Saturday, October 24, 2015

அன்புள்ள சீனுவுக்கு-1



நலம் மட்டுமே நாடும் நண்பன் சீனுவுக்கு,

வணக்கம்!!

உங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மட்டற்ற மகிழ்ச்சி!! என்னடா இவன் சீனுவுக்கு நேர்ந்துவிட்ட சோதனையான சம்பவங்களை எல்லாம் வாசித்த போதும் மகிழ்ச்சி என்று சொல்கிறானே என்று எல்லோரும் நினைக்கக் கூடும், அல்லது அந்த பதிவையே நான் வாசித்திருக்கவில்லை என்று கூட எண்ணக் கூடும். ஆனால் இரண்டுமே தவறு!  நீங்கள் அன்புள்ள என்று தொடங்கி இப்படிக்கு சீனு என்று முடித்தது வரை மொத்தம் எண்ணூற்றி இருபத்தி ஐந்து வார்த்தைகள் உள்ளன. ஒன்றையும் தவறிக்கூட விட்டுவிடவில்லை.  சரி, பிறகு அதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்படி என்ன இருக்கிறதென நம்மைச் சுற்றி உள்ளோரெல்லாம் வியப்பில் புருவம் உயர்த்துவதை என்னால் காண முடிகிறது. உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த அந்த சில உண்மைகள் அவர்களுக்கும் தெரிந்தால், உங்கள் பதிவை தீவட்டியைக் கண்ட மின்மினிப் பூச்சி போல் டரியலான முகத்துடன் வாசித்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் கதை சொல்ல ஆரம்பித்த சுவாரஸ்யத்தில் நிறைய பேர் உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன 'மஞ்சோலை' எனும் சொல்லாடலை "மாஞ்சோலை" எனும் ஊர் என்பதாகவே அர்த்தம் கொண்டிருப்பர். ஆனால் அவர்களுக்கெல்லாம் நீங்கள் குறிப்பிட்டது 'மஞ்சு தவழும் சோலை' பெங்களூரு என்பது விளங்கியிருக்க வாய்ப்பேதும் இருப்பதாகச் சிறிதும் தோன்றவில்லை. பிறகு தானே நீங்கள் நாய் என்று உருவகப்படுத்தியிருப்பது என்னவென்று புரிந்து கொள்வதற்கு?

நாய்க்கும் உங்களுக்குமான நற்தொடர்பைப் பற்றி நீங்கள் சொல்லித்தான் நானும் கவனிக்க ஆரம்பித்தேன். நாய்கள் என்ற பெயரைக் கேட்டவுடன் காத தூரம் சென்ற எனக்கே நீங்கள் குறிப்பிட்ட நாய்களைப் பற்றி படித்ததும் அவற்றை நெருங்கி கவனிக்கும் ஆவல் ஏற்பட்டது.  என் நால்வகை உணர்வுகளையும் கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு உங்களையும், உங்களைப் பின் தொடரும் 'so called' நாய்களையும் நான் பின்தொடர ஆரம்பித்தேன். அட, இது எப்போது நடந்தது என நீங்கள் ஆச்சர்யம் கலந்த ஒரு புன்னகையை உங்கள் இதழோரம் வழிய விட்டிருப்பது தெரிகிறது. அதை இப்போதைக்குத் துடைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பல ஆச்சர்யங்கள் இதோ இந்தக் கடிதத்திலேயே கொட்டிக் கிடக்கிறது. அப்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


நண்பகலில் வீட்டை விட்டு நீங்கள் புறப்படும் போது உங்கள் தெரு முனையில் உள்ள அந்த நீர்த்தொட்டியின் அருகே வசிக்கும் வீட்டில் உள்ள அந்த ஆந்திர நாய் மெளனமாக உங்களை ஒரு பார்வை பார்த்துப் பின் ஒன்றும் சொல்லாமல் தன் பிடரியை தன் நாக்கால் வருடிக் கொண்டே உங்கள் காலைப் பயணத்திற்கு  மன்னிக்கவும், நண்பகல் பிரயாணத்திற்கு 'பிரியா' விடை கொடுக்குமே, அதில் தொடங்கி நீங்கள் மேடவாக்கம் மெயின் ரோடு சேர்கையில் உங்களுக்கு இடப்புறமாக இருக்கும் barrigade இன் ஓரமாக நின்று கொண்டு உங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி கடந்து செல்லுமே, அதை என்றாவது ஒரு பகலில் நீங்கள் நின்று கவனித்ததுண்டா? எப்படி? சப்தமிட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கும் நாய்களை மட்டும் தானே நீங்கள் கவனிக்கிறீர்கள்.


அது போகட்டும், சோளிங்கநல்லூர் பைபாஸ் வழி நீங்கள் செல்கையில் ஒரு அகன்றுமில்லாமல், குறுகியும் அல்லாமல் ஒரு பாலத்தை கடந்து செல்வீர்களே, ஆம் வேகமாக ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி நீங்கள் கணப்பொழுதில் கடந்து சென்று விடும் அந்த பாலம் தான், அதன் ஓரத்தில் வாரத்தின் ஐந்து நாட்களும் அட்டவணையிட்டு ஒப்பனை செய்தபடி உங்களை கவனித்தபடி நின்றிருக்கும் அந்த நாயை என்றாவது மதித்து ஒரு வணக்கம் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையே, கண்களில் கொடூரத்துடன் உங்களை வசைபாடும் இரவு நாய்களை மட்டுமே நீங்கள் பதிவு செய்து வந்திருக்கிறீர்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத ஓர் உண்மை.

சரி இதுமட்டுமா, அலுவலக வாயில், கேபிடேரியா செல்லும் வழி, நாவலூர் AGS அருகில் என உங்களுக்காய் தவங்கிடக்கும் பல நாய்களை நீங்கள் உங்களை அறியாமலே உதாசீனப் படுத்தி வருகிறீர்கள். இந்தக் கொடுமைக் காணச் சகிக்காமல் தான் நான் ஒரு நாள் உங்கள் மனம் புண்படா வண்ணம் 'இனிமேல் நாயைப் பற்றி எழுதாதீர்கள்' என்று கூறினேன். இந்தக் கடிதத்தை உங்களை அல்லாமல் வேறொருவர் யாரேனும் வாசித்தால் அவர்களுக்கு நான் சொன்னதில் உள்ள அர்த்தம் புரிந்து ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்.


பரவாயில்லை போகட்டும் நாய்கள்! இப்போது முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட 'மட்டற்ற மகிழ்ச்சிக்கான' காரணத்திற்கு வருவோம். நீங்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இப்போதெல்லாம் பேய்கள் பற்றிய பயம் உங்களை ஆட்கொள்வதாய் குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த ஒரு 'எளிய' பாமரனும் அதை நிச்சயம் பேயோ பிசாசோ என்றே தான் எண்ணியிருப்பான். எனக்குத் தெரியாதா நீங்கள் எவ்வளவு திடங்கொண்டவர் என்று, அந்த வரிகளின் மூலம் உங்கள் வீட்டில் திருமண ஏற்பாட்டை துவங்கி விட்டார்கள் என்பதை எவ்வளவு சூசகமாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அது நிச்சயம் இந்த் வருடம் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி அனுப்பிய ஏதாவதொரு இலக்கியவாதிக்கோ அல்லது உங்களை நன்கு புரிந்து கொண்ட ஒரு நண்பனுக்கோ மட்டுமே புரியும் ஓர் பரிபாஷை.

இதுவரை நீங்கள் தவிர்த்து வந்த ஆந்திர நாய், Barrigade நாய், சோளிங்கநல்லூர் பைபாஸ் நாய், அலுவலக நாய்கள் இவற்றை எல்லாவற்றையும் விட அச்சம் தரக் கூடியது நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பேய். இப்போது எங்கோ தொலைவில் சாலையில் கிடக்கும் மோகினிப் பொம்மையாய் மட்டுமே தெரியும் அந்தப் பேய், சில சுபகாரியப் பூஜைகளுக்குப் பின் உங்கள் பில்லியனில் அமர்ந்து செல்லும் நாளும் தொலைவில் இல்லை என்பதை நான் நிச்சயம் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் கூறியாக வேண்டும். உள்ளூர பயந்து நடுங்கினாலும் 'நானும் ரவுடிதான்' என்பதைப் போலவே உங்கள் செல்ல ஸ்ப்ளேனடரில் இன்று போலவே என்றும் வலம் வரத்தான் போகிறீர்கள்!!


வாழ்த்துகள்!

இப்படிக்கு,

'நல்லதை மட்டுமே எண்ணும்' ஆவி.


Wednesday, October 14, 2015

கிருஷ்ண பரமாத்மா's Visit to புதுக்கோட்டை!!



மதிய உணவை 'அருந்திவிட்டு' வேகமாக என் இருக்கைக்குச் சென்று அமர்ந்த போது என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. எஸ்.ரா அவர்களின் பேச்சை அரங்கமே கவனித்துக் கொண்டிருக்க என் தொண்டைக் குழிக்குள் எதோ ஓர் வறட்சி. கவிஞர் வைரமுத்து அழகாய் எழுதி வைத்த 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஓர் உருவமில்லா உருண்டை'யை அவஸ்த்தையுடன் 'அனுபவித்துக்' கொண்டிருந்தேன். என்னுடன் பேச விழைந்த ஒன்றிரண்டு பேரை கண்டுகொள்ளாமல் என் 'நுண்ணறிவுப் பேசி' யில் முகப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன். நேரம் ஆக ஆக என்னால் சரியாக அமரக் கூட முடியவில்லை. யாரோ உள்ளே புகுந்து கொண்டு 'குத்தாட்டம்' போடுவது போன்ற உணர்வு. எழுந்து போய் அருகில் கடை எதுவும் இருந்தால் ஒரு "கார்பன் செறிவூட்டப்பட்ட" குளிர்பானம் குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. இரண்டு நாட்கள் வாகனம் ஒட்டியதன் அசதி நடந்து செல்லும் திட்டத்தை கைவிட வைத்தது. சுற்றிலும் நண்பர்கள் குழாம் எதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்க நான் மட்டும் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் எரிச்சலுடன்.

அப்போது அங்கே வந்த ஒரு பெண்  கையிலிருந்த பணியாரத் தட்டை என்னிடம் நீட்டினார். நான் இருந்த அவஸ்தை ஒரு கணம் கோபமாக மாறியது. "வேணாங்க" என்று கொஞ்சம் கடுமையாக் கூறினேன். அடுத்த வினாடியே நான் அவரிடம் நடந்து கொண்ட விதம் எனக்கே தவறாகப் பட்டது. அந்த நேரத்தில் பின்னாலிருந்து சீனுவின் குரல் "பாஸ், உங்களுக்கு வேணாம்னா, எங்களுக்கும் வேண்டாமா?" என்று கேட்க சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைப்பதற்காகத் திரும்ப அவர் இரண்டு மூன்று வரிசைகள் முன்னே சென்றுவிட்டிருந்தார். 'சாரி' என்று சீனுவிடம் சொல்லிவிட்டு மீண்டும் என் "அவஸ்த்தானுபவத்தை" தொடர்ந்தேன். இப்போது வேறொரு பெண்மணி பணியாரம் கொண்டு வர நான் ஒரு பிளேட் வாங்கி சீனுவிடம் கொடுத்தேன். அதற்கு முன்பே அரசன் அவருடையதை பகிர்ந்திருக்க போதும் என்றார் சீனு. "போதுமென்றெல்லாம் சொல்லக் கூடாது. உங்களுக்காகத் தான் வாங்கினேன் என்று அவர் கைகளில் கொடுத்துவிட்டு திரும்பினேன். எனக்கும் பணியாரம் பிடிக்கும் தான் ஆனால் அதை ருசிக்கும் மனநிலையில் நான் இல்லை என்பதே உண்மை.

மேடையில் ஒய்யாரமாய் நின்றிந்த எஸ்.ரா அவர்களிடம் ஒவ்வொருவராய் கேள்விகள் கேட்க, அதற்கு அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என் பிரச்னைக்கு தீர்வு என்ன என்று நான் என் மனதுக்குள் சன்னமாய்க் கேட்ட கேள்விக்கு அவரும் சரி எவரும் சரி பதிலேதும் கூறவில்லை. என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்ற என் "தார்மீகக்" கோபத்துடன் கடவுளிடம் கண்மூடி பிரார்த்தித்தேன். அருகிலிருந்த ஒரு நண்பர் என்னைத் தட்டி "எஸ். ரா அங்கே சூப்பரா பேசிகிட்டு இருக்காரு நீங்க தூங்கறீங்களே" என்றார். கடவுளிடம் நான் என் இப்போதைய அவஸ்தையிலிருந்து விடுபட கோரிக்கை வைத்துக் கொண்டிருந்ததை அவர் நான் கண்ணயர்ந்து விட்டதாய் எண்ணிவிட்டார்.  "ஓ..மை..கடவுளே.. பூமியில் அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் நீ அவதரிப்பதாய் சொல்வார்களே, என்னுள் ஓர் அதர்மம் 'அசால்ட்' பண்ணிக் கொண்டிருக்கிறது. நீ அவதரிப்பது எப்போது?குட்டிக் கிருஷ்ணனாய் வளர்வது எப்போது? எனக்குள் தாண்டவமாடும் கம்சனை வதம் செய்வது எப்போது?



என் கேள்விகள் உனைச் சேர்ந்திடுமா என்ற ஓர் ஐயத்துடனே மீண்டும் கண்களை மூட எத்தனிக்க என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. அருகிலிருந்த நண்பராயிருக்கும் என எண்ணி கண்ணை மூடியபடி இருக்க அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது. "அங்கிள் தண்ணி வேணுமா?" என்று. கண்கள் திறந்தேன். அங்கே ஒரு குட்டிக் கண்ணன் கிளாஸ் அணிந்தபடி கையில் ஒரு கிளாஸுடன் நின்றிருந்தான். என் கண்களுக்கு கண்ணனை விடவும் அவன் என்னை நோக்கி நீட்டிய கிளாஸ் தான் Focus இல் இருந்தது. அனிச்சை செயலாய் உடனே வாங்கி அதை இரண்டே மிடற்றில் குடித்து முடித்தேன்.  "இன்னொரு கிளாஸ் வேணுமா அங்கிள்" என்ற கண்ணனிடமிருந்து மற்றொரு கிளாஸ் தண்ணீர் வாங்கிக் குடித்தேன். ஆச்சர்யம்!! இவ்வளவு நேரமாய் என்னுள் அட்டகாசம் செய்து கொண்டிருந்த  அந்த "காற்று தேவன்" இருந்த இடம் தெரியாமல் அகன்றிருந்தான். "தாங்க்ஸ்" என்றபடி கிளாசை நீட்டினேன். அந்த கண்ணனை இப்போதுதான் சரியாகப் பார்த்தேன். அது கண்ணன் அல்ல கண்ணன் அனுப்பிய தேவதை! ஒரு குட்டித் தேவதை!!

என் வியப்பு சற்றும் அகலாமல் நான் அந்த குட்டிப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க, பின்னாலிருந்து சீனு தனக்கும் தண்ணீர் வேண்டும் என கேட்க தன்னிடமிருந்த கூஜாவிலிருந்து கிளாசில் ஊற்ற எத்தனித்தாள் அவள். ஆனால் ஆச்சர்யம், அந்த கிளாசில் ஒரு சொட்டு தண்ணீர் கூட விழவில்லை. எப்படி விழும், அது கண்ணன் எனக்காக இந்த தேவதையிடம் கொடுத்தனுப்பிய மருந்தாயிற்றே. தன் மழலை மொழியில் "இருங்க எடுத்துட்டு வர்றேன்" என்று கூறிச் சென்றாள். மீண்டும் வந்தாள். தண்ணீரை சீனுவுக்கும் அரசனுக்கும் கொடுத்துவிட்டு நகர முற்பட்டவளிடம்  சீனு  இன்னொரு கிளாஸ் தண்ணீர் வேண்டும் என்று கேட்க ஒரு பொய்க் கோபத்துடன் "Jug ஏ காலியாயிடுச்சு. இதுக்கு மேல வேணும்னா அண்டா தான் கொண்டு வரணும்" என்று சொல்லிக் கொண்டே இன்னொரு கிளாசும் எடுத்து வந்தாள்.

சற்றும் விலகாத ஆச்சர்யத்துடன் சீனு என்னிடம் அவளைப் பற்றிக் கூறிய தகவல்களைக் கேட்டு இன்னும் அதிசயித்தேன். அந்த சிறு பெண் ஒரு வலைத்தளம் வைத்திருப்பதாகவும், அதில் அவளே எழுதவும் செய்வதாகவும் கூறினார். இந்த வயதில் இவ்வளவு பொறுப்புடனும் அதே சமயம் "துருதுரு" வென்றிருந்த அந்தக் குட்டிப் பெண்ணை நான் ஆச்சர்யம் துளியும் விலகாமல் பார்த்தபடியே அவள் பெற்றோர் யாரெனக் கேட்டேன். நண்பர் கஸ்தூரி ரங்கன் மற்றும் தோழி மைதிலியின் புதல்வி என்று கூறினார். "மகிழ்வாய்" இருந்தது அந்த 'நிறைமதி வதனா' வைப் பற்றித் தெரிந்து கொண்ட போது!!

அந்த குட்டிப் பெண்ணின் வலைத்தளம் இதோ: http://niraikasthurirengan.blogspot.in







Thursday, October 1, 2015

புலி - திரை விமர்சனம்


இன்ட்ரோ  
                           பேஃண்டஸி (Fantasy) உலகம் என்பது ஒவ்வொருவரும் கனவு காணும் ஒரு மாய உலகம். அங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். மந்திர, மாயாஜால சக்திகள், தந்திர வித்தைகள் என எதை வேண்டுமானாலும் நிகழ்த்திக் காட்டக் கூடிய பரந்து விரிந்த ஒரு அழகிய உலகம். இந்த களத்தை வைத்துக் கொண்டு ஹாலிவுட்காரர்கள் காட்டும் வித்தைகளை இன்றளவும் வாயை பிளந்து கொண்டு பார்க்கும் ரசிகனாய் மட்டுமே நாம் இருக்கிறோம். அருமையான அந்த களத்தில் புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் தவற விட்டது இந்தப் புலி..!


                          




கதை
                            வேதாள உலகத்தின் அராஜக ஆட்சியை முறியடிக்கவும் அந்த நாட்டின் தளபதி கடத்திச் சென்ற தன் காதல் மனைவியை மீட்கவும் வேதாள தேசம் செல்கிறான் மருதீரன். வழியில் சில சித்திரக்குள்ளர்கள், பேசும் பறவைகள்  மற்றும் ஒரு இராட்சத ஆமையின் உதவியுடன் வேதாள தேசம் அடைகிறான். கொடுங்கோல் ஆட்சி புரியும் அந்த மகாராணி மற்றும் தளபதியிடமிருந்து தன் நாட்டையும், மனைவியையும் எப்படி மீட்டான் என்பதே கதை.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           சரித்திர படம் என்ற போதும் போலிஸ் கட் ஹேர்ஸ்டைலுடன் திரையில் தோன்றும் அசாத்திய தைரியம் விஜய் அண்ணாவை தவிர வேறொருவருக்கும் இருக்குமா என்பது ஐயமே! இந்த படத்தில் ஒரு படி மேலே போய் வசனங்களை ரீவைண்ட் பட்டனை இரண்டு முறை அழுத்தினாற் போல் மெதுவாக பேசுவதன் காரணமோ, ஆங்காங்கே தோன்றும் அரசியல் மற்றும் பயனற்ற பஞ்ச் களோ அவருடைய ரசிகர்களைக் கூட திருப்தி படுத்தாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

                           தமிழ் உச்சரிப்பில் தன் தந்தையின் பெயரை சந்தையில் விற்கிறார் ஸ்ருதி ஹாசன். மேலும் கதையோடு ஒட்டாத இவர் நடிப்பு, ஸ்ரீதேவியின் தெளிவில்லாத கதாப்பாத்திர படைப்பு, காமெடி என்ற பெயரில் சத்யன்-தம்பி ராமையா கூட்டணியின் மொக்கைகள், பிரபு மற்றும் கிச்சா சுதீப்பின் வீணடிப்பு என படத்தின் மைனஸ்கள் ஏராளம். ஹன்சிகா கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார்.
                             
                             பல வலிகளையும் தாங்கியபடி படத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் ஆடியன்ஸ் இருக்கும் போது அப்பாவாக இன்னொரு விஜய் வருவது ஹிம்சையின் உச்சகட்டம். விஜயை தவிர வேறெந்த கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படவே இல்லை.

இசை-இயக்கம்
                               டி.எஸ்.பி யின் பாடல்கள் ஏற்கனவே மீம்களில் கிழித்து தொங்கவிடப்ப்ட்டாலும் ஒரு  பேஃண்டஸி படத்துக்கான இசை படத்தில் எந்த ஒரு காட்சியிலுமே உணர முடியவில்லை. இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் தவிர அவர் படங்கள் எதுவும் வியாபார ரீதியாக வெற்றி பெறாத போதும் ரசிகர்களை அரங்கிற்கு அழைத்து வரும் சக்தியாக இருந்தார். இந்தப் படத்திற்கு பின் அது தொடர்வது கடினமே!


                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                               பெரிய சைஸ் ஆமை, ஒற்றைக் கண்ணன் மற்றும் ஆரம்ப சண்டைக் காட்சிகள் சில ரசிக்க வைத்தன. இருப்பினும் மொத்தத்தில் இது மக்களை குதறும் புலி.

                

***

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...