Thursday, August 29, 2013

கோநேஜீ டிராவல்ஸ்


                        "தல" பட ரீலிசுக்கு காத்திருந்த அதே டென்ஷன், எதிர்பார்ப்பு, சந்தோசம், ஆர்பரிப்பு எல்லாமே இந்த பதிவர் திருவிழாவுக்கும் உண்டு. காலண்டரின் தேதிகளை கண்ணா பின்னவென்று கிழித்து செப்டம்பர் ஒன்றில் நிறுத்தியபோது உற்சாகம் பீறிட்டது.  ஆனால் முன்கூட்டியே தேதிகளை கிழித்து விட்டபடியால் வீட்டில் ஏச்சுகளும் பேச்சுகளும் ஏராளம்.. சரி, ஏசுநாதரையே ஏசிய கூட்டம் தானே இது என்று விட்டுவிட்டு மற்றொரு காலண்டரைக் கிழிக்க புறப்பட்டேன்.



                          அடுத்த காலண்டரில் கை வைத்ததும் ஆளாளுக்கு தடுக்க வந்தார்கள்.. கைகள் குணமாக வேண்டுமெனில் சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுமாறு டாக்டர் கூறியுள்ளார், அதில் இதுவும் ஒன்று என்றதும் அமைதியானார்கள். காலண்டரில் தேதிகள் கிழித்ததற்கு எதற்கு இவ்வளவு ஆவேசம் என்று யோசித்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் அவர்கள் கோபம் நியாயமாக பட்டது. எங்கள் வீடு மட்டுமல்லாமல் இந்த ஒரு மாதத்தில் நான் சென்ற உறவினர் வீடு, நண்பர்கள் வீடு என எல்லார் வீட்டு காலண்டரிலும் இப்போது செப்டம்பர் ஒன்று சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.



                              நான் சென்னையில் நடக்கும் பதிவர் மாநாட்டிற்கு செல்வதை எப்படியோ தெரிந்து கொண்ட (??) என் உறவினர்களும் நண்பர்களும் ஆலோசனை கூற, சில நாட்கள் முன் அனுமதி அளித்த அம்மா இப்போது "கை கொஞ்சம் சரியாகட்டுமே பா.." என்றார்.. நானோ "அம்மா,  நீங்க வலுவிழந்த இந்த இரு கைகளை பார்க்காதீங்க.. என் வலக்கையாக ஜீவாவும், பாஸ்கரன் சாரும் வர்றாங்க.. இடக்கையாக எழில் மேடமும், கலாகுமரன் சாரும் வர்றாங்க.. கூட என் மனதில் இருக்கிற நம்பிக்"கை".. அப்புறம் எப்பவும் என் கூட இருக்கும் நீங்க வேண்டுற பிள்ளையாரின் தும்பிக்"கை".. என்றதும் மறுபேச்சு ஏதும் இல்லாமல் சரியென்றார்.



                                 உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் நான் உலகத்துக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் (அரசியல்வாதி பேசுற மாதிரி ஆயிடிச்சோ??) வரும் செப்டம்பர் முதல் தேதி பதிவர் சந்திப்பை முன்னிட்டு கோவையிலிருந்து சென்னை செல்லும் சிறப்பு பேருந்து "கோநேஜீ டிராவல்ஸ்"  (விரிவாக்கம் கேக்கப்படாது) சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை கோவை நேரத்தில் கிளம்பும் சாரி ஒன்பது மணி சுமாருக்கு கோவை காந்திபுரம் அருகில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு முன் இருந்து பயணம் துவங்கும் என்பதை இந்த நிகழ்காலத்தில், இனியவை கூறலாய் எடுத்துக் கொண்டு சிற்றுந்தில் பல உலக சினிமாக்களை ரசித்த படியே புன்னகையை சின்ன சின்ன சிதறல்களாய் விட்டு வண்ணத்துப்பூச்சியாய் செல்லலாமென்றும் ஆண்களுக்கும், புதுமை பெண்களுக்கும்  மகிழ்ச்சியுடன் கூறி, இந்த பொன்னான சந்திப்புக்கு வாய்ப்பளித்த சென்னை பதிவர் சந்திப்புக் குழு கமிட்டி மெம்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, மேலும் இதுபோன்ற சந்திப்புகள் அமைவது குறிஞ்சிப் பூ பூப்பது போல் எப்போதாவது நிகழும் என்பதால் (யாருப்பா மைக்கை பிடிங்கினது)..



                                   சரி சரி, கொங்கு நாட்டு அன்பர்களே..  இதுவரை நீங்க முடிவெடுக்கலைன்னாலும் பரவாயில்ல.. திருவிழாவிற்கு வர நீங்க இப்ப ஆசைப்பட்டா உடனே உங்க செல்பேசியை எடுத்து 9894401474  என்ற எண்களை ஒற்றி "ஹலோ, நெப்போலியனா?" என்று கேட்டவுடன் "நீங்க பதிவர் சந்திப்புக்கு வர்றீங்களா" என்ற கேள்வி மறுமுனையிலிருந்து ஒலிக்கும். உங்கள் வருகையை அங்கே பதிவு செய்துகொண்டு திருவிழாவில் கலந்து கொண்டு கவி மழையில் நனைய வருமாறு நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. வர்ட்டா..





Wednesday, August 28, 2013

எங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா..!!

           
            
எங்கும் நஸ்ரியா.. எதிலும் நஸ்ரியா 
எல்லாம் நஸ்ரியா.. அம்மம்மா நஸ்ரியா.. 


                             தான் நடித்து தமிழில்  வெளிவந்த முதல் படமான நேரம் அவ்வளவு பெரிய வெற்றி பெறாவிட்டாலும் நஸ்ரியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. "YUVVH" என்ற மலையாள ஆல்பத்தில் புதுமுகமாக அறிமுகமாகிய இவர் அதில் "நெஞ்சோடு சேர்த்து" எனும் பாடலில் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தார். மலையாளத்தில் MAAD DAD படத்தில் நடித்து திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த, நேரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


                             தன்னுடைய "YUVVH" ஆல்பத்தின் ஜோடியான நிவின் பாலியுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த இந்த நேரம் படத்தில் நடிக்க தமிழ்த் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து இந்த தேவதையை தத்தெடுத்துக் கொண்டது. நஸ்ரியாவின் படங்களைக் காண விரும்பிய ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் விதமாக வரிசையாக இயக்குனர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் படங்களில் புக் செய்ய துவங்க ரசிகர்கள் காட்டில் மழை.



                            இவர் ஆர்யாவுடன் நடித்த ராஜா ராணி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு மில்லியன் ஹிட்டுகளை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்யுடன் "திருமணம் எனும் நிக்காஹ்", தனுஷுடன் "நையாண்டி", மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கீர் சல்மானுடன் "சலாலா மொபைல்ஸ்", கார்த்தியுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம் மற்றும் ஜீவாவுடன் "நீ நல்லா வருவடா"  என வரிசையாக பட வாய்ப்புகள் அமைய ஓவர்நைட்டில் தமிழ்நாட்டின் செல்லக்குட்டி ஆகிவிட்டார். இந்த தேவதையை என்னோடு சேர்ந்து வாழ்த்தி வரவேற்க உங்களையும் அழைக்கிறேன்.

பதிவர் திருவிழா : நாள் செப் 1, காலை 9 மணி.
மேலும் விபரங்களுக்கு...

Monday, August 26, 2013

பிடிச்சிருக்கு.. இத பிடிச்சிருக்கு..



                               தங்கமீன்கள்  "ஆனந்த யாழை" பாடலுக்குப் பிறகு புதிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது ராஜா ராணி திரைப்படத்தில் வரும் "Hey Baby" பாடலைக் கேட்ட போது கேட்டவுடன் பிடித்தது. ஜீ.வி பிரகாஷ் பாடி இசையமைத்த இந்த பாடல் வெஸ்டர்னில்  ஆரம்பித்து கானா பாலாவின் குரலில் போக்கில்(Folk ) முடிகிறது. ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. அதே படத்தில் இமையே பாடல் ஜி.வி மற்றும் "மக்காயாலா" புகழ் சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளனர்.  மனதை மயக்கும் பாடலிது. துள்ளல் இசையுடன் மற்றொரு பாடல் விஜயபிரகாஷ், ஷாஷா பாடிய "ஓடே ஓடே" பாடல்.  ஆர்யா, நயன்தாரா மற்றும் ஜெய் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மற்றொரு ப்ளஸ் நேரம் படத்திற்கு பிறகு தமிழில் நஸ்ரியா நடிக்கும் படமிது..




                               யுவன் இசையமைக்கும் நூறாவது படம் பிரியாணி. எச்சில் ஊற வைக்கும் டைட்டில், ஆனால் டைட்டில் சாங் படத்தோடு பார்க்கும்போது தான் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. ஜீவி, இமான், தமன், விஜய் ஆண்டனி இணைந்து பாடியிருக்கும் எதிர்த்து நில் ஊக்கம் தரும் பாடல். கார்த்தி தன் சொந்த குரலில் பாடிய "மிஸ்ஸிஸிப்பி" கட்டிப்புடி கட்டிபுடிடா ரக பாடல் என்றாலும் கார்த்தி, ப்ரியா மற்றும் பிரேம்ஜியின் குரலில் கேட்க நன்றாக உள்ளது. "நாநனனனா" பாடல் மூன்று வெர்ஷனில் உள்ளது.  யுவனின் குரல் இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது.


                             
                               ஆர்யா, உலக சினிமா ரசிகனின் பேவரைட் அனுஷ்கா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வரும் படம் இரண்டாம் உலகம். SPB யின் குரலில் "என் காதல் தீ" ஒரு இனிய மெலடி.. ஆனாலும் பழைய SPB யின் குரல் மிஸ்ஸிங். கார்த்திக்கின் இனிய குரலில் "கனிமொழியே" மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். "மன்னவனே என் மன்னவனே" ஹாரிஸ் ஜெயராஜின் இசைத் தாலாட்டு. "பாடகர்" தனுஷின் குரலில் பனங்கல்லா பாடல் சுமார் ராகம். நீண்ட நாட்களுக்குப் பின் ஹரிஹரனின் குரலில் "ராக்கோழி" அருமை.  "விண்ணைத்தாண்டி" பாடல் ஆதவன் படத்தின் எதோ ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.

ராஜா ராணி ட்ரைலர் காண்க:



                              

Friday, August 23, 2013

தலைவா- திரை விமர்சனம்.


                             தலைவா- இணையத்தில் பலராலும் பலவாறாக விமர்சிக்கப்பட்டுவிட்ட ஒரு படம். கொஞ்சம் லேட் ஆனாலும் என் பார்வையில் இந்த தலைவா எப்படி இருக்குன்னு மக்களுக்கு சொல்லனும்னு ஒரு அவா. அதான் எழுதீட்டேன். ( நீண்ட சிரமத்துடன் பார்த்த படம் இது. என்ன சிரமம்னு இன்னொரு பதிவுல சொல்றேன்)


                              ஆஸ்திரேலியாவில் நண்பர்களுடன் உல்லாசமாக ஆடல் பாடல் கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக  வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் வரும் ஒரு பெண், அவள் காதல், அதனால் ஏற்படும் காட்சி மாற்றங்களால் அவன் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள். தன் தந்தை ஒரு நிழலுலக "தாதா " என்பதையும் அவர் உயிருக்கு இருக்கும் ஆபத்தையும்  அறிந்து பதறும் அவன் அடுத்து என்ன செய்கிறான் என்பதே கதை. 


                               விஜய் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார், அதுவும் டிஸ்டிங்க்ஷனில். பாட்டு, டான்ஸ், ஆக்க்ஷன், காமெடி, சென்டிமென்ட் ரோமென்ஸ் என்று எல்லா ஏரியாவிலும் சிக்சர் அடிக்கிறார். அமலா பால் இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்தியிருக்கலாமென்று தோன்றுகிறது. (நடிப்பை  சொன்னேங்க..) புன்னகை மன்னன் ஸ்டைலில் இருவரும் ஆடும் நடனம் அருமை. சத்தியராஜ் நிறைவான நடிப்பு. அமைதியாக வந்து மிரட்டுகிறார். வெண்ணிற ஆடையும், சிவப்பு சால்வையும் அவர் அழகுக்கு மெருகூட்டுகிறது. (கடைசி காட்சியில் விஜய்  அதே டிரஸ் அணிந்து வரும் போது அவ்வளவு கம்பீரம் தோன்றவில்லை.)


                            ப்ரோ சாரி சந்தானம் இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் படம் தொய்வடையும் போது அவர் காமெடி படத்தை நகர்த்துகிறது. குறிப்பாக "எங்க போக, இது ஒரு வழிப் பாதை. திரும்பிப் போறது உயிர் மட்டும்தான்" என்ற டயலாக்கை சீரியசாக சத்யராஜும், விஜயும் கூற அதே வசனத்தை சந்தானம் கலாய்ப்பது  அருமை. ஜீவியின் இசையில் "யார் இந்த சாலையில்" பாடல் அருமை. மற்றவை சுமார் ரகம்.  பொன்வண்ணன், மனோபாலா, உதயா, சுரேஷ், வில்லர் பீமா என  எல்லோரும் சிறப்பாய் நடித்தும் ஓரிரு விஷயத்தில் தலைவா சறுக்குகிறான். 


                             ஊரே மதிக்கும் தலைவன் பாங்கு அடித்துவிட்டு மட்டையாகி பொறுப்பில்லாமல் உறங்குவது. வில்லனின் பலத்தைக் காட்ட போதிய காட்சிகள் இல்லாதது. குத்து பட்ட பின்பும் முளைத்து வரும் பீனிக்ஸ் பறவை போல் விஜய் வருவது. பின்னணி இசை பிரம்மாண்டமாக இல்லாதது, முதல் பாதியில் விஜய்-அமலா காதலுக்கு (குறிப்பாக அந்த சாம் ஆண்டர்சன் காட்சி சுத்த போர்) அதிக காட்சிகள் வைத்ததற்கு பதிலாக சத்தியராஜின் கேரக்டர் வலுப்படும்படி ஓரிரு காட்சிகள் வைத்திருக்கலாம். 


                            இவற்றைத் தவிர்த்து பார்க்கும் போது இந்த தலைவா தலை நிமிர்ந்து நிற்கிறான்.



75 / 100

ஏதோ மோகம்.. ஏதோ தாகம்..



                                  டைட்டில பார்த்து பயந்துடாதீங்க.. பாடல் எழுத வேண்டும் என்பது என்  தீராத மோகம், தணியாத தாகம். இதுவரை சுமார் பனிரெண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ( என் பாடல்களுக்கு பெரும்பாலும் நானே மெட்டமைப்பது வழக்கம். சில நேரங்களில் இளையராஜாவையும் துணைக்கு அழைத்துக் கொள்வேன்). என் பாடல்களுக்கு என் தாயார், தமக்கை மற்றும் சில நண்பர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது எனினும் இன்று இணையத்தில் என் மதிப்பிற்கும் பாசத்துக்கும் உரிய பதிவுலகின் "அண்ணா " பாலகணேஷ் அவர்கள் நான் பதிவர் திருவிழாவுக்காக எழுதிய பாடலை அவருடைய மின்னல் வரிகள் வலையில் பிரசுரிக்க எனக்கோ ஒரே பாராட்டு மழை. இதுவரை நான் பழகியிராத பலரும் பாராட்டியது மகிழ்வைத் தந்தது. என் எழுத்துலக வாத்தியாருக்கு மீண்டும் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்..

பாடலை கேட்க:

                                     மேலும் இந்த பாடலை கேட்டுவிட்டு குவைத்திலிருந்து மஞ்சுபாஷினி அக்கா போன் செய்து பாராட்டியது என்னை புளங்காகிதமடைய செய்தது. ஒரு சில திருத்தங்களை கூறி அந்தப் பாடலை மேருகேற்றியதுடன் அதைப் பாடியும் காட்ட மனம் சந்தோஷத்தில் கூத்தாடியது. இதற்கு ஒரு படி மேலே போய் நம்ம சுப்பு தாத்தா அவர்கள் அவருடைய தேன் சிந்தும் குரலில் கர்நாடக சங்கீத பாணியில் அதே பாடலை பாடியதுடன் எனக்கு வாழ்த்தும் தெரிவித்தார். சந்தோஷத்தில் திளைத்தேன், அகமகிழ்ந்தேன், பெருமிதம் கொண்டேன். 

சுப்பு தாத்தா பாடிய பாட்டு 

                                         என் பாடலை ரசித்த எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி, எல்லோரையும் பதிவர் திருவிழாவில் சந்திக்க பேராவலுடன் காத்திருக்கிறேன். 




Tuesday, August 20, 2013

கிளம்பீட்டாரு கோ.பெ.சோ..


                         காலையில் எழுந்ததும் குழம்பியை குடித்தபடி அரண்மனை வாயிலில் நின்றிருந்தான் கோப்பெருஞ்சோழன்.. இதழில் குழம்பி இனித்த போதும் மனதில் நிலைத்த குழப்பத்தால் சற்றே பதற்றத்துடன் காணப்பட்டான்.
மெலிதாய் உரசிய தென்றல் காற்றும், புதிதாய்ப் பூத்திருந்த ரோஜா மொட்டுகளும் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. அருகே தான் அந்தப்புரம். கன்னியர்களின் கொலுசொலியும், சிதறி விழும் சிரிப்பொலியும் அவருக்கு சலனத்தை கொடுக்கவில்லை.

                            அவர் கண்கள் அடிக்கடி மேசை மீது வைத்திருந்த ஒரு அழைப்பிதழையே பார்த்துக் கொண்டிருந்தது. மனம் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தது.."அவர் வருவாரா? ". மெதுவாய் நகர்ந்து மேசை மேல் கிடந்த அழைப்பிதழை மீண்டும் ஒருமுறை பார்த்தார். அழகே வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அழைப்பிதழின் வரிகள் அவர் கண்களில் மின்னல் வானில் விட்டு சென்ற ஓவியமாய் தோன்றியது.

அழைப்பிதழ் 
                     
                          உலகெங்கும் உள்ள கலை  மேல் ஆர்வம் கொண்ட சான்றோர் பெருமக்கள் யாவரும் ஒன்று கூடும் ஒரு சந்திப்பாயிற்றே. பல்லவ தேசத்தில் உள்ள மதராசப் பட்டினத்தில் நடக்கிறது. எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. என் நண்பன் பிசிராந்தையாரும் அவ்விடம் வருவானோ? மனம் ஏங்கித் தவித்தது. எத்துணை நாட்கள், எத்துணை மாதங்கள், எத்துணை வருடங்களாய் அவன் எழுத்துக்கள் மட்டுமே என் பார்வைக்கு கிட்டியது. இந்த சந்திப்பிலாவது அவன் முகம் காணக் கிடைக்குமா?  சிறுபிள்ளையின் கண்முன் சீனிமிட்டாயை காட்டியது போல் உவகை கொண்டது மனது.

                             இந்த சந்திப்பிற்க்காய் பல குழுக்களாய் பிரிந்து பணியாற்றுகின்றரே..  சேர, சோழ, பாண்டிய, பல்லவ தேசம் மட்டுமல்லாது பரந்து விரிந்த பல்லாயிரக்கணக்கான தேசங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் வருவார்களே.. என் நண்பன் மட்டுமல்லாது தமிழ் வளர்க்கும் நல்லோர் பலரையும் காணக் கிடைக்குமே.. புதியவர்களின் அறிமுகம் மட்டுமல்லாது ஆடல், பாடல் கேளிக்கைகளும் இருக்குமாமே.. ஒரு பள்ளி மாணவன் தன் தேன் மதுரக் குரலில் பாடி அசத்தப் போவதாய் கூறியுள்ளானே..
தொகுத்து வழங்க கொங்கு நாட்டில் இருந்து இரு பெண்கள் வருகிறார்களாமே.. இதோடு சேர்த்து உன்னையும் காணப் போகிறேன். எத்துணை  சந்தோசம் எனக்கு.. பிசிர் நண்பா, இதோ கிளம்பிவிட்டேன் நான்!!



கோ.பெ.சோ.. கிளம்பீட்டாரு.. அப்ப நீங்க ??




Sunday, August 18, 2013

ME, LORD கணேஷ், & பாலகணேஷ்..


                                அவருடைய எழுத்துக்களை தொலைவில் இருந்து (ஒரு ஐநூறு  கிலோமீட்டர்) பார்த்து வித்தை கற்றுக் கொண்ட ஏகலைவன் போல், என் குருநாதரிடமிருந்து பல கலைகளை கற்றுக் கொண்டேன். குறிப்பாக எழுத்துகளை மக்கள் நேசிக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இருத்தல் நலம். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது போன்ற விஷயங்களை அவரிடம் படித்து தெரிந்து கொண்டேன். துரோணரின் சீடராய் பல அர்ஜுனர்கள் கலக்கிக் கொண்டிருக்க இந்த ஏகலைவனை கண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் இருந்தது. ஆயினும் இந்த "எழுத்துலக துரோணாச்சாரியார்" என்னையும் விளித்து பாராட்டியது என் எழுத்துகளுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாய் உணர்ந்தேன்.


                                  இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துல தான் சென்னை போகிற வாய்ப்பு அமைஞ்சுது எனக்கு. அதே சமயம் தோழி மஞ்சுபாஷிணி அவர்களின் வருகையும் அமைந்துவிட, மற்ற பதிவர்களையும் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு.. அந்த சந்திப்பின் போது அவருடைய விருந்தோம்பலில் மனம் நிறைந்தது. காலை வேளையில் அவர் குடிக்கும் ஒரு "உற்சாக பானம்"  (சாரி ஸார், கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லிட்டேன்) இப்போது நினைத்தாலும் என் நாவில் தித்திக்கிறது. (அடுத்த முறை வரும்போது கட்டாயம் ரெசிபி கொடுங்க!)

                                    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்வாங்க.. ஆனா என்னைப் பொறுத்தவரை அது அம்மாவுக்கு தான் பொருந்தும். அதுவும் சாருடைய அம்மாவின் அன்பையும், உபசரிப்பையும் பார்த்த பிறகு அது அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். (கொடுத்து வச்சவர் சார் நீங்க..) வாத்தியாரின் தீவிர ரசிகனான எங்கள் "வாத்தியார்" அவரைப் போலவே அம்மா என்ற மூன்றெழுத்துக்கு அவ்வளவு மரியாதையும் அன்பும் செய்பவர். அந்தப் பயணத்தின் போது  எனக்கு அவர் அன்பாய் ஒரு அன்பளிப்பைக் கொடுத்தார். அது "சரிதாயணம்" எனும் காவியம்.


                                        எனக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு கெட்ட பழக்கம். யாராவது ஜோக் சொன்னாலோ, அல்லது நகைச்சுவையாய் கமெண்ட் அடித்தாலோ சுமார் மூன்று நிமிடத்திற்கு  குறையாமல் சிரிப்பேன். மற்றவர்கள் எல்லோரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இந்தப் பழக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரி காலத்தில் நிறுத்தி விட்டேன். அதன் பிறகு இப்போது தலைவரின் "சரிதாயணம்"  படித்த போது  அந்தப் பழக்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியவில்லை. அதுவும் பொதுவாக நான் புத்தகம் வாசிப்பது இரவு பத்தரை மணிக்கு மேல் என்பதால் அதனுடைய பின்விளைவுகள் அதிகம். வீட்டார் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் அவ்வப்போது டெர்ரர் கொடுப்பதுண்டு.  நேற்று எதிர் வீட்டு ஆண்ட்டி  என் அம்மாவிடம் "என்ன நேத்து உங்க வீட்டுல நைட்டு பன்னெண்டு மணிக்கு ஒரே சிரிப்பு சத்தமா கேட்டுதே.. " என்றார்.. என் அம்மாவோ "ஓ..அதுவா, அது எங்க வீட்டுல இருக்கிற ஒரு ஆவி பண்ணின கலாட்டா" என்றாரே பார்க்கலாம்!



                                 அது சரி, டைட்டில்ல ME, LORD கணேஷ், & பாலகணேஷ் ன்னு போட்டிருக்கு.. ஆவி, பாலகணேஷ் ஒகே.. எங்க ரெண்டு பேருக்கு நடுவுல LORD கணேஷ் எங்கிருந்து வந்தாருன்னு தானே பார்க்கறீங்க? நான், பாலகணேஷ் சார் மற்றும் LORD கணேஷ் மூணு பேருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு.. என்னன்னு கண்டுபிடிச்சீங்கன்னா ரகசியா கிட்ட சாரி ரகசியமா என்கிட்டே சொல்லுங்க.. ஹிஹி..

(சரிதாயணம் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.. சரிதாயணம் படிக்க என்னைப் போல் நீங்களும் ஆவலாக இருந்தால் இங்கே கிளிக்கவும்.)

Thursday, August 15, 2013

விடியலில் பெற்றிருக்கலாமோ?



                                     சுதந்திரம் என்பது என்ன? சுதந்திரம் என்பது நினைத்த இடத்தில் எச்சில் துப்பவும், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவும், பச்சை விளக்கு ஒளிரும் முன்னரே வாகனத்தை முன்னெடுத்து செல்லவும், கதாநாயகிகளுக்கு கோவில் கட்டவும், கண்மூடித் தனமான விஷயங்களில் நம்பிக்கை கொள்வது மட்டும்தான் என்பது பலருடைய எண்ணம்.


\
                                       கருத்து சுதந்திரம் இல்லை என்று புலம்பிய வெள்ளையர் காலத்தில் கூட திரைப்படங்கள் தடை செய்யப்பட்ட சுவடுகளில்லை. ஆனால் இன்றோ ஏகப்பட்ட பொருட்செலவில் பல கலைஞர்களின் உழைப்பும் வீணாக ஒரு சில அதிகார வர்க்கத்தினரின் ஆணவப் போக்கினால் திரைப்படங்கள் வெளியாகாமல் தடை செய்யப்படுவது ஜனநாயக நாட்டில் நமக்கு தலை குனிய வைக்கும் செயல். இதுபோன்ற சூழலில் திருட்டு விசிடி போன்றவற்றை தவிர்த்து கலைஞர்களின் வாழ்வை காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகிறது.


                                  "நாட்டிற்கு நாம் என்ன செய்தோம்" என்பதையே முழுவதுமாய் மறந்துவிட்டு "நாடு நமக்கு என்ன செய்தது" என்பதை மட்டும் கேட்கிறோம். கட்ட வேண்டிய வரிக்கு, குறைவான வருமானம் மற்றும் போலிக் கணக்குகள் காட்டி வரி ஏய்ப்பு செய்வது நம்மில் பெரும்பாலோனோர் செய்கின்ற ஒன்று. ஒரு சில வெளிநாடுகளில் உள்ளது போல் கடுமையான சட்டங்கள்  இல்லாததும், தன்னுடைய கடமையை மறந்து விடுவதுமே காரணம். 



                                  அதுவும் இன்றைய தலைமுறைக்கு சுதந்திர தினமென்பது சல்யுட் அடித்துவிட்டு ஸ்வீட்  சாப்பிடுவது மட்டுமே கலாச்சாரமாகி விட்டது. என் சிறுவயதில் காந்தி, மருதுபாண்டியர் போன்ற படங்களாவது பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் வெளிவரும்  புதிய திரைப்படங்களை கண்டுகளிப்பது  வாடிக்கையாகிவிட்டது. சுதந்திரம் பெற்ற கதையை எடுத்துக் கூற இன்றைய தனிகுடித்தனம் விரும்பும் இளைய சமுதாயத்திற்கு பெரியோரின் துணை இல்லாததும் ஒரு காரணம்!


                                   

                           "நள்ளிரவில் ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு பயமில்லாமல் நடமாடும் சூழல் உருவாகும் நாள்தான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாய் அர்த்தம்" என்று அன்றே சொன்னார் மகாத்மா. இன்று வரை அது போன்ற ஒரு சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை என்பதே வேதனையான உண்மை. நள்ளிரவில் அல்ல, பட்டப்பகலில் ஒரு பெண் சுதந்திரமாக நடக்க முடியாத அவல நிலை இன்னும் நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையில் சுதந்திர தினம் கொண்டாடுவது வெறும் சம்பிரதாயமாகவே படுகிறது.



Wednesday, August 14, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! ( மனசுக்குள் மத்தாப்பு )-10


                       அந்தக் கவரைப் பார்த்ததும் அதிர்ச்சி. பிரித்துக்  கூட பார்க்காமல் அதை உள்ளே வைத்துவிட்டு கண்களை மூடி அமர்ந்தேன். ஹிருதயத்தின் ஓரத்தில் ஒரு வலி. பாடத்தில் மனம் லயிக்கவில்லை.  ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவள் உரிமை என்ற போதும், நிதர்சனத்தை புரிந்து கொள்ள மனம் ஒப்பவில்லை.  என்ன காரணத்துக்காக என்னை அவளுக்கு பிடிக்காமல் போனது? சரி காதலிக்காவிட்டாலும் பரவாயில்லை, நட்பாய் தொடரலாமே? அவ்வாறு செய்தால் நட்பு காதல் இரண்டையும் களங்கப் படுத்துவதாய் ஆகிவிடுமோ?  எனக்குள் தோன்றிய ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடையறியாமல் திணறிய போது கடைசி பாடவேளையும் முடிந்து மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள். 



                       பாஸ்கர் சிறிது நேரம் என்னை அழைத்துப் பார்த்துவிட்டு பின் அவனும் நகர்ந்தான். துக்கம் தொண்டையை அடைக்க அடுத்து என்ன செய்வது என்ற ஒரு பிடியும் கிட்டாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன்.  தென்றல் மட்டுமே துணைக்கிருக்க டெஸ்க்கில் தலை வைத்தபடி வெளியே அசைந்து கொண்டிருந்த மரத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். காதுக்குள் "ஆனந்த்" என்று ரமா அழைப்பது போன்ற உணர்வு. கொஞ்ச நேரம் அவளைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைத்து தியானம் செய்ய நினைத்தேன்.  மனம் ஒரு மங்கியாச்சே., மீண்டும் அவள் அழைப்பது போன்ற உணர்வு. புத்தகப் பையையும் அந்தக் கவரையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்ட போதுதான் கவனித்தேன். முன் பெஞ்சில் என்னையே பார்த்தபடி  ரமா அமர்ந்திருந்தாள்.

                          அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் பொங்கிய ஆவலை அடக்கிக் கொண்டு அங்கிருந்து நகர முயல, "ஹலோ, நான் உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்." என்றாள். நான் ஒன்றும் பேசாமல் அங்கேயே நிற்க, அவள் என் முன் வந்து நின்று "பாயாசம் எப்படி இருந்தது?" எனவும் நான் கேள்விக்குறி, ஆச்சர்யக் குறி இரண்டையும் முகத்தில் வைத்தபடி "என்ன பாயாசம்?" என்றேன். " இன்னைக்கு நானே செய்து கொண்டு வந்த பாயாசத்த கொடுக்கலாம்னு நினைச்சப்ப தான் ஆப்டர்நூன் நீங்க ஏதோ தனியா பேசணும்னு சொல்லி சங்கீதாவை வெளியே அனுப்பீட்டீங்க. என் லஞ்ச் பேக்கும் அவகிட்ட இருந்துச்சு. நான் போயி அவகிட்ட வாங்கிட்டு வர்றதுக்குள்ள ஆள் மிஸ்ஸிங். அதான் பாஸ்கர் கிட்ட கொடுத்தேன். அவர் கொடுக்கலையா?" என்றபடி என் கையிலிருந்த கவரை வாங்கி அதிலிருந்து ஒரு டிபன் பாக்சை திறந்து ஒரு ஸ்பூனையும் நீட்டினாள்.

                          "அதிருக்கட்டும், நான் உன்கிட்ட சொன்ன விஷயத்துக்கு பதில் என்ன?" என்றேன். ஓரிரு நிமிட மௌனத்துக்குப் பின் "நீங்க சாப்பிடுங்க.. அப்பத்தான் சொல்லுவேன்." என்றவள் கூற இரண்டு ஸ்பூன் பாயாசத்தை குடித்துவிட்டு "நல்லா இருக்கு. இப்ப சொல்லு." என்றவாறு அவள் முகத்தையே நோக்கினேன். எப்போதும் போல் மெல்லிய புன்னகையுடன் "அன்னைக்கு நீங்க என்னை நாமக்கல் கூட்டிப் போனீங்களே, ஞாபகம் இருக்கா.. அன்னைக்கு என்னன்னு தெரியல, மனசு பூரா அவ்வளவு சந்தோசம். அதுக்கப்புறம் தினமும் ஈவனிங் வீட்டுக்கு போனா உங்களைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பேன். லாஸ்ட் சண்டே சங்கீதா வீட்டுக்கு வந்தபோதும் இப்படியே பேசிட்டு இருக்க அவ என்கிட்ட நீ ஆனந்தை லவ் பண்றியான்னு கேட்டா. அப்போ எனக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியல. ஆனா இன்னைக்கு நீங்க சொன்னப்போ ரொம்ப சந்தோசமா இருந்தது. அதோட வெட்கமும்.. அதான் அங்கிருந்து போயிட்டேன்" இதைச் சொல்லும்போது கருப்பான அவள் கன்னங்கள் மெலிதாய் சிவந்திருந்தது. 




                             அவள் சொல்ல சொல்ல என் மனதுக்குள் கலர் கலராய் மத்தாப்புகள் வெடித்தன. "அப்ப உனக்கும் என்னை பிடிச்சிருக்கா?" ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அவளிடம் கேட்க "ம்ம்.. பிடிச்சிருக்கு..ஆனா.." என்று அழகாய் ஓடத் துவங்கிய ஆற்றின் குறுக்கே ஒரு அணையை போட்டாள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அவள் இதழ்களையே நோக்கியபடி காத்திருந்தேன்.


தொடரும்..




Tuesday, August 13, 2013

அயாளும் ஞானும் தம்மில் ( மலையாளம்) - திரை விமர்சனம்..

                              உணர்வுப் பூர்வமான படங்களை எடுப்பதில் மலையாள திரையுலகம் எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் படம்..


                                மகத்துவம் மிகுந்த மருத்துவ துறையின் முக்கியத்துவத்தை உணராத இரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவர்களில் ஒருவன் ஒரு மலைப்பிரதேசத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரியும்படி சந்தர்ப்பம் வருகிறது. அங்கே அவன் சந்திக்கும் ஒரு நேர்மையான மருத்துவர், அவருடைய வழிகாட்டுதலின் மூலம் பல பாடங்கள் படிக்கும் நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில் காவல் அதிகாரியுடன் ஏற்படும் சிறு உரசலினால் எப்படி அவன் வாழ்க்கையே தடம் மாறிப் போகிறது என்பது தான் கதை..


                                  மலையாள பட உலகின் "யங் சூப்பர் ஸ்டார்" ப்ரித்விராஜ் நாயகனாக நடித்திருக்கும் படம். நடிப்பில் நன்றாக மெருகேரியிருப்பது நன்றாக தெரிகிறது.. காதல் காட்சிகளிலும், கலாபவன் மணியுடன் இவர் மோதும் உணர்வுப் பூர்வமான சண்டைக் காட்சிகளிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரதாப் போத்தன் ப்ரித்விக்கு வழிகாட்டும் குரு. தமிழ் படங்களில் இவரை சரியாக பயன்படுத்தவில்லையோ என்ற சந்தேகம் இந்தப் படம் பார்க்கும்போது வருகிறது..



                                   நரேன், நல்ல நண்பனாக, தோள் கொடுக்கும் தோழனாக வருகிறார். மருத்துவ கல்லூரியில் இவரும் ப்ரித்வியும் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படி உள்ளது. சம்வ்ருதா நாயகி எனினும் இவருக்கு அதிகம் நடிக்க வாய்ப்பில்லை.. ஆயினும் வரும் ஒன்றிரண்டு காட்சிகளில் நிறைவாய் செய்திருக்கிறார். ரீமா கல்லிங்கல் மற்றும் ரம்யா நம்பீசன் வித்தியாசமான அதே சமயம் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.


                                   இயக்குனர் லால் ஜோஸின்  திரைப்படங்கள் பொதுவாக உணர்ச்சிமயமாக இருக்கும். மேலும் வழக்கமான திரைப்படங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும். இந்தப் படமும் அதையே  பறைசாற்றுகிறது. ஒளஸேபச்சன் இசையில்   ஒன்றிரண்டு பாடல்கள்  சுமார் ரகம். நான் ரெண்டு முறை பார்த்தேன்.. இன்னும் போர் அடிக்கலே..


65 / 100


Tuesday, August 6, 2013

கன்னியும் கணினியும்...

               
                                அது ஒரு அரசு மேல் நிலைப் பள்ளி. பள்ளியின் முன்பக்கச் சுவரில் ஏனோ தானோவென்று சுண்ணாம்பு அடிக்கப் பட்டிருக்க,  உட்புற சுவர்கள் என்.சி.சி மாணவர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டிருக்க,  கொடி மரத்தில் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்க,  எறும்புகளின் அணி வரிசை போல் மாணவர்களும் மாணவிகளும் குழுமியிருக்க, சூரியனின் வெளிச்சத்தை ஒட்டுமொத்த மாணவர்களின் மீது பிரதிபலிக்கும் வண்ணம் சிரத்தைக் கொண்ட தலைமையாசிரியர் உரையாற்ற ஆரம்பித்தார் . "ஸ்டுடண்ட்ஸ், இந்த வருஷத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்குற மாணவர்கள்ல இருந்து சிறந்த மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுத் தரப்படும் ". இந்த அறிவிப்பைக் கேட்டதும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.

                               முதல் பாடவேளை ஆசிரியர் வரும்முன் அருகில் அமர்ந்திருந்த முருகேசன் என்னிடம் "கம்ப்யூட்டர்னா என்ன டா " என்றான். "இந்தக் கேள்விய என்னப் பாத்தது ஏண்டா கேட்ட" என்பதுபோல் முதலில் அவனைப் பார்த்தபோதும் நம்மையும் மதித்து ஒருத்தன் கேக்குறானே என்பதால் அவனுக்கு பதில் சொல்ல ஆயத்தமானேன். என் அண்ணன் இன்ஜினியர் என்பதால் கம்ப்யுட்டரைப் பற்றி முன்னரே கொஞ்சம் சொல்லி இருந்தார். "கம்ப்யுட்டர்ங்கறது நாம செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமா அதுவே செஞ்சிடுமாம்." என்று நான் சொன்னதும், "அப்ப அது நம்ம ஹோம்வொர்க்கெல்லாம் செஞ்சு கொடுக்குமா?" என்றான்.  அவன் கேட்ட கேள்விக்கு நான்  "ஞே" என்று விழித்தபடி இருக்க ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

                                   "ஸ்டுடண்ட்ஸ், ஹெச்.எம் சொன்ன மாதிரி இந்த வருஷத்துக்கு உங்க கிளாசிலிருந்து முதல் மூணு ரேங்க் வாங்கின மாணவர்கள் மூணு பேர செலக்ட் பண்ணியிருக்கோம்." என்று கூறி என்னையும் இரண்டாம் மூன்றாமிடம் பிடித்த இரு மாணவிகளையும் அழைத்தார். எங்கள் மூவரையும் கம்ப்யுட்டர் ரூம் சென்று மோகன் மாஸ்டரைப் பார்க்கும்படி பணித்தார். அந்த பள்ளியின் வழக்கப்படி நான் முன்னே செல்ல, இரண்டடி தொலைவில் அந்த இரு தாவணித் தேவதைகளும் தொடர, கம்ப்யுட்டர் ரூமை அடைந்தோம். பாதணிகளை வெளியே விடுமாறு போட்டிருந்த வாசகமே அந்நியமாய் தெரிந்தது. வெளியே விட்டுவிட்டு கண்ணாடிக் கதவைத் திறந்தபோது சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. அறையின் கூரை தெர்மாக்கோல் கொண்டு மூடியிருக்க அறையின் ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒற்றை ரோஜாவாய் வீற்றிருந்தது "கம்ப்யுட்டர்".

                                     "ஐ...கம்ப்யுட்டர்" என்று தன் குலோப் ஜாமூன் விழிகள் பிதுங்க ஆச்சர்யப்பட்ட சுமதி, வசீகரமான முகத்தில் மஞ்சள் பற்களுடன் ஒடிசலாய் நின்ற பிரேமலதா, உள்ளுக்குள் ஆவல் தெறித்த போதும் அமைதியாய் நின்ற நான், மூவரையும் இருக்கையில் அமர சொல்லிவிட்டு, "கம்ப்யுட்டரை  தமிழில் எப்படி அழைப்போம். இந்த கேள்விக்கு பதில் சொல்றவங்க தான் அத மொதல்ல யூஸ் பண்ணலாம்" என்றார் மோகன் மாஸ்டர். கேள்வி கேட்ட மறுநிமிடம் முந்திக் கொண்டு பதில் சொல்ல எண்ணி "கன்னி ஸார்" என்றேன்..ஓரிரு நொடிகளுள் நான் சொன்ன தவறான பதிலை எண்ணி நாக்கை கடிக்க, இந்த கேப்பில் உள்ளே புயலாய் புகுந்த சுமதி "கணினி சார்" எனவும் "தமிழாசிரியர் பையனுக்கே தடுமாற்றமா?" என்றபடி என் தலையில் ஒரு குட்டு வைத்தார் மோகன் மாஸ்டர்.
                             
                                            அவசரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் சுமதி இருக்கையில் அமர்ந்தாள். சி.பி.யு., மானிட்டர், கீ-போர்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திவிட்டு கணினியை ஆன் செய்தார். சிறிய சைஸ் டயனோரா டிவி போலிருந்த மானிட்டரிலிருந்து பச்சை நிறத்தில் எழுத்துகள் தோன்றின. டாஸ் பற்றி சொல்லிக் கொடுத்துவிட்டு எங்களை நோக்கி "'எதாவது டவுட் இருக்கா?" என்றார். பிரேமலதாவும், சுமதியும் இல்லையென்று தலையசைக்க, நான் மட்டும் கையை உயர்த்தினேன். "குட், என்ன டவுட் கேளுப்பா!" என்று மோகன் மாஸ்டர் கூற நான் அவரிடம் கேட்டேன் "இது எங்க ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு குடுக்குமா சார்?"
                             
***********************

                                ராஜி அக்கா மற்றும் எழில் மேடத்தின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து இந்த தொடர்பதிவ எழுத ஆரம்பிச்சேன்.. அது பழைய நினைவுகள் பலதையும் கிண்டி விட்டுடுச்சு.. கொஞ்சம் கை சரியாகட்டும்..சீக்கிரமே இன்னொரு தொடரை எதிர்பார்க்கலாம்.. (இதுக்குத்தான் சொல்றது சும்மா போற கொசுவ பார்த்து கொக்காணி காட்டக் கூடாதுன்னு) சரி என் கடமைய முடிக்க இன்னும் அஞ்சு பேர கோர்த்து விடணுமே.. இதோ.. மொதோ மொதோ கவித எழுதின அனுபவம் பத்தி எழுத அஞ்சு பேர கூப்பிடறேன்.

                ஸ்கூல்பையன்  

                                  பிறாண்ட வாங்க பதிவுலக "குட்டிப் புலிகளா".. ஒருத்தரும் நிம்மதியா தூங்கக் கூடாது..  

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...