ்லிப்பாகி போனாய்..

பால்நிலவே,
உனக்கு வெள்ளையடிக்க எண்ணினேன்,
பால்வீதியில் மாயமானாய்..

வெண்'மீனே',
உனை பிடிக்க வலை வீசினேன்,
பிறையாய் தேய்ந்து நழுவினாய்..

ட்டப் பூப்பந்தே,
உனை வீசி விளையாட நினைத்தேன்,
காற்றில் கரைந்து போனாய்..

திங்கள் ஒளி விளக்கே,
உனை டேபிள் லேம்ப்பாக்க ஆசைப்பட்டேன்,
விடியலில் அணைந்து போனாய்..

ழகான சந்திரமுகியே,
உனை "போட்டோ பிரேமுக்குள்" மாட்டிவிட துடித்தேன்,
காலையில் நீ காணாமல் போனாய்..

மூன் எனும் ஏஞ்சலே,
உனை தொட்டுவிட ஏணியில் ஏறினேன்,
என் பிடிக்கெட்டா தூரத்தில் ஒளிந்து கொண்டாய்..

தூய நிறம் படைத்தவளே,
இன்றும் உனைக் காணவேண்டி கருக்கலில் காத்திருக்கிறேன்,
விண்ணைத்தாண்டி எனைக்காண வருவாயா?




( போட்டோ உபயம் :  'இனியவை கூறல்' கலாகுமரன் அவர்கள்..  )

Monday, November 11, 2013

கடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)

                           

                             என் கண்கள் சிவந்து போயிருந்தன. கண்களுக்கு கீழ் பல வருடம்  FC வாங்காத வண்டியில் மண்ணெண்ணெய் ஊற்றி ஓட்டும் போது வெளிவரும் புகையின் கரிய நிறம் அப்பியிருந்தது. மனதிலோ விடிய விடிய ஜெகன் மோகினி பார்த்துவிட்டு, விடிந்ததும் ஜெயமோகன் புத்தகத்தை படித்ததால் என்ன உணர்வு ஏற்படுமோ அதுபோன்ற ஒரு விதமான குழப்பமும், வருத்தமும், பயமும் கலந்த உணர்வும் இருந்தது. கண்கள் அகல விரிந்து தொலைக்காட்சியில் தினமும் பார்த்து ரசிக்கும் ஜெர்ரியை தேமே என்று பார்த்துக் கொண்டிருந்தது. விடை இல்லா விடுகதையாய் வாழ்க்கை, கார்ப்பரேஷன் தெருவிளக்கைப் போல் ஒரு பிடிப்பில்லாமல் மின்னி மின்னி அணைந்து கொண்டிருந்தது.. இது போன்ற நிகழ்வுகள் என்னைப் போன்ற மனசாட்சிக்கு பயப்படும் மடசாம்பிராணிகளுக்கு மட்டும் தானா அல்லது ஏய்த்துப் பிழைக்கும் ஏட்டுச் சுரக்க்காய்களுக்குமா?

                                   நேசம், பாசம் எனும் உறவுகள் பொய்த்தபின் புதிய உறவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தது மனது. ஏமாற்றமும், அவமானமும் ஒரு புறம் துரத்த, ஏக்கங்களும், நினைவுகளும் மறுபுறம் துரத்த மன்னித்தல், மறத்தல் என்னும் மனிதம் தாங்கிய நிலைகளைத் தாண்டி வெகுதூரம் ஓடித் தொலைந்த மனது களைத்துப் போன ஒரு நொடியில் மரணம் வேண்டி யாசித்தது. எழுபிறப்பில் நம்பிக்கையில்லை, இவ்வொரு பிறப்பே தேவையில்லை, எனை ஆட்கொள்ள இறைவன் அவன் வந்தபாடில்லை. "வன்" இருக்கின்றானா என்ற கேள்வியேதும் தோன்றவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் என் துயர் தீர்க்க வந்திருப்பானே..  எங்கே அவன், என்றாவது ஒருநாள் அவனை சந்திக்கும் வேளையில் கேட்பதற்காய் நெஞ்சில் ஓராயிரம் கேள்விகள். எங்கே அவன்.. இன்றைய என் மனநிலையை சந்திக்கும் துணிவற்ற கோழையாய் விண்ணுலகை விட்டு என் வாசல் வர பயந்தானோ?  வதம் செய்து வாரணம் ஆயிரம் கொன்றானே, அரக்கர்களை அழித்து துவம்சம் செய்தானே, இன்று என் முன் வர துணிவில்லையோ?

                                 "டொக், டொக்.. " என் வாசல் கதவு தட்டப்பட்டது. தேவன் தேரில் வந்திருப்பானோ? இல்லை தேவதூதனை காற்றில் அனுப்பி இருப்பானோ? காலை நேரம் ஒருவேளை போஸ்ட் மேனோ? பலவாறாய் சிந்தித்தபடியே வாயிலை திறக்க "மச்சி, தூங்கிட்டு இருந்தியா? "  கருநிற உடையில் நண்பனின் குரல். மங்கலாய்த் தெரிந்தது அவன் உருவம். "என்ன மச்சி, டல்லாயிருக்கே, வா வெளியே போவோம்".  எங்கே என்று கூட கேட்கத் தோன்றவில்லை. கால்சட்டையை அணிந்துகொண்டு அவன் காரில் ஏறி பயணித்தேன். ஏறும் போதுதான் கவனித்தேன். பின்சீட்டில் அவன் பெண் குழந்தை. பத்து வயதிருக்கலாம். "அங்கிள் நீங்க ஸ்விம் பண்ணுவீங்களா" என்றது. புதுமுகமாய், அறிமுகமாய் இருந்த என்னைப் பார்த்து பல நாட்கள் பழகிய தோரணையில் அந்த பிஞ்சுக் குழந்தை என்னிடம் கேட்டதை வித்தியாசமாய் உணர்ந்தேன். "உன் பேர் என்னம்மா" என்றேன். "நீங்க என் கூட பிரெண்ட் ஆனா தான் சொல்வேன்" என்றது. புதிய உறவுகளை ஏற்கப் போட்டிருந்த தடை உத்தரவை தற்காலிகமாய் தள்ளி வைத்தேன்.

                                  கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையோடு "ம்ம்..ஒக்கே. பிரெண்ட்ஸ்" என்றேன். நட்புக்காய் கைகுலுக்கியவாறு அந்தச் சிறு பெண் தன் பெயரை சொன்னாள். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அப்பெயர் திங்களின் மறுபெயர். நாஸ்திகம் பேசுவோர் அதை நடிகை ஜோதிகாவின் கடைசி திரைப்பெயராய் உணர்ந்து கொள்வர். "ஸ்விம்மிங் தெரியுமா உங்களுக்குன்னு கேட்டேன்" என்றவளுக்கு "ம்ம்.. கடப்பாரை நீச்சல்" என்று சொல்லி சிரித்தேன். என் காமெடி அந்த சிறு பிள்ளைக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.. "டாடி, இந்த அங்கிளுக்கு ஸ்விம்மிங் தெரியுமாமே" என்று அப்பாவியாய் கேட்டது.. "இல்லம்மா, அங்கிளுக்கு தெரியாதுன்றத தான் அப்படி சொல்றார்" என்று விளக்கினான் நண்பன். அந்தப் பெண் அந்தக் கேள்வியை கேட்டதற்கான அர்த்தம் எனக்கு கார் அந்த ஸ்விம்மிங் பூலின் வளாகத்தினுள் நுழையும் போதுதான் புரிந்தது..



                                     காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம்.. செல்லும்போதே நண்பன் என்னிடம் "உள்ளே ஒரு பெரிய பூல் இருக்கும். ஸ்விம்மிங் தெரிஞ்சவங்க அங்கே நீச்சலடிச்சுட்டு இருப்பாங்க. பக்கத்துல ஒரு சின்ன பூல் இருக்கும். அங்கே சின்ன பசங்க, ஸ்விம்மிங் தெரியாதவங்க எல்லாரும் மிதக்கலாம்.. உன் கழுத்தளவு தான் தண்ணி இருக்கும். அது சேப். என்றவாறு தன் பெர்முடாவை அணிந்துகொண்டான். அவன் கொண்டு வந்திருந்த ஒரு சார்ட்ஸை எனக்கு கொடுத்தான். அதற்கு முன் பலமுறை நீச்சல் குளத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு பாதுகாப்பு வளையத்துடன் தான் இறங்கியிருக்கிறேன். ஆனால் அன்று எதோ நம்பிக்கையில் அந்த சிறிய குளத்தில் இறங்கினேன். நன்றாக நீச்சல் தெரிந்த காரணத்தால் நண்பன் பெரிய குளத்தில் நாலைந்து முறை அக்கரைக்கும் இக்கரைக்கும் சென்று வந்தான். அந்த சின்னத் தேவதையும் இப்போது எடை இழந்த மீனாய் மிதந்து கொண்டிருந்தாள். "பிரெண்ட்,, உங்களுக்கும் நான் ஸ்விம்மிங் சொல்லித் தரட்டுமா" என்றாள். என் பதிலுக்கு காத்திராமல் சில நீச்சல் முறைகளை சொல்லிக் கொடுத்தாள்.

                                           கொஞ்ச நேரம் அந்த சிறிய நீச்சல் குளத்தில் இருந்த எனக்கு பெரிய நீச்சல் குளம் செல்ல ஆசை வந்தது. தண்ணீருக்கு மேலேயும், உள்ளேயும் மிதந்தவாறு நீந்திக் கொண்டிருந்தவர்களை பார்த்த போது நீச்சல் என்பது மிக எளிமையாக தோன்றியது. அதே சமயம் என் புதிய சின்னஞ்சிறு தோழி "அங்கிள் நான் அந்த பெரிய குளத்தில நீச்சல் அடிக்க போறேன். நான் சின்ன பொண்ணு இல்லையா அதனால நான் அந்த ஓரத்தில இருக்கிற கம்பிய பிடிச்சுகிட்டே போயிட்டு வருவேன். நீங்க இங்கேயே இருங்க" என்று சொல்லிவிட்டு அந்த கம்பியை பிடித்தவாறே நீந்தத் துவங்கினாள். எனக்கும் நீந்த வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. அவள் சென்ற தடம் பின்பற்றி அந்த பெரிய குளத்தில் இறங்கினேன். இறங்கிய மறுநொடி அந்த கம்பியை இரு கைகளாலும் பிடித்தவாறே அந்த நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற ஒரு பிரமையுடன் மெதுவாக நகர்ந்து சென்றேன். உள்ளுக்குள் ஒரு பூரிப்பு, இனம் பிரிக்க தெரியாத ஒரு சந்தோஷ உணர்வு. நீரின் குளுமையும், புதிய முயற்சியும் அதுவரை மனதில் அப்பியிருந்த சோகத்தை தடமறியாமல் அழித்திருந்தது.

                                         மெதுவாக சென்று கொண்டிருந்த நான் அந்த சிறுபெண்ணின் வேகத்திற்கு ஈடுகொடுக்க நினைத்து இன்னும் வேகமாக என்னை செலுத்தினேன். கிட்டத்தட்ட அந்த பெரிய நீச்சல் குளத்தின் பகுதி தூரம் கடந்த போதுதான் கவனித்தேன், அந்தச் சிறுமி ஒரு சுற்றை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தாள். அவள் செல்வதற்கு வழி விட வேண்டி என் கைகளை அந்த கம்பிகளில் இருந்து விளக்கி அவள் கடந்த பின் பிடிப்பதற்காக நீட்டினேன். அந்தக் கம்பி என் கைகளுக்கு தட்டுப்பட மறுத்தது. அதே நேரம் என் உடல் எடை தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்த காரணத்தாலும், புவியீர்ப்பு சக்தியின் இடையறா செயல்பாட்டாலும் நான் மெல்ல மெல்ல தண்ணீருக்கு உள்ளே சென்று கொண்டிருந்தேன். எவ்வளவோ முயன்றும் அந்த கம்பி கைகளில் சிக்கவில்லை. இறங்கும் போது சற்றும் உணராத ஆழம் அப்போது என்னால் உணர முடிந்தது. பத்திலிருந்து பதினோரு அடி ஆழம் இருந்த அந்த குளத்தின் அடியை என் கால்கள் தொட்டபோது சக்க்ரவியுகத்திலிருந்து வெளிவரும் வழி மறந்து போன அபிமன்யு போல சற்று முன் அந்த பெண்ணிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் மூளையின் மேல்தட்டுக்கு வர மறுத்தது.

                                          கீழே சென்ற ஓரிரு நொடிகளில் நாசித் துவாரங்களில் தண்ணீர் செல்ல கொஞ்சம் நிலை தடுமாறினேன். நியுட்டனோ, ஆர்க்கிமெடிஸோ கண்டுபிடித்த தத்துவத்தின்படி மீண்டும் மேலே அழைத்து வரப்பட்டேன்.. தண்ணீருக்கு மேல் என் தலை இருந்தது.. அப்போது தான் கவனித்தேன் அந்த கம்பி சுமார் ஐந்தடி தொலைவில் இருந்தது. ஓரிரு நொடிகளில் மீண்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன். இம்முறை மனதுக்குள் இனம்புரியா ஒருவித பயம்.. காலையில் விரும்பிக் கேட்ட மரணம் நெருங்கி வரும்போது அதை வரவேற்க மனது இப்போது தயாராய் இல்லை. இம்முறை நான் வேகமாக கீழே உந்தி என் உடலை வெளியே தள்ள முயற்சித்தேன். மேலே வந்த கணத்தில் உதவி வேண்டி "மச்சி" என்று உரக்க அழைத்தேன். என் சப்தம் அவன் காதுகளில் விழுந்ததா என உறுதிப் படுத்தக் கூட சமயம் தாராமல் தண்ணீர் தேவதை என்னை ஆலிங்கனம் செய்ய வேண்டி ஆக்ரோஷத்துடன் உள்ளே இழுத்தாள்.

                                         அந்த ஒரு நொடி மனம் இதுவரை ஒரு நாளும் கண்முன் சந்தித்திராத அந்த மாயப் பிம்பத்தை, கடவுள் எனும் ஒரு சக்தியிடம் உயிர் பிழைக்க வேண்டி மன்றாடியது. மூன்றாம் முறை மேலே செல்ல, இம்முறை தலை தண்ணீருக்கு வெளியே செல்லவில்லை. தவிர கைகளும் கால்களும் நம்பிக்கை இழந்து சோர்ந்துவிட வாய் வழியே நீர் செல்ல கண்முன் தாயின் உருவம் மின்னி மறைந்தது. கண்கள் திறந்தபடியே உடல் உள்ளே செல்ல, தப்பிக்கும் எண்ணங்கள் தவிடுபொடியாக, எமதர்மராஜனுக்கு கைகுலுக்க தயாராகிவிட்ட அந்த ஒரு கணம் மீண்டும் மேலே மீண்டு வருவது போன்ற ஓர் உணர்வு.. யாரோ என் தலைமுடியை பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். ஓரிரு நொடிகளில் நீச்சல் குளத்தின் மேல் என்னை இழுத்துப் போட்டு என் முன் நின்றிருந்தார் காவலுக்கு வந்த அந்த செக்யுரிட்டி. தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்த நண்பனும் அவன் மகளும் தெரிந்தனர். காப்பாற்றிய அந்த கனவான் என்னிடம் "நீச்சல் தெரியாம ஏம்ப்பா உள்ளே இறங்கறீங்க" என்றார். அந்த நிலையிலும் உள்ளே குந்திக் கொண்டிருந்த குசும்பன்  வெளியே வந்து "அதுல தாண்ணே த்ரில்லே" என்றேன்.. அவர் ஒரு கேவலமான பார்வையை என் மேல் சிந்திவிட்டு அங்கிருந்து அகன்றார். உள்ளுக்குள் சென்ற க்ளோரின் கலந்த நீரை துப்பியவாரே மனம் சிந்தித்தது "எனைக் காப்பாற்றியது அந்த நீச்சல் குளத்தின் காவலரா, இல்லை இந்த உலகத்தையே காக்கும் காவலரா?"




அலசல் தொடரும்...

                                

Saturday, November 9, 2013

ஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)



                    யு டிவி மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் "எங்கேயும் எப்போதும்" புகழ் சரவணன் இயக்கியிருக்கும் படம். C.சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோவை சோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

1. "மலைய பொரட்டலெ"  ராக் ஸ்டைலில் அமைந்திருந்திருக்கும் இந்த பாடல் திப்பு, ஹைடி மற்றும் பிஸ்மாக் ஆகியோரின் குரல்களில் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நடிக்க வரும் விக்ரம் பிரபுவுக்கு நல்ல அறிமுகப் பாடல்.

2.  "என்ன மறந்தேன்" என்று மதுஸ்ரீ காதல் வயப்பட்ட ஒரு பெண் தன்  காதலன் நினைவில் அவன் நினைவையன்றி மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டதாய் காதல் ரசம் சொட்ட தன் தேன்மதுர குரலில்  பாடியிருக்கும் பாடல் இனிமை. நா.முத்துகுமாரின் எழுத்துகள் மெல்லிசைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது.

3.  "ரங்கா ரங்கா" என்ற இளமைத் துள்ளும் பாடலை ரீட்டா பாடியிருக்கிறார். கொஞ்சம் "வத்திக்குச்சி" படப் பாடலை நினைவூட்டினாலும் சில முறை கேட்ட பின்பு பிடித்துப் போகிறது.

4. விவேகா எழுதிய "தனிமையிலே "  பாடல் தமிழ் சினிமா சமீப காலமாய் மறந்து விட்டிருந்த சோகப் பாடலை மீண்டும் ரசிகர்களுக்கு படைக்கிறது. பிரிந்து சென்ற காதலியின் நினைவில் நாயகன் பாடுவதாய் அமைந்த இந்த பாடலை ஆனந்த் அரவிந்தாக்ஷன் உச்சஸ்தாயியில் பாடும் போது நம் மனதிலும் சோகம் ஒட்டிக் கொள்கிறது.சத்யாவின் வயலின் இசை சோகத்தை இன்னும் கூட்டுகிறது.

5.  "எங்கேயும் எப்போதும் " படத்தில் மாசமா ஆடி மாசமா பாடல் ஹிட் கொடுத்த தைரியத்தில் இதிலும் "லவ்வுல லவ்வுல "  என்று தொடங்கும் பாடல் பாடியிருக்கிறார் சத்யா..

" எலும்பொடிஞ்சா மாவுக்கட்டு போட்டு திருத்த முடியும். 
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்"     
                       
               போன்ற தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கிளிஷே வார்த்தைகளுடன் ஒலிக்கிறது இந்த பாடல்.

6. "இதுதானா" என்று  ஒரு நிமிட பாடலை "புதியதோர் கவிதை செய்வோம் டீம்" எழுதியிருக்கிறார்கள். மனிதம் மனிதனுக்கு தேவை என்பதை பல்ராம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பாடுகிறார்.

                       எங்கேயும் எப்போதும் படப் பாடல் அளவிற்கு இல்லை என்றாலும் ஒன்றிரண்டு முறை கேட்ட பின்பு சில பாடல்கள் நம்மை முணுமுணுக்க வைக்கிறது. "இவன் வேற மாதிரி" பாடல்கள் நல்ல மாதிரி.

Friday, November 8, 2013

ஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)

                       "சிறுத்தை" சிவா இயக்கத்தில் "தல" யின் 54 வது படம் "வீரம்". மங்காத்தா, ஆரம்பம் படங்களுக்கு பிறகு அதே "உப்பும் மிளகும்"  கெட்டப்பில் (சால்ட் அண்ட் பெப்பர்ன்னு சொல்லி சொல்லி போர் அடிக்குது)  தங்கத்தாரகை தமன்னாவுடன் நடிக்கும் படத்தின் டீசர் நேற்று (நவம்பர் 7) வெளியிடப்பட்டது. என் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.


"ரத கஜ துரகபதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம், இவன் மத  புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருகளம் சிதறிடும் வீரம்"  

                            என்றபடி ரத்தம் வழியும் அந்த வெட்டுப்பட்ட கன்னத்தை திருப்பி தன்னை தாக்க வருபவர்களை நோக்கும் வீரம் அழகு. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வீரத்தை வரவழைக்கும் காட்சி அது. கண்டுகளியுங்கள்!!




Wednesday, November 6, 2013

Kuked வித் Fire

இதில் வரும் சம்பவங்கள் கற்பனையே யார் மனசையும் புண்படுத்துவதற்காக அல்ல


உ.சி.ர : தீவெட்டி பசங்க சொன்ன எடத்துக்கு சொன்ன நேரத்தில வர மாட்டானுக.
கோ.நே: அண்ணே நேரமாகிடுச்சா என்னமோ தீ..தீ சொல்லீட்டு இருந்தீங்க
உ.சி.ர : ஒன்னும் இல்ல எல்லாம் கொண்டு வந்திருக்கீங்கல்ல
கோ.நே: எல்லான்னா..
உ .சி.ர : என்ன எழவுடா...பொஸ்தகத்தல்லாம் எடுத்துட்டு வர சொன்னனே
கோ.நே: வீடு வீடா கேட்டேன், போன் போட்டு கேட்டேன் எவனும் இல்லனிட்டான். அது மட்டுமில்ல யாரவன்னு கேட்டாங்க?
உ.சி.ர :உன்னையவா ?
கோ.நே: இல்ல பொஸ்தகம் எழுதினவன
உ.சி.ர: கெடக்கரானுக விடு, கே.கே எங்க ?
கோ.நே: ஆடிட்டு இருக்கற ஆணிய புடுங்கனுமாம் வரல..
உ.சி.ர: கவிதாயினி ?
கோ.நே: அவங்க ரெண்டு கைலேயும் மருதாணி போட்டிருக்காம் வரல..

உ.சி.ர: இன்னொரு கவிதாயினி ?
கோ.நே: அவங்க பேஸ்புக் கவிதை எழுதறதுல பிஸி, அது மட்டுமில்ல ஒவ்வொருத்தனும் பல கேள்வி கேட்டிட்டு இருக்கானாம், அதுக்கு பதில் எழுதிட்டிருக்காங்க இப்ப அவங்கனால வரமுடியாது...
உ.சி.ர : புரட்சி பெண்மணி ?
கோ.நே: அவங்க இன்னொரு மீட்டிங்கிலே ப்ளாக் அகிட்டாங்க
உ.சி.ர : ஆ.ஆ சொக்கா..உனக்கு வந்த சோதனை..
கோ.நே: அது யாருண்ணே...
உ.சி.ர : சொன்னா புரியாது விடு...ஸ்டேட்டஸ் போட்டியா ?
கோ.நே: அப்பவே போட்டுட்டண்ணே பேச பேச...
உ.சி.ர : லைக்கு ?
கோ.நே: நூத்தி நுப்பத்து நாலு...
உ.சி.ர : (மனதிற்குள் புலம்புகிறார்..) வெறும் லைக்க வைச்சுகிட்டு என்ன பன்ன..பொஸ்தகம் கிடைக்கலயே...கையறுந்த நிலை நான் என் செய்வேன், சொக்கா...பொன்னா கேட்டேன் பொஸ்தகம் தானே கேட்டேன்...இவன் எங்க போய்ட்டான்
கோ.நே: அண்ணே கிடச்சிடுச்சி
உ.சி.ர : அஹா..எப்படி, எப்படி எங்கே?
கோ.நே: சிங்கம் டிக்கில இருந்தது, ரொம்ப நாளக்கி முன்னாடி புத்தக கண்காட்சியில வாங்குனது..மறந்தே போய்ட்டேன். உ.சி.ர: து..டிக்கில ஏன் வெச்சிருந்தே...போன போட்டு ஆ.விய வரச்சொல்லு
கோ.நே: பயமா இருக்கு....
உ.சி.ர: நண்பன கூப்பிட என்னப்பா பயம்..
கோ.நே: அதில்ல நாம செய்ய போற காரியத்த நெனனச்சா...பொலீஸ்..கீலீஸ்..ஜெகன்மோகினி
உ.சி.ர : ஒன்னும் பிரச்சினை இல்ல சட்ட ஆலோசகர்கள் கிட்ட நான் ஏற்கனவே டிஸ்கசன் பன்னிட்டேன். ஆ.வி வந்தாதான் நம்ம போராட்டம் சக்ஸஸ் ஆகும்.
கோ.நே: அவன் நுப்பத்துரெண்டு பேரோட சாட்டிங்கில இருந்தான் வரச் சொல்லிட்டேன்.
உ.சி.ர : இன்னுமா...வரல
ஆ.வி : முன்னாடி பார்த்திட்டு இருந்தீங்க நான் பின்னாடி இருந்தேன்.
உ.சி.ர : அங்க யார பார்த்திட்டு இருக்க வா பத்த வை
கோ.நே: நான் இப்ப சிகரெட் பிடிக்கரதில்ல
உ.சி.ர : நீ இப்படி சொல்வேன்னு தெரியும் நானே கொண்டாந்திருக்கேன், இந்தா...
கோ.நே : அண்ணே நல்லா பத்திடுச்சி...ஆ.வி. என்ன செஞ்சிட்டிருக்கே சீக்கரம் புடி எரியறது நல்லா தெரியோனும்...
உ.சி.ர : வெற்றிவேல்....வீரவேல்...
ஆவி : வால்டர் வெற்றிவேலை ஏன் கூப்பிடரீங்க...எடுத்தாச்சி..
உ.சி.ர : ஏ...ஏ..எங்க எங்க போட்ட காம்பவுண்டுக்கு உள்ளார போட்டுட்டே...அதென்ன பயர் சர்வீஸ் வண்டி மாதிரி தெரியுது... எட்றா உன் சிங்கத்த...
ஆ.வி: சார் இருங்க...என்ன விட்டுட்டு போறீங்களே நானும் வந்திடரேன்....

( இந்த பதிவை எழுதியது ஒரு பிரபல பதிவர்.. விளையாட்டா சொன்னாலும் சமூக நலன் கருதி ஒருத்தர் மேற்கொண்ட முயற்சில பங்கெடுக்க எல்லோரும் முன் வர வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது இது... )

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-2)

பாகம்-1          



                                  மறுநாள் காலை சுந்தர் போம் மெத்தையில் இனிதான தூக்கத்தில் இருக்க போன் அலறியது. எரிச்சலோடு கண்விழித்த சுந்தர் போனை காதுக்கு கொடுத்து "ஹலோ, சுந்தர் ஹியர்." என்றான். மறுமுனையில் சிவஞானத்தின் குரல் கேட்டது. விஷயத்தைக் கேட்ட சுந்தரின் முகம் சுருங்கியது. "இஸ் இட்.. நான் உடனே அங்க வர்றேன்" என்றபடி போனை வைத்துவிட்டு அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு தன் ஹீரோ ஹோண்டாவில் பறந்தான். GOLDEN EAGLE DETECTIVE AGENCY முன் வண்டி நின்றது. அதை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த ஆனந்த் ஆச்சர்யத்துடன் " என்ன பாஸ், இன்னைக்கு நேரத்திலேயே வந்துட்டீங்க? " என்று கேட்க " ஆனந்த், உடனே கிளம்பு.. வளசரவாக்கத்துல இன்னொரு மர்டர் நடந்திருக்கு. அந்த ரெண்டு கொலை நடந்த மாதிரியே நெஞ்சில் கத்தி இறக்கப்பட்டு க்ரூயலா கொல்லப்பட்டிருக்கார்." "யார் அந்த மூணாவது பாக்கியசாலி" என்று கிண்டலாக கேட்க " சென்னையில பல ஜவுளிக் கடைகளுக்கு அதிபரான சின்னச்சாமி."

                                 ஹீரோ ஹோண்டாவும் யமகாவும்  சம்பவ இடத்தை அடைந்தது. சுந்தரை வாசலில் கண்டவுடன் நடந்த சம்பவத்தை விளக்கிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார் சிவஞானம். ஹாலின் மத்தியில் சோபாவில் சின்னச்சாமி மெளனமாக தூங்கிக் கொண்டிருந்தார். இதயத்தில் செருகப்பட்டிருந்த கத்தியினூடே வெளிவந்த ரத்தத் துளிகள் இதய வடிவில் தெரிந்தது. சிவஞானம் மெலிதான குரலில் "இந்த கேஸ்லையும் எந்த தடயமும் கிடைக்கல. இதையும் அதே கொலைகாரன் தான் செஞ்சிருக்கணும். கொலை செய்யப்பட்ட ஸ்டைல், கத்தி இறக்கப்பட்ட இடம், கொலைக்கு பயன்படுத்திய சிவப்பு நிற பிடியுள்ள அந்தக் கத்தி இப்படி மூணு கொலைகளுக்கும் மேட்ச் ஆவுது. ஐ வான்ட் டு கெட் தட் பேஸ்$%&*" என்று ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்க சுந்தர் அவர் சொல்வதைக் கேட்டபடி அறையை நோட்டமிட்டான். பின்னர் அறையின் ஓரத்தில் நின்று சிந்தித்துக் கொண்டிருந்த ஆனந்திடம் வந்து " உனக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா ஆனந்த்" என்றான். "எஸ் பாஸ்" என்ற ஆனந்தை ஆவலாய் பார்த்த சுந்தர் "என்ன" என்றான் அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு.

                                 "கொலைகாரன் என்னை விட புத்திசாலியா இருப்பான் போலிருக்கு பாஸ். ஒரு தடயம் கூட விடலையே"  என்ற ஆனந்திடம் பொங்கி வந்த தன் கோபத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்று மேசை டிராயர்கள், கப்போர்டுகள் என எல்லாவற்றையும் சோதனையிட்டான். அதே சமயம் ஆனந்த் வீட்டின் வெளியே சென்று சுற்றிப் பார்த்தான். அங்கே ஆளுயர காம்பவுண்டில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டே வந்த ஆனந்த் ஓரிடத்தில் மட்டும் கண்ணாடி பதிக்கப்ப்படாமல் இருப்பதை கவனித்தான். உள்ளே சுந்தர் வாட்ச் மேனை விசாரித்துக் கொண்டிருக்க ஆனந்த் அந்த வெற்றிடத்தை ஆராய்ந்தான். அதன் மேலே ஏறி காம்பவுண்டுக்கு வெளியே குதித்தான். அப்போது அவன் காலில் ஏதோ இடறியது. குனிந்தான். அதை எடுத்தான். தன் பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். சுந்தர் எவ்வித தடயமும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அலுவலகத்திற்கு விரைந்தான்.

                               மாலை ஐந்து அடித்ததும் டான் என்று கிளம்பிய ஆனந்தை தடுத்து நிறுத்தி "டெய்லி அஞ்சு மணி ஆனா எங்க கிளம்பிப் போறே?" "டூட், டோன்ட் யு நோ வேர் ஐயம் கோயிங் ?" என்றவனை "தெரியாது சொல்லு"  "மை வுட்பி வில் பி வெயிட்டிங் பார் மீ இன் தி பீச்"  என்றவனிடம் "கமான், நம்ம கேஸ்ல ஒரு இம்ப்ரூவ்மெண்டும் இல்ல.. ஆனா நீ மட்டும் டைமுக்கு கிளம்பிடு தினமும். வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுடா" என்ற சுந்தரை தன் கூலிங்கிளாஸை கீழிறக்கி அவனை நோக்கி கண்ணடித்துவிட்டு " டோன்ட் மேக் ஜோக்ஸ் லைக் திஸ்" என்று சொல்லிவிட்டு பறந்தான் சென்னையில் கடற்கரைக்கு பெயர் போன (??) மெரினாவில் வண்டியை நிறுத்தினான் ஆனந்த். அங்கு லாவண்யா அவனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் "ஹாய்" என்றான். அவளும் பதிலுக்கு "ஹாய்" என்று கூறி கையசைத்தாள்.

                               பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தனர். எப்போதும் கலகலவென பேசிச் சிரிக்கும் ஆனந்த் அன்று வழக்கத்திற்கு மாறாக மெளனமாக அமர்ந்திருந்தான். அந்த நிஷ்டையை கலைக்கும் விதமாக லாவண்யா "என்ன துப்பறியும் புலி இன்னைக்கு அமைதி காக்குது?" என்றாள். சட்டென்று அவள் புறம் திரும்பிய ஆனந்த் "அதெல்லாம் ஒண்ணுமில்லை பேபி" என்றான். "இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா"  "இப்ப எடுத்திருக்கிற கேஸ்ல கொஞ்சம் சிக்கல். அவ்வளவுதான்" " அவ்வளவுதானே, டோன்ட் ஒர்ரி உங்க சூப்பர் பிரைன் ஏதாவது வழி சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுக்கும்" என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே "ஆ கண்ல மணல் விழுந்திடுச்சு பார்" என்றான். அவள் அவன் அகல விரித்த கண்களை நோக்கி ஊதச் செல்ல, சற்றும் எதிர்பாரா நேரத்தில் அவன் அவள் இதழில் இதழ் பதித்தான்.  "ச்சீசீய்.. நாட்டி பாய்" "ஐயோ, நான் பாய் இல்லை, பக்கா ஹிந்துவாக்கும்"  என்ற அவனை நோக்கி வாய்விட்டு சிரித்த அவள் "சார் இப்போ பார்முக்கு வந்துட்டார்.. டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்." என்றாள். ஆனந்த் கிளப்பிய யமஹாவின் பின் சீட்டில் லாவண்யா அமர்ந்து கொள்ள வேகமாய்ப் பாய்ந்தது.

                                 அவளை ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் இறக்கி விட்டுவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். யமஹாவை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து அன்று காலை கிடைத்த "அந்த" தடயத்தை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து டேபிள் டிராயரில் போட்டு வைத்தான். பின்னர் சட்டையை மாற்றிவிட்டு டி-ஷர்ட்டுக்குள் நுழைந்தான். அப்போது சிணுங்கிய அவன் செல்போனை எடுத்து "ஹலோ, ஆனந்த் ஹியர்.." என்றான். "ஹலோ ஆனந்த் நான் பாஸ் பேசறேன். மார்னிங் நேரத்துல வந்திடு" என்றான். "ஒக்கே பாஸ்" என்று கூறி போனை வைத்தான்.  போனை வைத்த போதும் மாலை சுந்தர் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகள் அவனை உடனே தூங்க விடாமல் துரத்தியது.          

தொடரும்..                



How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...