Monday, June 9, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014JUN09



ஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..!

                    திருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..!



இந்த வார மிக்ஸிங்..!

அமைச்சர் ஆவியானந்தா!


ஒய் மீ ஆல்வேஸ்? 

                           அரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்?


இணையத்தில் 'பிடித்தது':


ஆகச்சிறந்த ரணம் எதுவெனில்,

பிரியங்கள் நிறைந்திருந்த தருணங்களை

பிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.



ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று..

                           அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. "பார்த்தா Genuine ஆ தெரியராண்டா" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..
                   

சமீபத்தில் ரசித்த பாடல்:

சத்தியமா நஸ்ரியாவுக்காக அல்ல..! ஹிஹிஹி..





கிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'?


                     சாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. "தெர்லியேபா"..!

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...!
              
                                  ***************** X *******************





Friday, June 6, 2014

ஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை


இன்ட்ரோ  
                          படம் பார்க்க செல்லும் முன் என் உறவினர் ஒருவர் என்னிடம் "நான் விமல் நடிச்சு ஒரு படமும் பார்த்தது இல்ல" என்றார்.. நான் பதிலுக்கு "நானும் விமல் 'நடிச்சு' ஒரு படமும் பார்த்தது இல்ல" என்றேன்.. இதிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.




கதை         
                             தன் பேரனைக் காண வரும் கிராமத்து மஞ்சப்பை ராஜ்கிரண்  நகரத்து பிளாஸ்டிக் பைகளுக்கு நடுவே சிக்கி 'டர்' ஆவது தான் கதை.  முதல் சந்திப்பில் ஏற்படும் வெறுப்பில் காதலியும் வெறுக்க, தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் எல்லோரும் வெறுக்க, தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தா செய்யும் சேட்டைகளை அமைதியாக பொறுத்துக் கொள்ளும் நாயகன் தன் கனவு துண்டாகிப் போகும்போது வெடிக்கிறான். அதை தாங்கிக் கொள்ள முடியாத தாத்தா துவண்டு போகிறார். அம்புட்டு தான் மேட்டரு.

                               எல்லாம் ஒக்கே, எதுக்காக அவர் செய்யுறத எல்லாம் சிரிச்சுகிட்டே ஏத்துக்கணும். என்ன செய்யலாம் செய்யக் கூடாதுன்னு சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா? ( உ.ம் அபார்ட்மென்ட் பவுன்டென்னில் தாத்தா தினமும் குளிக்கும் காட்சி)  ஏன் கிராமங்களில் பாத்ரும் வசதிகள் இன்னும் வரவில்லையா என்ன? சோகப் பாட்டெல்லாம் தமிழ் சினிமா தலைமுழுகி பல வருஷம் ஆச்சே.. டைரக்டர் எங்க சார் இருந்தீங்க இவ்வளவு நாளும்?   

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              ராஜ்கிரண் வேட்டியை மீண்டும் ஒருமுறை அண்டர்வேருக்கு மேல் தூக்கிக் கட்டி (கிராமத்து மனிதராம்!!) நடித்திருக்கிறார்.. பெரும்பாலான இடங்களில் வாங்கின காசுக்கு மேல கூவியிருக்கிறார். லக்ஷ்மி மேனனின் அப்பாவை அறையும் காட்சியில் நல்ல நடிப்பு.. லக்ஷ்மி மேனன் விஷாலுக்கு மட்டுமல்ல கதைக்கு தேவைப்பட்டால் யாருக்கு வேண்டுமானாலும் லிப்லாக் செய்யத் தயார் என்ற அறிவிப்பை வைத்தாலும் வைத்தார்..செம்ம ரெஸ்பான்ஸ். அவர் அணிந்து வந்த சுடிதார் எல்லாம் நன்றாக இருந்ததாக பின் சீட்டில் ஒரு பெண் கூற இல்லல்ல நான் சிகப்பு மனிதன் ல தான் அவ சுடிதார் நல்லா இருந்தது என மற்றொரு பூங்குயில் கூறிக் கொண்டிருந்தது.

                              தமிழ் சினிமாவில் டி.ஆர், சசிக்குமாருக்கு பிறகு சிட்டி, வில்லேஜ் எந்த கேரக்டருக்கும் தாடியுடன் லோ-பட்ஜெட்டில் ஒரு ஹீரோ வேண்டுமென்றால் அது நம்ம விமலுக்கு தான் போகும் என்பதில் ஐயமில்லை. டயலாக் டெலிவரி அப்ப்பப்பா. 
                               


இசை-இயக்கம்-தயாரிப்பு
                               'என்'. லிங்குசாமி தயாரிக்க, 'என்'.ராகவன் இயக்க, 'என்'.ரகுநாதன் இசையமைக்க என்னே ஒரு படம்..!  பொதுமக்கள் யாரும் இந்தப் படம் ஓடும் தியேட்டருக்கு அருகில் கூட செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.. மீறி செல்பவர்களின் உடல்/ மன சேதத்திற்கு கம்பெனி பொறுப்பாகாது. 

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 முதல் பாடலின் நடனம் மற்றும் டைட்டில் கார்டில் நாலு பேர் அசால்ட்டாக நடந்து வந்து நின்றவுடன் திருப்பதி பிரதர்ஸ் என்று வரும் காட்சி ரசிக்கும்படி இருந்தது!

         Aavee's Comments - Yellow yellow dirty fellow!

ஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..


இன்ட்ரோ  
                          சுவைத்து சாப்பிடக் கிடைத்த ஒரு வரம் தான் இந்த வாழ்க்கை என்ற ஒன் லைனரோடு தொடங்கும் படம், வாழ்க்கையை ருசிக்க ஒரு துணையும் வேண்டும் என்பதோடு முடிகிறது. மொழி, அபியும் நானும், தோனி வரிசையில்  உணர்வுப் பூர்வமான படங்களை  தயாரித்து வழங்குவதற்காகவே ப்ரகாஷ்ராஜுக்கு ஒரு "ஒ" போடலாம்.




கதை         
                            "இந்தப் பொறப்புதான் ருசித்து சாப்பிடக் கிடைத்தது" ன்னு கைலாஷ்கர் தமிழையும் சேர்த்து சுவைத்து சாப்பிடுவதோடு ஆரம்பம் ஆகிறது படம். பெண் பார்க்க செல்லுமிடத்தில் பெண்ணை மறந்து வடையை ருசித்து அதை செய்த சமையல்காரனை வீட்டுக்கு கூட்டி வரும் அளவுக்கு ரசனையுடன் சாப்பிடும் காளிதாசுக்கு, சிறுவயதில் தன் தாய் செய்து கொடுத்த 'குட்டி தோசை' ( அதென்ன குட்டி தோசைன்னு தெரியல, தெரிஞ்சவங்க இதுக்கு ரெசிபி அனுப்புங்கப்பா) நினைவில் நிழலாட அதை சாப்பிட விரும்பி ஒரு ராங் நம்பருக்கு போன் செய்கிறாள் கௌரி. தவறான இணைப்பு நட்பாய் பின் காதலாய் மலர அதை சொல்ல, நேரில் சந்திக்க தயங்கியபடியே இருவரும் தன் வீட்டில் இருக்கும் இளசுகளை அனுப்ப அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக இன்டர்வெல்.. இதற்கு மேல் கதை சொன்னால் அதன் 'சுவை' குறைந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              பிரகாஷ்ராஜ்- மனிதர் என்னவாய் ரியாக்க்ஷன்கள் கொடுக்கிறார். ஆதிவாசி தலைவனை மீட்க போலிஸ் ஆபிசருடன் மோதும் போது கோபக் கனல் வீசும் போதும், நட்பு காதலாய் மாறும் தருணத்தில் வெட்கப் புன்னகை சிந்தும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் வேண்டுமென்றே ஸ்பீட் பிரேக்கரில் வண்டியை விட்டுவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கும் போதும், கலக்கல் பாஸ். படத்தில் ஒரு கேரக்டர் "உனக்கு நான் தான் வில்லன்" எனக் கூற "எனக்கேவா" என பிரகாஷ் கூறும் போது தியேட்டரில் சிரிப்பலை. சினேகாவின் கம்-பேக் மூவி. ஆனால் அவருடைய பெஸ்ட் மூவி இதுதான் எனலாம். மலையாள ஒரிஜினலில்  ஸ்வேதா மேனன் செய்த காரெக்டரை பல மடங்கு பெட்டராக செய்திருக்கிறார். 

                               தம்பி ராமையா வழக்கம் போல் காமெடி ப்ளஸ் நெகிழ்வு தரும் காட்சிகள் இரண்டிலும் புல் மார்க்ஸ் வாங்குகிறார். சமையலில் குறை சொல்லி வீட்டை விட்டு அனுப்பும் காட்சியில் தம்பி ராமையா, 'அண்ணன்' ராமையாவாகிறார்.  இளங்கோ, ஊர்வசி, ஐஸ்வர்யா புதுமுகங்கள் தேஜஸ், சம்யுக்தா ஆகியோர் ஆங்காங்கே தலை காட்டியுள்ளனர். தேஜஸ் மற்றும் சம்யுக்தா நடிக்க வாய்ப்பிருந்தும் சுமார் பெர்பார்மென்ஸ் தான். அதிலும் "தெரிந்தோ தெரியாமலோ" பாடலில் இந்த ஜோடி ரோமென்ஸ் பண்ண  வரும்போது தெரிந்தோ தெரியாமலோ பலர் கேண்டின் பக்கமாக சென்றதும் நடந்தது.


இசை-இயக்கம்-ஒளிப்பதிவு
                               படம் நெடுக வியாபித்திருப்பது மேஸ்ட்ரோ தான். காட்சியின் பின்னணி இசையும் பாடல்களும் பின்னிப் பிணைந்து வருவதால் ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிப் போக முடிகிறது. கிளைமாக்ஸ் கார் காட்சியில் வரும் துள்ளல் இசை நம் மனசுக்குள்ளும் ஒரு குஷியை உண்டு பண்ணுகிறது. ஆஷிக் அபுவின் கதைக்கு விஜி மற்றும் ஞானவேலின் வசனங்களை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியும் இருக்கிறார் பிரகாஷ். வெல்டன்! ப்ரீதாவின் ஒளிப்பதிவு எச்சில் ஊற வைக்கும் டைட்டில் சாங் மற்றும் ஒவ்வொரு பிரேமிலும் அவர் உழைப்பு தெரிகிறது. 

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 காற்று வெளியில் மற்றும் இந்தப் பொறப்பு தான் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கிறது. படத்தின் ஓட்டத்தோடு கூடிய எல்லா காட்சிகளுமே ரசித்து பார்க்கும்படி இருந்தன. குடும்பத்தோடு முறுக்கு சாப்பிட்டபடியே ரசிக்கலாம்!

                     Aavee's Comments - Tasty.


Thursday, June 5, 2014

ஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)

                   
                    சென்னை, மதுரையை எல்லாம் அளவுக்கு அதிகமாக திரையில் காட்டிவிட்டதாலோ கோவையை மையப்படுத்தி வரும் படங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.. அந்த வரிசையில் வரும் மற்றொரு படம் இந்த வானவராயன் வல்லவராயன். கிருஷ்ணா, மா.க.பா ஆனந்த் நடித்து யுவனின் இசையில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்..


1. "கொங்குநாட்டு தென்றலுக்கும்" - கொங்கு நாட்டின் பெருமைகளையும், அந்த ஊரில் வாழும் ஒரு அண்ணன் தம்பியின் அறிமுகத்தோடும் ஒலிக்கிறது இந்த பாடல். கார்த்திக் ராஜா மற்றும் வெங்கட் பிரபு பாடியிருக்கும் பாடலில் மண் மணம் மணக்கிறது..

2. "மனசு இங்கே" - மாணிக்கம் விநாயகம் கம்பீரமாக வாசிக்கும் ஒரு காதல் சோக கீதம், காதல் பிரிவில் தவிக்கும் நாயகனின் உணர்வை எடுத்துச் சொல்கிறது.

3. விஜய் யேசுதாஸ், ரேணு பாடியிருக்கும் ரோமென்ஸ் கலக்கல் இந்த  "தக்காளிக்கு தாவணிய"  பாடல்.  அத்துமீற நினைக்கும் நாயகன், அலர்ட்டாக இருக்கும் நாயகி ஜாலியாக பாடும் டூயட்.. சிநேகனின் இளமை துள்ளும் வரிகள் ரசிக்க வைக்கிறது..

4. நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் தன் சொந்தக் குரலில் பாடியிருக்கும் பாடல் "தரை மேல இருந்த நான்". ஓரிரு கேட்டலுக்கு பிடித்துப் போகிறது. கங்கை அமரனின் கேஷுவலான வரிகள் பாடலை நாம் முணுமுணுக்க ஏதுவாக மாற்றுகிறது.

5. "வாங்கம்மா வாங்கப்பா" பாடல் உறவினர்களை கல்யாணத்திற்கு வரவேற்று பின் காதல் கல்யாணத்தின் அட்வான்டேஜுகளை 'யுத்'களுக்கு  ப்ரியா ஹிமேஷ், ரஞ்சித், சத்யன் மற்றும் வாசுதேவன் எடுத்துரைக்கிறார்கள்.

6. "விடுடா பொண்ணுங்களே வேணாம்" - வழக்கமாக சந்தானத்தின் தோளில் சாய்ந்து கொண்டு ஹீரோக்கள் புலம்பும் பாடல். இப்போ சந்தானம் ஹீரோ ஆகிவிட்டதால் அநேகமாக மா.க.பா அந்த இடத்தை நிறைவு செய்கிறார். முகேஷின் குரலில் இந்தப் பாடல் காதலில் "விழுந்த" நாயகனின் புலம்பலாய்  ஒலிக்கிறது.


                           ஒரு சின்ன இடைவெளிக்கு பின் வந்திருக்கும் யுவனின் இந்த ஆல்பம் சுமாருக்கும் சற்று மேல் இருக்கிறது. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயன் - டீசன்ட்..!


Tuesday, June 3, 2014

நம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..!




                     ரொம்ப நாளா டிரைவிங் லைசென்ஸ்ல அட்ரஸ் மாத்தணும்னு நினைச்சு போன வாரம் வியாழக்கிழமை தான் திடீர்னு ஞானோதயம் வந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் போனேன். நான் எங்க லைசன்ஸ் எடுத்தேனோ அங்க போய் கேட்டதுக்கு அவங்க "இப்போ RTO ஆபிஸ் நாலு zone ஆ பிரிச்சுட்டாங்க.. நீங்க போக வேண்டியது சவுத் சோன்" என்றார்.. அது எங்க மேடம் இருக்குன்னு கேட்கவும், அவங்க கிட்ட நூறு ரூபாய் கடன் கேட்டது போல முகத்தை வச்சுகிட்டு "பீளமேடு" ன்னு சொன்னாங்க.. "அத கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னா என்னா" ன்னு கேட்டுட்டு (மனசுக்குள்ள தான்!) பீளமேடு வந்தேன். அங்க இங்கே கேட்டு ஆபிஸ் கண்டுபுடிச்சு போனா மணி பதினொண்ணு. யார்கிட்ட போய் கேக்கணும்னு தெரியாம முன்னாடி பணம் கட்டற கவுண்டரில் போய் கேட்டேன் "லைசென்சுல அட்ரஸ் மாத்தணும். யாரைப் பார்க்கணும்". உள்ளே இருந்த அம்மா "பி- பிளாக் ல போய் கேளுங்க" என்றார்.. நானும் கட்டிடத்தை இரு முறை சுற்றி வந்தேன். ஒரே ஒரு பிளாக் தான் இருந்தது.. மீண்டும் அதே அம்மாவிடம் சென்று "பி-பிளாக் எங்க இருக்கு" என்றேன்.. அவர் சற்றே கடுப்புடன் "பின்னால இருக்கு பாருங்க சார்" என்று தன் மானிட்டர் திரையை பார்த்துக் கொண்டே கூறினார்.

                       அவர் அறையை தாண்டி சிறிது தூரம் நடந்ததும் ஒருவர் காத்து உள்ளே வர ஜன்னலைத் திறந்து வைத்து முகத்தில் சிங்காரவேலனில் கருவாடு ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் போல் கர்ச்சீப்பை கட்டியிருந்தார். அவரிடம் சென்று "ஸார்.. இங்க பி பிளாக் எங்க" என்றேன். அவரோ "இதாம்பா பி-பிளாக்" என்றார்.. மொக்கை பிகரை எதிர்பார்த்திருந்த நித்தியானந்தருக்கு ஹன்சிகாவே எதிரில் வந்தது போல் எனக்கு வந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. "சார், என் டிரைவிங் லைசென்சுல அட்ரஸ் சேன்ஜ் பண்ணனும்." என்றேன். அவர் என்னிடம் வேறெதுவும் கேட்காமல் "நீங்க ஒரு NOC வாங்கணும். வாங்கி அதோடு  ஐம்பது ரூபாய் பணம் கட்டுங்க" என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.. "ஸார்" இது நான். கேவலமான ஒரு லுக்கை என் மீது சிந்திவிட்டு "என்ன" என்பதுபோல் தன் கண்ணாடியை உயர்த்திக் கேட்டார். "இந்த NOC பாரம் எங்க கிடைக்கும்?" என்றேன்.. " 'முன்னால போய் கேளுப்பா" என்றார்" இன்னொரு கேள்வி கேட்டால் கேளுப்பா, கேளுடா ஆகிவிடும் என்பதை உணர்ந்த நான் முன்னாடி சென்றேன்.

                       பணம் கட்டற கவுண்டரில் கேட்கலாம் என்று யோசித்து பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இருந்த ஒரு அறையின் உள் சென்று அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஒரு முதியவரிடம் போய் NOC பார்ம் எங்கு கிடைக்கும் என்பதை கேட்டேன்.. அவர் உதயம் NH4 படத்தில் கானா பாலா கேட்பது போல் "NOC பார்ம்மா , உன் கதைய மொதல்ல இருந்து சொல்லு" என்றார்.. மீண்டும் ஒரு முறை என் தேவையை சொல்லவும், ஏம்பா ஆலந்துறையும் சவுத்து, சிங்காநல்லூரும் சவுத்து. எதுக்குப்பா NOC வாங்கணும்?' என்று என்னைப்பார்த்து கேட்டார். "தெரியலீங்க அதோ அந்த பி-பிளாக்கில் இருந்தவர் தான் வாங்க சொன்னார்" என்றேன். "ஒண்ணுமே தெரிஞ்சுக்காம வேலை செய்யுறானுக பாரு." என்று அவரைத் திட்டிவிட்டு வெளிய போய் ஒரு ஒயிட் பேப்பர் வாங்கி அதுல விலாசமாற்றம் கோரி ஒரு லெட்டர் எழுதி அம்பது ரூபா பணம் கட்டுப்பா" என்றார்.

                     'வெளியே' என்று அவர்கள்  சொன்னது வெளியே இருந்த ஒரு ஸ்டேஷனரியை என்பது என் மூளை செல்களுக்கு எட்ட சிறிது நேரம் பிடித்தது. அங்கு சென்று ஒரு ஒயிட் ஷீட்டும், எதற்கும் இருக்கட்டும் என ஒரு NOC பார்ம்மும் வாங்கி நூறு ரூபாய் கொடுத்தேன்.. சில்லறை இல்லை என்று சொல்லி சிறிது நேரம் நிற்க வைக்க நான் வண்டியை எடுத்து ரோட்டில் இருந்த ஒரு பழமுதிர் நிலையத்தில் சில்லறை கேட்க, அவரும் கை விரித்தார். அவரிடம் இரண்டு மேங்கோ ஜூஸ் ஆர்டர் செய்து நானும் உடன்வந்திருந்த தம்பியும் குடித்துவிட்டு நூறு ரூபாயை நீட்ட இப்போது சில்லறை கிடைத்தது. திரும்ப வந்து பார்ம்மை வாங்கி அதை நிரப்பி, வெள்ளைத்தாளில் விலாச மாற்றமும் கோரி கொண்டு போய் பணம் கட்டும் கவுண்டரில் நீட்ட அதை வாங்கிய அந்த அம்மா ஐம்பது ருபாய் கேட்க, நான் மீண்டும் ஒரு நூறை நீட்ட அவரோ சில்லறை கொடுங்க ஸார். என்றார். அந்த ஏரியாவில் இருந்த இரண்டு கடையிலும் கேட்டு கிடைக்காமல் பின் அந்த ஸ்டேஷனரியில் ஒரு பேனா வாங்கி சில்லறை உண்டாக்கினோம். ஐம்பதை கொண்டு வந்து அங்கே கட்டி பில் வாங்கியதும் அவர் அந்த பார்ம்மை கொண்டு போய் பி-பிளாக்கில் கொடுக்கச் சொல்ல.. இப்பதான் நமக்கு பி-பிளாக் நல்லா தெரியுமே என்று சந்தோஷத்துடன் ஓடி வந்து நுழையாத ஜன்னல் கம்பிகளூடே என் கரங்களையும் அதோடு வைத்திருந்த பார்ம்மையும் கொடுத்தேன். NOC மற்றும் லெட்டரை பார்த்துவிட்டு "பணம் கட்டுன ரசீது எங்க" என்றார். அதை நான் நீட்ட "இத முன்னால ஒட்டி, மத்த பேப்பர், ஜெராக்ஸ் எல்லாத்தையும் பின் பண்ணி கொண்டு வாங்க" என்றார். அவர் டேபிள் மீதே ஒரு ஸ்டேப்ளர் இருந்தது.

                            நான் வாங்கிக் கொண்டு மீண்டும் "முன்னாடி" வந்து காசு கொடுத்து ஸ்டேப்ளர் மற்றும் Gum வாங்கி அவர் கேட்டது போலவே கொடுத்தேன். அதை வாங்கிய அவர் அலட்சியமாய் டேபிளின் ஓரத்தில் வைத்துவிட்டு நாளைக்கு சாயந்திரம் ஒரு நாலு மணிக்கு வாங்க " என்றார். "சார், இன்னைக்கு கிடைக்காதா சார்" என்றேன்.. "அதெல்லாம் சரிபார்க்கணும்.. நாளைக்கு வாங்க" இந்த முறை கடுமையாக கூற வேறு வழியின்றி வீடு வந்தேன். மறுநாள் மாலை அங்கே செல்ல அரை மணி நேரம் அமர சொல்லிவிட்டு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் சென்று கேட்க சலித்துக் கொண்டே நேற்று வைத்த இடத்திலிருந்து எடுத்து மற்றொரு அறைக்கு சென்று ஐந்து நிமிடத்தில் வந்தார். நான் கைகளில் அவர் கொடுத்த பேப்பரை வாங்கிக் கொண்டு "சார், இத நேத்தே செய்து கொடுத்திருக்கலாமே, அஞ்சு நிமிஷம் தானே ஆச்சு" என்று பவ்யமாக கேட்டேன்.. அவர் முகத்தில் தெறித்த கோபத்துடன் "உன் ஒருத்தனோட வேலைய பார்த்தா போதுமா, வேற வேலையே இல்லையா" என்று ஆரம்பிக்க இதற்கு மேல் இருந்தால் அவர் ஹல்க் ஆக மாறக் கூடிய வாய்ப்பிருந்ததால் அங்கிருந்து அகன்றேன். அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்று தெரியாமல் அலுவலகத்தை சுற்றி வந்தேன். ரினிவல், விலாசமாற்றம் என்று கூறி ஒரு அம்புக்குறி போட்ட போர்டை பார்த்ததும் ஆவலோடு அந்த அறையை நோக்கி ஓடினேன். இதை நேற்றே கவனிக்காததை எண்ணி என்னை நானே நொந்து கொண்டு உள்ளே சென்றேன்.

                        முன்னால் அமர்ந்திருந்த ஒரு அம்மணியிடம் அப்ளிகேஷனை நீட்ட அவரோ தன் வாட்சை பார்த்து விட்டு" மணி அஞ்சாச்சு, திங்கட்கிழமை வாங்க" என்று கூறி அந்த அறையை விட்டு எழுந்து சென்றார். வேறு வழியின்றி மீண்டும் திங்கள் காலை வர அந்த அறையில் வேறொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பார்ம்மை கொடுக்க, அவர் பார்த்துவிட்டு இதுக்கு NOC, ரிக்வெஸ்ட் லெட்டர் எதுவும் வேணாம்.. சேஞ் ஆப் அட்ரஸ் பாரமும், எல்காட் பாரமும் முன்னாடி கிடைக்கும் என்று கூறினார். மறுபடியும் மொதல்ல இருந்தா, என்றபடி 'முன்னாடி' சென்று பாரம் வாங்கி நிரப்பி கொண்டு வந்து அவரிடம் கொடுக்க அவர் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு வெரிபை செய்த அந்த காகிதத்தை என்னிடமே கொடுத்துவிட்டு இந்த இரண்டு பார்ம்களிலும் சூப்பிரெண்டன்ட் கையெழுத்து வாங்கி வர பணித்தார். அவருக்காய் அரை மணி நேரம் காத்திருந்து சென்ற போது மணி பனிரெண்டு லஞ்ச் டைம் என எழுந்து போக இருந்த மனிதர் திரும்பி வந்து எனக்கு கையொப்பமிட்டுவிட்டு சென்றது  வானத்தைப் போல விஜயகாந்தே நேரில் வந்தது போல் உணர்ந்தேன் . ஒரு வழியாக போட்டோ எடுத்து மீண்டும்  ஒரு மணி நேர காத்திருத்தலுக்கு பின் கையில் ஓட்டுனர் உரிமை அட்டையை வாங்கியபோது என் நியுஜெர்சி ஓட்டுனர் உரிமத்தை சிகாகோ முகவரிக்கு மாற்றிய போது பத்து நிமிடங்களில் எல்லா வேலையையும் முடித்து வந்தது நினைவுக்கு வந்தது..

பி.கு: அரசு அலுவலகங்களின் பார்ம்களை பொதுமக்கள் ஏன் ஸ்டேஷனரியில் சென்று வாங்க வேண்டும்? ஒவ்வொரு அரசாங்க காரியத்தின் வழிமுறைகளை விளக்கமாக ஒரு போர்டில் எழுதி வைக்கலாமே.. அலுவலர் இருக்கைக்கு அருகே அவர் வகிக்கும் பொறுப்பை எழுதி வைக்கலாமே!!



ஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ


இன்ட்ரோ  
                சிறுவர்களுக்காக பெரியவர்கள் நடித்து வந்த மாயாஜாலப் படங்கள் ஒரு காலம். சிறுவர்களுக்காக சிறுவர்கள் நடித்து வந்த சிறுவர் படங்கள் ஒரு காலம். பெரியவர்களுக்காக சிறுவர்கள் நடித்து வெளிவரும் கோலி சோடா போன்ற படங்களின் வரிசையில், கோலி சோடாவில் தூக்கலாக தெரிந்த சிறுவர் ஹீரோயிசத்தை எதார்த்தமாக காட்டி நம் மனதில் நச்சென இடம் பிடிக்கிறது இந்த பூவரசம் பீப்பீ..



கதை         
                     ஆறாம் வகுப்பு முடிந்து விடுமுறை தொடங்கியவுடன் அதை ஜாலியாக கழிக்கும் சிறுவர்கள் மத்தியில் மூன்று பேர் மட்டும் தாம் இனிமேலும் சிறுவர்கள் அல்ல என உணர்ந்து (?!!) பொன்வண்டு பிடித்து விற்பனை செய்து தமக்கு தேவையான தின்பண்டங்கள் வாங்கிக் கொள்வதில் ஆரம்பித்து, மழைநாள் ஒன்றில் கண்மாயில் நீச்சல் அடிக்கச் செல்ல அங்கே யாரோ சிலர் ஒரு பெண்ணை கற்பழிப்பதை பார்த்துவிட பின்னர் அவர்கள் யார், என்ன என்பதை துப்பறிந்து கண்டுபிடித்து பின் காவல் துறையில் தக்க ஆதாரங்களுடன் மாட்டி விடுவதே கதை.

                     இந்தக் கதையை இன்னமும் சுவாரஸ்யமாக்க வரம்பு மீறாத ஒரு அரும்பு காதலும், காதலுக்காய் சிறுவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் உண்டு. துளி பிசகினாலும் ஆபாசமாக தெரியக் கூடிய பல விஷயங்களை பக்குவமாக சொன்னதற்காகவே அந்த அறிமுக பெண் இயக்குனர் ஹலிதா ஷமீமுக்கு பாராட்டுகள். ஆண் பருவமடையும் காட்சியை அழகாய் படமாக்கிய இயக்குனர் கற்பழிப்பை பற்றிய சிறுவர்களின் விஸ்தரணைகளை இலைமறை (?!!) காயாய் கையாண்ட விதமும் சிறப்பு.

ஆக்க்ஷன் 
                                       
                         வேணு (கௌரவ் ), ஹரிஷ் ( பிரவின்) மற்றும் கபில் தேவ் ( வசந்த்) இந்த மூன்று பேர் தான் படத்தின் தூண்கள். சிறுவர்கள் துப்பறியும் கதை என்றதுமே வயதுக்கு மீறிய வசனங்களும் காட்சிகளும் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே. காட்சிக்கு தேவையான உடல்மொழியில் கலக்கும் சிறுவர்கள்  மூவரும் லிட்டில் சூப்பர் ஸ்டார்கள்.  அந்த "லாலிபாப்" வர்ஷினியும் கொள்ளை அழகு. வேணு தீயணைக்கும் போது வர்ஷினியின் வாயிலிருந்து விழும் அந்த லாலிபாப் ஒரு குட்டி ஹைக்கூ.

                            நட்புக்காய் தன் காதலை (?!!) தியாகம் செய்யும் இடத்தில் பிரவினும், கெமிஸ்ட்ரி வாத்தியாரிடம் உண்மையை சொல்லாமல் தடுக்க பாயும் இடத்தில் கௌரவும், தன் தந்தை குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் காட்சியில் வசந்தும் நடிப்பில் அசத்துகிறார்கள். வில்லர்கள் 'திருப்பாச்சி' சாய் ஹரி,  காளி, சுந்தர், கார்த்திக் நிறைவாய் செய்திருக்கிறார்கள்.
                                                                                             
இசை-இயக்கம்-ஒளிப்பதிவு-தயாரிப்பு

                                புஷ்கர் காயத்ரி, மிஷ்கின் மற்றும் சமுத்திரகனி ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவங்கள் கொண்டு ஜாலியாகவும் சமூக பொறுப்புடனும் தன் முதல் படம் செய்திருக்கும் ஹலிமாவிடமிருந்து இனியும் சில நல்ல படங்களை எதிர்பார்க்கலாம். அருள் தேவ் இசை அழகு. பின்னணி மட்டுமல்லாது பாடல்களிலும் மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். தாராபுரம் பொள்ளாச்சியை அப்படியே நம் கண்களுக்கு விருந்து படைக்கும் ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சாவுடையது. ஒற்றை மரத்தில் பட்டங்கள் கோர்த்து தன் மனதிற்கு பிடித்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்யும் காட்சி ஒரு ஒளி ஓவியம். இவர் தான் படத்தின் தயாரிப்பும்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 கார்த்திக் பாடிய "என்னுலகம்" பாடலும் "எனக்கொன்றும் வான்வெளி" பாடலும் அருமை. சில காட்சிகள் மெதுவாக சென்றாலும் சிறுவர்களின் நிறைவான நடிப்பில் நம்மை கவர்கிறது இந்த பூவரசம் பீப்பி.. அதிகம் விளம்பரம் இல்லாததாலும், திரையரங்குகளில் ஓரிரு காட்சிகளே ஓடுவதாலும் இது அதிக நாள் திரையில் காணக் கிடைப்பது சந்தேகமே.. பெரிய பட்ஜெட்டில் பொம்மையை ரசிப்பதற்கு பதில் இதை நிச்சயம் ஒருமுறை பார்த்து மகிழலாம்

                  Aavee's Comments - Chota Detectives !


Sunday, June 1, 2014

தொட்டுக் கொள்ளவா, உன்னை..

                                               

                          மஞ்சள் வெயில் மேனியை தடவிக் கொண்டிருந்த மத்தியான நேரம். அவசர வேலையாக சென்யோரீட்டாவுடன் (என் செஞ்சுரோ பைக் பேருங்க) காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். மெயின் ரோட்டில் சென்றால் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்று என்பதால் ஒரு குறுக்குப் பாதையில் அவநாசி ரோடை நோக்கி வேகமாக பாய்ந்தேன். என் பயணத்தின் வேகத்தை குறைக்கும் வண்ணம் பெருந்திரளான கூட்டம் ஒன்று அந்த சாலையை முழுவதுமாக அடைத்து நின்றிருந்தது. பெரும் இரைச்சல் வேறு. என் அவசரம் புரியாமல் வழிமறித்து நின்ற கூட்டத்தை நோக்கி ஹார்ன் அடித்தேன்.. ம்ஹூம் யாரும் அசைவதாய் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன் அங்கே 'பூஜை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

                            நடிகர் விஷால் கருநீல நிற சட்டையில் நாலைந்து பேரை அடிப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டிருக்க அவர்களும் அடி வாங்காமலே பறந்து போய் கீழே விழுந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் "கட்" சொல்லப்பட விஷால் தன் இருக்கைக்கு செல்கிறார்.  நம்ம "மாநிற" விஷாலுக்கு அருகே உலக நாயகன் கண்டெடுத்த பொக்கிஷமும் அமர்ந்திருந்தது. தமிழ் உலகத்துக்கு அவர் அறிமுகப் படுத்தியிருந்தாலும் பாலிவுட், மாலிவுட், டோலிவுட் என எல்லா ஏரியாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறது.  பார்த்த மாத்திரத்தில் அதன் அழகில் விழுந்தேன். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. வாழ்வில் நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்ற ஒரு விஷயத்தை செய்து பார்க்க ஆசை தோன்றுமே.. அப்படி ஒரு ஆசை அது..

                              அடிவிழலாம்.. ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரலாம்.. சுற்றியிருப்பவர்கள் கேவலமாக வசை பாடலாம். எது நடந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு  துணிவு வந்தது மனதிற்குள். வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டே முன்னே சென்றேன். ஷாட் முடிந்து வேறு இடத்திற்கு செல்ல பேக் அப் செய்து கொண்டிருந்தார்கள். விஷாலிடம் கையெழுத்து வாங்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. நான் மீனின் கண் மட்டும் தெரிகின்ற அர்ஜுனன் போல் என் இலக்கை நோக்கி நடந்தேன். அருகே வந்ததும் கொஞ்சம் தயக்கமும், பயமும் வந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொட்டே விட்டேன்..அந்த ரெட் ஒன் காமிராவை..!


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...