Tuesday, November 24, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (4)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3

                   நான் கண்விழித்த போது எனக்கு மேலே மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டிலில் இருந்து எழுந்து சோம்பல் முறித்து, அவசர அவசரமாய் குளித்து திரைப்பட விழாவிற்குச் செல்ல ஆயத்தமானேன். மணி எட்டை தாண்டிவிட்டபடியால் காலை உணவைப் புறக்கணித்துவிட்டு நேராக திரைப்படங்கள் திரையிடும் ஐநாக்ஸ் திரையரங்கிற்கு ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தேன். நான் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் அரங்கை சரிபார்த்துக் கொண்டு அந்த வரிசையில் வந்து நின்றேன். படம் துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்ததால் கையில் வைத்திருந்த ரவி சுப்ரமணியத்தின் "Bankerupt" புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். "ஹெல்லோ " என்ற ஒரு பெண் குரல் கேட்டு புத்தகத்தை கீழ் இறக்கினேன்.

                       என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அங்கே சங்கமித்ரா நின்று கொண்டிருந்தாள். என்னை நோக்கி கூட்டத்தை விலக்கிக் கொண்டே உள்ளே வந்தாள். இந்த மக்கள் இருக்கிறார்களே, ஒரு பெண் வரிசையில் இல்லாமல் திடீரென்று உள்ளே நுழைந்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதே ஒரு ஆண் செய்துவிட்டால் கொலைக் குற்றத்திற்கு ஈடாக சண்டைக்கு வருவார்கள். என்னருகே வந்தவள் என் கண்களை உற்று நோக்கியபடி "குட் மார்னிங்" என்றாள். நான் அவளிடமிருந்து "தேங்க்ஸ்" என்ற சொல்லைத் தான்  எதிர்பார்த்திருந்தேன். "டூ யூ ரியலி வான்ட் டூ வாட்ச் திஸ் ஒன்?" என்றாள். திரைப்படத்தை விடுவதற்கு மனமில்லை என்ற போதும் ஒரு அழகான பெண் இப்படி ஒரு கேள்வி கேட்கும் போது "இல்லை" என்று சொல்வதே ஆணுக்கு அழகு.. நானும் ஆண் வர்க்கத்தின் பெயரைக் காப்பாற்ற வரிசையிலிருந்து விலகி அவளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

                         அவள் நின்றது ஒரு பீர் ஸ்டாலின் முன்பு. "விச் ஒன் டூ யூ லைக் டு ஹாவ்?  ஸ்ட்ராங் ஆர் லைட்? " என்றவளிடம் வேகமாக தலையசைத்து "சாரி, ஐ டோன்ட் டிரிங்க் பியர்." என்றேன். அவளோ ஒரு கேவலமான பார்வையை வீசி சப்தம் வராமல் "வாட்" என்றாள் தோள்களை குலுக்கி. "ம்ம்ம்.. சின்ன வயசுலயே அம்மா சொல்லியிருக்காங்க, பியர் எல்லாம் குடிக்கக் கூடாதுன்னு, நானும் சத்தியம் செய்திருக்கிறேன்" என்றேன். "வாவ்" என்றபடி அவளுக்கான கிங் பிஷரை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தாள். பேசிக்கொண்டே அந்த வளாகத்தில் கார் பார்க்கிங்கிற்கு அருகே இருந்த ஒரு அகன்ற மரத்தின் நிழலில் அமர்ந்தோம். இப்போதாவது நேற்று அவளை கொண்டு சேர்த்ததற்கு நன்றி உரைப்பாள் என்று எதிர்பார்த்தேன். "ம்ம்ம் வாட்ஸ் யுவர் நேம்" என்றாள். "ஐயம் கார்த்திக். அண்ட் ஐ நோ யுவர் நேம்"  "ம்ம்ம், உங்க விஷஸ் பார்த்தேன்"
என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டாள், ஒருவேளை இவளுடைய ஆங்கில வாத்தியார் இவளுக்கு தேங்க்ஸ் என்ற வார்த்தையை சொல்லித் தர மறந்திருப்பாரோ?

                             "நீங்க மீடியால ஒர்க் பண்றீங்களா?" "வாவ்,  ஹவ் டூ யூ நோ தட்" என்று ஆச்சர்யத்தில் என் விழிகள் விரிந்தது. "ஐ நோ பேஸ் ரீடிங்"   என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள். பின் அந்த ரகசியத்தை அவளே உடைத்தாள் "மீடியா பீப்பிள் க்கு தான் எல்லோ டேக். என்னை மாதிரி ஆட்களுக்கு ப்ளூ, சிம்பிள் "  என்று என் சட்டைக்குள் ஒளிந்திருந்த டேக்கை தொட்டு காண்பித்தாள். பிறகு சில நிமிட மௌனம். ஏதாவது பேச எண்ணி "நேத்து நைட் யூ வேர் அவுட் ஆப் கண்ட்ரோல், நான் தான் ஹோட்டலில் டிராப் பண்ணினேன்" "ஐ நோ" என்று சாதாரணமாக கூறி முடித்துக் கொண்டாள். "ஹேவ் யூ சீன் கோடார்ட் மூவிஸ்" அந்த இயக்குனரின்  பெயரையே அப்போதுதான் கேள்விப் படுகிறேன். இல்லை என்று சொல்ல கூச்சப்பட்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்க அவள் புரிந்து கொண்டு "மேன் சச் எ பிரில்லியன்ட் டைரக்டர். ஸ்க்ரீன்ப்ளே இப்படித்தான் இருக்கணும்கிற ரூல்ஸ் எல்லாத்தையும் ஒடச்சவர். டுடே ஆப்டர்நூன் அவரோட ஒரு 3D மூவி கலா அகடமில போடறாங்க. ஆர் யூ கமிங். அனிச்சையாய் ஆமாம் என்று என் தலை பதிலுரைத்தது.

                         "கம் லெட்ஸ் ஹேவ் சம்திங். காலையில ஒண்ணுமே சாப்பிடல" என்றவாறு அருகே இருந்த ஒரு உயர்ரக ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் சென்றாள். கீ தோசா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தோம். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தேன். நேற்றைய அணிகலன்கள் முற்றிலுமாய் மாறியிருந்தது. இன்றைய குர்தா டைப் டாப்சுக்கு ஏற்றவாறு கம்மலும் கைகளில் பாசியால் செய்யப்பட்ட பிரெஸ்லெட்டும் அணிந்திருந்தாள். அவளாகவே  பல விஷயங்களை கேட்டாள், கூறினாள். நான் பேசியதை விட அதிகமாக அவள் தான் பேசினாள். உணவை உண்டு முடிப்பதற்குள் பல நாள் பழகிய நட்பு போல் பேச ஆரம்பித்திருந்தாள். எனக்கு மரியாதை தராமல் பேசியது கொஞ்சம் உறுத்தலாய் தோன்றிய போதும் அவள் குரலின் வசீகரம் அதை ஏற்றுக் கொள்ள வைத்தது,

                       அந்த கோடார்ட் மூவி உண்மையிலேயே சிறப்பான 3D படம். 3D  தொழில்நுட்பத்தை இப்படிக் கூட உபயோகப்படுத்த முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்தப் படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக மாறிவிட்டிருந்தது. அது நல்ல படம் என்பதால் மட்டுமல்ல அந்த படத்தின் போது அவள் கைகள் என் கைகளோடு எதோ பேசிக் கொண்டே இருந்தது. அவள் தோள்கள் என் தோள்களோடு இணைந்திருந்தன. இவையெல்லாம் வெறும் இணக்கவர்ச்சியாய் தோன்றிய போதும் மனதில் ஒரு இனம் தெரியாத உற்சாகம், ஆனந்தம். படம் முடிந்து வெளியே வருகையில் தான் அது நடந்தது. சாலையை கடக்க முயல்கையில் ஒரு கார் வேகமாக வந்தது. அவளை உரசுவது போல் அருகே வந்தது, நான் வேகமாக செயல்பட்டு அவளை பின்னுக்கு இழுத்துவிட்டேன். என் கைகளில் அந்த கார் லேசாக உரசிச் சென்றதில் நான் தடுமாறி ரோட்டில் விழுந்தேன். சிராய்ப்புகள் ஏற்பட்ட கரத்தை தடவிக் கொண்டே அவளிடம் "ஆர் யூ ஒகே " என்றேன். 'எஸ்.. யூ சேவ்ட் மை லைஃப்" என்றாள். "ஏதோ தெரியாம நடந்த ஆக்சிடென்ட்" என்றேன். "நோ, தட் வாஸ் நாட் ஏன் ஆக்சிடென்ட். அவங்க என்னை கொலை செய்ய தான் வந்தாங்க"






-தொடரும்..









Friday, November 20, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (3)



வாசலில் அழைப்பு மணி கேட்டு சுதாரித்து, என் நிலை உணர்ந்தவனாய் கதவைத் திறந்தேன். அங்கே வெயிட்டர் கையில் ஒரு கேக்குடன் நின்றிருந்தான். "Happy Birthday Sangamithra" என்று அதன் மீது எழுதியிருந்தது. என் கடிகாரம் பன்னிரெண்டைக் காட்டியது. அவனிடம் உள்ளே வைக்கச் சொல்லிவிட்டு, அவளை எழுப்ப மனமின்றி ஒரு சிறு காகிதத்தில் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினேன். 18, ஜூன் சாலையில் உள்ள நான் தங்கியிருந்த சிறிய ஹோட்டல் அறைக்கு வந்தேன். சற்று முன் இருந்த கிளர்ச்சி போய், அவள் அழகான பெயரை எண்ணியபடி இமைகள் மூடியது.

எதோ அதிர்ந்ததைத் தொடர்ந்து நான் கண்விழித்தேன். பஸ் எதற்காகவோ நின்றிருந்தது. என்னவென்று வெளியே பார்க்க ஒரு நாய் குறுக்கே பஸ்ஸை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த வேகமான ஓட்டத்தின் இடையில் அது தன் தலையைத் திருப்பி என்னைப் பார்த்துக் கொண்டே ஓடுவது போல தோன்றியது. அதன் கண்கள் என்னைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. சற்று தூரம் சென்ற அது திரும்பி நின்று என்னைப் பார்த்து குலைக்க ஆரம்பித்தது. சந்தேகமேயில்லை அது என்னைத்தான் பார்க்கிறது. அதன் பார்வையிலிருந்து மறைந்து விட எண்ணி சீட்டினின்றும் என்னை சற்று தாழ்த்திக் கொண்டேன். அதற்குள் டிரைவர் நாயை வசை பாடிவிட்டு வண்டியை தொடர்ந்து ஓட்டலானார்.

என் நெற்றியிலிருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டுக் கொண்டேன். இருட்டாக இருந்த அந்த பஸ்ஸிற்குள் ஒரு ஸீரோ வாட்ஸ் பல்பு மட்டும் ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. எதேச்சையாக அதைப் பார்க்க ஆரம்பித்த நான் அந்த நீல நிறத்தில் ஈர்க்கப்பட்டு பின் அது என்னுடன் உரையாடுவது போன்ற பிரமை தோன்றியது. "இன்னைக்கு என் பிறந்த நாள்னு கூட மறந்துட்ட தானே?" என்று அது கேட்டதும் என் வாட்சை அழுத்தி தேதி பார்த்தேன். சரிதான். இன்று தான் சங்குவின் பிறந்த நாள். விளக்கு என்னை மீண்டும் அழைத்தது. "சரி பார்த்தாச்சா? வர வர உனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு. கொஞ்ச நாள்ல சட்டை போட்டுக்க கூட மறந்திட போற பாரு" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பு என்னை மிகவும் இம்சித்தது. என் காதுகளைப் பொத்திக் கொண்டேன். இப்போது கொஞ்சம் அமைதியாக இருந்தது. எல்லாம் ஒரு இருபது நொடிகள் தான். காதுக்குள் "டுர்ர்ர்ர்" என்று ஒரு சப்தம். அந்த சப்தம் சங்குவின் விளையாட்டுகளில் ஒன்று. குழந்தை போல ஓடிவந்து காதுக்குள் "டுர்ர்ர்" என்று சப்தமிட்டு செல்வாள். "இப்போ கிளியரா கேக்குமே" என்று அவள் சொன்னது மிகத் துல்லியமாகக் கேட்டது. "வாடா, எனக்கு பயங்கரமா போர் அடிக்குது. இங்கே நான் இருக்கும் இடத்தில் மனுஷங்களே இல்லை. வா நீயும் நானும் மட்டும் சந்தோஷமா
இருக்கலாம்" என்று கூறிவிட்டு அவள் இனிமையான குரலில் பாட ஆரம்பித்தாள்.

 "யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும்,
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம்தோறும் செதுக்கிட வேண்டும்"

என்று பாடிவிட்டு ஓரிரு நொடிகள் அமைதியாகி "என் கூட வாழணும்னு
ஆசைப்பட்ட தானே, இப்போ வா சேர்ந்து வாழலாம்." அவள் குரல் இப்போது ஒரு கண்டிப்போடு ஒலித்தது.

என் கைகளை எதுவோ பற்றி இழுப்பது போல் தோன்றியது. கைகளை உதறியபடி "லீவ் மீ அலோன். ஐ டோன்ட் லவ் யு எனிமோர்.. கெட் லாஸ்ட்" என்று கத்தினேன். பிறகு என் சுற்றம் உணர்ந்தவனாய் திரும்பிப் பார்த்தேன். அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். என் சப்தம் அவர்களை எழுப்பியிருக்கவில்லை. என்னை நானே ஆசுவாசப் படுத்திக் கொண்டு எதிரே பாட்டிலில் இருந்த தண்ணீரை பல மிடறுகள் குடித்தேன். குடித்துவிட்டு பாட்டிலை வைத்த போது அதில் தண்ணீர் மீண்டும் நிறைந்திருந்தது. திடுக்கிட்ட என் இடக்கையை யாரோ ஆதரவாய் பற்றுவது போல தோன்றியது. அந்த கூல் வாட்டர் பெர்ஃப்யும் வாசனை வந்தது. என் தோள்களை எதுவோ அழுத்தியது. கணப்பொழுது தோன்றிய பயத்தை மறைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். அங்கே நான் அவள் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்த ஒரு நீல நிற சுடிதாரில் சங்கமித்ரா   எப்போதும் போல என் தோள்களில் சாய்ந்திருந்தாள். 


-தொடரும்..!

Tuesday, November 10, 2015

மழைக்காலத் தமிழக போக்குவரத்துகள்!!

                சிறுவயதில் கோவையிலிருந்து பாலக்காடு அல்லது குருவாயூர் செல்கையில் அரசு போக்குவரத்தில் ஏறினால் உள்ளே கும்மிருட்டாய் இருக்கும். வெளியே பெய்யும் மழையின் அறிகுறி உள்ளே துளியும் இராது. மக்கள் ஒவ்வொருவரும் கைகளில் குடையுடன் ஏறி ரை ரை சொன்னவுடன் ஹவுஸ் புல்லாக ஓடும் பேருந்து. ஆனால் இப்போது அங்கேயும் நிலைமை வேறு. சரி, அதைப்பற்றி நமக்கெதுக்கு?



                   அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் மேல்தட்டு மக்கள் தமக்கான பயணத்தை கார்களிலும் டாக்சிகளிலும் மாற்றிவிட்ட நிலையில் ஏழை மக்களும், மிடில் கிளாஸ் மக்களும் இன்றளவும் பயன்படுத்தும் போக்குவரத்து அரசு பஸ்கள் மற்றும் இரயில்களைத்  தான். ஆனால் அவற்றின் நிலைமை எப்படி இருக்கிறது? தமிழ் நாட்டில் எப்பவாவது மழை பெய்கிறது என்பதாலோ என்னவோ நம் தமிழ்நாட்டில் பேருந்துகளிலோ, இரயில்களிலோ மழைக்கான எந்த முன்னேற்பாடுகளும் இன்றி சிறப்பான நிலையில் உள்ளது. 

                 வெளிநாடுகளில் பொது இடங்களில் பவுண்டன் என்று சொல்லப்படும் நீரூற்றுகள் ஆங்காங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றை மக்கள் காண வேண்டுமென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் நம் ஊரில் மக்களுக்கு அந்த சங்கடங்கள் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்யும் பேருந்திலேயே அண்ணாந்து பார்த்தால் பவுண்டன்கள் மக்கள் காணக் கிடைக்கும் வகையில் கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

                 தவிர, கீழ்த்தட்டு மக்கள் எப்போதாவது தான் அருவிகள், செயற்கை அருவிகளை எல்லாம் கண்டு ரசிக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டின் பேருந்துகளில் மழை நாளில் சன்னலோரம் அமர்ந்துவிட்டால் அடிக்கும் சாரலை அனுபவித்து நீங்களும் ஒரு வைரமுத்து ஆகலாம் இல்லை தெறிக்க விடும் மழை பார்த்து 'தல' ரசிகராகலாம். இவை எதுவும் இல்லாமல் சன்னலோரத்தை புறக்கணித்து எழுந்து நின்றால் நிச்சயம் உங்களுக்கு கலையை, இயற்கையை ரசிப்பதில் குறைபாடுகள் இருக்கிறது.

                அதுமட்டுமா, எல்லோருக்கும் சன்னலோரம் கிட்டிவிடாது. அப்படி வருத்தப்படும் மற்ற பயணிக்களுக்காய் பேருந்தின் உள்ளேயே டிரைவர் எஞ்சினுக்கும், கண்டக்டர் சீட்டிற்கும் நடுவே ஒரு அகலமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதி சொகுசு பேருந்து மட்டுமல்லாமல் ஒயிட் போர்டுகளிலும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநில மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே!

                    பேருந்தில் மட்டும் இந்த வசதிகள் செய்து கொடுத்து மற்ற போக்குவரத்து சாதனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. இரயில்களிலும் ஓரளவு சின்ன நீச்சல் குளங்களும், சன்னலோர அருவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தவிர இரயில்களில் கூடுதலாக தாமதமாக வரும் பயணிகளுக்காக எல்லா இரயில்களும் குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படுகின்றன. இவையெல்லாம் இரயில் பஸ்களோடு நின்று விடாமல் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்க கூரைகளை மாலைகளாய் அணிவித்து வரவேற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. 
இந்த சேவைகளை அனுபவித்தபடியே சந்தோஷமாக தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!



Sunday, November 8, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (2)

பகுதி 1

                      டிரைவர் சடன் பிரேக் அடித்ததில் என் கைகளில் இருந்த ஐ-போன் முன்னே சென்று விழுந்தது. ஓரிரு நிமிடங்களில் பஸ்ஸில் இருந்த அனைவரும் வெளியே இறங்கி நின்றனர். பெரிய ஆபத்து இல்லை என்றாலும் பஸ்ஸின் முகப்புக் கண்ணாடி சுக்கு-ஆயிரமாய் உடைந்திருந்தது. டிரைவர் வண்டியின் முன்புறம் சென்று கண்ணாடிச் சில்லுகளை அகற்றிக் கொண்டிருந்தான்.  அவனிடம் ஒவ்வொருவராகச் சென்று நடந்தது என்னவென்று வினவிக் கொண்டிருந்தனர். நானும் கீழிறங்கி அவன் அருகே சென்றேன். அவன் சிறிது கலக்கத்துடன் காணப்பட்டான். வண்டியின் ஓனருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே. "யாரோ ரெண்டு பேர், பைக்கிலே கிராஸ் பண்ணி போனானுவ. அதுல பின்னாடி உட்கார்ந்திருந்தவன் நம்ம நம்பர் பிளேட்டையே பார்த்துட்டு போனான். அவனுக தான் பண்ணியிருக்கணும், பயபுள்ளைக. " என்ற டிரைவரின் ஆதங்கத்திற்கு ஆதரவாய் சில குரல்கள் "ஆமா இவனுகள நமக்கு தண்ணி குடுக்கச் சொல்லி கவர்மென்ட் போட்ட ஆர்டர்னால தமிழர்கள் யார் வந்தாலும் அடிக்கிறானுவ"

                         இந்த சலசலப்புக்கிடையே டிரைவர் தன் முதலாளியை  செல்பேசி மூலம் துயில் எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான். நான் மெதுவாக பஸ்ஸின் பின்புறம் வந்தேன். கேரள நாட்டின் ரம்மியமான காற்று இதமாக வீசியது. அது எந்த இடம் என்று ஊகிக்க முடியவில்லை. அப்போது எங்கிருந்து வந்தென்று தெரியாமல் ஒரு பொம்மரேனியன் நாய்க்குட்டி புசுபுசுவென்ற முடியுடன் வெள்ளை நிறத்தில் என்னையே உற்று நோக்கியபடி நின்றிருந்தது. நானும் நீண்ட நேரம் அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். சங்குவிற்கு நாய்கள் என்றால் அவ்வளவு பிரியம். எவ்வளவு என்றால் 'நாம புள்ளைகுட்டி பெத்துக்கலைன்னாலும் பரவாயில்ல, நாலு நாய்க்குட்டி வளர்க்கணும்' என்று சொல்லுமளவிற்கு. அட, இன்று என்ன எதைப் பார்த்தாலும் அவள் நினைவாகவே இருக்கிறது என என்னை நானே கடிந்து கொண்டேன். அந்த நாய்க்குட்டி இப்போது எதிர்திசையில் ஓட ஆரம்பித்தது.

                           அதனை பின்தொடர நினைத்து பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறினேன். முன் சீட்டில் இப்போது வேறு யாரோ அமர்ந்திருந்ததால் நான் உள்ளே காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற ஒரு பெரியவர் அவருடைய திப்புசுல்தான் காலத்து காலணியால் என் கால்களை மிதித்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றார். நான் உரக்கக் குரலெடுத்து கத்தியது கூட அவருக்கோ அருகிலிருந்த யாருக்குமே கேட்டதாய் தெரியவில்லை.  அசதி அதிகமாக இருந்ததாலும், மதுரை சென்றதும் கண்ணாடியை மாற்றிக் கொள்ளச் சொல்லி ஓனரின் உத்தரவு கிடைத்ததும் பஸ்ஸை டிரைவர் எடுத்ததும் திறந்திருந்த ஒரு சன்னலின் வழி வந்த சுகந்தமான காற்றில் கண்கள் தானாக மூடியது. கண்களை மூடிய மறுவினாடி என் கண்களின் ரெட்டினா முழுவதுமாய் ஆக்கிரமித்தாள் சங்கமித்ரா. அவளை நான் சந்தித்த அந்த தினம் ஃசெபியா டோனில் விழித்திரையில் ஓட ஆரம்பித்தது.

                             பனாஜி நகரமே ஒளிவிளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் திருவிழா கொண்டாடுவது போல் சாலையோரம் முழுக்க ஆக்கிரமித்திருந்த கடைகளில் உணவருந்துவதும், வயதிற்கு ஏற்றவாறு கைகளில் ப்ரீஸர்களும், கிங் பிஷர்களோடும் அலைந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சிகளும், கண்கவர் ஒளி வித்தைகளும் வயது வித்தியாசம் இல்லாமல் அதில் கலந்து கொண்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.  கோவா மக்கள் மட்டுமல்லாமல் திரும்பிய திசையெங்கும் அமெரிக்கர்களும், ஸ்பெயின், ஆப்பிரிக்கா என பல்வேறுபட்ட நாட்டவர்களும் ஜோடியாக உலவிக் கொண்டிருந்தனர். அங்கே ஆண்கள் செய்யும் செலவுகளும், பெண்களின் அணிந்திருந்த உடைகளும் தாராளமயமாக்கல் கொள்கையைத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தது.

                          இத்தனை பரபரப்புக்கும் அங்கே நடந்து கொண்டிருந்த திரைப்பட விழா தான் முக்கிய காரணம். இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவாக அங்கீகாரம் பெற்ற அந்த நிகழ்வுக்கு கலையை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒவ்வொருவரும் வருடம் தவறாது வருவது வழக்கம். கலைஞானியைக்  கண்டு வளர்ந்த ஏகலைவனான நானும் வருடத்தில் பத்து நாட்கள் செலவிடுவது பனாஜியில் தான் என்பது அவ்வளவு ஆச்சர்யமான விஷயம் ஒன்றுமில்லை என்றாலும் அன்று அந்த விழாவிற்கு மக்கள் குழந்தை குட்டிகளோடு வந்திருந்தது ஆச்சர்யத்தை அளித்தது. அங்கே குழுமியிருந்த எல்லா மக்களின் முகத்திலும் சந்தோஷம் வழிந்தோடியது. நான் அமர்ந்திருந்த 'கிங் பிஷர் வில்லேஜ்' கூடாரத்தில் எனக்கு இரண்டு மேசை தள்ளி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைத் தவிர.

                          நீல நிற ஜீன்ஸும், சாம்பல் நிறத்தில் கையில்லாத 'ராம்ராஜ்' முண்டா பனியன் போன்ற எதையோ மேலேயும் அணிந்திருந்தாள். அதில் துள்ளித் தெரிந்த அவள் அழகுகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்கும் காட்சிப் பொருளாய் விட்டிருந்தாள். சம்பிரதாயத்திற்காக கொண்டு வரப்பட்ட ஒரு மேல் சட்ட அவளுடைய இருக்கையின் மேல் வைக்கப் பட்டிருந்தது. அவளுடைய கைப்பை குஃ ச்சியா?  ஃஜாராவா? என்று தெரியவில்லை. நிச்சயம் வெளிநாட்டு இறக்குமதி போல் தெரிந்தது. அதுவும் அவள் மேலாடையைப் போலவே பாதி மூடியும், மூடாமலும் கிடந்தது. அவள் கைகளில் இருந்த கிளாஸில் கிங் பிஷர் பகுதி நிரம்பியிருந்தது. தடாகத்தில் தலை சாய்ந்திருக்கும் தாமரை போல் மேசை மீது அவள் தலை கவிழ்ந்திருந்தது. அவள் கண்களில் அளவுக்கு அதிகமாக அப்பியிருந்த மஸ்காரா மூக்கின் மீது படர்ந்திருந்தது, நிச்சயம் அழுதிருக்கிறாள். அவள் அணிந்திருந்த ஊதா லிப்ஸ்டிக் எல்லை தாண்டி உதட்டின் மேல் விளிம்பில் வழிந்தோடியது அவள் சற்றும் நிதானத்தில் இல்லை என்பதைக் காட்டியது. கண்கள் அரை மயக்க நிலையில்.. வெயிட் வெயிட் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது,



                            நான் சற்றும் எதிர்பார்க்காத அந்த வினாடியில் அவள் தடுமாறி எழுந்து நேராக என்னை நோக்கி வந்தாள். நான் அவளை கவனிக்காதது போல் முகத்தை வேறு பக்கம் திருப்பினேன். அவள் எனக்கு அருகே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள். அவள் கால்கள் கிட்டத்தட்ட என் கால்களுக்கு இடையில் இருந்தது. விலக நினைத்து பின்னால் நகர்ந்த என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தாள். பின் அவளும் நெருங்கி வர முயற்சித்தாள். தடுமாறி கீழே விழப் போனவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன். அவளை இருக்கையில் சரியாக அமர்ந்திவிட்டு நானும் அமர்ந்தேன். அவள் விழும்போது என்னையும் அறியாமல் 'பார்த்து' என்று கூறினேன்.

                            "ஓ.. தமிழா? என்று கூறியவாறு முன்னால் விழுந்திருந்த தலைமுடியை பின்னுக்குத் தள்ளினாள். சோம்பல் முறிப்பது போல் பாவனை செய்தாள். ஏற்கனவே தன் இருப்பை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருந்த அவள் அழகுகள் இன்னமும் கொஞ்சம் வெளிப்பட நான் அவஸ்தையாய் நெளிந்தேன். 'எக்ஸ்க்யுஸ் மீ.. கேன்  யூ ஹெல்ப் மீ? கேன் யூ டிராப் மீ அட் மை ஹோட்டேல்? " என்று குழறியபடி கேட்டாள்.  நான் பதில் கூற எத்தனிக்கையில் அவள் தன் கைப்பையை அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தாள். 'இருங்க' என்றவாறு இரண்டு மேசை தள்ளியிருந்த அவள் கைப்பையையும் அந்த 'உதவாக்கரை' மேல்சட்டையையும் எடுத்து வந்தேன். 'தேங்க்ஸ்' என்றவள், அதனுள்ளே கைவிட்டு இரண்டு சாவிகளை எடுத்து மேசை மீது வைத்தாள். எறிந்தாள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

                                  ஒன்று ஹோட்டல் ஸ்வைப் கீ போல் இருந்தது. '201' என்று மேலும்  'Marriot' என்று கீழும் எழுதியிருந்தது. அவள் தங்கியிருந்த ஹோட்டலாக இருக்கலாம். மற்றொரு சாவி ஒரு BMW காரின் ரிமோட் கண்ட்ரோல். மீண்டும் அவள் கண்கள் சொருக ஆரம்பிக்க பரந்த மனதுடைய நான் (அவள் அளவிற்கு இல்லாவிட்டாலும்) என் தேசத்திலிருந்து வந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்யத் தீர்மானித்தேன்.  இரண்டு சாவிகளையும் எடுத்துக் கொண்டு அவளை என் கைகளால் தூக்கி என் தோளில் சாய்த்தபடி பார்க்கிங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவள் அங்கங்கள் அங்கங்கே உரசிக் கொண்டிருந்தது ஒரு இனிமையான உணர்வைக் கொடுத்தது, என் வாழ்வில் ஒன்றிரண்டு பெண்களைக் காதலித்திருக்கிறேன் என்ற போதும் அதெல்லாம் ஒரிரு முத்தத்தோடே முடிந்து போயிருக்கின்றன. ஒரு பெண்ணை, அதுவும் இவ்வளவு நெருக்கத்தில், இதுவரை ம்ஹும்..

                                    ரிமோட்டின் அலாரத்தை அழுத்தி அவள் காரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தேன். அவ்வப்போது அவள் தன்னிலை இழந்து கீழே சரிகையில் அவள் பெண்மையின் மென்மைகள் என்னை இம்சித்துக் கொண்டே வந்தது. காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் அவளை இருத்தினேன். அவள் கைப்பையையும் மேல்சட்டையையும் பின் இருக்கையில் வைத்துவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். இதற்கு முன் சில முறை BMW ஒட்டியிருக்கிறேன் என்ற போதும் சர்வ ஜாக்கிரதையுடன் ஒட்ட ஆரம்பித்தேன். அதில் அமர்ந்து செல்கையில் சாலை அவள் கன்னங்கள் போல் மிருதுவாகத் தோன்றியது. முன்பொரு முறை மிராமர் பீச்சுக்கு வந்த போது இந்த ஹோட்டலைத் தொலைவில் பார்த்திருக்கிறேன். ஹோட்டலின் உள்ளே வந்ததும் "Valet" பார்க்கிங் செய்ய ஒரு சிப்பந்தி ஓடிவந்து காரின் அருகே நின்று கொண்டான், நான் இறங்கி சாவியை அவனிடம் கொடுத்து விட்டு அவளையும் அவள் கைப்பையையும் இரு கைகளில் சுமந்தபடி உள்ளே நடந்தேன்.

                                       அங்கே இருந்த பல ஜோடிக் கண்களும் எங்களையே கண்டு கொண்டிருந்ததை நான் கண்டு கொள்ளாமல் சென்றேன். லிப்டில் ஏறி இரண்டாம் தளத்தை தேர்வு செய்து பின் அறை எண்  201 ஐ சிரமப்படாமல் கண்டறிந்து அவளோடு உள்ளே நுழைந்தேன். ஒரு பெரிய குடும்பமே தங்கும் அளவிற்கு பெரிய "ஸ்வீட்"(Suite) ரூம் அது. ஏசியின் குளுமை எல்லா அறைகளிலும் எதிரொலித்தது. ஹாலின் நடுவே தொங்கிய பிரம்மாண்ட விளக்கும், மிகுந்த வேலைப்பாடு மிக்க மேசைகளும், டீப்பாய்களும் நிச்சயம் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பவர்களின் தரத்தை நொடியில் கூறிவிடும். ஹாலின் பால்கனியில் இருந்து பார்த்தால் மிராமர் கடற்கரையும், கடற்கரைக் காதலர்களையும் காணலாம். ஹாலைக் கடந்ததும் இரண்டு சிறிய படுக்கையறைகளும், ஒரு பெரிய மாஸ்டர் பெட்ரூமும் இருந்தன. அந்த பெரிய படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு அவள் பொருட்களை அருகிலிருந்த மேசை மீது வைத்தேன்.

                                         பின் அவள் அருகே சென்று அவளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரானேன். அப்போது தெளியாத உறக்கத்தினூடே சற்று உணர்ந்த அவள் என் கரங்களைப் பற்றி இழுத்தாள். நான் தடுமாறி அவள் மேலே சரிந்தேன். அவளின் அருகாமை என்னை என்னவோ செய்தது. அந்த மெத்தையின் இதமும், அவள் ஸ்பரிசமும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த டெஸ்டெஸ்ட்ரான்களை எழுப்பி விட்டது. தவறெது சரியெது என்று யோசிக்க விடாதபடி  புன்னகையோடு வசீகரித்துக் கொண்டிருந்த அவள் இதழ்கள் என் இளமைக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரம் பார்த்து வாசலில் 'காலிங் பெல்' அடிக்கும் ஓசை கேட்டது.


-தொடரும்..


Thursday, November 5, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (1)





                      இரவின் மங்கலான ஒளியில் மழையின் மிச்சத் துளிகள் பேருந்தின் அகலமான கண்ணாடியில் கோலமிட்டபடி வருவதை ரசித்துக் கொண்டே முதல் சீட்டில் அமர்ந்திருந்த நான் வலது காதுக்கு மட்டும் இயர்போனை கொடுத்து, ஐ-போனில் ஒலித்த  ஏ.ஆர் ரகுமானை ரசித்தபடியே, அதே சமயம் பேருந்தினுள் தன் வசீகரக் குரலினால் எல்லோரையும் தூங்கவைத்துக் கொண்டிருந்த இளையராஜாவை இடது காதிலும் சுவாசித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் மற்றுள்ள அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். காலை முதல் மாலை வரை தீம் பார்க்கிலும், அருவிகளிலும் ஆடித் தீர்த்த களைப்பு சிறார் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முகத்திலும் தெரிந்தது. என்னுடைய வரமோ, சாபமோ எனக்குத் தெரியாது, ஆனால் எப்போதுமே கண்களை மூடியவுடன் நித்ரா தேவி ஆரத் தழுவ ஆரம்பித்து விடுவாள். ஆனால் இன்றோ அதற்கு நேர்மாறாக கண்களில் அயர்ச்சியோ, உறக்கமோ சிறிதும் இல்லை.அதற்கு சற்று முன் குடித்த குளம்பி கூட காரணமாக இருக்கலாம்.

                      கண்களை மூடி இரண்டு தலைமுறை இசையையும் ஒரு சேர இரசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று என் வலது காதின் விளிம்பில் அந்த இயர்போனின் இழையினூடே ஒரு இனிமையான பெண் குரல் கேட்டது. நேற்று தான் ஐ-ட்யுன்ஸில் புதிய பாடல்கள் சிலவற்றை பதிவேற்றி என் கைப்பேசிக்கு மாற்றியிருந்தேன். வழக்கமாக நான் இதுபோல் புதிய பாடல்களை கேட்கையில் அவற்றை ஒழுங்கற்ற முறையில் (Random) ஓட விட்டு அவை என்ன படத்தில் இருக்கும், யார் இசையமைத்ததாய் இருக்கும், இது யாருடைய குரலாய் இருக்கும்  என எனக்கு நானே கேள்வி கேட்டு சரியான பதிலுக்கு சபாஷ் சொல்லிக் கொள்வது வழக்கம். அன்றும் அப்படியே அந்தப் பெண் குரலைக் கேட்டவுடன் எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. மற்றொரு காதுக்கும் இயர்போனைக் கொடுத்து இன்னும் உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தேன்.

                          இனிதாய் ஆரம்பித்த அந்த இசை கொஞ்சம் கொஞ்சமாக வயலின் உதவியுடன் வயலன்ட்டாக மாற ஆரம்பித்தது. அந்த இனிமையான பெண்ணின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தன் இனிமையை துறந்து ஹை பிட்சில் ஒலிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் ஸ்ரேயா கோஷலாக இருக்குமோ என்று எண்ணிய நான் சற்று பின்வாங்கி ஆன்ட்ரியாவாக இருக்குமோ என எண்ணத் துவங்கினேன். அதில் வரும் வரிகளைக் கேட்கும் போது ஏதோ பேய்ப் படங்களில் வரும் பாடல் போல் தோன்றியது. 'மாயா'வாக இருக்குமோ? இல்லையே அதில் ஒரே ஒரு பாடல் அதுவும் சின்மயி பாடியது. ம்ம்.. காஞ்சனா? ம்ஹும் அதில் இசை நம் காதுகளை பதம் பார்த்திருக்குமே. வேறு என்னவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த போது தான் அது நடந்தது.

                            டிரைவர் காலியாக இருந்த சாலையிலும் கோணல் மாணலாக ஒட்டிக் கொண்டிருந்தார். சற்றே கண்ணயர்ந்திருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைப் பார்ப்பதை அவர் பார்த்திருப்பார் என்று தான் நினைக்கிறேன். உடனே தன அருகே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நாலைந்து மிடறுகள் விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார். என் பக்கமாய் சற்று குற்ற உணர்ச்சியோடு திரும்பிப் பார்த்து பின் தன் அருகே இருந்த டர்க்கி டவலால் முகத்தை துடைத்துக் கொண்டார். இப்போது அவர் முகம் சற்று தெளிவாய் இருப்பதாய்த் தோன்றியதால் நான் அதற்கு மேலும் ஏதாவது சொல்லி அவரை சங்கடப் படுத்த விரும்பவில்லை. நான் மீண்டும் பாடலுக்கு வந்தேன்.

                             ஸ்ரேயா கோஷல் அப்படி உச்ச ஸ்தாயியில் பாடி நான் கேட்டதில்லை. புதிய முயற்சியாகக் கூட இருக்கலாம். இல்லை வேறு புதிய பாடகியாய் இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தப் பாடகிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணியபடி என்ன படமாக இருக்கும் என்று யோசிக்கலானேன். அப்போது அந்த பாடலின் சரணம் முடிந்ததும் அதே குரல் ஆனால் இப்போது எஸ்.ஜானகி அவர்கள் குரல் போல் சிறு பிள்ளையாய் ஒலித்தது. "என்ன என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா" என்று கூறி பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தது. சற்றே அதிர்ந்த நான் காதிலிருந்த இயர் போனை எடுத்து விட்டு சாய்ந்திருந்த புஷ்-பேக் சீட்டை சரி செய்து நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் கைப்பேசியை பார்த்தேன், அதன் டிஸ்ப்ளே கருப்பாக இருந்தது. மெதுவாய் அதன் பக்கவாட்டில் இருந்த பொத்தானை அழுத்தியதும் டிஸ்ப்ளே ஒளிர்ந்தது.

                              நான் சற்று முன் கேட்ட பாடல் என்ன என்பதைப் பார்த்தேன். அதில் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ' என்று இருந்தது. இயர்போனைக் காதுகளுக்கு மீண்டும் கொடுத்த போது எஸ்.பி.பி "உடைவாளில் உடை தொட்டுக்" கொண்டிருந்தார். நான் சற்று முன் கேட்ட பாடலைக் கேட்க பின்னோக்கி செல்லும் பொத்தானை அழுத்த அது வேறொரு ரஹ்மான் பாடலைக் காட்டியது. அப்போது தான் உணர்ந்தேன். நான் ரேண்டம் மோடில் போட்டிருப்பதால் அதே பாடல் வராது என்று.  அந்த Random ஆப்ஷனை எடுத்துவிட்டு அந்தப் பாடலை தேட ஆரம்பித்தேன். ஆனால் சில நொடிகளிலேயே தெரிந்தது அது வீண்வேலை என்று , கிட்டத்தட்ட 16 ஜீ.பி அளவிற்கு பாடல்களை பதிவேற்றியிருக்கிறேன். இதில் அந்த ஒரு பாடலைக் கண்டுபிடிப்பது சிரமமான காரியம்.

                              மீண்டும் புஷ்-பேக்கை சரிசெய்து கொண்ட போது என் மீது ஒரு மெல்லிய தென்றல் வீசிச் சென்றது அந்த சுகந்தமான காற்றை கண்களை மூடி அனுபவித்து விட்டு மீண்டும் விழித்துப் பார்த்த எனக்கு வியர்த்துக் கொட்டியது. அங்கே எல்லா சன்னல்களும் மழைக்காக  அடைக்கப்பட்டிருந்தது. ட்ரைவரின் சன்னலைப் பார்த்தேன். அதுவும் அடைந்திருந்தது. அந்த தென்றலுக்கு விளக்கம் ஏதும் கிடைக்காமல் நான் சாய்ந்து பாடலை ரசிக்கத் துவங்கிய பத்தாவது நொடி "அந்தப்" பாடல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. இம்முறை ஸ்ரேயாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்தவுடன் நான் கைப்பேசியை உயிர்ப்பித்து படத்தின் பெயரைப் பார்த்தேன். "ப்ரியசகி" என்றிருந்தது. பாடகியின் பெயரைப் பார்த்தேன். அதிர்ந்தேன். அதில் 'சங்கமித்ரா' என்றிருந்தது.

                                 'சங்கமித்ரா' அந்தப் பெயரை அவ்வளவு எளிதாய் என்னால் மறந்து விட முடியாது. என் உயிரோடு உயிர் கலந்தவள். அதுமட்டுமா? என் உடலோடு உடல் கலந்தவளும் அவள் தானே! 'அவளின்றி ஓர் அணுவும்' அசையாது என்று நான் எண்ணியிருந்த நாட்களெல்லாம் என் கண் முன்னே தோன்றிப் போனது. அட, இது பதினேழு வருடங்களுக்கு முன் அவளும் நானும் தனிமையில் இருக்கையில் என்னிடம் பாடிக் காண்பித்த பாடலாயிற்றே. ஒவ்வொரு முறை பாடும் போதும் உச்ச ஸ்தாயியில் அவள் மூச்சை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தாளே. அதே பாடல். இப்போது இசைக் கருவிகள் சேர்த்து, அதுவும் என் கைப்பேசியில் எப்படி?

                                  இப்போது மீண்டும் அவள் சிரிப்பு அடங்கி  "என்ன என்னை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா" என்ற குரல் கேட்டு பின் "கண்டு பிடிச்சுட்ட போலிருக்கே?" என்றாள். அது அவளே தான். அவளின் தேன்மதுரக் குரலை நான் எப்படி மறந்தேன். என் ஜீவனாய் இருந்தாளே, கைப்பேசியில் சினிமா இசை தவிர்த்து அவள் சிரிப்பை ரிங்டோனாய் வைத்திருந்தேனே. "என்ன பிளாஷ்பேக்குக்கு போயிட்டியா?" அவள் குரல் என்னை மீண்டும் தன்னிலைக்கு கொண்டு வந்தது. இயர்போனை கழற்றினேன். நிசப்தமாக இருந்தது. என் கைகளில் தவழ்ந்த அந்த இயர்போனை நோக்கினேன். அதில் இருந்த மண்டை ஓடு என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.  கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயர்போனை பொருத்தினேன்.

                                    இன்னமும் அதே பிரியசகி தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் என் காதுகளில் நிசப்தம் நிலவியது. வேறு பாடல் போட முயன்றேன். ஆனால் மீண்டும் மீண்டும் பிரியசகியே வந்து நின்றது. திடுக்கிட்ட நான் ஐ-போனை அணைத்தேன். முற்றிலும் அணையும் ஓசை காதில் கேட்டது கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. காதுகளுக்கு சற்று நேரம் விடுதலை கொடுக்க எண்ணி கைகளை காதுகளின் அருகே கொண்டு சென்றேன். அப்போது மீண்டும் அவள் குரல் கேட்டது. 'செல்போன ஆப் பண்ணிட்டா ஆச்சா? நான் இருக்கிறது உன் மனசுல. அதப் புரிஞ்சுக்கடா ஸ்டுப்பிட்." "ஸ்டுப்பிட்" - அவள் என்னை ஆசையாய் அழைக்கும் பெயர். கலவியின் களிப்பு முடிந்து அவள் மார்போடு அணைந்து கிடக்கையில் என் தலைமுடியை கலைத்து விட்டு 'ஸ்டுப்பிட், ஸ்டுப்பிட், ஸ்டுப்பிட், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா" என்று கூறி என் நெற்றியில் அவள் இட்ட எண்ணிலடங்கா முத்தங்களின் ஈரத்தை என்னால் இப்போதும் உணர முடிந்தது. அந்த குளிர்ந்திருந்த மழை இரவிலும் அவள் கதகதப்பை உணர்ந்தேன்.

                                       நடப்பதெல்லாம் நிஜம்தானா என என்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்தேன். வலித்தது. உள்ளே திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்ஸின் ஹெட்லைட் வெளிச்சம் தொலைதூரத்தில் தெரிந்த தென்னை மரத்தில் அடித்து எதிரொளித்தது. மீண்டும் என் ஸ்கல்கேண்டி  இயர்போனில் அவள் குரல் கேட்டது. "டே, ஸ்டுப்பிட். எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. வா அன்பே, இந்த சங்கை மீட்ட வா!' என்றது. 'சங்கமித்ரா' என்ற அவள் பெயரை நான் 'சங்கு' என்று செல்லமாக அழைத்தது எங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். அதுவும் கலவிக்கான சங்கேத வார்த்தை தான் அந்த 'சங்கை மீட்டுதல்'! அப்போது அந்தக் குரல் அவளுடையது தான். சந்தேகமேயில்லை.

                                    'ஏதாவது ஒரு காரணம் சொல்லி வண்டியை விட்டு இறங்கி வா' என்று என்னை வார்த்தைகளால் அவள் வசீகரித்தாள். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது ஏன்? ஆச்சர்யமும் பயமும் ஒன்றன் தோள்மீது மற்றொன்று கை போட்டுக் கொண்டு ஆக்ரமித்திருந்தது. அன்பாக பேசிக் கொண்டிருந்த அவள் குரலில் இப்போது சற்று கடுமை சேர்ந்திருந்தது. "இப்போ நீ எறங்கறயா இல்லே வண்டிய நான் நிறுத்தட்டுமா? என்றாள். இறங்க வேண்டாம் என்று என் உள்மனத்தின் கட்டளையை மீறமுடியாமல் நான் அமர்ந்திருக்க, அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிறு கல் பஸ்ஸின் அகலமான கண்ணாடியில் மோத ஓரிரு நொடிகளில் சடசடவென உடைந்து இப்போது அங்கே வெற்றிடம் மட்டுமே இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த டிரைவர் சடன் பிரேக் அடிக்க அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உள்ளே இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். "வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி"

                                                                                                                     -தொடரும்..!



Tuesday, November 3, 2015

அமெரிக்க வாழ்க்கை!!

மீண்டும் 'மீள முடியாத' ஒரு கட்டத்தில் இந்த 'மீள் கவிதை'யை மீட்பதில் சந்தோசம் கொள்கிறேன்..!



தொட்டால் பேசும் ஐ-போன்களும், 
பசி தீர்க்காத 'ஆப்பிள்' லேப்டாப்பும், 
அசத்தும் அர்மானியும்  ஆடம்பரமாய் தெரிவதில்லை..


ளபளக்கும் பட்டு சேலைகளும்,
மனம் பறிக்கும் தங்க நகைகளும்,
பனானா ரிபப்ளிக்கும் பகட்டாய் தோன்றவில்லை..


பீட்சா குடிசைகளும், சப்வேக்களும்,
பைவ் ஸ்டார் ஹோட்டல்களும்,
உல்லாசப் பயணங்களும் உயர்குடிக்கு மட்டுமில்லை..


நைக்கியின் விலை காலை கடிக்கவில்லை,
கேமிராக்களின் முன் கற்றை நோட்டுகள் தெரியவில்லை,
ரே-பான்கள் கண்களை உறுத்தவுமில்லை..



பின்வாசலுக்கு பீ.எம்.டபுள்யுவும்,
கோவிலுக்கு செல்ல ஹோண்டாவும்,
அடுத்த வீட்டுக்கு செல்ல அக்யுராவும் அந்நியமாய் தெரியவில்லை..




ஸ்ப்ளிட் ஏசி சூட்டை கிளப்பவில்லை,
குளிருக்கு ஹில்ஸ்டேஷன் போக வேண்டியதில்லை,
சொந்த வீடு வாங்க வாழ்நாள் முழுவதையும் செலவு செய்ய தேவையில்லை..


சொடுக்கிடும் நேரத்தில் சொர்க்கமும் அருகிலே!
சொகுசுக்கு பஞ்சமில்லை.. சந்தோசமும் குறையவில்லை..
இதயத்தை மட்டும் இந்தியாவில் கழற்றி வைத்துவிட்டோம் என்பதை தவிர...



Sunday, November 1, 2015

விடுமுறை விட்டாச்சு..!

'மேடம், உங்க பையனுக்கு  ஸ்டடிஸ்ல கான்சென்ட்ரேஷன் குறைஞ்சு போச்சு. பசங்களோடவும் மிங்கிள் ஆக மாட்டேங்குறான். கொஞ்சம் என்னன்னு கவனிங்க' கிளாஸ் மிஸ் தன் மகனைப் பற்றிக் கூறியவற்றை மனதில் அசை போட்டவாறே, தன் ஒரு வயது குட்டிப் பெண்ணிற்கு உடை மாற்றினாள். பின் பவுடர் டப்பியை தேடிய போது தான் சமையலறையில் தோசை தீய்ந்து போகும் வாடை வந்தது. ஓடிச்சென்று அடுப்பை அணைத்து விட்டு தோசைக் கல்லை கீழே இறக்கி வைத்தாள்.

பின்னர் ஹாலில் அமர்ந்திருந்த மகனிடம் சென்றாள். நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் அவளைக் கண்டதும் எழுதுவதை நிறுத்திவிட்டு நோட்டை மூடி வைத்தான். ஒரு சிறிய புன்முறுவலோடு அவன் அருகே அமர்ந்து அவன் தலையை வருடிக் கொடுத்தாள். பின்னர் மெதுவாக அவனிடம், 'என்ன எழுதிட்டு இருந்தே? அம்மாகிட்ட காமிக்க மாட்டியா? ' என்றதும் அவளே எதிர்பார்க்காத அந்த தருணத்தில் அவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

பதறிப்போய் அவனைத் தன் மார்போடு அணைத்து "என்னாச்சுப்பா?" என்றாள் ஆதரவாக. அவள் கேள்விகள் அவன் செவிகளை அடைந்த போதும் அவன் இதழ்கள் பதில் சொல்லத் திறப்பதாய் இல்லை. இப்போது அவள் அவன் எதிரே வந்து தன் இரு கைகளால் அவன் கன்னங்களைப் பற்றி "கண்ணா, என்னடா ஆச்சு?" என்றாள் பதறியபடி. அவன் கண்களைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்தபடி அவன் பதிலுக்காய்க் காத்திருந்தாள். அவள் செய்கை அவன் அழுகையை அதிகப் படுத்தியதே தவிர அவன் நாவிலிருந்து ஒலிகளை ஈர்ப்பதாய் இல்லை. 

அப்போதுதான் நடக்க ஆரம்பித்திருந்த அந்தக் குட்டிப் பெண் சுவற்றைப் பிடித்தபடி தாயை நோக்கி மெல்ல நடந்து வந்தது. அவன் மௌனம் கண்டு செய்வதறியாது திகைத்த அவள் "கண்ணா, இப்போ நீ என்ன விஷயம் னு சொல்லலேன்னா அம்மாவும் சேர்ந்து அழுவேன்" என்றாள். இதைக் கேட்ட மாத்திரத்தில் அவன் கண்களில் நீர்வரத்து குறையத் தொடங்கியது. அவன் கண்ணீர் தாரைகளை துடைத்து விட்டபடி, அருகே வந்து சேர்ந்த மகளை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். "ம்..குட் பாய், இப்ப சொல்லு' என்றாள்.

அவன் மெல்ல இதழ்கள் பிரித்து, கொஞ்சமாய் மூக்கில் எட்டிப் பார்த்த வெள்ளைக்காரனை தன் சட்டை காலர் கொண்டு துடைத்தபடி சொல்ல ஆரம்பித்தான். 
                    'அது வந்து.. எங்க கிளாஸ் கார்த்தி இருக்கான்ல.'
                     'ஆமா'
                    'அவங்க வீட்ல எப்பவும் ஈவனிங் அவன் ஸ்கூல் விட்டு வந்ததும் அவன்        அம்மா, ஏதாவது டிபன் பண்ணிக் கொடுப்பாங்க. சுடச்சுட டேஸ்டா இருக்கும்.'
                      'ம்' 
                     ''அப்புறம் அவனுக்கு காம்ப்ளான் கலந்து கொடுப்பாங்க'. 
                       "  ".

                      "அது மட்டுமில்ல, ஒவ்வொரு மாசமும் எங்கயாவது டூர் கூட்டிட்டு போவாங்க அவங்க அப்பா, போன வாரம் கூட கோவைக் குற்றாலம் போயிட்டு வந்தான்"
                        "   "

                         "ஆனா, நம்ப வீட்டுல, நீங்க எப்பவுமே இருக்கிறதே இல்ல. எப்ப பார்த்தாலும் ஆபிஸ் போய்டறீங்க. அப்படியே நைட் வந்தாலும் பாப்பாவை தான் பார்த்துக்கறீங்க."

                             இப்போது கண்ணீர் சுரந்தது -அவள் கண்களில். "அப்படி இல்லடா கண்ணா, அம்மா ஆபிஸ் போனா தானே நீ இங்கிலீஷ் மீடியத்துல படிக்க முடியும், நல்ல அழகான சட்டை போட முடியும்" அவள் சொல்லி முடிப்பதற்குள் "எனக்கு நல்ல சட்டையெல்லாம் வேணாம்மா, சாயந்தரம் நா ஸ்கூல் விட்டு வரும்போது நீ இருந்தாலே போதும்" என்றபடி தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி எறிந்துவிட்டு ஓடினான். 

                         
                               சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வு இன்னும் என் எண்ணங்களில் பசுமரத்தாணி போல். சில சமயங்களில் அவர் கூறிய நியாயங்கள் புரிவது போல் தோன்றினாலும் கல்லூரி செல்லும் வரை ஒவ்வொரு நாளும் அம்மாவின் அன்பை மிஸ் செய்தபடி தான் நானும் என் தங்கையும் கழித்தோம். முப்பத்தியாறு வருட உழைப்பிற்குப் பின் நேற்று அம்மாவுக்கு ரிட்டயர்மென்ட் டே. 'இனி எப்படி நாட்களை கழிக்கப் போகிறேனோ?' என்ற புலம்பலுடன் வீட்டிற்குள் நுழைந்தார். இனி அம்மாவுக்கு எப்போதும் விடுமுறை தான். ஆனால் தங்கை வெளிநாட்டிலும், நான் வெளியூரிலும்..!


                                                                      ***************




How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...