Wednesday, February 27, 2013

கஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்!! ( A Good Day to Die Hard)

                                

                                 "கஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்!! " - பேரை கேக்கும் போதே அதிருதில்ல.. படமும் அதே அதிரடியா இருக்குங்க.. "டை ஹார்ட்" திரைப்படத்தின் என் போன்ற  டை ஹார்ட் விசிறிகளுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமைந்தது. என்ன, முதல் இரண்டு பாகங்களில் இருந்த நம்பகத்தன்மை இல்லாதது ஒரு குறை என்றாலும் படத்தின் பிரம்மாண்டம் அதை போக்குகிறது..



                                   ஆக்க்ஷன்  படம் என்று பார்க்க வருபவர்களுக்கு முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை அதிரடி ஆக்க்ஷன் அட்டகாசம். இங்கே அறுபதுக்கு மேல் ஆனாலும் நாம் ரஜினி கமலை கொண்டாடுவது போல் ஹாலிவுட்டில்  புருஸ் வில்லிசை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.. அர்னால்டு, சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் போன்றோரது உடல்வாகோ உயரமோ இல்லாவிட்டாலும் தன் நடிப்பினால் எல்லோரையும் நம்ப வைக்கிறார் மனிதர். (ஆனா இருபது அடுக்கு மாடியிலிருந்து கீழே விழுந்த போதும், அசால்டாக மேலே கிடக்கும் குப்பையை தட்டிவிட்டு அடுத்த சண்டைக்கு தயாராவது கொஞ்சம் டூ மச்..)



                                     சரி கதைக்கு வருவோம், பெருசா கதைன்னு ஒன்னும் இல்லே.. நியுயார்க் போலீசான ஜான் மெக்லென் (புருஸ் வில்லிஸ்) தன மகன் ரஷ்யாவில் ஆபத்தில் இருப்பதை அறிந்து காப்பாற்ற மாஸ்கோ  வருகிறார். அவர் மகன் ஒரு சிறைக் கைதியை காப்பாற்றி கூட்டி செல்லும் போது வில்லன் கும்பல் அவரை கொல்ல  வர அவர் மாட்டிக் கொள்ளும் தருணத்தில் ஜானின் அசுர ஸ்டன்ட்களினால் இருவரும் காப்பற்றப் படுகின்றனர். அந்த கைதியிடமிருந்து ஒரு பைலை பெற முயல்கிறார் ஜானின் மகன் ஜேக். கைதியோ தன மகளை காப்பாற்றும்படி சொல்கிறார். அதன்படி காப்பாற்ற செல்லும் ஜேக், ஜான் மற்றும் கைதி மூவரும் வில்லனிடம் மாட்டிக் கொள்கின்றனர். காரணம் அந்த கைதியின் மகளும் வில்லனின் கும்பலில் இருக்கிறார்.. அவர்களிடமிருந்து எப்படி தப்பித்து வந்து உண்மையை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை..



                                     டால்பி எட்மொஸ் சவுண்ட் தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இசை நம் காதைப் பிளக்கிறது. குறிப்பாக முதல் சேஸிங் காட்சியில் ரீ-ரெகார்டிங் அசத்தல்.. நகைச்சுவை, ஆக்க்ஷன் , செண்டிமெண்ட் என எல்லா மசாலாவும் நிறைந்த இந்தப் படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் என்பதில் ஐயமில்லை.

50 / 100



Tuesday, February 26, 2013

நம்ம தல தோனிக்கு விசில் போடு..


                இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  முதல் டெஸ்டில் வெற்றி பெற உதவியது பலராலும் பலவாறாக (சச்சினுக்கு பிறகு ) விமர்சிக்கப்பட்ட நம்ம தல தோனி தாங்க.. என்ன அடி.. வந்த மொத பால்ல இருந்து விளாசினான் பாருங்க..! கண்கொள்ளாக் காட்சி..



                ஆரம்பத்துல இவன் ஏன் இப்படி அடிச்சு விளையாடறான்னு சொன்ன கமேன்ட்டேடர்களும் அப்புறம் ரசிக்க ஆரம்பிச்சுடாங்க. பாவம் மைக்கேல் கிளார்க், அவனும் ரொம்ப தைரியத்தோட ஒரே ஒரு ஸ்பின்னரோட  வந்துட்டு, கைப்புள்ள கணக்கா "விட்டுடு, அழுதுடுவேன்" ன்னு சொல்ற மாதிரியே பார்த்துட்டு இருந்தான்.. இன்னொரு பக்கம் ஒத்த கருவேப்பில்லை நாதன் லயன், வந்தப்பல்லாம் சிக்சும் போரும் அடிச்சு அவனையும் உண்டு இல்லேன்னு பண்ணீட்டான் நம்ம தல..



               மொத  நாள் ஆட்டத்துக்கப்புறம்  நம்ம ராமனோட தம்பி,  தோனிய பத்தி தாறுமாறா சொல்லிவைக்க நம்ம ஆளுக்கு வந்துச்சே கோபம், இந்தா வாங்கிக்கடான்னு சொல்லி ஒன்னுக்கு ரெண்டு சதமா  அடிச்சு பட்டைய  கிளப்பீட்டான்.. சென்னை இப்போ சொந்த ஊர் மாதிரி ஆயிட்டதுனால, செம்ம காஷுவலா விளையாடினான்.. நூறு, இருநூறு அடிச்சப்பவும் ஹெல்மட் கூட கழட்டாம அமைதியா பேட்ட தூக்கி காண்பிச்சான்.. மிஸ்டர் கூல்னு நிருபிச்சுட்டான்..


              இதே மேட்சுல 12 விக்கெட் எடுத்த அஷ்வின், நூறு அடிச்ச கோஹ்லி , சிறப்பா ஆடின சச்சின், கிளார்க், வியக்கும் வேகத்துடன் பந்து வீசின பேட்டின்சன், இப்படி எல்லாரையும் ஓரம்கட்டிட்டு இந்த வெற்றிக்கு வித்திட்ட நம்ம தோனிதான் இந்தியாவை கரைசேர்த்த தோணி!!


Monday, February 25, 2013

ஆஸ்கார் அவார்ட் (Academy Awards - 2013)



                         ஆண்டு தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் திரைப்படங்களுக்கான மிக உயரிய விருது என அமெரிக்கர்கள் கருதும் ஆஸ்கர் விருதுகள் இந்த 2013-ம் வருடம் இன்று பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் என 24 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள் வழங்கப்படுவது இது 
85 வது முறையாகும்..இந்த  வருடத்தின் ஆஸ்கர் விருது வென்ற சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை காண்போம்.



                                  சிறந்த படம்  ARGO (ஆர்கோ) - பென் அப்லக் நடித்து இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்றது. வசூலில் பெரிய சாதனை புரியாவிட்டாலும் ஹாலிவுட்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக இடம்பிடித்தது என கூறலாம்.



                                 சிறந்த நடிகர் டேனியல் டே லூயிஸ் -  இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தயாரிப்பில் வெளிவந்த "லிங்கன்" திரைப்படத்திற்கென இந்த விருது வழங்கப்பட்டது..


                                 சிறந்த நடிகை- ஜெனிபர் லாரன்ஸ் - ஹாலிவுட்டின் புதிய கனவுக்கன்னி ஜெனிபர் லாரன்ஸ் சில்வர் லைனிங்க்ஸ் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.


                               
                                 சிறந்த இயக்குனர் - ஏங் லீ  - இந்திய கலாசாரத்தை மையமாக கொண்டு வெளிவந்த லைப் ஆப் பை திரைப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.



                                 லே மிஸ்ரபில் -  சென்ற வருடம் என் மனம் கவர்ந்த இந்த திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகை விருதை அன்னே ஹேத்தவே பெற்றார். மேலும் சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இந்த படம் பெற்றது.




                            இன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..






Saturday, February 23, 2013

ஆதி பகவன் - திரை விமர்சனம்


                          பருத்திவீரன், ராம் போன்ற படங்களை எடுத்த அமீரின் திரைப்படம் இது என்பதை நிச்சயம் நம்ப முடியவில்லை.. ஆக்க்ஷன் ஹீரோ இமேஜ் இல்லாமல் நன்றாக நடித்துக் கொண்டிருந்த "ஜெயம்" ரவிக்கும் ஆக்க்ஷனில் கலக்கும் ஆசை வந்துவிட்டது போலும். விளைவு இந்த ஆதி-பகவன்..


                            கணவனின் தவறான தொழில் காரணமாக மகன் ரவி மற்றும் மகளுடன் தாய்லாந்திற்கு வருகிறார் சுதா சந்திரன். வந்த இடத்தில் தவறான நட்புகளால் பெண் வாணிபம், கள்ளக் கடத்தல் பின் கொலைக் குற்றங்கள் என குறுகிய காலத்தில் தாதாவாகிறார் ரவி.  இவரைக் கொல்லஆந்திராவிலும், தாய்லாந்திலும் பலர் முயற்சிக்கின்றனர். இவரது தவறான தொழில் காரணமாக தாயும் தங்கையும் பிரிந்து போய்விட தனிமையில் வாடுகிறார்.


                            அப்போது முன்பு இவரால் காப்பற்றப்பட்ட பெண் (நீது சந்திரா) இவருக்கு ஆதரவாக இருக்கிறார். மேலும் ஒரு கும்பல் ரவியை கொல்ல  முயல்கையில் அவரைக் காப்பாற்றி திருத்த முயற்சிக்கிறார் நீத்து. இதற்கிடையில் நீத்துவின் அப்பா உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை பார்க்க மும்பை வரும் ரவிக்கும் நீத்துவுக்கும் அங்கே ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது.


                             ஆக்க்ஷன் படத்தின் இலக்கணமே திரைக்கதையின் வேகம் தான். திரைக்கதை புல் மீல்ஸ் சாப்பிட்ட எருமை மாட்டை போல் மெதுவாக செல்வதால் ரசிகர்கள் பொறுமை இழக்கிறார்கள். யுவனின் இசையில் பாடல்கள் அருமை என்றாலும் இடைவெளி இல்லாமல் வரும் பாடல்களும் எருமை மேல் பாரம் ஏற்றியது போல் ஆகிறது. தாய்லாந்தின் தலைசிறந்த தாதா லோக்கல் பெண் ரவுடியிடம் அடிமேல் அடி வாங்குவது அவர் கேரக்டரை பலவீனப் படுத்துகிறது.


                             முதல் முறையாக இரு வேடங்களில் ரவி.. ஆதியாக வரும்போது நன்றாக இருக்கிறார். பகவானின் உடல்மொழி அவ்வளவாக ஒத்துப் போகவில்லை என்பது என் கருத்து. இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்டுவதற்காக உழைத்திருப்பது தெரிகிறது.நீதுசந்திரா கலக்கல் நடிப்பு. மேக்கப் இல்லாமலும் அழகாக தெரிகிறார்.  கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவாளர் அசத்தியிருக்கிறார். அமீரின் டச் இல்லாவிட்டாலும் சில இடங்களில் காட்சியமைப்புகள் சிறப்பாக உள்ளது.மீசைய வளைச்சா மட்டும் சண்டியர் ஆக முடியுமா?

42 / 100

Friday, February 22, 2013

அது..




ரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை 
                     மனதை மாற்றுகிறாய்..!



நான் முன்னோக்கி செல்லலாமா வேண்டாமா 
     என்பதையும் நீயே தீர்மானிக்கிறாய்..!



சில சமயம் சம்மதிக்கிறாய், 
சில சமயம் தடை விதிக்கிறாய்..!



னக்காக காத்து நிற்பவர்களை 
உன்னை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறாய்..!



..


..


..
, கடமை தவறாத ட்ராபிக் லைட்டே, உனக்கு ஒரு சல்யூட்..! 



Monday, February 18, 2013

பயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராமம் )


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 7;  தொலைவு: 9.

டச்சு வில்லேஜ்  (அமெரிக்கா)
( ஹாலண்ட் )

                             ட்யுலிப்  கண்காட்சியைப் பற்றி சொல்லிவிட்டு அவற்றை வளர்க்கும் டச்சு மக்களைப் பற்றியும், டச்சு கிராமங்களைப் பற்றியும் கூறாவிட்டால் முறையாகாது.  ஒவ்வொரு ட்யுலிப்  தோட்டத்தின் அருகேயும் ஒரு டச்சு கிராமத்தின் மாதிரி வடிவமைக்கப் பட்டிருக்கும்.. அவர்கள் வசித்த வீடுகள், வாழ்க்கை முறை, அவர்களின் தொழில் இப்படி பல கலாசாரப் பகிர்வுகள்.. அவற்றில் சில உங்களுக்காக இதோ இங்கே..



டச்சு மக்களின் வீடுகள் 


டச்சு மீனவருடன் ஆவி


மீனவ நண்பர்களுக்கு மீன் விற்பனையில் உதவும் ஆவி 


டச்சு குதிரை வண்டிக்காரர் 


பழ வியாபாரிகள் 


துணி நெய்பவர் 


எடை பார்க்கும் டச்சுப் பெண்மணி 


                            டச்சு மக்களின் வாழ்க்கை முறையைப்  பார்த்த போது  நம் இந்திய மக்களின் கலாசாரத்தை ஒத்து இருப்பதை உணர்ந்தேன்.. மிச்சிகன் மாநிலத்தின் மற்றொரு சிறப்பு ஆங்காங்கே காணப்படும் "Sand Dunes" எனப்படும் மணற்குன்றுகள். இவை பார்ப்பதற்கு அழகாகவும், யாரோ செய்து வைத்தது போலவும் காட்சியளிக்கிறது..



                          அடுத்த பதிவில் ஒரு த்ரில் அனுபவத்தோடு உங்களை சந்திக்கிறேன்..


Saturday, February 16, 2013

காதல் சொல்ல-வா!!



ரு இதழ் விரித்து,
இதயத்தை உணர்த்து,
மௌனம் வேண்டாம்  பெண்ணே!

ண்களில் காதல்,
உதட்டினில் பொய்கள்,
உண்மையை உரைத்திடு கண்ணே!

நிஜம் நீ தொலைவில்,
நிழலாய் நினைவுகள்,
தினம் தினம் வாட்டுது அன்பே!

கூச்சங்கள் விடுத்து,
தலைக்கனம் தவிர்த்து,
காதலை சொல்லிடு நெஞ்சே!!


Saturday, February 9, 2013

பயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெஸ்டிவல் )


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 7;  தொலைவு: 8.

ட்யுலிப்  பெஸ்டிவல்  (அமெரிக்கா)
( ஹாலண்ட் )





                      அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள ஹாலண்ட் எனும் இடத்தில் ஆண்டு தோறும் ட்யுலிப்  கண்காட்சி நடப்பது வழக்கம். கண்காட்சி என்று சொல்வதை விட திருவிழா என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். சிகாகோவிலிருந்து சுமார் நான்கு மணி நேர தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரின் எல்லையை அடைந்தவுடனே வண்ண வண்ண ட்யுலிப்  மலர்களின் கண்கவரும் அணிவகுப்பு நம்மை  வரவேற்கிறது..


                         அந்நியன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நாயகனும் நாயகியும் பூக்களின் மத்தியில் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
அதே போல திரும்பிய திசையெல்லாம் நமக்கு காணக் கிடைப்பது பல வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த ட்யுலிப்  மலர்களே.. பூக்களை ரசிக்காத மனிதர்களின் மனத்தையும் கொள்ளையடிக்கும் ஓர் பிரமாண்டமான அழகுப் பெட்டகம்.



                          ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்திலோ அல்லது இரண்டாவது வாரத்திலோ இந்த கண்காட்சி நடைபெறும். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சியை காண வருவர். குழந்தைகளும் ரசித்து மகிழும் இடமாதலால் பெரும்பாலும் குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பர்.


                          வருடத்தில் ஒரு முறை வரும் இந்த கண்காட்சிக்கு பிரத்தியேகமாக பல ஏக்கர் பரப்பளவில் ட்யுலிப்  மலர்களை வளர்ப்பர். இதற்கென்றே பல தோட்டங்கள் இருக்கின்றன.. இங்கு ட்யுலிப் மலர்களின் கண்காட்சி மட்டுமல்லாது ட்யுலிப் பல்ப் என்று சொல்லப்படும் ட்யுலிப் கன்றுகளையும் (?!!) விற்பனை செய்கின்றனர்.  ஓவ்வொரு வண்ணப் பூக்களுக்கு நடுவிலும் ஒரு எண் பதிக்கப் பட்டிருக்கும். கண்காட்சிக்கு வரும் மக்கள் தமக்கு பிடித்த பூவின் எண்களைக்  குறித்துக் கொண்டு வந்து விற்பனை நிலையத்தில் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். (ஒரு ஜோடி பல்பின் விலை சுமார் பத்து டாலரிலிருந்து ரகத்தைப் பொறுத்து ஐம்பது டாலர் வரை விற்கப்படுகிறது. )


                          இந்த ஆண்டு கண்காட்சியில் பல்புகளை வாங்கி வந்து நட்டு வைத்தால் அடுத்த வருடம் பூக்கள் பூக்கும். இந்த ட்யுலிப்  மலர்கள் பெரின்னியல் (perennial ) வகையைச் சேர்ந்தது. அதாவது ஆண்டு முழுவதும் மலரக் கூடியவை.. ஆனாலும் இவற்றின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளே..



                          இங்கு ட்யுலிப்  மலர்கள் தான் சிறப்பு என்றாலும், பல வண்ண ரோஜாக்களும், மற்ற மலர்களும் சொற்ப அளவில் காணக் கிடைக்கும். கிட்டத்தட்ட எல்லா வண்ணங்களிலும் பூத்துக் குலுங்கும் இந்த மலர்களைக் காண்பது கண்களுக்கு குளிர்ச்சியும்  அதே சமயம் மனதிற்கு இன்பமும் தருவதாகும். ஊட்டியில் பூக்கள் கண்காட்சிகளைக் கண்டிருந்தாலும் அவற்றை விட பல மடங்கு பரப்பளவில் பூக்களைக் கண்டபோது என் மனம் கொள்ளை போனதென்னவோ உண்மை..!


Wednesday, February 6, 2013

உலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013




             
                                     உலக நுண்ணறிவாளர் தினம் தொடங்கி இன்றோடு பத்து ஆண்டுகளாகிறது. இன்று ( பிப்ரவரி 6 ) பிறந்த நாள் காணும் 'கோவை நேரம்' ஜீவா, மனோஜ் மற்றும் இன்று பிறந்த எல்லா நுண்ணறிவாளர்களுக்கும் ( Born  Intelligents ) என் வாழ்த்துகள்.

                                      உலக நுண்ணறிவாளர் தினம் பற்றி அறியாதவர்களுக்கு - சுமார் அறுபது  வருடங்களுக்கு முன் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தம் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். அதே போல கோவை ஆவியும் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் ஆறாம் நாள் தம் பிறந்த நாளை உலக நுண்ணறிவாளர் தினமாக அறிவித்து இருந்தார்.

                                      தடைகள் பல தாண்டி, தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுக்க நாளை வருகிறார் தலைவர்..!

விஸ்வரூபம் - திரை விமர்சனம்


                               
              

Tuesday, February 5, 2013

கோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..


                          கடந்த பிப்- 3 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை  கோவைப் பதிவர்களின்  புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருமதி. அகிலா அவர்களின் " சின்ன சின்ன சிதறல்கள்" , திருமதி. சரளா அவர்களின் " மௌனத்தின் இரைச்சல்" மற்றும் திரு.ஜீவானந்தத்தின் " கோவை நேரம்" ஆகிய புத்தகங்கள் வெளியிடடப்பட்டது. விழாவின் துளிகள் இங்கே..








                          

Sunday, February 3, 2013

ஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் துணீஸ்)

      

                           தலைப்பை ஒரு முறை கூட நல்லா படிங்க. ஆமாங்க இது ஒரு காலத்துல மான்செஸ்டர் ஆப் தமிழ்நாடா இருந்த கோவை நகரத்தில வாழ்ந்த ஒரு துணி வியாபாரிய பற்றின கதை. ( இந்த கதைக்கும் மெர்சண்ட்  ஆப் வெனிஸ் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆதலால் இந்த கதைக்கு உரிமை கோரி யாரும் கோர்ட்டுல கேஸ் போடமாட்டங்கன்னு நம்புறேன்)


                                      (மெர்சண்ட் ஆப் துணீஸ்)



                            செந்திலோட அப்பா வங்கியில் வேலை பார்த்த காரணத்தால் அடிக்கடி மாற்றலாகி வேறு ஊர் செல்வது வாடிக்கை. அப்போது செந்திலும் தன் பள்ளிகளை மற்ற வேண்டி இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்த எல்லா பள்ளிகளிலேயும், எல்லா தேர்வுகளிலேயும் முதல் மாணவனா வந்த செந்தில் ஆறாம் வகுப்புக்கு கோவைல செயின்ட் மைக்கேல்ஸ் ங்கற  பள்ளில புதுசா சேர்ந்தான்.

                               சிறு வயது முதலே செஸ்,  கேரம் போன்ற உள் அரங்க விளையாட்டுகள் மட்டுமே விளையாடி பழகிய செந்திலுக்கு இந்தப் பள்ளி மிகவும் புதிதாக இருந்தது. புட்பால்,  கிரிக்கெட். பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளை முதன்  முதலாக பார்த்ததும் புளங்காகிதமடைந்தான். ஆனாலும் புதிய சேர்க்கை என்பதால் மற்ற மாணவர்கள் இவனை விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆசிரியரின் கட்டாயத்தால்  பின் சேர்த்துக் கொண்டாலும் அவனுக்கு முழுமையான பணிகள் ஏதும் கொடுக்க மறுத்தனர்.

                               பேஸ்கட் பால் விளையாட உயரம் தேவை என்பதால் அவனுக்கு பந்து பொறுக்கிப் போடும் பணி கொடுக்கப் பட்டது. புட்பால் விளையாடும் போது அசிஸ்டென்ட் கோலி பணி கொடுக்கப்பட்டது. அதாவது கோலி பிடிக்கத் தவறும் பந்துகள் கோட்டைத் தாண்டி விழும் போது பந்துகளை மீண்டும் மைதானத்தினுள் அனுப்ப வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் அவனுக்கு  விக்கெட்கீப்பர் பணி தரப்பட்டது. (ஸ்டம்புகள் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் என்பது வேறு விஷயம்)

                                ஒருநாள் வழக்கம்போல் ஒரு புட்பால் மேட்ச் நடந்த போது தன் அசிஸ்டன்ட் கோலி பணியை செய்து கொண்டிருந்தான். அப்போது கோல் போஸ்டில் பட்டுத் தெறித்த பந்து மைதானத்தை விட்டு வேகமாக வெளியே சென்று கொண்டிருந்தது. விடாமல் துரத்திய செந்தில் நெடுந்தொலைவு சென்ற பந்தை பிடித்து மைதானத்தை நோக்கி எட்டி உதைத்தான். பின் தன் பழைய இடத்திற்கு செல்ல எத்தனித்தவன் அருகில் ஏதோ சப்தம் கேட்டு நின்றான். சப்தம் வந்த இடத்தை நோக்கி சென்றான் செந்தில்.

                                 அங்கே "தடக்தடக்" என்ற ஒலியுடன் அவன் முன் எப்போதும் கண்டிராத ஒரு இயந்திரத்தில் ஒருவர் இடக்கையை எதோ ஒரு மணியை அடிப்பது போல் மேலும் கீழும் அசைக்க, வலக்கையை இடமும் வலமுமாக  நகர்த்திக் கொண்டிருந்தார். அவர் கால்கள் ஒரு கட்டையை விடாது அழுத்திக் கொண்டிருந்தது. அவரது செயல் மிக வேகமாகவும், அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள நினைத்து அவர் அருகில் சென்றான். அவனைக் கண்டவுடன் அவர் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து யாரென்று வினவினார். செந்திலும் தன் பெயரையும் தான் எல்லா விளையாட்டிலும் புறக்கணிக்கப்பட்ட கதைகளையும் அவரிடம் கூறி மேலும் அவர் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டி வந்ததாக கூறினான்.

                                 அதற்கு அவர் அவனை அருகில் அழைத்து வாஞ்சையுடன் தலை கோதிவிட்டு பின் அவனிடம் கூறினார் " இதுதான் வீவிங் மெஷின். இதுல தான் துணி நெய்வாங்க" என்று சொல்லி அவனை அருகில் இருத்தி அவனுக்கு அதை எப்படி நெய்வது என்று சொல்லிக் கொடுத்தார். முதல் அரை மணி நேரம் இரு கைகளையும் கால்களையும் ஒருங்கிணைப்பது சிரமமாக இருந்தாலும், பின் அதை லாவகமாக செய்யும் நுட்பத்தை கற்றுக் கொண்டான்.  பின் எப்போது விளையாட்டுக்கென நேரம் கிடைக்கும் போதும் இங்கே வந்து நேரம் செலவிடத் தொடங்கினான்.

                                 இவ்வாறாக துவங்கிய அவன் பயணம் இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா முழுவதும் விற்பனை செய்யுமளவிற்கு உயர்ந்தது. அவனே தயாரித்து விற்பனை செய்ததுதான் செந்தில் பிராண்ட் கைக்குட்டைகள். இந்த செந்தில் பிராண்ட் கைக்குட்டைகளை ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் விரும்பி உபயோகித்தனர். ஒன்றிரண்டு வயது குழந்தைகளுக்கான சோட்டா கைக்குட்டை, நான்கைந்து வயது பிள்ளைகளுக்கென சோட்டா பீம் கைக்குட்டை, கல்லூரி மாணவிகளுக்கென சூர்யா கைக்குட்டை, மாணவர்களுக்கென அனுஷ்கா கைக்குட்டை, குடும்ப பெண்களுக்கென செல்லம்மா கைக்குட்டை இப்படி ஒவ்வொருவருக்கும் பிடித்தமான கைக்குட்டைகளை வடிவமைத்தது அவன் தொழில் திறமை.

                                  மார்க்கெட்டில் அவன் சிந்தனையில் உதித்த கருப்பு நிற கைக்குட்டை மிக பிரசித்தி பெற்றது. கைக்குட்டை வரலாற்றிலேயே ஒரு புரட்சி படைத்தது எனவும் சொல்லலாம்.. தேசிய கோடியை கைக்குட்டையாக வடிவமைத்ததற்காக இவன் நிறுவனத்திற்கு தமிழக அரசு தடைவிதித்ததும், பின் அதன் அதன் ஓரத்தில் இரண்டு இலைகளை சேர்த்து மீண்டும் உரிமம் பெற்றதும் தனிக் கதை..!


Friday, February 1, 2013

கடல் - திரை விமர்சனம்



                               இராவணன் எனும் மாபெரும் மொக்கையை கொடுத்த, அதே சமயம் மௌன ராகம், இதய கோவில் பார்க்கும் போதெல்லாம் இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்று எப்போதுமே வியந்து பார்க்கும் ஒரு சைலண்ட் கில்லர் ( அதனால தான் விஸ்வரூபம் பிரச்னைக்கு ரொம்ப அமைதியா இருந்தாரோ? ) டைரக்டர் மணிரத்னம் இயக்கியிருக்கும் படம். ஆஸ்கார் நாயகன் இசையில்,  ராஜீவ் மேனனின்  ஒளிப்பதிவில்,  முன்னாள்  நடிகர்கள் கார்த்திக் மற்றும் ராதாவின் வாரிசுகள் நடிக்கும் திரைப்படம் தான் இந்தக் கடல்..


                                படத்தின் நாயகன் என கௌதமை முன் நிறுத்தியிருந்தாலும், படத்தின் எதார்த்த நாயகன் அரவிந்த்சாமி தான். மின்சாரக் கனவில் பாதரான அவர் இந்தப் படத்திலும் அவ்வாறே தொடர்கிறார்.  கடவுளுக்கும் சாத்தானுக்கும் (?!!) நடக்கும் போராட்டத்தில் கடவுளின் பக்கம் அரவிந்த் சாமியும் சாத்தனின் பக்கம் ஆக்க்ஷன் கிங் அர்ஜுனும் நிற்கிறார்கள். நன்மையை மட்டுமே போதிக்கும் அரவிந்த் சாமியை கிண்டல் செய்வதோடு பல பாவங்களையும் செய்யும் அர்ஜுனை பாதிரியாராக முடியாமல் செய்கிறார் அரவிந்த்சாமி. இதை மனதில் வைத்து அவருக்கு படம் நெடுக தொல்லை கொடுக்கிறார் அர்ஜுன்.


                               அரவிந்த்சாமியால் வளர்க்கப்படும் சிறுவன் கௌதமை தன்னைப் போலவே கொடூர குணம் படைத்தவனாய்  மாற்ற நினைக்கிறார் அர்ஜுன். ஆனால்  அவரை மீண்டும் நல்வழிக்கு திருப்புகிறார் கௌதமின் காதலி துளசி. பொறுமையின் சிகரமாய் இருக்கும் அரவிந்த் சாமி கடைசியில் அர்ஜுனின் டார்ச்சர் தாங்காமல் கொதித்தெழுகிறார். ஆனால் கௌதம் அர்ஜுனை காப்பாற்றுவதோடு, அரவிந்த்சாமியையும் பாவம் செய்யாமல் காப்பாற்றுகிறார்.. அதோடு படம் முடிந்து விடுவதால் நாமும் காப்பாற்றப் படுகிறோம். ( அலெக்ஸ் பாண்டியனுக்கு போட்டியாக வர முடியாவிட்டாலும் கௌதமையும் முதல் படத்திலேயே ஆக்க்ஷன் ஹீரோ ஆக்கும் முயற்சி தெரிகிறது. )                             



                               கடலையும், கடல்ப்புறத்தையும்  இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இவ்வளவு அழகாக படம் பிடித்திருக்கும் ராஜீவ் மேனோன் காமிரா மூலம் கவிதை பாடியிருக்கிறார். இரண்டாவது படத்திற்கு உயிரோட்டமாய் இருப்பது வைரமுத்து மற்றும் மதன் கார்க்கியின் பாடல்கள், மூன்றாவது ரகுமானின் பின்னணி இசை. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹிட் கொடுத்து பின் தொலைந்து போயிருந்த அரவிந்த் சாமி, இவர்களே படத்தின் பலம்.  எது எப்படியோ டிரைலர் பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காட்சியை காணச் செல்லும் ரசிகப் பெருமக்களுக்கு ஏமாற்றமே!!

   41 / 100  

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...