சிறுவயதில் கோவையிலிருந்து பாலக்காடு அல்லது குருவாயூர் செல்கையில் அரசு போக்குவரத்தில் ஏறினால் உள்ளே கும்மிருட்டாய் இருக்கும். வெளியே பெய்யும் மழையின் அறிகுறி உள்ளே துளியும் இராது. மக்கள் ஒவ்வொருவரும் கைகளில் குடையுடன் ஏறி ரை ரை சொன்னவுடன் ஹவுஸ் புல்லாக ஓடும் பேருந்து. ஆனால் இப்போது அங்கேயும் நிலைமை வேறு. சரி, அதைப்பற்றி நமக்கெதுக்கு?
அப்பர் மிடில் கிளாஸ் மற்றும் மேல்தட்டு மக்கள் தமக்கான பயணத்தை கார்களிலும் டாக்சிகளிலும் மாற்றிவிட்ட நிலையில் ஏழை மக்களும், மிடில் கிளாஸ் மக்களும் இன்றளவும் பயன்படுத்தும் போக்குவரத்து அரசு பஸ்கள் மற்றும் இரயில்களைத் தான். ஆனால் அவற்றின் நிலைமை எப்படி இருக்கிறது? தமிழ் நாட்டில் எப்பவாவது மழை பெய்கிறது என்பதாலோ என்னவோ நம் தமிழ்நாட்டில் பேருந்துகளிலோ, இரயில்களிலோ மழைக்கான எந்த முன்னேற்பாடுகளும் இன்றி சிறப்பான நிலையில் உள்ளது.
வெளிநாடுகளில் பொது இடங்களில் பவுண்டன் என்று சொல்லப்படும் நீரூற்றுகள் ஆங்காங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றை மக்கள் காண வேண்டுமென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஆனால் நம் ஊரில் மக்களுக்கு அந்த சங்கடங்கள் கொடுக்காமல் அவர்கள் பயணம் செய்யும் பேருந்திலேயே அண்ணாந்து பார்த்தால் பவுண்டன்கள் மக்கள் காணக் கிடைக்கும் வகையில் கூரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தவிர, கீழ்த்தட்டு மக்கள் எப்போதாவது தான் அருவிகள், செயற்கை அருவிகளை எல்லாம் கண்டு ரசிக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டின் பேருந்துகளில் மழை நாளில் சன்னலோரம் அமர்ந்துவிட்டால் அடிக்கும் சாரலை அனுபவித்து நீங்களும் ஒரு வைரமுத்து ஆகலாம் இல்லை தெறிக்க விடும் மழை பார்த்து 'தல' ரசிகராகலாம். இவை எதுவும் இல்லாமல் சன்னலோரத்தை புறக்கணித்து எழுந்து நின்றால் நிச்சயம் உங்களுக்கு கலையை, இயற்கையை ரசிப்பதில் குறைபாடுகள் இருக்கிறது.
அதுமட்டுமா, எல்லோருக்கும் சன்னலோரம் கிட்டிவிடாது. அப்படி வருத்தப்படும் மற்ற பயணிக்களுக்காய் பேருந்தின் உள்ளேயே டிரைவர் எஞ்சினுக்கும், கண்டக்டர் சீட்டிற்கும் நடுவே ஒரு அகலமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதி சொகுசு பேருந்து மட்டுமல்லாமல் ஒயிட் போர்டுகளிலும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநில மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே!
பேருந்தில் மட்டும் இந்த வசதிகள் செய்து கொடுத்து மற்ற போக்குவரத்து சாதனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. இரயில்களிலும் ஓரளவு சின்ன நீச்சல் குளங்களும், சன்னலோர அருவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தவிர இரயில்களில் கூடுதலாக தாமதமாக வரும் பயணிகளுக்காக எல்லா இரயில்களும் குறைந்தது இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படுகின்றன. இவையெல்லாம் இரயில் பஸ்களோடு நின்று விடாமல் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்க கூரைகளை மாலைகளாய் அணிவித்து வரவேற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சேவைகளை அனுபவித்தபடியே சந்தோஷமாக தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!