Wednesday, November 15, 2017

கயல்விழியாள் சமைக்கிறாள்! -3

400 வது பதிவு!

‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க?’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்கொண்டிருந்தது.



‘நான் எங்கே கிண்டல் பண்ணினேன் செல்லம். உப்புமா கிடைக்கிறது பாக்கியம்ன்னு தானே சொன்னேன்’ என்றேன் அப்பாவியாக.


‘சரி, அத விடுங்க. தயிர்சாதத்தை ஏன் கிண்டல் பண்ணினீங்க?’ இம்முறை கடலைப்பருப்பும் சேர்ந்து வெடித்தது.


‘அச்சோ, ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு, நீ எனக்கு

தயிர்சாதம் செய்து கொடுத்தேன்னு உன்னை பாராட்டத்தானே செஞ்சேன். டோன்ட் ஆங்ரி மீ’’ என்ற என் ஆங்கிலத்தைக் கேட்டு அவள் விழித்து நிற்க,

‘என் மேல கோபப்படாதேன்னு சொன்னேன் கண்ணு’ என்றேன். அதுவரை இருந்த இறுக்கம் போய் உதட்டைக் கடந்து பொங்கி வந்த சிரிப்பிற்கு அணை போடமுடியாமல் சிரித்துவிட்டாள்.


‘சரி, இன்னைக்காவது கிண்டல் பண்ணாம சாப்பிட்டு வாங்க. எப்படி இருக்குன்னு போன் பண்ணி சொல்லுங்க’ என்றாள்.


‘சரிம்மா’, சரிம்மா’ என்றேன் ‘மெர்சல்’ வெற்றிமாறன் குரலில்.


மதியம் இரண்டு மணி.


டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு கேண்டீன் சென்று அமர்ந்தேன். சாதத்துடன் சற்று உருளைக்கிழங்கு பொரியல்.

(அப்பாடா! - பெருமூச்சு)

மற்றொரு டப்பாவில் குழம்பு வடிவத்தில் ஏதோ இருந்தது. அதில் ஆங்காங்கே தக்காளியும் வெங்காயமும் நிறைந்திருந்தது.

டப்பாவைத் திறந்ததும் கடுகு கூட்டம் கூட்டமாக என்னை வரவேற்றது.

அதை கொஞ்சமாக டிபன் பாக்ஸில் ஊற்றி உண்ணத் துவங்கினேன்.

அருகே இருந்த நண்பர் ஒருவர், ‘சார் அந்த தக்காளித் தொக்கை குடுங்க’ என்றார். கொடுத்தேன். அவர் ஊற்றிவிட்டு, 'ரசமா?' என்றார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி நின்றேன்.


அந்த நேரம் பார்த்து போன் அடிக்கத் துவங்கியது.


அவளேதான்! இப்போது இருதயம் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக அடிக்கத் துவங்கியது. போனை எடுத்ததும் இன்று சமைத்தது என்ன? என்ற கடினமான கேள்வியை என் முன் வைத்துவிடுவாளோ என்ற பயம்தான்.

மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டே அதை எடுத்தேன்.


‘ஏங்க, புளிக்குழம்பு நல்லா இருந்ததா?’ என்றாள்.


ஓ, இதுதான் புளிக்குழம்பா? இத்தனை நாள், ஊர்ல எல்லாரும் வேற எதையோ கொடுத்து, புளிக்குழம்புன்னு நம்ப வச்சுட்டாங்களே. ப்ளடி ராஸ்கல்ஸ் -இது என் மைண்ட் வாய்ஸ்.

‘வாவ்..சூப்பரா இருந்தது மா. கொஞ்சம் உப்பு கம்மி. காரம் கம்மி. அப்புறம் புளிப்பு சுத்தமா இல்ல. மத்தபடி அருமையா இருந்தது மா’ என்றேன்.


‘நல்லவேளை, உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்துட்டே இருந்தேன்.’என்றாள்.

மீ - ???????????
.
#அவளும்_நானும் #புளிக்குழம்பு

Thursday, July 20, 2017

கமல் அரசியலுக்கு வரக்கூடாது!


               

இது சுயநலமாகக்கூட இருக்கலாம். ஆனால் கமல் என்னும் நடிகர் அரசியலுக்கு வருவதை விரும்பாத ஒரு ரசிகன் நான்!
.
தமிழ்நாட்டை (குறிப்பாக சென்னையைப்) பொறுத்தவரை எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இரவில் அமைதிப்பூங்காவாய் இருந்தது, விடியலில் சுனாமி விஸ்வரூபம் எடுத்தது. வெயில் என்பதே அடையாளமாக இருந்த ஊரில் மழை சலங்கை ஒலி ஆடியது. எங்கிருந்தோ வந்த 'வர்தா' நமக்கு வாழ்வே மாயம் என்று காட்டிச் சென்றது. அதனால், சினிமாதான் என் உயிர்மூச்சு, அரசியலை நான் வெளியே இருந்து பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஆண்டவர் களத்தில் குதித்து சுத்தப்படுத்த அதிக நேரம் ஆகாது. அதற்கான நேரத்தைதான் மற்றவர்கள் குறித்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
நடிகர் அரசியலுக்கு வருவது தவறல்ல. நம் தமிழ்நாடு அப்படி பல அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அதிலும், கமல் ஒரு 'வேட்டி கட்டிய தமிழன்' என்பதால் வெளியே இருப்பவர்கள் 'தமிழன் அல்ல' என்ற துவேஷம் போட முடியாது. அதிகபட்சம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டு, பொய்க்கால் குதிரை ஆடுவார்கள்.ஆனால் நம்மவர், உயர்ந்த உள்ளம் படைத்தவர். சதி லீலாவதிகளையும், தெனாலிகளையும், தில்லுமுல்லு பார்ட்டிகள் பலரையும் பார்த்து வந்தவர். இந்தக் கலைஞனை அவ்வளவு சீக்கிரம் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட மாட்டார் என்றே நம்புகிறேன்.
.
இதுவரை அவர் ஒரு சினிமா பைத்தியமாக, என்னைப்போல், உன்னைப்போல் ஒருவனாக இருந்தவர், 'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் வழியில் அன்பே சிவம் என்று போதித்தவர், சாதி வேண்டாம், 'புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா' என்று சொன்னவர், இந்த அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உத்தம வில்லனாய் மாறிவிடுவாரோ என்ற அச்சமே தலைதூக்குகிறது.
.
ஒரு பக்கம் அந்த மகராசன், அரசியலில் நாயகனாய் ஜொலிப்பதை பார்ப்பது மகிழ்ச்சிதான் என்றாலும், எனக்குள் ஒருவன், ஒரு ஆத்மார்த்த ரசிகனாய், கமல் என்ற அந்த நடிப்பின் மகாநதி, இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். அதே நேரம், அரசியல் சாணக்யனாய், வெளியில் இருந்தே விமர்சனம் செய்வதையே ஒரு இந்தியனாய், தமிழனாய் நான் விரும்புகிறேன்.
.
என் குரு தலைமைப் பொறுப்புகளுக்கு வருவதைப் பற்றி நினைத்தாலே இனிக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த சிகப்பு ரோஜாவையும் அரசியல் என்னும் குருதிப் புனலில் மூழ்கடித்துவிடுவார்களே என்பதுதான் என் தயக்கம். திரை உலகில் பிரகாசிக்கும் முழு நிலவான அவரை, அரசியல் மூன்றாம் பிறை ஆக்கிவிடக்கூடாதே என்பதுதான் என் வருத்தம். ஆயினும் அந்த புன்னகை மன்னன், சட்டத்தை கையில் எடுத்து லஞ்ச லாவண்யத்தில் ஊறிய அசுரர்களை சூர சம்ஹாரம் செய்யத் துணிந்துவிட்டால் அந்தப் படையில் ஒருவனாய் சேர்ந்து தலைவனோடு வெற்றிவிழா கொண்டாடத் தயாராக இருக்கிறேன்.
.

போர் உன்னைத் தேடி வரும்வரை காத்திருக்க வேண்டாம் தலைவா, இப்போதே நீ போர் தொடு!
நான் மட்டுமல்ல என்னைப்போல் லட்சோபலட்சம் இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர் உன் பின்னால் வர. மகளிர் மட்டும் என்னகுறைச்சலா? அவர்களும் போர்க்கொடி ஏந்தத் தயாராக உள்ளனர். தூங்காவனத்தில் சிறைப்பட்டிருந்தது போதும். தசாவதாரம் எடு! உன் ரசிகர்களுக்கு நல்லதோர் செய்தியை காதல் பரிசாய் கொடு!
.
இவண்,
பல கோடி பக்தர்களில் ஒருவன்

Thursday, June 1, 2017

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீஸன்2.

.

ரே,

புதிதாக சேர்ந்திருந்த அலுவலகத்தில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கும் சொந்த ஊர் கோவை என்று கூறினார். ‘அட நம்ம ஊர்க்காரர்’ என்ற உற்சாகம் மேலிட அவரைப் பற்றிய தகவல்களை விசாரிக்க, கடைசியில் அவர் படித்தது, நீ படித்த அதே கல்லூரியில்தான் என்று தெரிந்துகொண்டேன். ஓரிரு நிமிடங்கள் தயங்கி அவரிடம் ரேஷ்மா என்ற உன் பெயரைக் கூறி  ‘தெரியுமா?’ என்று கேட்டேன். அவர் சற்றும் தாமதிக்காமல் ‘அந்த வாயாடிப் பொண்ணா, சார்?’ என்றார். பின் சுதாரித்துக்கொண்டு ‘சாரி சார். ஏதோ ஞாபகத்துல அப்படி கேட்டுட்டேன். உங்களுக்கு வேண்டப்பட்ட பொண்ணா சார்?’ வேறு எதைச் சொல்லிக் கேட்டிருந்தாலும் இன்னும் நாலைந்து அடையாளங்களாவது தேவைப்பட்டிருக்கும் நீதான் அது என்று நான் உணர்ந்துகொள்ள. ‘இட்ஸ் ஓகே, யெஸ், அவ லொடலொடன்னு நிறைய பேசுவா. கன்னத்தில், உதட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் இருக்குமே’ என்றேன். ‘ஆமா சார். அதே பொண்ணுதான். எனக்கு சீனியர்தான், ஆனா ஒண்ணா ட்யுஷன்ல படிச்சோம். உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா சார்?’ என்று மீண்டும் கேட்க, ஒரு புன்னகையோடு தலையை மட்டும் அசைத்தேன். இன்னும் அவ்வளவாய் அறிமுகம் இல்லாத அவரிடம் எப்படிச் சொல்வது, நீ என் ‘சக பயணி’ ஆன கதையை?
.

எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த டெலிபோன் உரையாடல். ‘இப்படி பல வாரமா பேசிக்கிட்டு இருக்கோமே?, நான் உங்களுக்கு என்ன ப்ரெண்டா?’
அவசரமாய் மறுத்தேன், ‘இல்லை’. ஒரு நக்கல் சிரிப்போடு ‘நான் உங்களுக்கு தங்கை முறையா?’ என்றதும் எனக்குக் கோபம் தலைக்கேறியது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்  ‘நீ என்ன அண்ணனா நெனச்சா, நானும் தங்கையா நினைக்கத் தயார். நீ அப்படி நெனைக்கிறயா?’ என்றேன். ‘சேச்சே.. இல்ல’ என்று நீ பதறியடித்துக்கொண்டு பதிலளித்தது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அதே சமயம் மனதில் ஒரு ஆறுதல். ‘சரி, அப்ப, நம்ம ரிலேஷன்க்கு பேர் என்ன?’ என்று பந்தை என்னிடமே தூக்கிப்போட்டாய். ‘நீ எனக்கு....’ என்று சிறிது இடைவெளிவிட்டேன். ‘நான் உங்களுக்கு?’ ‘நீ எனக்கு கோ-பாசஞ்சர்’. இதை நான் சொன்னதும் நீ சிரிக்கத் துவங்கிவிட்டாய். ‘என்னது, கோ-பாசஞ்சரா? அப்படீன்னா?’ என்றாய். ‘என் வாழ்க்கைப் பயணத்தில் உடன் வரப் போறவள்னு அர்த்தம்’ என்றேன். சிறிது நேர மௌனம். பிறகு ‘அப்படீன்னா?’ என்றாய். ‘அப்படீன்னா, அப்படித்தான்’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

.
அன்று துவங்கிய நம் நெருக்கம், ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா, கங்கா யமுனா திரையரங்கம், நீ படித்த கல்லூரியின் அருகே இருந்த டீக்கடை, உன் வீட்டிற்கு அருகே இருந்த பாலம், க்ராஸ்கட் ரோடு, என்று கோவையின் புகழ்பெற்ற இடங்கள் அனைத்திலும் மெல்ல மெல்ல வளர்ந்தது. இருந்தாலும் நம் உறவுக்கு உரைகல்லாய் இருந்த இடம், நீ வழக்கமாகச் செல்லும் அந்த துர்க்கை அம்மன் கோவில்தான். இன்றும் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் போட்டு குழப்பிக்கொள்பவர்கள் நிச்சயமாக இதை முகச்சுளிப்போடுதான் வாசித்துக் கடப்பார்கள். வயதுக்கு வந்த ஒரு பெண், பொதுமக்கள் கூடும் கோவிலில் வைத்து, அவள் வயதுடைய ஆணுக்கு ‘இதழ் முத்தம்’ கொடுப்பது என்பது இன்றைக்கும் குற்றமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் அன்றைக்கு எனக்கே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது; ஆனந்தமாகவும் தொடர்ந்தது.. அப்போது உன்னளவிற்கு தைரியம் என்னிடம் இல்லை எனக்கு. அதனால் உனக்கு பதில் முறை செய்யும் துணிவு வரவில்லை. காதலியின் முத்தமும் புனிதமானதுதான். அதிலும் கோவிலின் பின்புறம் வைத்து நீ கொடுத்ததால் அது இன்னும் பரிசுத்தமானது. அந்த ‘முதல் முத்தம்’ இன்னும் சில மில்லேனியங்களுக்கு நினைவில் இருக்கும். ஏனெனில் அந்த முத்தம் காமத்திற்கான அழைப்பு அல்ல. உண்மையான காதலின் சுவடு.

.
சரி, அதிருக்கட்டும். சென்னையில் நான் தங்கி பணிபுரிந்த போது ‘சென்னை பயங்கர சூடா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் கோயம்புத்தூர்லயே செட்டில் ஆயிடணும்’ என்று  கூறுவாயே. இப்போது சவூதி அரேபியாவிலும் வெப்பம் அதிகம்தானாமே? இந்நேரம் அந்த கிளைமேட் உனக்கு பழகியிருக்கும் என்று நம்புகிறேன். முகநூலில் உன்னைத் தேடிக் கண்டுபிடித்தவுடன் உனக்கு முதலில் ‘பிரண்ட்’ ரிக்வெஸ்ட் கொடுக்கத்தான் நினைத்தேன். ஆனால் நட்பு அழைப்பு கொடுக்க நீ ஒன்றும் என் தோழி அல்லவே! நீ அவ்வப்போது போடும் புகைப்படங்களை நான் பார்க்கத்தான் செய்கிறேன். அதிலும் இளஞ்சிவப்பு உடையில் உன் டிரேட் மார்க் புன்னகையோடு நீ நிற்கும் புகைப்படமும் இரண்டு அடியில் செய்து வைத்த வெண்கலச் சிலை போல் மின்னும் உன் பெண் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு நிற்கும் நீயும், அருகே அளவுக்கு அதிகமான ஆறரை அடி உயரத்தில் வளர்ந்திருந்த உன் கணவனும் நிற்கும் புகைப்படமும் கொள்ளை அழகு!

.
இதற்கு முன் நான் எழுதிய முந்நூற்றுச் சொச்ச கடிதங்களைப் போல இதுவும் என் குப்பைத் தொட்டிக்குள்தான் வாசம் செய்யப் போகிறது. ஆனாலும் அது என் மனம் முழுக்க நிறைந்திருக்கும் காதலை அலைவரிசைகளாய் மாற்றி உனக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். உன்னை நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றைப் பார்க்கும் வேளையில் அடுத்த கடிதத்தை எழுத என் பேனா ஆயத்தமாகிவிடும்! அதுவரையிலும் உன் நினைவுகளில் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்.

புன்னகைகளுடன்,
உன் சக பயணி.
.
.
#அவளும்நானும்
.

Saturday, May 13, 2017

ஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்!


சில விஷயங்கள்ல சில பேர் கிட்ட இருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்துப்போம் இல்லையா? அந்த மாதிரி ஒரு நபர்தான் இந்த ஒடக்காரரும்!
.
2011 ஆம் வருஷம்னு நெனைக்கிறேன். கொடைக்கானல் ஏரியில் போட்டிங் போகலாம்னு போனபோதுதான் அவரை முதன்முதலா சந்திச்சேன். அது எப்படின்னு அப்புறம் சொல்றேன். அதுக்கு முன்னாடி அந்தத் துடிப்பான மனிதரைப் பத்தி சில விஷயம் சொல்லிடறேன்.
.
இவர் பக்கத்துல பத்து நிமிஷம் நின்னா 'டர்போ' சார்ஜர் மாதிரி நமக்கு ரீபிள் ஆயிடும். அவ்வளவு எனர்ஜி மனுஷனுக்குள்ள. 'வாவ், வாட் எ மேன்' அப்படின்னு ஒரு ரஜினி படத்துல டயலாக் வரும். அது சூப்பர்ஸ்டாருக்கு பொருந்துதோ இல்லையோ, இந்த மனுஷனுக்கு நிச்சயம் பொருந்தும். இவரை நேர்ல பார்த்த எல்லோரும் அதை நிச்சயமா ஒத்துப்பாங்க.
.
அதே மாதிரி இவர் பேச ஆரம்பிச்சா, கேட்டுகிட்டே இருக்கலாம். அவ்வளவு விஷய ஞானம் உள்ளவர். ஆனா இவர்கிட்ட விவாதம் அப்படின்னு யாராவது பண்ணனும்னு நெனச்சா, அவங்களுக்காக நாம 'கூட்டுப் பிரார்த்தனை' பண்ண வேண்டியிருக்கும்.
.
பேசுவதில் மட்டுமல்லாமல் எழுதுவதிலும் இவர் 'ஜித்து ஜில்லாடி'. இவர் கொஞ்சம் வயதான மனிதர்தான். ஆனால் சூடம் அடிச்சு சத்தியம் பண்ணினாலும், அந்த அய்யனாரே அதை நம்ப மாட்டார். 'அன்பார்ச்சுனேட்லி' அந்த அய்யனார இவர் நம்பறது இல்ல.
.
நான் சொன்னதெல்லாம் வெச்சு, இவரை ஒரு படிக்காத மேதைன்னு நீங்க எல்லாம் நெனச்சிருப்பீங்க. ஆனா, இவர் படிச்ச புக்ஸ 'கன்னிமரா' லைப்ரரியன் கூட படிச்சிருக்க மாட்டார். தூங்கும்போது கூட தலையணைக்கு பதிலா 'நாலு புஸ்தகம் இருந்தா கொடு தம்பி' ன்னு கேட்டு வாங்கி என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர்.
.
சரி, இன்ட்ரோ போதும், அவரை நான் கொடைக்கானல்ல சந்திச்சேன்னு சொன்னேன் இல்ல. அது நேரடி சந்திப்பு கிடையாது. அவர் எங்கோ எப்போதோ எழுதி வைத்த விஷயம் ஒண்ணு கொடைக்கானல் ஏரில பாட்டில்ல மிதந்து வந்தது. அந்த பாட்டில் அமெரிக்கால செய்யப்பட்டது. 'எ பிராடக்ட் ப்ரம் மார்க்' னு எழுதியிருந்தது. அத படிச்சுட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போகவே என் பதிலை (பாராட்டை) அந்த பாட்டிலிலேயே அனுப்பி வச்சேன். ஆனா அதை அவர் பார்த்திருப்பாரான்னு கூட எனக்குத் தெரியல.
.
அப்புறமா இன்னொரு சந்தர்ப்பத்துல நான் ஒரு தெருவுல சுத்திட்டு இருந்தேன். அப்போ அங்கிருந்த ஒரு கூட்டத்தலைவர் (அவரை எல்லாரும் செல்லமா 'டான்' னு  கூப்பிட்டாங்க. பார்க்க டெரரா இருப்பார்னு நெனைக்காதீங்க. இவரு கொஞ்சம் சாஃப்ட் பார்ன், ஐ மீன் சாஃப்ட் டான். அவர பத்தி வேறொரு நாள் சொல்றேன்.) என்னையும் அவர் கூட்டத்துல சேர்த்துவிட்டார். அங்கதான் இந்த ஓடக்காரர் கிட்ட பேசற வாய்ப்பு எனக்கு கெடச்சுது. இப்பவும் நான் ஒரு சுவத்துல எழுதி வச்சுட்டு போயிடுவேன். அவர் வந்து பதில் சொல்லியிருப்பார். நேர்ல சந்திச்சுக்கல.
.
இப்படியா போய்கிட்ட இருந்த போது, ஓடக்காரர் வாழ்க்கையில ஒரு புயல். எல்லோரும் வந்து ஆறுதல் சொன்னாங்க. நான் கொஞ்சம் தூரமா நின்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன். ஆறுதல் சொல்ற வயசு இருக்கான்னு தெரியாம தள்ளியே இருந்தேன். அப்ப ஒருநாள் மெரீனா பீச்சுக்கு போயிருந்தேன். என் பக்கத்துல ஒருத்தர் வந்து உக்காந்தார். 'தம்பி நீங்கதானே ஆவி' ன்னு கேட்டார். 'ஆமா நீங்க' என்றேன்.
.
அவர் தெலுங்கு படத்துல கிருஷ்ணன் வேஷத்துல வந்த என்டிஆர் மாதிரி கலர்ல இருந்தார். அதேமாதிரி சிரிப்பு. 'நான்தான் ஓடக்காரன்'ன்னு சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் கையும் ஓடல, காலும் ஓடல. ஐயோ ராமா, இந்த மனுஷன தேடி நான் எங்க எங்கயோ போனேனே, இவர் எம் பக்கத்துல வந்து உக்காந்திருக்காரேன்னு நெம்ப சந்தோஷமா போச்சு.
.
சரி வாங்க தம்பின்னு  (இன்னைக்கு வரைக்கும் என்னை வாங்க, போங்கன்னுதான் கூப்புடுவார். அவர் வயச குறைச்சு காண்பிக்கவா இருக்கும்னு நெனச்சு நானும் அப்படியே விட்டுட்டேன்) கூப்பிட்டு தன்னுடைய ஓடத்த எடுத்துகிட்டு என்னையும் அதுல உட்கார வச்சு, ஒரு பெரிய கடலுக்குள்ள கூட்டிட்டு போனாரு. ஆறு மாசம் ரெண்டு பேரும் ஒண்ணாவேதான் சுத்துனோம்.
.
பல 'ஜென்' இரவுகள், சினிமா கதைகள், சுவாரஸ்யமான ஹாஸ்யங்கள்னு போய்கிட்டு இருந்தப்ப திடீர்னு என்னாச்சுன்னு தெரியல. 'தம்பி, என்னுடைய தேடல் வேற, உங்க தேடல் வேற' ன்னு சொல்ற மாதிரி திடீர்னு என்னை ஒரு ஐலேண்ட்ல இறக்கிவிட்டுட்டு அவர் ஓடத்தை எடுத்துட்டு போயிட்டார். என்னைக்காவது கண்ணுல தென்படுவார்னு பார்த்தேன், இதுவரைக்கும் அகப்படல.
.
இன்னைக்கு காலைல எங்க கூட்டத்து கூடாரத்துல பார்த்தப்போ 'ஒடக்காரருக்கு பொறந்தநாள்' ன்னு எழுதி எல்லாரும் வாழ்த்து சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நானும் தூரமா நின்னு, வாழ்த்த வயதில்லைன்னு வணங்கிகிட்டு இருக்கேன்!
 .


Thursday, May 11, 2017

Vivekam Official Teaser



'தல' நடித்து வெளியாகும் விவேகம் டீசர் நேற்றிரவு வெளியானது. பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம். இயக்குனர்  'சிறுத்தை' சிவாவின் கூட்டணியில் 'தல' நடிக்கும்  மூன்றாவது திரைப்படம் இது.




Tuesday, May 9, 2017

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (Adieu) -33

அது அவளுடைய தந்தை வரும் நேரம் என்பதால், இருவரின் கண்களும் பத்து வினாடிகளுக்கு ஒருமுறை கதவை நோக்கியபடியே இருந்தன. அவள் கரங்களோ என் கரங்களை இறுகப் பற்றியிருந்தது. எப்போதும் மிருதுவாக இருக்கும் அந்தக் கைகளில் இன்று சற்றே அதிகமான வியர்வையின் ஈரம். அவள் கீழ் உதடுகள் வெடித்தும், கண்கள் சோர்ந்தும் இருந்தது. விழிகள் இரண்டும் எந்நேரமும் கண்ணீர் விடத் தயாராக இருந்தது. தலைமுடி கலைந்து அவள் முகத்தில் பாதியை மறைத்திருந்தது. அவள் கிடத்தப்பட்டிருந்த கட்டிலின் இடப்புற ஓரத்தில் சுவற்றோரமாய் நான் அமர்ந்திருக்க, அவள் என் மார்பில் தலை வைத்தபடி சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
.
நீண்ட நேரமாய் மௌனத்தை மட்டுமே பேசியபடி இருவரும் அமர்ந்திருந்தோம். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவள் என்னுடைய கைகளை மேலும் இறுகப் பிடித்தாள். இருவரும் திறக்கப் போகும் கதவின் பின்னால் அவள் தந்தையின் முகம் இருக்குமோ என்ற பதைபதைப்புடன் பார்த்தோம். கதவு திறந்தது. அங்கே அவள் அம்மா உள்ளே எட்டி நோக்கினார். 'அப்பா வர்ற நேரமாச்சு' என்று கூறிவிட்டு அவசரமாகக் கதவை மூடினார். அவள் தந்தை இல்லை என்றறிந்ததும் இருவருக்கும் ஒரு ஆசுவாசம். அவளுடைய வெப்பமான மூச்சுக்காற்று, என் வலக்கையில் அதை உணர்த்தியது. அவள் தலையை ஆதரவாக வருடியபடி அதை ஒழுங்குபடுத்தினேன். அருகே இருந்த ஒரு சீப்பை எடுத்து, அவள் எப்போதும் தலை சீவுவது போல நடு வகிடு எடுத்து சீவி, பின்னால் முடிகளைக் கற்றையாக்கி, அருகே இருந்த மேசை மீது மருந்து புட்டிகளுக்கு நடுவே வைத்திருந்த கிளிப்பை எடுத்து மாட்டிவிட்டேன்.
.
என் இடக்கையின் மீது ஒரு துளி சூடான கண்ணீர் விழுந்தது. அவள் முகத்தை என் பக்கமாகத் திருப்பினேன். முதலில் மறுத்து, பின் என் பக்கமாகத் திரும்பி என் கண்களை உற்று நோக்கினாள். அவள் விழி என்னும் அணையின் நீர்மட்டம் வழியும் தருவாயில் இருந்தது. 'என்னடா' என்றேன். அந்த ஒற்றைச் சொல்லைக் கேட்டதும், அவள் என் மார்பில் தலை புதைத்து தேம்பித் தேம்பி அழத் துவங்கிவிட்டாள். ஆறுதலாய் அவள் முதுகை தடவிக் கொடுப்பதைத் தவிர எனக்கு அச்சமயத்தில்  வேறொன்றும் தோன்றவில்லை. கதவு தடாலென்று திறந்தது. அதிர்ச்சியோடு அந்தப் பக்கம் பார்த்தோம்.
.
நர்ஸ் வேகமாக அவளை நோக்கி வருவதைப் பார்த்ததும் அவள் என்னிலிருந்து சற்று விலகி அமர்ந்துகொண்டாள். நான் அவளைச் சுற்றியிருந்த கையை அவசரமாக விடுவித்துக்கொண்டேன். நர்ஸ் கட்டிலில் மாட்டியிருந்த அட்டையில் இருந்த விவரங்களைப் படித்தபடியே 'இப்ப எப்படி இருக்கு, பரவாயில்லையா?' என்று கேள்வி கேட்டு அவள் பதிலுக்கு தலையசைத்ததும், காலியாக தொங்கிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ்' பாட்டிலை எடுத்து மேசைக்கு கீழே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வேறு ஒரு ட்ரிப்ஸ் பாட்டிலை மாட்டி, சரியாக இறங்குகிறதா என்று பார்த்துவிட்டு அகன்றார்.
.
அறையில் மீண்டும் மௌனம். கட்டிலின் மேல் வைத்திருந்த என் கைகளை மீண்டும் எடுத்து தன் உள்ளங்கைக்குள் பொதிந்து கொண்டாள். 'நான் அப்பாகிட்ட பலமுறை பேசிட்டேன். அவர் புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல.' 'அதனாலதான் முட்டாள்தனமா இப்படி ஒரு காரியம் செஞ்சியா?' கோபத்துடன் கேட்டேன். 'எனக்கு வேற வழி தெரியல. அப்பவாவது அவர் ஒத்துக்குவார்னு நெனச்சேன்.' என் விரல்களை உள்ளடக்கியிருந்த அந்த மென்மையான கையில் மணிக்கட்டுக்கு கீழ், சுமார் பதினைந்து செ.மீ தொலைவில் சமீபத்தில் தையல் போடப்பட்டு வெள்ளை பேண்டேஜ் துணியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை பீறிட்டு வந்தது.
.
'எருமை உனக்கு ஏதாவது ஆயிருந்தா?' 'உன் நெனப்போட சந்தோஷமா போயிருப்பேன்.' அவள் தலை உச்சியில் முத்தமிட்டேன். அவள், தான் பற்றியிருந்த கரத்தை மேலே எடுத்து அதை முத்தமிட்டாள். 'எனக்காக ஒண்ணு செய்வியாடா?' 'என்னடா, இப்படி கேக்குற, சொல்லுடா' என்றேன். ஓரிரு வினாடிகள் மௌனத்திற்குப் பிறகு, 'என்னை எப்படியாவது மறந்திடேன், ப்ளீஸ்' என்றாள். அவள் இப்படி ஒரு விஷயத்தைக் கேட்பாள் என்று சற்றும் எதிர்பார்க்காத நான் திகைப்பில் இருக்க, 'என் அப்பா பத்தி எனக்கு நல்லா தெரியும். அவருக்கு மகளை விட சாதிதான் முக்கியம். மகள் சந்தோஷமா இருப்பாளாங்கிறதவிட சொந்தக்காரங்க என்ன பேசுவாங்களோங்கிறதுதான் முக்கியம். அதனால..' 'அதனால?'.
.
'நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். என்னை மறந்திடு. மேல படி. உனக்கு நல்ல ப்யுச்சர் இருக்கு. என்னால அது கெட்டுப்போகக் கூடாது.'
'லூஸு, நீ இல்லாம எனக்கு என்ன ப்யுச்சர்? நீ குணமாயிட்டு வா. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்குவோம்.' 'அது முடியாதுடா. அப்புறம் அவர் இங்கே அம்மாவ டார்ச்சர் பண்ணுவார். தங்கச்சிக்கும் கல்யாணத்துல சிக்கல் வரும்'. இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் அமைதியாக இருக்க, 'நான் நல்லா யோசனை பண்ணிட்டேன். இதுதான் ஒரே தீர்வு. தயவு செஞ்சு என்னை மறந்திடு, ப்ளீஸ்' அவள் இதுவரை கேட்ட எதையும் நான் தர மறுத்தது இல்லை. இப்போது மறுக்காமல் தர மனமும் இன்றி அசையாமல் நின்றிருந்தேன்.
.
அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த அவள் அப்பா, எங்களைப் பார்த்ததும், கண்களில் கோபம் கொப்பளிக்க என்னை நோக்கி வேகமாக வந்தார். அவரைத் தடுக்க குறுக்கே வந்த அவள் அம்மாவை சுவற்றோரமாக தள்ளிவிட்டு கைகளை ஓங்கியபடி என்னருகே வந்தார். அவரை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்று நான் என்றுமே எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லி அவரை சமாதானப்படுத்துவது, எங்கள் காதலை ஒப்புக்கொள்ள வைப்பது என்று எண்ணியபடி நான் எழுந்து நிற்க, வேகமாக வந்த அவர் என் கன்னத்தில் 'பளிச்' என்று ஒரு அறை வீச, நான் நிலை தடுமாறி அருகே இருந்த மேசைக்கு அருகே கீழே விழுந்தேன்.
.
அவள் வீறிட்டுக் கத்தியபடி, தந்தையின் கைகளைப் பிடித்திருந்தாள். 'நான் அவர்கிட்ட சொல்லிட்டேன். அவர் போயிடுவார். ப்ளீஸ் பா, அவரை விடுங்க.' தட்டுத் தடுமாறி எழுந்த என்னை நோக்கி இரு கைகளையும் கூப்பி 'ப்ளீஸ், போயிடு' என்றாள் நான் எழுந்து 'சார், நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க' என்று சொல்வதற்குள் அவர் மீண்டும் அடிக்க முயல, அதற்குள் அவள் அம்மா ஒரு பக்கம், அவள் ஒரு பக்கமுமாக அவரைத் தடுத்து நிறுத்தி. 'தயவு செய்து இங்கிருந்து போயிடு, இனிமே என்னை பார்க்க முயற்சி பண்ணாத, பேச ட்ரை பண்ணாத, என்னைப் பத்தி நெனைச்சுக்கூட பார்க்காதே. இது எம் மேல சத்தியம். போயிடு' என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதாள்.
.
அவள் பேச்சை மறுக்க முடியாமல் அன்று அங்கிருந்து .வெளியேறினேன். அதற்குப் பிறகு அவளைப் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் அவள் நினைவு மட்டும் நெஞ்சுக்குள் இன்றுவரை நீங்காமல் இருந்துகொண்டே இருக்கிறது,. திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாக வேண்டும் என்பது அவளுடைய ஆசை. இதை என்னிடம் பலமுறை கூறியிருக்கிறாள். ரமா, நிச்சயம் சென்னையில்தான் இருப்பாள்.  என்றேனும் ஒருமுறை, எங்காவது தெருவில் எதேச்சையாக அவளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் இன்றும் இருக்கிறது. தொலைந்து போன காதலை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அல்ல. எனக்காகவும் தன்  உயிரைத்தர தயாராக இருந்த அந்த ஜீவனுக்கு மனதார ஒரு நன்றி சொல்ல!



.
#அவளும்_நானும் #Adieu 

.

Wednesday, February 15, 2017

அவளும்_நானும்





















வானத்தில் எப்போதும் ஒன்றாகவே
ஊர் சுத்திக் கொண்டிருக்கும் அந்த
மூன்று நட்சத்திரங்களைக் காட்டி,
"அது யார் யார் தெரியுமா?" என்றேன்.
எப்போதும் போல அவள் தன்
கீழுதட்டை உயர்த்தி,
மேலுதட்டின் மேலே உரசவிட்டு,
யோசிப்பது போலொரு பாவனை செய்து,
"ம்ஹும்" என்ற தன்
வழக்கமான விடையை தந்துவிட்டு,
அடுத்த முதல்வர் யாரென்று தெரியாத
தமிழகம் போல் விழித்து நின்றாள்.

இதை முன்பே எதிர்பார்த்திருந்த நான்
அவள் தோளில் கைபோட்டு,
"அதோ முதல்ல இருக்குதே,
அது நான்" என்றேன்.

ஆர்வமாய் என் கன்னத்தோடு
அவள் கன்னம் வைத்து,
"அந்த ரெண்டாவது" என்றாள்.

இதற்கான பதிலை அவளுக்கு நான்
பலமுறை கூறியிருந்தாலும்
முதல்முறை கேட்கும் ஆவலோடு,
அந்த இரண்டாவது நட்சத்திரத்தை
மை எழுதிய அவள் விழி மூடாமல்
பார்த்தபடியே கேட்டாள்.

"அது  நீதாண்டி என் கண்மணி" என்றேன்.
பால் நிலவின் மங்கிய ஒளி வெளிச்சத்திலும்
அவள் கறுப்பான கன்னங்கள்
வாஷிங்டன் ரெட் ஆப்பிளாய் சிவந்திருந்தது.

மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
"அந்த மூணாவது?" என்றாள்.
இதைக் கேட்கையில் கொஞ்சம் கோபம்
கலந்துதான் கேட்டாள்.

அதற்கு காரணம் இல்லாமலில்லை.
அந்த மூன்றாவது நட்சத்திரத்திற்கு சில சமயம்
என் முன்னாள் காதலிகளில்
ஒருத்தியின் பெயரையோ,
அவள் நேசித்துப் பிரிந்துவிட்ட
காதலனின் பெயரையோ சொல்லி
அவளை வெறுப்பேற்றுவது என்
பிரியமான விளையாட்டில் ஒன்று.

எந்தப் பேரைச் சொன்னாலும்
கோபப்பட்டு நெஞ்சில் விழப்போகும்
குத்துகள், அதைத் தொடர்ந்து
என் சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம்
கண்ணீர் சேமிப்பதோடு முடியும்
அந்த அத்தியாயம்.

இன்று அவள் கேள்விக்கு
பதில் சொல்லாது மௌனம் சாதித்தேன்.
அவளும் மீண்டும் என்னைக் கேட்கவோ,
திரும்பிப் பார்க்கவோ இல்லை.

"ஏய், அது யார் தெரியுமா?"
"யா....ரு" - இருவர் மட்டுமே
அமர்ந்திருந்த அந்த மொட்டை மாடியில்
அவள் ரகசியம் பேசினாள்.

"அது நம்ம குட்டிப்பாப்பா"
இதை நான் சொன்னதும்
ரெட் ஆப்பிள் நாணம் கொண்டு
என் மார்பிற்குள் ஒளிந்து கொண்டது.
"அது சரி, அது ஏன் நமக்கு
நடுவுல நிக்காம ஓரமா நிக்குது?"
குனிந்த தலை நிமிராமல் குரல்
மட்டும் ஒலித்தது.

வண்டி வண்டியாய் கொட்டிக்கிடந்த
அழகோடு நாணமும் சேர்ந்திருந்த
அவள் முகத்தை,
என் கைகளால் வாரியெடுத்து
"அந்தப் பாப்பா புத்திசாலிப் பாப்பா,
வழிதவறி எங்கயும் போயிடாது.
ஆனா இந்தப் பாப்பா கொஞ்சம்
மக்குப் பாப்பா, அதான் நடுவுல நிறுத்தி
கேட் போட்டிருக்கோம்." என்றதும்

எப்போதும் போலவே மார்பில்
குத்துக்கள் விழுந்தன. அதைத் தொடர்ந்து
அவள் முத்தங்களும்!

#அவளும்_நானும்




How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...