Thursday, May 29, 2014

கிராமத்துத் 'தல'

                


                          அந்த கிராமத்தின் செம்மண்ணை  போகுமிடமெல்லாம் பரப்ப தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது அந்த பேருந்து. தன் பிரியமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சிவகாமி. அவள் அணிந்திருந்த நீல தாவணியும், வெள்ளை ரிப்பனும் அவள் அரசு பள்ளியில் படிப்பதை உரைத்தன. எப்பொழுதும் போல் அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்தான் ராசு என்ற ராசுக்குட்டி. அவள் கடைக்கண் பார்வை ஒன்றிற்காய் காத்திருந்து, ஏமாந்து  பின் பேருந்து புறப்பட்டவுடன் அதிலிருந்து இறங்கி தன் சைக்கிளில் வீட்டிற்கு செல்வான். இன்றும் அதே இடத்தில் தான் அவனுடைய தவம்.

                         ந்யுட்ரல் கியரில் வண்டி அதிர்ந்து கொண்டிருக்க , கண்டக்டர் டிக்கட் டிக்கட் என்று அலறியபடி பேருந்து முழுக்க நடந்து கொண்டிருக்க சில கீரைக் கட்டுகளும், காதில் பாம்படமுமாய் ஒரு பாட்டி ஏற, முன்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் கையிலிருந்த கைக்குழந்தை "வீர்" என்று அலறத் துவங்க அந்த பேருந்தின் உள்ளே இரைச்சலின் ஆதிக்கமே நிறைந்திருந்த போதும் சிவகாமியிடம் அவள் அருகே அமர்ந்திருந்த தோழி "அவன் இன்னும் பொறகால தாண்டி இருக்கான்"  என்று சொல்வது அவன் காதில் தெளிவாக விழுந்தது. அது ஒரு வகையான சந்தோஷத்தையும் கொடுத்தது. அவள் தன்னை கவனிக்கிறாள் என்ற உணர்வு உற்சாகத்தை கிளப்பியது. 

                          அப்போதுதான் அவன் சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சிவகாமி அவன் புறமாய் திரும்பி "ராசு" என்றழைத்தாள். இந்த விளித்தளுக்காய் அவன் காத்திருந்த மணித்துளிகள் தான் எத்தனை எத்தனை? அவள் அழைத்ததும் அவன் முன் சென்று "சொல்லு சிவகாமி" என்றான். "ராசு, நான்  ஒண்ணு கேப்பேன், தருவியா?" என்றாள். இதைக் கேட்கும் போதே அவள் கருப்பான கன்னமும் கோவைப்பழமாய் சிவந்திருந்தது. ஹார்மோன்கள் உச்சந்தலைக்குள் வேகமாக ஓட "சொல்லு சிவகாமி, என்ன வேணும் உனக்கு?" "ம்ம்ம்.. எனக்கு... எனக்கு.. எனக்கு உன் 'தல' போட்டோ வேணும்" என்றாள்..

                          "இந்தா, இப்ப வர்றேன்" என்று கூறி பேருந்தில் இருந்து இறங்கி தன் சைக்கிளுக்கு சென்றான். எப்போதும் "தல" படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ராசுக்குட்டிக்கு தான் விரும்பிய பெண்ணும் 'தல' ரசிகையாய் இருந்தது இன்னமும் சந்தோஷத்தை அளித்தது. வேகமாக சைக்கிளின் பின்புறம் வைத்திருந்த பையை திறந்து அதிலிருந்து ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்தான். உள்ளே காம்பஸ், ஸ்கேல், ப்ரொடக்டர் போன்றவைகளுக்கு பதிலாக அதில் முழுக்க முழுக்க அஜித்தின் புகைப்படங்களே நிறைந்திருந்தன. அதில் தனக்கு மிகவும் பிடித்த ஸ்டில் ஒன்றை எடுத்தபடி பேருந்தை நோக்கி ஓடி வர அதற்குள் டிரைவர் முதல் கியருக்கு மாற்றி வண்டியை நகர்த்த ஆரம்பித்திருந்தார். 

                          தன் வேகத்தை கூட்டி சிவகாமி அமர்ந்திருந்த ஜன்னல் அருகில் வந்தான்.. அவள் ஜன்னலினூடே கை நீட்ட அவள் கைகளில் அந்த படத்தை திணித்து விட்டு மூச்சிரைக்க நின்றான் கண்களில் ஆயிரம் வாட்ஸ் சந்தோஷத்தோடு. புகைப்படத்தை வாங்கிய சிவகாமி அதை பார்த்தாள். முன்னும் பின்னும் திருப்பி நோக்கினாள். பின்னர் தன் தோழியிடம் "தெனமும் பொறவால வர்றானே, எனக்கும் பிடிச்சிருக்கேன்னு பர்சுல வச்சுக்க அவன் தல போட்டோவ கேட்டா அவன் எதோ சினிமா நடிகனோட தலைய  கொடுத்துட்டு போறான்.. இந்த லூச நான்  லவ் பண்ண மாட்டேன்பா" என்றவாறு "தல" போட்டோவை கீழே எறிந்தாள். 



                                          *********************
   

Sunday, May 25, 2014

கோச்சடையான்- இந்திய அவதாரா?


            இந்தியாவில் முதல் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன்  வந்திருக்கும் படம் கோச்சடையான். இதனை ஹாலிவுட்டின் சிறந்த  மோஷன் கேப்ச்சர் படமாக கருதப்படும் அவதாருடன் ஒப்பிடலாமா என்பதை பார்ப்போம்..



              முதலில் அவதாருக்கும், கோச்சடையானுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடே சூப்பர்ஸ்டார் மற்றும் பிற தெரிந்த நடிகர் நடிகைகள். அவதாரை பொறுத்தவரை நாம் கற்பனையும் செய்து பார்த்திராத உருவ அமைப்புடைய மனிதர்கள் (?!), விலங்குகள், காடுகள், தாவரங்கள், பூக்கள் என எல்லாமே நாம் கிட்டத்தட்ட முதல்முறை பார்க்கக் கூடிய விஷயங்கள் தாம். ஆகையால் இவை இப்படித்தான் இருக்க முடியும் என்று நம் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கோச்சடையானில் வரும் கதாப்பாத்திரங்களோ, அரண்மனைகளோ, போர்க்களங்களோ, விலங்குகளோ நாம் முன்னரே பார்த்து பழகி இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு உருவகம் பெற்றவை. அவற்றை தொழில் நுட்பத்தின் மூலம் உயிர்பிக்கும் பொழுது நம் மனது அதன் வித்தியாசங்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது.

              இரண்டாவது அவதாரை பொறுத்தவரை "மோஷன் கேப்சர்" (Motion Capture) தேவைப்படாத இடங்களில் நிஜ மனிதர்களை வைத்து தான் ஷூட் செய்திருப்பார்கள். நம்முடையது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவானது. இது அவசியம்தானா என்ற கேள்வி எழும் பொழுது ஆம் இல்லை என இரு பதில்களும் சொல்லத் தோன்றுகிறது. நாகேஷ் போன்ற ஒரு சிறந்த நடிகரை (நம்மிடையே இன்று இல்லாதவர்) படம் நெடுக பயணிக்க  வைத்திருக்க இது அவசியமாகிறது. தவிர ரஜினி நடனமாடும் காட்சிகள் சிறப்பானவை. அதற்காகவே இந்த தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு அளிக்கலாம். தவிர இந்த ஒரு படத்திற்காக கேப்சர் செய்யப்பட்ட ரஜினியின் அசைவுகளை இனி எவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால "சந்திரலேகா" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான். இந்த கேலிக் கூத்துகள் அனைத்தும் ரஜினி படத்திற்கு வாழ்த்துகளாய் மாறியிருக்கும்.

             புராணக் கதைகள் தொலைக்காட்சித் தொடராகவே வந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அவற்றை வித்தியாசமாக காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒரு படம் வெளியாகி அரை மணி நேரத்திற்குள் அது எந்த உலகப் படத்தின் தழுவல் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் படம் பார்க்கும் திறன் வளர்ந்து விட்டது. அந்த ரசிகர்களின் ரசிப்புத் தன்மைக்கு தீனி போட நிச்சயம் மிரட்டலான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு கோடிகளை கொட்டத் தயாராக இருக்கும் புரோடக்க்ஷன் ஹவுஸ்கள் வேண்டும். அதுமட்டுமல்லாது வெளியாகின்ற திரைப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கும் பழக்கம் ரசிகர்களுக்கும் வர வேண்டும்.
               
              ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டும், நம்முடையதும் ஏணி கிரேன் வைத்தால் கூட எட்ட முடியாது.. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னதாக ஆயிரம் கொடி செலவில் அவதார் எடுக்கப்பட்டது. நம்மால் இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் அந்த பட்ஜெட்டில் எடுக்க வாய்ப்புண்டு. பட்ஜெட்டைப் பொறுத்து தான் இதுபோன்ற படங்களின் தரம் அமைகிறது. அவதாரில் வேலை செய்தவர்கள் உள்ளூர்வாசிகள்.. கோச்சடையானுக்காக வரவழைக்கப்பட்ட பெரும்பாலான டெக்னிக்கல் ஆசாமிகள் நம்ம ஊர் கிடையாது. தொழில்நுட்பம் வளர்ந்தால் மட்டும் போதாது. அதை நம்ம உள்ளூர் ஆசாமிகள வச்சு 'சிறப்பா' பயன்படுத்த முடியற காலத்துல தான் இதுபோன்ற படங்கள் வரலாம். அதுவரை எடுக்கப்படும் எல்லா முயற்சியும் ஆகச்சிறந்த கார்ட்டூன்களையே உருவாக்கும். ஒருபோதும் அவதார் போன்ற படங்களோடு போட்டிபோடக்கூடிய திறன் இருக்கப்போவதில்லை. அப்படி செய்வது உசேன் போல்ட்டுக்கும் உசிலை மணிக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்க முயல்வது போன்றதாகும்..!


பி.கு:  அவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹி



படிக்க: ஆவி டாக்கீஸ் : கோச்சடையான் 

Saturday, May 24, 2014

ஆவி டாக்கீஸ் - கோச்சடையான்

 
இன்ட்ரோ  
                      தமிழில், ஏன் இந்தியாவிலிலேயே முதன் முறையாக மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம். பட்ஜெட் காரணங்களால் படம் துவங்கிய பத்து நிமிடத்திற்கு பொம்மைப் படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தாலும், ரஜினி அறிமுகத்திற்கு பிறகு டேக் ஆப் ஆகிறது. அதிலும் இரண்டாம் பாதியில் கோச்சடையானை  மெய் மறந்து ரசிக்கையில் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே மறந்து பார்க்க ஆரம்பிக்கிறோம்.




கதை         
                       தன் தளபதியின் வளர்ச்சி பிடிக்காமல் அவர் ஒருமுறை செய்யும் தவறுக்காக சிரத்தை வெட்டிக் கொல்ல மன்னன் உத்தரவிட தன் இரு பாலகர்களின் முன்னிலையில் கொல்லப்படுகிறார். தந்தையின் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைத்து, எதிரியையும் வீழ்த்துவதே கதை. இதற்கிடையில் வழக்கம் போல் வில்லனின் மகளைக் காதலும் செய்கிறார். அம்புட்டுதான் மேட்டரு!

Action மோஷன்  

                     
                         சூப்பர் ஸ்டாருக்கு இதில் கோச்சடையான் மற்றும் ராணா  என இருவேடங்கள். கோச்சடையான் கதாப்பாத்திரத்தின் உடல்மொழி, உருவ அமைப்பு (ரஜினியை சிக்ஸ் பேக்குடன் காட்டி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள்) ஆகியவை சிறப்பாக வந்திருக்கிறது. ராணா ஆரம்பத்தில் நம்முடன் ஓட்ட மறுத்தாலும் பின்னணியில் ஒலிக்கும் சூப்பர் ஸ்டாரின் குரலும், ராணாவின் ஸ்டைலும் நம்மை கதாப்பாத்திரங்களை  வெறும் அனிமேஷன் பாத்திரமாக பார்க்க முடியவில்லை முடியவில்லை. நாகேஷ் கதாப்பாத்திரமும், அதற்கு பின்னணி குரல் கொடுத்தவரும் சிறப்பாய் செய்திருக்கிறார். ஷோபனா கதாப்பாத்திரமும் அவர் நடன அசைவுகளும் சூப்பர். 

                        சிறிதே ஆயினும் சரத்குமார் வரும் காட்சிகள் அருமை.. அவரது கணீர் குரல் இன்னும் வலிமையான வசனங்களுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.   தீபிகா படுகோனே கதாப்பாத்திரம் மட்டுமே படு திராபை.. அவர் வரும் காட்சிகள் எதுவுமே காதல் ரசம் பொங்கவில்லை.. இவ்வளவு செலவு செய்து எடுத்தவர்கள் கதாநாயகியின் உருவத்துக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். நடனம், சண்டை எல்லாம் ஐ-ரோபோ படத்தில் வரும் ரோபோட் போடும் சண்டையை நினைவுபடுத்தி செல்கிறது..
                                                                                             
இசை-கதை-இயக்கம்
                     இசை ஏ.ஆர். ரகுமான். இது வேறு யாராவதாக இருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசனை கூட செய்ய முடியவில்லை. பாடல்கள் அருமை. பின்னணி இசை பிரமாதம். இதுபோன்ற படங்களில் பாடல் காட்சிகள் தேவையில்லை என்பது என் கருத்து.கதை, திரைக்கதை, வசனம் கே.எஸ். ரவிகுமார். செட் போட்டு எடுத்திருந்தால்  செம்ம மாஸ் படமாக வந்திருக்க வேண்டியது. சௌந்தர்யாவின் ஆராய்ச்சிக்கு எலியாகி விட்டது.. சௌந்தர்யாவின் இயக்கம் முதல் மூன்று நிமிடத்தில் மட்டுமே தெரிகிறது.. (making of கோச்சடையான்)

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                       
                     "எங்கோ போகுதோ வானம்", "கர்ம வீரா" பாடல்கள் அருமை... சோட்டா பீம் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து கார்ட்டூன் ரசிகர்களையும் கவரும் இந்த கோச்சடையான்..

பி.கு:  ஓரளவு எடுத்திருக்கும் அனிமேஷனையும் படு மோசமான டிரெயிலர் மூலம் ரிவர்ஸ் பப்ளிசிட்டி செய்ததை நம்பி படத்தை பார்க்காம இருந்திடாதீங்க.. முதியவர்கள் நாகேஷுக்காகவும், வயதானவர்கள் சூப்பர்-ஸ்டாருக்காகவும், இளைஞர்கள்  ரகுமானுக்காகவும், குழந்தைகள் கார்ட்டூன் வகையறா என்பதற்காகவும் ஒரு தடவை பார்க்கலாம்..

                  Aavee's Comments - Costly KochaBheem!



 

Wednesday, May 21, 2014

ஆவி டாக்கீஸ் - யான் (Music Review)

ஜீவா, துளசி நாயர் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் சோனி மியுசிக் நிறுவனம் "யான்" படப் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டது. 



1. "நீ வந்து போனது" - கேகே, பாம்பே ஜெய்ஸ்ரீ மற்றும் NSK ரம்யா என்று பாடலுக்கு ஏற்ற குரல் தேர்வுடன் "ஓமகஸியா" டைப்பில் வரும் பாடல். தாமரையின் தித்திக்கும் தமிழ் வார்த்தைகளும் இடையிடையே 'ஹம்மிங்' செய்து போகும் மேகாவின் ஷார்ப்பான வாய்ஸும் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.

2. "ஹே லம்பா லம்பா" - மறைந்த வாலிபக் கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை துள்ளலுடன் பாடியிருப்பது தேவன் ஏகாம்பரம் மற்றும் திவ்யா விஜய். தனக்கு பிடித்த பெண்ணை தங்கலீஷில் உருவகப்படுத்தி பாடும் பாடல். 

3. இசையுலகின் "பவர்ஸ்டார்" கானாபாலா பாடியிருக்கும் "ஆத்தங்கரை ஓரத்தில்" பாடல் ஒரு நல்ல முயற்சி. காதலில் பாதிக்கப்பட்ட ஒருவனின் புலம்பலை செம்ம ஜாலியாக "RAP" ஸ்டைலில் சொல்லியிருப்பது புதுமை. கபிலனின் வரிகளும், காதுக்குள் இங்கிட்டும் அங்கிட்டும் மாறி மாறி ஒலிக்கும் ஹாரிஸின் இசையும்  பாடலை தாளம்போட்டு ரசிக்க வைக்கிறது.

              " அந்த வெண்ணிலாக்குள்ளே ஆயா சுட்ட வடகறி நீதானோ"  என்று காதலியை வர்ணித்து பாடும் வரிகள் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.
                 
4.  "நெஞ்சே நெஞ்சே" - உன்னிகிருஷ்ணன் பாடியிருக்கும் இன்னிசை தாலாட்டு. காதல் தேசம் படத்தில் வரும் "தென்றலே" பாடலின் தாக்கம் ஆங்காங்கே தெரிந்த போதும் மனதிற்கு இதமாக இருக்கிறது.. சின்ன போர்ஷன் என்ற போதும் சின்மயியின் குரல் பாடலை முழுமையடையச் செய்கிறது. கண்களை மூடி ரசித்து கேட்க இதமான பாடல்.

5.  சின்மயி, அர்ஜுன் மேனன் பாடியிருக்கும் டூயட்  "லட்சம் கலோரி". இனி கொஞ்ச நாட்கள் பண்பலைகளில் முதலிடம் பிடிக்கப் போகும் பாடல்.

                           "ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள் 
                      ஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
                      நியுரான்களும் சிணுங்கும், புரோட்டான்களும் மயங்கும் 
                      என் பெண்மையும் கிறங்கும் நீ முத்த வார்த்தை பேசினாலே"
                
         போன்ற பா.விஜயின் வரிகள் காதல் ரசம் சொட்டும் அவதானிப்புகள்.


                 இந்த முறை முந்தைய பாடல்களின் வாசனை அதிகம் வராமல் பார்த்துக் கொண்டதற்காகவே ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு சபாஷ் போடலாம். மொத்தத்தில் யான் - தேனிசை மழையான்.

Wednesday, May 14, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014MAY14

கிராபிக்ஸ் கலக்கல் :  'வாத்தியார்' பாலகணேஷ் 

300 வது பதிவு: 

                      

                 இதுவரையிலும், இனிமேலும் எனக்கு ஆதரவு கொடுக்கும் எனது வாசக கண்மணிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். முன்னூறு பதிவுகளில் முத்தான பதிவு என்று வாசகர்களால் பாராட்டப்பட்ட பதிவுகள் ஒரு எழுபத்தி ஐந்திலிருந்து நூறு வரை நிச்சயம் இருக்கும். ஆவி டாக்கீஸ் (சினிமா), ஆவி's கிச்சன் (சமையல்), பயணத்தின் சுவடுகள் (பயணக் கட்டுரை), தொடர்கதைகள், சிறுகதைகள், விளையாட்டு, அனுபவம்  என எழுதிய என் தளத்தில் அரசியல் பதிவுகளை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு காரணம் அரசியல் பிடிக்காது என்பதல்ல.. அரசியல் தெரியாது என்பதே காரணம் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். 300 ன்னு சொன்னதும் அட்டகாசமா ஆவி ட்ரிபிள் செஞ்சுரி போட்ட படத்தை கற்பனை செய்து வரைந்து கொடுத்த வாத்தியாருக்கு டேங்க்ஸு..! 



ஆவி (ஆனந்த விகடன் அல்ல!) வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி..! 

.                ஆவிப்பா புத்தகத்தினை அமெரிக்காவில் விற்பனை செய்யும் உரிமத்தினை பெற்றுக் கொண்டதோடு, ஆவிப்பாவின் விற்பனை வரலாற்றிலேயே அதிக பிரதிகளை வாங்கிக் கொண்டு அமெரிக்கா செல்லும் அன்பு நண்பன் CJ என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் Jayaraj Chandrasekaran அவர்களின் அமெரிக்க பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள். அமெரிக்க வாழ் நண்பர்கள் சிலருக்கு மட்டும் தான் இந்த முறை அனுப்ப முடிந்தது.. அடுத்த முறை மீதமுள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.. ஆவிப்பாவை வாசிக்க விருப்பமுள்ள நண்பர்கள் "ஆ" ன்னு ஒரு குரல் கொடுங்க, அனுப்பி வைக்கிறேன்.. :)



சமீபத்தில் ரசித்த பாடல் வரிகள்:

எழுதியவர்:  பா.விஜய் 
படம்           :   யான்    

"ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள் 

                        ஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
                           நியுரான்களும் சிணுங்கும், புரோட்டான்களும் மயங்கும் 
                                  என் பெண்மையும் கிறங்கும் நீ முத்த வார்த்தை பேசினாலே"




 அவள் பறந்து போனாளே: 



               கோடை வெயிலில் சுடும் மணலில் 
                    யாருமில்லா பாலை வன தேசத்தில் 
                    நா வறண்டு போயிருந்த எனக்கு 
                    தாகம் தணிக்க வந்த நீர்ப் பரப்பாய் 
                    நீ என் கண்ணில் தெரிய,
                    வறண்ட இதழ்களை நனைத்துக் கொள்ள, 
                    ஆசை தீரப் பருகிக் கொள்ள,
                    வெட்கம் நாணம் விட்டு, கரணங்கள் பல போட்டு 
                     உனை நெருங்கி நான் வந்த நேரம் தான் உணர்ந்தேன்
                     நீ பசி மாற்றும் பொய்கையல்ல, 
                     எனை ஏமாற்றும் கானல் நீரென்று..!
                      
               
நக்கல் கார்னர்:

                  இப்போ வர்றேன் அப்போ வர்றேன் ன்னு அவர் அரசியல் பிரவேஷம் மாதிரியே அவர் படமும் "பாச்சா" காட்டிகிட்டு இருக்குது. இப்போ படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு "கோச்சா பீம்" என்ற பெயரில் வெளிவர இருக்கிறதாக தகவல். (லேட்டஸ்டும் இல்லே அப்புறம் ஏன் லேட்டு? #டவுட்டு)



கொசுறு: இந்த படத்துடன் வெளியிட பயந்து மே 23 அன்று வெளியாகவிருந்த மற்ற படங்கள் பின்வாங்கிவிட்டன.. பின்ன இதுகூட போட்டி போட்டா டேமேஜ் யாருக்கு?
                   

Sunday, May 11, 2014

ஆவி டாக்கீஸ் - யாமிருக்க பயமே!


இன்ட்ரோ  
                 திகில் படங்களில் காமெடி என்பது அந்த படத்தின் ஒரு மிகப் பெரிய வேகத்தடையாய் அமைந்து விடுவது உண்டு. ஆனால் இந்த யாமிருக்க பயமே படத்தில் திகிலை சிரிக்கச் சிரிக்க ஊட்டியிருக்கிறார்கள்.



கதை         
               
                  கடனில் மூழ்கி அவதிப்படும் நாயகனுக்கு என்றோ தொலைந்து போன  தன் தந்தை வழி ஒரு சொத்து கிடைக்கிறது. அந்த பங்களாவிற்கு நாயகியுடன் வரும் அவன் அதை ஒரு ஹோட்டலாக மாற்றி புதுப்பிக்கிறான். உடன் ஒரு மேனேஜரும், அவன் தங்கை சமையல்காரியும்.  அந்த ஹோட்டலில் தங்க வரும் ஒவ்வொரு விருந்தாளிகளும் இறந்து போக ஹோட்டலுக்கு வெளியே மேனேஜரின் உதவியுடன் புதைக்கிறான் நாயகன். யாரோ தன் சொத்தை கொள்ளையடிக்க வேண்டி இதுபோல் செய்வதாக நினைக்கிறான்.

                    ஒரு கட்டத்தில் புதைத்த பிணங்களை தோண்டிப் பார்க்கையில் அங்கே பிணங்கள் மிஸ்ஸிங். அதிர்ச்சியில் உறையும் நாயகன் அண்ட் கோ விற்கு இரண்டாம் பாதியில் பிரைட் ரைஸ் திருடன் மூலம் விடை கிடைக்கிறது. ஆனால் அந்த பங்களாவின் மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நாயகனின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படுகிறது. அந்த மர்ம பங்களாவிலிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

ஆக்க்ஷன் 
                       கிருஷ்ணா ஆக்க்ஷன், காமெடி, ரோமென்ஸ் என எல்லா ஏரியாவிலும் புகுந்து சிக்சர் அடிக்கிறார். இரண்டாம் பாதியில் பேயிடம் மாட்டிக் கொள்ளும் இடங்களில் கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கிறார்.  ரூப மஞ்சரி கிருஷ்ணாவின் காதலி, சரளமான நடிப்பு. பயம் கலந்த பார்வையில் இவர் பார்க்கும் போது மனம் கவர்கிறார். கொஞ்சம் மேக்கப் போட்டு வயதான லுக்கை தவிர்த்திருக்கலாம். கவர்ச்சிக்கு ஓவியா, சமையல்காரி வேடம் தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார்.

                           சூதுகவ்வும் புகழ் "கருணாகரன்" மேனேஜராக வந்து முதல் பாதியில் எல்லோருடைய சந்தேகத்திற்கும் ஆளாகிறார். நல்ல உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரி.  அறிமுகம் ஆதவ் கண்ணதாசன் சின்ன கேரக்டர் என்ற போதும் நன்றாக செய்திருக்கிறார். அனஸ்வரா அழகுப் பெட்டகம். கிளைமாக்ஸில் மஞ்சள் நிற தேவதையாய் வந்து போகிறார். மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்கிறார்.          

                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                           பிரசாத்தின் இசையில் பாடல்கள் சுமார். எல்ரெட் குமார் தயாரிப்பில் திகில் பறக்கும் படத்தை நகைச்சுவையோடு இயக்கியது டீகே. முதல் அரை மணி நேரம் கொஞ்சம் போர் அடித்த போதும் ஜாலி த்ரில்லர். சந்தானத்திற்கு சரியான போட்டி கொடுக்க கூடிய படம். கோச்சடையான் பின்வாங்க ஒருவேளை இந்தப் படங்கள் தான் காரணமாக இருக்குமோ என்று ஒரு சிலர் சந்தேகம் கொண்டதாக கேள்வி.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                               மிரட்டல் த்ரில்லரில் வரும் எல்லா காமெடிகளும் ரசித்து சிரிக்க வைக்கிறது.. குழந்தைகளும் பார்த்து ரசிக்க கூடிய பேய்ப்படம் இது..!

                  Aavee's Comments - Scarily Funny !

ஆவி டாக்கீஸ் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

   
இன்ட்ரோ  
                         ஒருமுறை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறினார் ஒரு மொழியில் வெளிவந்து வெற்றிபெற்ற படத்தினை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யும் பொழுது அது ஒரிஜினலை போல் சிறப்பாக இருக்காது என்றார். அப்போது நான் அதை ஒத்துக் கொள்ளாமல் சிறப்பான நடிகர்களை தேர்வு செய்து நல்ல இயக்குனர் இயக்கினால் எல்லா படங்களுமே சிறந்த படங்களாக அமையும் என்றேன். ஆனால் தெலுங்கின் "மரியாத ராமண்ணா" படத்தின் ரீமேக்கான இந்த படம் அதன் ஒரிஜினலைப் போல அமையவில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுவிட்டேன்.




கதை         
                  பல வருட குடும்பப் பகையை மனதில் கொண்டு நடக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் எதிரியாய் இருக்கும் ஒருவன் அந்த வீட்டின் உள்ளே தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ள அவனை கொல்ல அந்த வீட்டின் பெரியவரும் இரு மகன்களும் முயல, அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயலும் ஓர் அப்பாவி, அவனைக் காதலிக்கும் பெரியவரின் மகள் என சுழல்கிறது கதை. அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தானா, ஹீரோயினின் காதல் நிறைவேறியதா என்பதே கிளைமேக்ஸ்!              

ஆக்க்ஷன் 
                     சந்தானம் முதல் முறை ஹீரோவாக திரையில் அசத்துகிறார். காமெடியனாகவே பார்த்துவிட்டு இப்போது ஹீரோவாக (கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் டைப் ரோலில்) பார்க்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை என்ற போதும் தன் வழக்கமான ஒன் லைனர்களால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். டான்ஸ் மூவ்மேண்டுகள் முயன்ற போதும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் மிஸ்டர் நல்லதம்பி. முதல் பாதியில் வரும் ராஜகுமாரன் காமெடி அறுவையிலும் அறுவை.. பெரியவராக வரும் நடிகர் தெலுங்கிலும் தமிழிலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். (நல்லவேளை ஜெயப்பிரகாஷை போட்டு இந்த கதாப்பாத்திரத்தை கெடுக்கவில்லை)



                    புதுமுகம் ஆஷ்னா ஐஸ்வர்யா ராயையும், தீபிகா படுகோனையும் கலந்து செய்த ஐந்தடி அழகுச் சிலை. அதிகம் நடிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சி.. தமிழ் பீல்டில் நிச்சயம் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது. பவர் ஒரே ஒரு ஷாட் வந்த போதும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறார். முறைமாமனாக வரும் "சரவணன் மீனாட்சி" செந்தில் நிறைவான நடிப்பு. VTV கணேஷ் இரைச்சல் இல்லாமல் பேசி மனம் கவர்கிறார்.
                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                     இசை சித்தார்த் விபினின் கை வண்ணத்தில் சுமாராக வந்திருக்கிறது.  இயக்குனர் ஸ்ரீநாத், ராஜமவுலியின் படத்தை இயக்க இன்னும் கொஞ்சம் ஹோம்ஒர்க் செய்திருக்கலாம். சந்தானத்தின் சொந்தப் தயாரிப்பு சம்மருக்கு கோச்சா பீமும் இல்லாததால் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                         
                     "இவள் பார்வை மின்சாரம்" பாடல் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த பாடல். "சிரிப்பே வரல" என்று சந்தானம் செந்திலிடம் சொல்லும் போது தியேட்டர் முழுக்க சிரிப்போ சிரிப்..

                  Aavee's Comments - Not so wise !
   


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...