Friday, January 25, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்

                   

                                   ஒரு நூறு கிலோமீட்டர் பயணம் செய்தால் கடவுளின் விஸ்வரூபத்தை காண முடியுமென்றால் மக்கள் அடித்துக் கொண்டு ஓட மாட்டார்களா? அப்படித்தான் அடித்துப் பிடித்து ஓடினேன் கேரளாவின் எல்லைக்கு ( வேலந்தாவளம் தனலட்சுமி தியேட்டர் - DTS ).  தலைவரின் படத்தை தரிசிக்க வாய்ப்பு கொடுத்த அந்த தியேட்டருக்கு நன்றி கூறிவிட்டு படம் பார்க்க சென்றேன்.மிகவும் சிறிய தியேட்டர்- சாதாரண நாட்களில் 25 ருபாய் தான் அதிகபட்ச டிக்கட்.. ஆனால் இன்றோ நூறு ரூபாய்.. தமிழக அரசினால் பயன்பெற்ற ஒரு கேரள வியாபாரி(!!)


                                     நாம் பலரும் சொல்லக் கேட்ட ஒரு டயலாக் இது.. " இதுவரை தமிழ் சினிமாவில் வராதது".. இந்த மொழி விஸ்வரூபம் படத்திற்கு சாலப் பொருந்தும். இதுவரை வந்ததில்லை, இனிமேல் வரப் போவதுமில்லை.. இது போன்ற ஒரு படத்தை  எடுக்கும் தைரியம் தமிழ் சினிமாவில் கலைஞானியைத் தவிர  யாருக்கும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.. இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் கமலைத் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். நம் நாட்டிலோ ??? .. சரி கதைக்கு வருவோம்..


                                      அணு விஞ்ஞானியான டாக்டர் நிருபமா ( பூஜா) கதக் நடனக் கலைஞரான விஸ்வநாத்தை (கமல்ஹாசன்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் திருமணத்துக்கு பிறகு தான் வேலை செய்யும் லேப்பின் முதலாளி தன்னை விரும்புவதை அறிந்து தானும் விஸ்வநாத்துக்கு துரோகம் செய்கிறார். அது மட்டுமன்றி விஸ்வநாத்திடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஒரு பிரைவேட் டிடக்டிவ் உதவி கொண்டு விஸ்வநாத்தை வேவு பார்க்கிறார். ஆனால் விஸ்வநாத்தோ மனைவியின் மேல் உயிரையே விடுகிறார். (தான் சைவமாக இருந்தாலும் மனைவிக்காக சிக்கன் சமைத்துக் கொடுப்பதில் ஆரம்பித்து)


                                       டிடெக்டிவ் விஸ்வநாத்தை பின்தொடர்ந்து ஒரு உண்மையை கண்டறிகிறார். அது விஸ்வநாத் ஹிந்து அல்ல, ஒரு முஸ்லிம் என்பது. இதைக் கேள்விப்பட்ட நிருபமா விஸ்வநாத்தை விவாகரத்து செய்ய தனக்கு தேவையான ஆதாரம் கிடைத்து விட்டதாய்  மகிழ, அதே சமயம் டிடெக்டீவை திசை திருப்ப முயன்று அவரை தெரியாமல் ஒரு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் விஸ்வநாத். துரதிஷ்ட வசமாக அது ஒரு அல் -கொய்தா தீவிரவாதியின் வீடு.தீவிரவாதி டிடெக்டீவை கொலை செய்துவிட்டு அவர் கொண்டு வந்திருந்த டைரியின் மூலமாக நிருபமாவையும், விஸ்வநாத்தையும் தேடி வந்து கடத்திச் செல்கிறார்கள்.


                                       இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் தீவிரவாதி துன்புறுத்திக் கேட்க, தான் ஒரு முஸ்லிம் என்பதை ஒத்துக் கொள்கிறான். மேலும் தன் பெயர் தவ்பீக் என்றும் கூறுகிறார் விஸ்வநாத். தீவிரவாதி விஸ்வநாத்தின் புகைப்படத்தை எடுத்து தன் தலைவனுக்கு அனுப்புகிறான்.. தலைவன் அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைகிறான். புகைப்படத்தில் அவன் காண்பது அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த மற்றொரு ஜிகாத் தீவிரவாதி!!


                                       சரி, இதுவரை நீங்கள் படித்தது விஸ்வரூபத்தின் முதல் பத்து நிமிடங்கள் தான்.. இதே த்ரில், சஸ்பென்ஸ் படம் நெடுக வியாபித்திருக்கிறது. அது உண்மையில் விஸ்வநாத்தா? இல்லை தவ்பீக்கா? அவர் நடனக் கலைஞரா இல்லை தீவிரவாதியா?  அவருக்கும் தீவிரவாத கும்பலுக்கும் என்ன தொடர்பு..இப்படி படம் பார்க்கப் பார்க்க நம் மனதில் எழும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் முடிச்சுகளையும்  சுவாரஸ்யத்துடனும் அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன்  காட்சிகளுடன் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் கமலஹாசன்.


                                      கதக் நடனமாகட்டும், விஸ்வநாத்தின் உடல் மொழியிலாகட்டும், பின் தீவிராவதியாக வரும் காட்சியிலாகட்டும் கமல் உள்ளம் கவர் கள்வனாகிறார்.. நடிகர் கமல்ஹாசன் இதுவரை சிறப்பான பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் உலகத் திரைப்பட சரித்திரத்தில் தனி இடம் பிடிக்கும். ஒசாமா பின்லேடன் மரணத்துக்கு பிறகு ஒசாமாவின் கூடாரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதே கதை. ஓமராக வரும் ராகுல் போஸ்  கமலின் நடிப்பையும் மீறி கவனிக்க வைக்கிறார்.


                                      பூஜா, கிட்டத்தட்ட தசாவதாரத்தில் அசின் ஏற்ற அதே கதாப்பாத்திரம்.. கொஞ்சம் கிளாமர், நிறைய லொட லொட.. ஆண்ட்ரியா கமலுக்கு பாடிகார்ட் போலவே வருகிறார். நிறைய காட்சிகளில் அவர் இருந்தாலும் பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச டயலாக் " இந்த கதையில எல்லோருக்கும் டபுள் ரோல்.. போறுமா" என்பதுதான். ஒமரின் வலக்கையாக வருபவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  நாசர், உடைகள் வடிவமைத்த கௌதமி, மேக்கப் மேன், சண்டைப் பயிற்சியாளர், முக்கியமாக இதுபோன்ற படத்திற்கு மெருகேற்றும் வண்ணமாக அதிரடி இசையமைத்த சங்கர்-எசான்-லாய்  கூட்டணி இப்படி படத்தின் பலத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.


                                    இந்தப் படத்தின் முடிவில், விரைவில் இரண்டாம் பாகம் வருவதாக தலைவர் அறிவித்துள்ளார்.. முதல் பாகத்தை வெளியிடவே இவ்வளவு தடங்கல்கள்.. என்னுடைய கருத்து இரண்டாம் பாகத்தை லாஸ் ஏஞ்சல்ஸில்  உள்ள எதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வெளியிட வேண்டும்.. தமிழில் ஜாக்கி சான் படங்களை டப்  செய்து வெளியிடுவதை போல இதையும் வெளியிடலாம்.. உங்க கருத்து என்ன??

    93 / 100                                   

6 comments:

  1. நூறு கிலோமீட்டர் தாண்டி போய் படம்பார்த்து விமர்சனம் எழுதும் உங்கள் கடமை உணர்ச்சி கண்கலங்க வைக்கிறது. ஆமா... படத்துல குறையே இல்லையா?

    ReplyDelete
  2. நூறு கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்றது மட்டுமல்ல..தலைவர் படத்தை காண நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்று ஒரு விபத்தில் சிக்கி விழுப்புன்களோடு பார்த்ததுதான் ஹைலைட்.. :-)

    குறைன்னு சொல்லணும்னா இசை மட்டும் தான். இன்னும் கொஞ்சம் பிரமாண்டமா இருந்திருக்கலாம்.. மற்றபடி இங்கேயும் அங்கேயும் கண்ணுக்கு தெரியாத சில சின்ன குறைகள் மட்டுமே..!

    ReplyDelete
  3. அடெய்...படம் பார்த்துட்டியா..
    நான் கூட போகணும்..கேரளாவுல சரக்கு வாங்கனும்...

    ReplyDelete
  4. இசையிலும் பல நுணுக்கங்களை புகுத்தி இருக்கிறார்கள்...உங்க கடமை உணர்ச்சி மெய்யாலுமே மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் கேள்விக்கு பதில் அப்படியே செய்துவிட்டு போகலாம். தமிழ் தமிழருக்காக அவர் செய்த தியாகங்கள் போதும். ஹாலிவுட்டில் கலக்கட்டும் திறமைமிக்க தமிழரின் மொழிவேறானாலும் நடிப்புக்கு மொழியேது!

    ReplyDelete
  5. கலாகுமாரன் சார், கருத்துக்கு நன்றி..

    ReplyDelete
  6. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    பிரச்சனைகள் தீர்ந்ததும் பார்க்கவேண்டும்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...