Saturday, April 27, 2013

யாருடா மகேஷ்- திரை விமர்சனம்

                             

                                      கல்லூரி கலாட்டாக்கள், இளைஞர்களின் காதல், நட்பு என முதல் பாதி முழுக்க குறும்பு பட சாயல் இருக்க, காதலில் ஜெயித்த ஹீரோ பாடங்களில் கோட்டை விட, காதலியோ கல்லூரியிலேயே முதல் மாணவியாய் வந்து மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்கிறார்.. சரி அத்துடன் காதல் முடிந்தது என்று பார்த்தால் மூன்றே மாதத்தில் அங்கிருந்து திரும்பி வரும் காதலி தான் கர்ப்பம் என்றும் அதற்கு காரணம் ஹீரோ தான் என்று கூறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். பின் மூன்று வருடங்கள் கழித்து பொறுப்பில்லாமல் சுற்றும் ஹீரோ தன் குழந்தையின் தந்தை தானல்ல, மகேஷ் என்று தெரிந்து கொண்டு அந்த மகேஷை தேடி அலைகிறான்.. அந்த மகேஷ் கிடைத்தானா.. அவனுக்கும் தன் மனைவிக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிப்பதே கதை.



                                      மூன்று நிமிடம் ஓடிய ட்ரைலரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் இல்லை. இருப்பினும் ஜெகனின் ஒன் லைனர்களும் உடல் மொழியும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.. கல்லூரியில் நடக்கும் கதையாக இருந்தாலே ஒரு ஆண் புரோபாசரையும், லேடி புரோபாசரையும் வைத்து பின்னப்படும் மொக்கை காமெடிகள் இதிலும் உண்டு. அளவுக்கு அதிகமான இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாச பஞ்ச் டயலாக்குகளும் இளைஞர்களை (?!!) கவர்வதற்காகவே வைக்கப்பட்டுள்ளது.



                                      கதாநாயகன் சந்தீப் நிறைவான அறிமுகம். ஜெகனின் காமெடிகளுக்கு சப்போர்ட் கொடுத்து தன் கேரக்டரை நிலைநிறுத்துகிறார். நாயகி டிம்பிள் கொடுத்த (?!!) வேடத்தை தாராளமாக செய்திருக்கிறார். இயக்குனர் மக்களிடம் கைதட்டல் வாங்குவதற்காகவே சில காட்சிகளை புகுத்தியிருப்பது தெரிகிறது.. உதாரணத்துக்கு நாயகன் கார் ஓட்டும் போது முன்னால் வந்து விழும் குடிகாரனின் காட்சி முடிந்த பின்னும் "குடிகாரனும் கொழந்தையும் ஒண்ணு" என்று டயலாக் பேசி செல்வதெல்லாம் டூ மச்.



                                     கோபி சுந்தரின் இசை இரைச்சல் இல்லை.. ஆனாலும் "ஏமாத்திட்டா" பாடலைத் தவிர வேறேதும் மனதில் நிற்கவில்லை. இயக்குனர் கிளைமாக்சில் கொடுக்க நினைக்கும் ட்விஸ்ட் ஆவின் பாலில் முக்கியெடுத்த பப்படமாய் போகிறது. வாழ்க்கையில் செம்ம போர் அடிக்கும் ஒரு மட்ட மத்தியானத்தில் போனால் போகிறதென்று இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

30 / 100                                   



\                    \\\\

Friday, April 26, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (காதலா? கத்தாஸா?)-4

முந்தைய பதிவுகளுக்கு...




                                   ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த திங்கள் கிழமை வந்ததும் காலையில் நேரமாகவே எழுந்து அசோகன் கடையில் காலை உணவை முடித்துக் கொண்டு, நேராக லைப்ரரியின் முன் சென்று நின்றேன். என்னைப் பார்த்ததும் இளங்கோ மாஸ்டர் மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார்.  அங்கே நின்றிருந்த சீனியர் தீபக்  என்னை அழைத்து, " என்னடா, சீனியர் ஏதாவது செய்ய சொன்னா செய்ய மாட்டீங்கறியாமே.." என்றான். அவனுக்கு பதிலேதும் சொல்லாது நான் நின்றிருக்க அப்போது அவ்வழி வந்த என் வகுப்பில் படிக்கும் ஜீவா என்ற மாணவன் இடைபட்டு " அண்ணே, அவன் நம்ம பய தான்னே, நான் அவன்கிட்டே சொல்றேன்" என்றான். "சொல்லி வை ஜீவா" என்றபடி நகர்ந்தான் தீபக். "மச்சி சீனியர் சொன்னா செஞ்சுட்டு போக வேண்டியது தானே, காலேஜ் வந்தமா, பிகர் பாத்தாமான்னு இல்லாம இவன்கிட்ட எல்லாம் ஏன் மொறைச்சுக்கிற?" எனவும் இன்று மாலையோடு இந்த சீனியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என மனதில் வெறி தோன்றியது, குறிப்பாக இந்த தீபக்கின் முகத்தில் முதல் குத்து விட வேண்டும் என மனம் எண்ணியது.

                                         வகுப்பில் நுழைந்ததும் கண்ணில் பட்டது ரமாதான். ஒரு பச்சை நிற சுடிதாரில் "கேரளா ஸ்டைலில்" தலை பின்னிக் கொண்டு நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டுடன் அமர்ந்திருந்தாள். இடப்புறம் சங்கீதாவும், வலப்புறம் மற்ற பெண்களும் இருந்த போதும் லென்ஸ் போகஸில் அவள் மட்டுமே தெரிய மனசுக்குள் "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே" பீட் அடிக்க ஆரம்பித்தது.  அவளிடம் பேச வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. பாஸ்கர் வருவதற்குள் பேசி விடவேண்டும். இல்லையென்றால் அவர்கள் முன் வைத்தே ஏதாவது சொல்லி விடுவான் என்ற தவிப்பு வேறு. முதலில் சங்கீதாவிடம் பேசிவிட்டு பின் அப்படியே அவளிடம் பேசலாம் என்று எண்ணி தயாரானேன்.

                                        அவள் புறமாக திரும்பி "சங்கீதா, குட் மார்னிங்" என்றேன். அவளும் பதிலுக்கு குட் மார்னிங் சொல்ல " ம்ம் .. படம் எப்படி இருந்தது.." என்றேன்.  கேட்ட பின்புதான் வேறு ஏதாவது கேட்டு தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது. "பயங்கர போர். உனக்கு பிடிச்சுதா" என்று கேட்டதும் அவள் முதல் முறையாக ஒருமையில் அழைத்ததை கவனித்தேன். அவ்வாறு  அவள் வேண்டுமென்றே அழைத்ததாய் உணர்ந்தேன். நானும் "இல்லப்பா, போர் தான்.. உன் ப்ரெண்ட்சுக்கு பிடிச்சுதா?" என்று கொஞ்சம் குரலை உயர்த்தி அவளுக்கும் கேட்கும் வண்ணம் கேட்டேன். "அய்யோ, அவங்களுக்கு சுத்தமா பிடிக்கலே. ஆனா ரமாவுக்கு விஜயகாந்த்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால அவ மட்டும் ரசிச்சு பார்த்தா.. " என்று கூற அவள் திரும்பி ஒரு சிறிய புன்னகை மட்டும் சிந்தினாள். நல்லவேளை படத்தைப் பற்றி மோசமாக நான் எதுவும் சொல்லி வைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு " அப்படியா, விஜயகாந்தோட எந்த படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்" என்றேன் அவளை நோக்கி.

                                      "ம்ம்..சின்னக் கவுண்டராம்" பதில் அவளிடமிருந்து இல்லை. என் பின்னாலிருந்து. சற்றே திரும்பிய போது அங்கே பாஸ்கர் அமர்ந்திருந்தான். வடிவேலு ஸ்டைலில் "வந்துட்டான்யா, வந்துட்டான்யா" என்பது போல் பார்த்தேன். " எப்படா வந்தே?" என்றேன். "நீ கடலைய விதைக்கும் போதே வந்துட்டேன்டா". சங்கீதாவும் ரமாவும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொள்ள ஆசிரியை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. குள்ளமாகவும், சாந்தமாகவும் இருந்த அவர்களுக்கு குரல் சம்பந்தமே இல்லாமல் வி.டி.வி. கணேஷ் போல் இருந்தது. அவர்கள் இருந்த நாற்பது நிமிடமும் ஆங்கிலம் முதல் தாளை தமிழிலேயே எடுத்தது வியப்பாக இருந்தது.

                                       அன்று மாலை வழக்கம் போல் மாணவர்கள் கிராயூரை நோக்கி படையெடுக்க, நானோ எனக்கிருந்த காதலா, கராத்தேவா? என்ற கேள்வியில் கராத்தே ஜெயிக்க கல்லூரி மைதானம் நோக்கி ஓடினேன். கல்லூரியை விட்டு வெளியே செல்லும் போது அவள் நான் கராத்தே செய்து கொண்டிருப்பதை பார்க்க கூடும் என்ற சந்தோஷம் வேறு. இளங்கோ மாஸ்டரும் வந்துவிட மொத்தம் பதிமூன்று பேர் இருந்தோம். முதல் நாள் வார்ம் அப் மட்டும் செய்து கொள்ளலாம் என்றும் அடுத்த நாளில் இருந்து கத்தாஸ் (கராத்தே யுத்திகள் ) கற்றுத் தருவதாயும் கூறினார். அன்றே ஒரு டெய்லர் வந்து கராத்தே உடைக்கு அளவெடுத்து சென்றார். எங்களை வரிசையாக நிற்க வைத்தார். முதல் ஆளாக நானும் என் பின்னே பாஸ்கர் மற்றும் கடைசியில் அன்புவும் நின்றிருந்தோம்.



                                     இளங்கோ மாஸ்டர் முன்னே வந்து அவரது வலது காலை தூக்கி இடுப்பளவில் வைத்து அசைக்காமல் அப்படியே ஒரு நிமிடம் நின்றார். பின் எங்களை அதே போல் செய்யப் பணித்தார்.  எல்லோரும் காலைத் தூக்க முதலில் என்னிடம் வந்து வெரிகுட் என்றார். பின் பாஸ்கரிடம் சென்று முட்டி மடக்காதே என்றார். இப்படியே மற்ற பதினோரு பேருக்கும் சொல்லி வர அதற்குள் பாஸ்கர் காலை கீழே வைத்திருந்தான். எனக்கு கால் தொடைப் பகுதி வலித்த போதும் "வெரிகுட்" சொல்லிட்டாரே என்ற காரணத்தால் பொறுத்துக் கொண்டு நின்றேன். காலை கீழே வைத்து விட்ட பாஸ்கரை "டேய் காலை தூக்கு. இது கூட பண்ண முடியலேன்னா உன்னால எப்படி கராத்தே கத்துக்க முடியும் என்று கடிந்து கொண்டார். மாஸ்டரின் செயல் பிடிக்காததால் பாஸ்கர் பேக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

                             ஓரிரு வாரங்கள் கராத்தே கற்றுக் கொண்டதும் ஒரு புது தன்னம்பிக்கை பிறந்தது. ஒவ்வொரு முறை கிக் செய்யும் போதும், பஞ்ச் கொடுக்கும் போதும் மனசுக்குள் ஜாக்கி ஜான் போல் உருவகப் படுத்திக் கொண்ட போது இன்னும் ஈடுபாட்டுடன் செய்ய முடிந்தது. அப்போது ஒரு வெள்ளிக் கிழமை மாலை கல்லூரியை விட்டு கிளம்பிய போது ரமா  "ஆனந்த்"  என்றபடி என்னை நோக்கி ஓடி வந்தாள்..

(தொடரும்)





Wednesday, April 24, 2013

ஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...


                                  இந்த வருட ஐ.பி.எல் ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பல கடைசி பந்து மேட்சுகளும் , சில சூப்பர் ஓவர் மேட்சுகளும் நடந்து முடிந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியின் வெற்றிக்கென ஓடி ஓடி உழைப்பது தெரிகிறது. இதோ எல்லா அணிகளும் கிட்டத்தட்ட முதல் சுற்றை  முடித்து விட்ட நிலையில் அணிகளின் நிலையையும், சாதனை வீரர்களையும் பார்ப்போம்..
                    

அணி
போ
வெ
தோ
புள்ளி
ர.வி
RCB
8
6
2
12
1.254
CSK
7
5
2
10
0.648
SRH
7
5
2
10
-0.104
RR
7
4
3
8
0.588
KXIP
7
4
3
8
0.343
MI
6
3
3
6
-0.194
KKR
6
2
4
4
0.021
PW
8
2
6
4
-1.467
DD
8
1
7
2
-0.954

                       பட்டியலின் கடைசியில் இருக்கும் அணி டெல்லி.. மும்பையுடன் விளையாடிய ஒரே ஒரு போட்டியில் மட்டும் வீரு  வீறு கொண்டு எழுந்தாலும் மற்ற போட்டிகளில் சேவாக், ஜெயவர்தனே, வாண்டமேர்வ், வார்னர்  நெஹ்ரா மற்றும் மோர்னே மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் சோபிக்காததே காரணம். இனிவரும் எல்லா போட்டிகளிலும் ஜெயித்தாலும் இவர்கள் ப்ளே -ஆப் சுற்றுக்கு வருவது கடினம். ஆனால் இவர்கள் ஒன்றிரண்டு போட்டிகளில் ஜெயிப்பத்தின் மூலம் மற்ற அணிகளின் விதியை தீர்மானிக்கலாம்.

                       புனே வாரியர்ஸ் அணி நான்கு புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி நிகழ்த்திய அந்த கொடூரத்தை மறந்துவிட்டு போராடினால் மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கலாம். 

                        கொல்கத்தா சிறப்பாக துவங்கி பின் மரண அடிகளை வாங்கி கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது.  சுனில் நரேன் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. யூசுப் பதான் மற்றும் கம்பீர் அதிரடி காட்டினால் கொஞ்சம் முன்னுக்கு வரலாம்.

                        மும்பை அணியின் ஒவ்வொரு வீரர்களும் நட்சத்திர வீரர்களே, ஆயினும் ஆறாவது இடத்தில் இருப்பதற்கு காரணம் முதியோர்களை அணியில் வைத்துக் கொண்டு, எத்தனை தினேஷ் கார்த்திக் போலார்டு மற்றும் ரோஹித் சர்மா வந்தாலும் இவர்கள் மேலே வருவது கடினம் என்றே தோன்றுகிறது. ப்ளே -ஆப் வாய்ப்புகளை கஷ்டப்பட்டு தான் பெற வேண்டும்.

                          ஆச்சர்யம் ஆனால் உண்மை. கில்கிறிஸ்ட் தவிர பெரிய தலைகள் அதிகமில்லாமல் நல்ல முன்னேற்றம் காட்டியுள்ளது ப்ரீத்தி ஜிந்தாவின் கிங்க்ஸ் 11 படை. இவர்கள் இதே போல் விளையாடினால் மற்றவர்களை விட மேல வர முடியும்.

                           ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழக்கம் போல் மிதமான வேகத்தில் மேலே வருகிறது. ஷேன் வாட்சன், டிராவிட் , ரகானே தொடர்ந்து அசத்தி வருகிறார்கள். ப்ளே -ஆப் வாய்ப்புகள் அதிகம் உள்ளது இந்த அணிக்கு. 


                          சன்  குழுமத்தின் அணி சர சரவென மேலே சென்ற போதும் இவர்கள் பேட்டிங் பிரமாதமாக இல்லை. பந்துவீச்சு சிறப்பு.. பீல்டிங்கும் ஒகே.. மும்பைக்கும் இவர்களுக்கும் ப்ளே- ஆப்பில் நுழைய கடும் போட்டி இருக்கும்.

                           இரண்டாமிடத்தில் சூப்பர் கிங்ஸ். ஒவ்வொரு ஐ.பி.எல்லிலும் தடுமாற்றத்துடன் தொடங்கி பலம் பெறுவது இவர்கள் வாடிக்கை. இந்த முறை சில வெற்றிகளை குவித்த போதும் எந்த வெற்றியும் எளிதில் கிட்டவில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த வெற்றிகள் அவை.. நல்ல விஷயம் ஒவ்வொரு போட்டியில் ஒவ்வொரு வீரர்கள் அசத்தி வருவது. கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் உள்ளது.



                           முதலிடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதல் சில போட்டிகளில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் சுதாரித்து இந்த ஐ.பி.எல் லின் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது.. அதிரடி என்ற சொல்லுக்கு கெய்ல் என்று அர்த்தம் உள்ளதோ என்ற ஐயம் வருமளவிற்கு இவர் அடித்த 175 ரன்களை இன்னும் பல வருடங்கள் பேசும் இவ்வையகம். உடன் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சௌரப் திவாரி பேட்டிங்கில் அசத்த பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்கள். சென்னை மட்டுமே இவர்களுக்கு கோப்பை வெல்ல பெரும் சவாலாக இருக்கும் என்ற போதும் இனி வரும் போட்டிகளிலும்  இதே ஜோருடன் ஆடி ஜெயிக்க வேண்டும்.. 

                                             





Saturday, April 20, 2013

உதயம் NH4 - திரை விமர்சனம்.


                              ஒரு மந்திரி பொண்ணை, ஒரு மிடில்க்ளாஸ் பையன் லவ் பண்றான். அந்த பொண்ணும் அவனை உயிருக்குயிரா லவ் பண்றா.. நண்பர்கள் இவங்க காதலுக்கு உதவறாங்க. மந்திரி அதுக்கு நோ சொல்றார். கல்லூரியின் கடைசி நாளில் கிளிகளுக்கு ரெக்கை முளைத்து பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி NH4 ல பறந்து போயிடுது.. மந்திரி அவங்கள புடிக்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏற்பாடு பண்றார். அவரு புடிச்சாரா, இவங்க மாட்டுனாங்களா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்ல வந்திருக்கும் படம்தான் இந்த உதயம்.



                              சித்தார்த் கேரக்டரை அருமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.. பொறுமை, தைரியம், புத்திசாலித்தனம் இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஹைவேயின் குறுக்கே போலிஸ் வண்டியை வழிமறிக்கும் காட்சியில் நல்ல நடிப்பு. நாயகி அஸ்ரிதா, புதுமுகம் என்றாலும் இளைஞர்களை கவரும் முகமாக இருக்கிறார். தமிழ் உச்சரிப்பில் இன்னும் தேற வேண்டும் என்றாலும் கான்வெண்டில் படித்த பெங்களூரில் வாழும் பதினேழு வயது பெண் கேரக்டர் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.



                                படத்தின் மற்றொரு பலம் போலீஸாக வரும் கே.கே.மேனன்.. போலீசுக்கே உரிய கம்பீரமும், மிடுக்கும் இவரிடம் மிளிர்கிறது. ஆரம்பம் முதலே இவரை பாசக்கார கணவராகவும், அன்பான அப்பாவாகவும் காட்டும் காட்சிகளிலேயே நமக்கு படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது எனினும் அவர் அஸ்ரிதாவை கூட்டிக் கொண்டு போகும் போது மனம் பதைபதைக்கிறது. மற்றொரு முக்கிய ப்ளஸ் வெற்றிமாறனின் திரைக்கதை.. சிம்பிளான கதையில் திருப்பங்களை தந்து ஆடியன்சை இருக்கையில் கட்டிப் போடுவது நல்ல திரைக்கதை மட்டுமே..


                                 ஜி.வீ.பிரகாஷ் இசையில் யாரோ இவன் பாடலும் ஓரக் கண்ணாலே பாடலும் இனிமை. ஆயினும் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாமோ?  சித்தார்த்தின் நண்பர்கள் மற்றும் போலிஸ் கான்ஸ்டபிள்  ஆகியோர் நம்மை அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்க்ஷன் என சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை குடும்பத்துடன் பயணம் செய்ய நிச்சயம் இனிமையாக இருக்கும்.


85 / 100




Friday, April 19, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (கிராயூர் எனும் ஏதேன்)-3




                            தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்வது கடினமாக இருந்ததால் வண்டிகேட்டில் இருந்த கவுண்டர் காம்ப்ளக்ஸில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினேன். (காம்ப்ளக்ஸ் என்றவுடன் என்னவோ ஏதோன்னு நினைச்சுக்க வேண்டாம். ஹாலோபிளாக் சுவரும், ஓலைக் கூரையும் போட்ட ஒரு பத்து அறைகள் கொண்ட இடம் தான் அந்த காம்ப்ளக்ஸ். )  அங்கேதான் அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவனான அன்பழகனை சந்தித்தேன். என் சமையல் கைப்பக்குவதிற்கு குரு அவன்தான் என்றால் மிகையல்ல.

                              கவுண்டர் வெளியூர் போயிருக்கும் போது அவர் வளர்த்தும் கோழிகள் எங்களை பரிதாபமாக பார்க்கும். அவற்றின் பிறந்த பலனை நிறைவேற்றும் பொருட்டு (?!!)  நாங்கள் அவைகளுக்கு அவ்வப்போது மோட்சம் அளிப்பதுண்டு. சனி, ஞாயிறுகளில் அன்புவின் சமையலில் அந்த ஏரியாவே மணக்கும். ஆறடி வளர்ந்த அந்த அன்புவுக்கும் அதே சீனியர்களால் ரேகிங்  தொல்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது தான் எங்கள் ஆபத்பாந்தவனாய் வந்தார் இளங்கோ மாஸ்டர். ஆங்கிலம் இரண்டாம் தாள் எடுக்க வந்த அவர் சற்றே உயரம் குறைந்து அல்ட்ரா மாடர்ன் அகத்தியர் போல் காட்சியளித்தார்.

                                அவர் ஆங்கில ஆசிரியராய்  மட்டுமல்லாது லைப்ரரியனாகவும் பணிபுரிந்தார். ஒரு நாள் மாலை நானும் பாஸ்கரும் லைப்ரரி சென்ற போது அவர் எங்களை அழைத்து "டேய், வர்ற திங்கள் கிழமையிலிருந்து கராத்தே கிளாஸ் ஆரம்பிக்க போறேன். உங்க கிளாசுல யார் யாருக்கு இண்டரெஸ்ட் இருக்கோ அவங்களையெல்லாம் சேர சொல்லு." என்றார்.. இதை கேட்டதும் எனக்கும் பாஸ்கருக்கும் கண்களில் ஹேவெல்ஸ்.. அப்போதே எங்கள் மனத்திரையில் கராத்தே கற்றுக் கொண்டு சீனியர்களை பந்தாடுவது போல் Bluray  திரைப்படமே ஓடியது. கிளாசுக்கு வந்து எல்லோருக்கும் இந்த நற்செய்தியை கூற, நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக கராத்தே கற்றுக் கொள்வதற்கு யாருமே ஆர்வமாக இல்லை.

                             அன்று மாலை கல்லூரியை விட்டு செல்லும்போது கல்லூரிக்கு அருகிலிருக்கும் மற்றொரு கிராமமான கிராயூரில் தங்கியிருந்த மாணிக்கம் "டே, நம்ம கிளாசுக்கு வர்ற மத்த மூணு பொண்ணுங்க கிராயூர்ல தான் வீடு வாடகைக்கு எடுத்திருக்காங்களாம்" என்ற பயனுள்ள தகவலை கூற, வழக்கம்போல் பாஸ்கர் "இந்த பொண்ணுகள பத்தி இல்லாமே வேற எந்த விஷயமும் பேசமாட்டீங்களாடா?" என்று கடிந்து கொண்டான். மாணிக்கத்துடன் அந்த புது மாணவிகளை பார்க்க கிளாசில் பாதிப் பேர் கிராயூர் நோக்கி படையெடுக்க, பாஸ்கர் என்னிடம் அன்று மாலை சினிமாவுக்கு செல்லலாம் என்றும் தயாராக இருக்கும்படியும் கூறினான். எனக்கும் கிராயூர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சினிமா என்றதும் மனம் மாறிவிட்டது. பாஸ்கருடன் அருகிலிருந்த மோகனூர் எனும் ஊரிலுள்ள "அய்யனார்" தியேட்டரில் தாயகம் எனும் காவியம் காணச் சென்றோம்.

                               எவ்வளவோ மொக்கை படங்களை கூட அசராமல் உட்கார்ந்து பார்த்துவிடும் எனக்கே கேப்டனின் அட்ராசிட்டிகள் அலுப்பைக் கொடுக்க, பாதிப் படத்தில் போய் விடலாமென பாஸ்கரை கட்டாயப் படுத்தினேன். வேறு வழியில்லாமல் அவனும் சம்மதித்தான். இடைவேளை விட்டதும் இருவரும் வெளியே வர, தொலைவில் சங்கீதா கையில் ஐஸ்க்ரீமுடன் வருவதைப் பார்த்தேன். அவளுடன் அவளது முகச்சாயலிலேயே இன்னொரு பெண்ணும் (அக்காவாக இருக்கலாம்), உடன் இன்னும் மூன்று பெண்களும் நடந்து வந்தனர். அவர்கள் தான் புதிய மாணவிகளாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே யோசித்துக் கொண்டு பாஸ்கரிடம் "சரி, வந்தது வந்தாச்சு.. படம் முழுசா பாத்துட்டே போலாம்" என்றேன். அவனோ  நின்று எனைப் பார்த்து முறைத்தான்.. விடாமல் அவனிடம் "சரி, சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா.. நான் உள்ளே உக்கார்ந்திருக்கேன்" என்றேன். சங்கீதாவைப் பற்றி கூறினால் கோபப்படுவான் என்பதால் அவனை அங்கே அனுப்பிவிட்டு தேவதைகளை நோக்கி நடந்தேன்.



                             சங்கீதா என்னைப் பார்த்ததும் புன்னகைத்து "ஆனந்த், எங்கே படத்துக்கு வந்தீங்களா?" நானோ "இல்லீங்க, பக்கத்துல ஒரு பஞ்சாயத்துக்காக வந்தேன்.." என்றேன். அவள் என் ஜோக்கை (?!!) புரிந்து சிரித்துவிட்டு மற்ற மூவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அதில் ரமாதேவி எனும் பெண் பார்ப்பதற்கு கருப்பு நிற கனகா போல் சாயலில் இருந்தாள் . மெலிந்த தேகம், புன்னகை பூத்த முகம் பார்த்தவுடன்  மனம் பறிகொடுத்தேன். "என்ன சங்கீதா இவங்களையெல்லாம் இன்றோட்யூஸ் பண்ணினீங்க உங்க அக்காகிட்டே பண்ணலையே" என்றேன்.. "அய்யோ  அவங்க என் அக்கா இல்லை, எங்க அம்மா.." என்றதும் சற்றே வெட்கப்பட்டு என்னைப் பார்த்து சிரித்தார்கள். பதிலுக்கு நானும் அசடு வழியும் முகத்துடன் அவர்களிடமிருந்து விடைபெற்று பின் இரண்டாம் பாகத்தை பார்க்க தயாரானேன்..

                            படம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அன்புவிடம் நடந்ததை கூறினேன். அவனும் கேட்டுவிட்டு "எப்படியோ மொத சந்திப்புலயே அத்தைய கரெக்ட் பண்ணீட்டே" என்றான்.. "ஐயோ, சங்கீதா என் ப்ரெண்டுடா.. அந்த ரமாவைப் பார்த்ததும் தான்  முதல் பார்வையிலேயே விழுந்துட்டன்டா.. " என்றவுடன்  "சூப்பர்ரா, கலக்கு.. யார் அந்த பொண்ணுன்னு நாளைக்கு எனக்கு காட்டு  " என்றான். "கண்டிப்பாடா.. எல்லோருமே கிராயூர்ல தான் தங்கியிருக்காங்களாம்."

                    " ஏ, கிராயூரே,
                       ஏஞ்சல்கள் தங்கியிருக்கும் இடமானதால்-
                       ஏதேன் என்ற பெயரும் பெற்றாயோ? "  

என்றவுடன் "டே.. காதல் வந்தவுடன் இலவச இணைப்பா கவிதையும் வந்துருச்சா? என்று கூறி என் காதல் கேண்டிலுக்கு லைட்டை ஏற்றினான்.. அன்றிரவு மணி பன்னிரெண்டான போதும் ஏனோ தேவையில்லாமல் "இது காதல் கவிதைகள் படித்திடும் நேரம்" பாடல்  மனசுக்குள் ரிப்பீட் மோடில் ஒலித்தது..

(தொடரும்..)

                           







Wednesday, April 17, 2013

பாட்ஷா - திரை விமர்சனம்

                               


                                பாட்ஷான்ற பேர் கேட்ட உடனே நமக்கு தாடியோட ரஜினியும், அவருக்கு பின்னாடி பாடிகார்டா நாலு பெரும் வர்ற காட்சி நம்ம கண்ணுக்கு முன்னாடி வர்றத தவிர்க்கவே முடியாது. இது நான் ஹிந்தி பாட்ஷா வந்த போதும் சரி, இப்போ தெலுங்கு பாட்ஷா வந்த போதும் அதே விஷுவல் தான். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலாவின் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளிவந்திருக்கும் படம் இந்த பாட்ஷா..


   
                                  இதே இயக்குனர் இயக்கி மகேஷ் பாபு  நடித்து வெளிவந்த டூக்குடு படமும் இதே கதையை ஒத்திருப்பதாக நம்ம பிலாசபி பிரபாகரன் அவர்கள் எழுதியிருந்தார்.. இந்த படம் மட்டுமல்ல தெலுங்கில் வெளியாகும் ஐந்தில் நான்கு படங்கள் இதே பார்முலாவில் தானே வெளிவருகிறது. சரி அத விடுங்க, கதைக்கு வருவோம்.. என்.டி. ஆரின் தந்தை மாபியா கும்பல் தலைவன் கெல்லி டோர்ஜியிடம்  வேலை பார்ப்பது பிடிக்காமல் அவரிடமிருந்து விலகி இரு மகன்களுடன் (என்.டி .ஆர் மற்றும் சித்தார்த் ) தனியே வாழ்கிறார் சுஹாசினி. ஒரு வெடிகுண்டு விபத்தில் சித்தார்த் உயிரழக்க, அந்த விபத்துக்கு காரணமான கெல்லி டோர்ஜியையும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் பொடி வில்லன்கள் ஆஷிஷ் வித்யார்த்தி, பிரதீப் ராவத் ஆகியோரை வதம் செய்கிறார். வெடி மருந்துகளை இந்தியாவிற்கு கடத்தும் கெல்லியின் முயற்சியை காஜலை காதலித்து கொண்டே எப்படி தடுக்கிறார் என்பது தான் கதை..



                                 முதல் பாதியில் காஜலை  கவர என் .டி .ஆர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அரதப் பழசானாலும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக காஜலை  தவிர வேறெந்த பெண்ணும் உண்மையாய் இருப்பதில்லை என்று அவர் பேசும் நீள வசனம் தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது. பின் பாதியில் பிரம்மானந்ததின் அதிரடி காமெடிகள் நம் வயிற்றை  புண்ணாக்குகிறது. அதிலும் அவர் "When a fire fires a fire" என்று ஆரம்பித்து மூச்சு விடாமல் பேசும் இடத்தில் அசத்துகிறார். கதாநாயகி காஜல், கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். என்.டி. ஆரின் அசுர நடனத்துக்கு முன் சுமார் தான் என்றாலும் ரசிக்க வைக்கிறார். சாயாஜி ஷிண்டே நல்ல போலிஸ். நவ்தீப் கெட்ட  போலிஸ், ரிவெஞ் நாகேஸ்வர ராவ் (எம்.எஸ்.நாராயணன்) என்ற டைரக்டர் வாயிலாக இயக்குனர் சொல்வது அனைத்து மசாலா டைரக்டர்களுக்கும் பொருந்தும்.

                               
                                  தமனின் இசையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. டைமண்ட் கேர்ள் (நம்ம சிம்பு பாடியது) மற்றும் கனகம் பாடலும் அருமையான இசைக் கோர்வை. தலேர் மேஹெந்தியின் குரலில் ஒரு பாடல் இனிமை. இத்தாலியின் அழகுகளை கண் முன் நிறுத்துகிறார் ஏழு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த ஸ்ரீனு வைட்டாலா.. என்.டி. ஆரின் ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லா தரப்பு மக்களும் ரசித்து மகிழும் வண்ணம் இருக்கிறது இந்த தெலுங்கு பாட்ஷா.



65 / 100






Tuesday, April 16, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (நட்பும், சங்கீதமும்)-2

முந்தைய பதிவுகளுக்கு...


                             வகுப்பறைக்குள் நுழைந்த எனக்கு பெரிய அதிர்ச்சி.. நான் என் புத்தகப் பையை வைத்து பிடித்திருந்த இடத்தில் வேறு ஒருவன் அமர்ந்திருந்தான்.. உள்ளுக்குள் கோபம் பொங்க, ஏற்கனவே ஏஞ்சல்களை எதிர்பார்த்து கிடைத்த ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள "ரட்சகன்" நாகர்ஜுன் போல் நரம்புகள் புடைக்க கோபத்துடன் அவன் அருகே சென்று, "ஹலோ, இங்க நான் பேக் வச்சிருந்தேன்.. " என்றேன்.. அவன் அலட்சியமாக என்னை பார்த்துவிட்டு கீழே கிடந்த என் பேக்கையும் ஒரு பார்வை பார்த்தான்.  அவன் செய்கை எனக்கு மேலும் கடுப்பைக் கிளப்ப " நான் நேரத்திலேயே வந்து இடம் போட்டிருந்தேன்" என்றேன்..  அவனோ " இதொண்ணும் பஸ் இல்லே.. துண்டு போட்டு இடம் பிடிக்க.."  என்று தெனாவெட்டாக பதில் சொல்ல, அவன் சொன்ன மாபெரும் ஜோக்குக்கு அருகிலிருந்த இருவர் சிரிக்க எனக்கோ கோபமும் அதே சமயம் அவமானமாகவும் இருந்தது.. ப்ரொபசரும்  அட்டென்டன்ஸ்  எடுக்க ஆரம்பிக்க வேறு வழியின்றி என் பேக்கை எடுத்துக் கொண்டு காலியாக இருந்த கடைசி பெஞ்சில் சென்று அமர்ந்தேன்..

                                 வழக்கமாக நான் படித்த பள்ளிகளில் எல்லாம் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரில் என் பெயர் முதலாவதாக இருக்கும்.. ஆனால் இங்கே எனக்கு முன்னால் A வில் மூன்று பேர் இருந்தனர். பெயர்களை வாசித்துக் கொண்டே வந்த ப்ரொபசர் "சங்கீதா" என்ற பெயரை சொன்னதும் எல்லாருடைய கவனமும் அந்த பெயரின் மீதே இருந்தது.. பழைய படங்களில் வருவது போல நின்று போன பறக்கும் பறவைகள், பொங்கி வரும் அலை, அசையா மரங்கள் எல்லாம் மீண்டும்  செயல்பாட்டிற்கு வந்தது போல மனதுக்குள் பழைய உற்சாகம் திரும்பியது.. அதன் பின் இன்னும் மூன்று மாணவிகளின் பெயர் கூறியதும் "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டபடியே ஆசிரியர் போர்டில் ஏதோ எழுத தொடங்கியதும் அதை கவனிக்க ஆரம்பித்தேன், கூடவே நோட்சும் எழுத ஆரம்பித்தேன்..  அப்போதுதான் கவனித்தேன் என்னைத் தவிர வேறு யாரும் நோட்ஸ் எடுப்பதாய் தெரியவில்லை..

                              "டேய், கட்டம் போட்ட சட்டை.. உன் பேர் என்ன?" என ஆசிரியர் பின்னால் இருந்த யாரிடமோ கூற, ஓரிரு வினாடிகளுக்கு பின் அவர் என்னைத்தான் கூப்பிடுகிறார் என உணர்ந்து "ஆனந்த் சார்" என்றேன்.. "ஏண்டா, நீ இருக்கிற உயரத்துக்கு கடைசி வரிசையில் உக்காந்தா உனக்கு என்ன மண்டையில ஏறும்.. வந்து முன்னாடி உக்காரு.." எனக் கூற இதற்கும் முன்னாடியிருந்து சிரிப்பொலி கேட்க, ஆசிரியரோ "நெட்டையா இருந்துட்டு ரெண்டாவது பெஞ்சில் உக்கார்ந்திருக்கியே, நீ போய் பின்னாடி உக்கார்" என முன்னாடி அமர்ந்திருந்த ஒரு மாணவனைப் பணிக்க  முதலில் கோபம் வந்தாலும் பின் என்னுடைய செகண்ட் பெஞ்ச் கார்னர் சீட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. என் பக்கத்தில் இருந்த, எனது இடத்தை ஆக்ரமித்த அந்த லேண்ட் மாபியாவை பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை பூத்தேன்.  அவனோ அதை சட்டை செய்யவே இல்லை.

                                அந்த வகுப்பு முடிந்ததும் அவன் என்னிடம் " டேய், பக்கத்துல கேண்டீன் இருக்கு. டீ சாப்பிட்டு வரலாமா ?" என்றான்.. பழைய விஷயங்களை மறந்துவிட்டு உடனே நட்பு பாராட்டிய அவனை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவனுடன் கேண்டீனுக்கு செல்லும் வழியில் அவன் பெயர் பாஸ்கர் என்றும், திருவண்ணாமலையிலிருந்து  வந்திருப்பதாகவும் கூறினான்.. மேலும் நான் குடித்த காபிக்கும் சேர்த்து அவனே பில் கட்டியதில் நட்பின் பலம் இன்னும் கூடியது. திரும்பி வர சிறிது தாமதமானதால் ஆசிரியர் வகுப்பை ஆரம்பித்திருந்தார். அவரிடம் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த போது மூன்று  வரிசை கொண்ட அந்த வகுப்பில் மத்திய வரிசையில் இரண்டாவது பெஞ்சில் (என் இருக்கைக்கு மிக அருகில்) ஒரு பெண் அமர்ந்திருக்க ஒரு கணம் "மேலே, மேலே, மேலே போயிபுட்டேன்.."...

                           அந்த வகுப்பு முடியும் வரை பெரும்பாலானோரின் கண்கள் அவளின் மீதே இருந்தது. வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியே சென்றவுடன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் (நானும் தான்)  அவள் என்னிடம் திரும்பி "ஐயாம்  சங்கீதா..லேட்டா வந்தனால முதல் ரெண்டு பீரியட் மிஸ் பண்ணிட்டேன். அந்த நோட்ஸ் கொஞ்சம் கொடுக்கறீங்களா?" எனவும் அருகிலிருந்த சக மாணவர்களுக்கும் காதில் புகை..  "இந்தாங்க" என்றபடி உடனே என்னுடைய நோட்டை நீட்ட, " ஒரு பொண்ணு  கேட்டா உடனே தூக்கி கொடுத்துருவியே.."  என்ற பாஸ்கரின் வார்த்தையை கண்டுகொள்ளாமல்.

                             காய்கறிகள் இல்லாத போது கறிவேப்பில்லை கூட சுவையாக தெரியும் என்பது போல ஒற்றை மாணவியாய் அவள் தான் எல்லோருக்கும் ஒரே டைம் பாஸ். இப்படியே ஒரு வாரம் ஓடியது. சீனியர்களின் ரேகிங் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. காலை மற்றும் மதிய உணவு இடைவேளை, பஸ்ஸில் போகும்போது இப்படி எல்லா நேரமும் விடாது டார்ச்சர் கொடுத்த அவர்களை எதிர்க்க மனதில் துணிவு இல்லை.. எனை போலவே பாஸ்கரும் பாதிக்கப்பட்டதால் இதை எப்படி தவிர்ப்பது என்று ஆலோசனை செய்தோம். எங்களுக்கு உதவி செய்ய கடவுளே அனுப்பி வைத்தது போல் வந்தார் இளங்கோ எனும் ஆசிரியர் வடிவில் இருந்த தேவதூதன்.. அவர் அன்று கூறிய செய்தி எங்கள் இருவரின் கண்களிலும் பிரகாசத்தை உண்டு பண்ணியது..

(தொடரும்)




Tuesday, April 9, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (வண்டிகேட்டில் வரவேற்பு)-1




                            பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் வரும் கேள்வி, அடுத்து என்ன படிக்க போறோம்.. +2 னா  என்ன குரூப் எடுக்கணும் அப்படீன்னு.. எனக்கும் அதே கேள்வி வந்துச்சு.. ஆனா அது கூடவே  இன்ஜினியர் ஆகணும்ங்கற  கனவு வேற.. பத்தாததுக்கு எங்க அண்ணா டிப்ளோமா முடிச்சுட்டு விப்ரோல பெரிய வேலையில இருந்தாரு.. எல்லாமா சேர்ந்து அப்பா, அம்மா, ஒண்ணு  விட்ட பெரியம்மா(?!!) இப்படி  பல பேர் சொல்லியும்  கேட்காம அடம்பிடிச்சு பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.. எப்படியாவது மூணு வருஷத்துல இன்ஜினியர் ஆயிடலாம்னு கனவு. ரெண்டாவது காலேஜ் வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கற ஆவல்.

                             அடிச்சு புடிச்சு நாமக்கல்ல ஒரு பாலிடெக்னிக்ல எங்க பெரியப்பா புண்ணியத்துல ஒரு இடம் வாங்கி (ஏன் கோயமுத்தூர்ல கிடைக்கலயான்னு கேக்கப் படாது..  இவ்வளவு அறிவுள்ள பையன் வெளியூர்ல தங்கி படிச்சாதான் உலக ஞானம் வரும்னு சொல்லி கோவையில ஒரு பயபுள்ளையும் சீட்டு குடுக்கலே..) சேர்ந்தாச்சு.. அட்மிஷன் போடும்போதே எல்லா நாளும் கலர் டிரெஸ்.. லேப்  அன்னைக்கு மட்டும் யுனிபார்ம் (காக்கி ஸ்கொயர்) போடணும்னு சொன்னபோது மனசுக்குள்ள வந்த சந்தோசம் இருக்கே.. அடடடா..

                             ஆச்சு.. ஓபனிங் டேவும் வந்துடுச்சு.. ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சு நாம இன்ஜினியர் படிப்பு படிக்க போறோம்னு மனசுக்குள்ள ஒரே துள்ளல்.. துள்ளலுக்கு அது மட்டுமா காரணம், எட்டாவது வரை பாய்ஸ்  ஹை-ஸ்கூல்ல படிச்சுட்டு ஒன்பதாவதுக்கு கோ-எட் வந்தா அங்கே அதே ஸ்கூல்லயே அப்பாவும் வேலை செஞ்சதால ஸ்கூல் கேம்பசுக்குள்ள ஒரு பொண்ணுக கிட்டயும் சரியா பேசினது கிடையாது.. தவிர நம்ப தமிழ் சினிமாக்கள் காலேஜ் பற்றிய கலர் கலர் கனவுகளை விதைத்திருக்க, திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை ஓடி வந்த அபலைபோல் அந்த கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தேன்.. நிற்க.. காலேஜுக்கு வர்ற வழில ஒரு சின்ன பிளாஷ்பேக்..

                              மொத நாளாச்சே அப்புடீன்னு எங்க பெரியப்பா என்ன கொண்டுவந்து காலேஜ் பக்கத்துல இருக்கிற பஸ்டாப்புல இறக்கிவிட்டுட்டு போயிட்டாக.. காலேஜுக்கு லேட்டாச்சுன்னு சாப்பிடாம வீராப்பா கிளம்பி வந்ததுல நல்ல பசி.. எங்க பெரியப்பா வரும்போதே பக்கத்துக்கு வீட்டுல இருந்த ஒரு சீனியர் பையன (சுரேஷ்) அறிமுகப் படுத்தி வச்சிருந்தார். அந்த சுரேஷ்கிட்ட பசிக்குது, சாப்பிட நல்ல ஹோட்டல் ஏதும் இருக்கான்னு கேட்டேன். இங்க ஹோட்டல் எல்லாம் கிடையாது, "அசோகன் கடை" ன்னு ஒரு மெஸ் இருக்கு. இந்த வண்டிகேட்லயே (வண்டிகேட் என்பது ஊர்பெயர் என புரிந்து கொள்க) அதுதான் பேமஸ் என்று எதோ தாஜ் ஹோட்டலை அறிமுகப் படுத்திய பெருமிதத்துடன் முன்னே நடந்தான்..

                              சீனியர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பிக்கும் என்பதால் எனக்கு அசோகன் கடையை காட்டிவிட்டு சுரேஷ் காலேஜுக்கு சென்று விட்டான்.. கடைக்குள் அப்பாவியாய் கண்களில் பயத்துடனும், ஒரு வித மிரட்சியுடனும், டாஸ்மாக்கில் முதல் முறை நுழைந்தவனைப் போல் பம்மியபடியே உள்ளே நுழைந்தேன்.. காரணம் அங்கிருந்த சீனியர்ஸ்.. என்னை பார்த்ததும் கன்னிப்பெண்ணை வட்டமிடும் வில்லன் போல் சுற்றி அமர்ந்து கொண்டு "எந்த ஊர்டா " என்றான் ஒருவன்.. நானோ எப்போதும் போல் "கோயம்பட்டூர் " என ஆங்கிலத்தில் (???) கூறினேன்.. என்ன பட்டூர்  என்று  ஒருவன் என் உச்சரிப்பை கிண்டல் செய்தான்.. கோயமுத்தூர்னு சொல்லணும் என்ன என நாலைந்து முறை எனை சொல்ல சொல்லி ரேகிங் செய்தனர். அதற்குள் அவர்களுக்கு நேரமாகிவிடவே அவர்கள் செல்ல, இந்த களேபரத்தில் சாப்பிட மனமில்லாமல் வெறும் வயிற்றுடனெ காலேஜில் காலடி எடுத்து வைத்தேன்..( பிளாஷ்பேக் ஓவர்)...

                                அடி வயிற்றில் பசி கிள்ள ஒருவாறாக வழி கேட்டு வகுப்பறைக்கு செல்ல அங்கே முன்பே ஒரு சில மாணவர்கள் வந்திருந்தனர். ஆனால் எனக்கோ பெருத்த ஏமாற்றம். பெண்கள் ஒருவர் கூட இல்லை.. (என்ன கொடுமை சார் இது??) வேறு வழியில்லாமல் இரண்டாவது வரிசையில் ஒரத்தில் பெஞ்சின் மீது என் புத்தகப் பையை வைத்துவிட்டு வெளியே வந்து நின்றேன்.. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை  இருந்ததால்  அங்கிருந்து வந்த ஒரு நாற்றம் குடலைப் புரட்டியது. கைக்குட்டையை முகத்திற்கு கொடுத்து யாராவது மாணவிகள் வருவார்களா என எதிர்பார்த்து நின்றேன்.. ஆனால்   வந்ததோ ஒரு ஆசிரியர், அதுவும் ஆண்.. உள்ளே நுழைந்தவனுக்கு பெரிய அதிர்ச்சி..

(தொடரும்..)







Friday, April 5, 2013

சேட்டை - திரை விமர்சனம்

         


                       ஹிந்தி டெல்லி பெல்லி தமிழ்க் கலாச்சாரத்துடன் சேட்டையாகி இருக்கிறது. கண்ணன் சார் ரீமேக்க விட்டு வெளியே வாங்க.. ஹிந்தியில் படத்தை பார்த்தவர்கள் அந்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்போவது உறுதி.. காரணம் அந்தப் படம் புகழ் பெற காரணமாயிருந்த சில முக்க்க்க்கிய  காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கென  நீக்கியது தான்.. இருந்தாலும் குடும்பத்துடன் சென்றால் மூட்டைப் பூச்சி இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெளிய வேண்டி இருக்கும்..



                        சரி, கதைக்கு வருவோம்.. 'ஒல்லி பெல்லி' இலியானாவின் பெயரில் தெருவோரக் கடையில் அசுத்தமான சூழலில் விற்கப்படும் சிக்கன் லெக் பீஸை  வாங்கி உண்ணும் "காமெடி சூப்பர் ஸ்டார்" (அப்படிதான் டைட்டில்ல போடுறாங்க) சந்தானத்தின் பெல்லியில் நடக்கும் சேட்டைகளால் எப்படி சந்தானம், ஆர்யா மற்றும் பிரேம்ஜி ஒரு கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்கள் என்பது  தான் படத்தின் கரு.. ஹீரோ ஆர்யாவுக்கு கூட  இன்ட்ரோ சாங்கோ, அதிரடி அறிமுகமோ இல்லை.. ஆனால் சந்தானத்திற்கு எல்லாம்  உண்டு. படத்தின் பெரும்பகுதி அவரைச் சுற்றியே நடக்கிறது. ஆர்யா ரொமேன்சிற்கும், ஹீரோ வேல்யுவிற்க்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்..



                       ஆர்யாவின் கேர்ள் பிரண்டாக ஹன்சிகா.. ஆர்யாவை ஒரு தலையாய் காதலிக்கவும், கடைசி காட்சிக்காகவும் அஞ்சலி.. போன படத்தில் குண்டா குஷ்பு மாதிரி இருந்த ஹன்சிகா சிக்குன்னு ஸ்லிம்ரன் மாதிரி ஆகிவிட்டார்..  நாசர் அதிகம் பேசாமல் அரங்கை அதிர வைக்கிறார்.. அதுவும் வைரக்கற்கள் என நினைத்து ஒரு டப்பாவை திறக்க, அதில் சந்தானத்தின் "ஸ்பெஷல் சேம்பிள்" இருப்பது கண்டு பொருமும் போது கலகல..



                       சிறிது நேரம் வந்தாலும் ஹவுஸ் ஓனர் ஆலி (தெலுங்கு காமெடியன்), ஷாயாஜி ஷிண்டே மற்றும் சித்ரா லட்சுமணன் (அவர் பேர  மங்கூஸ் மண்டயன்னே மாத்தீட்டாங்க).. ஒவ்வொருவரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் காமெடி என்றாலும் ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்ட தவறவில்லை.. அதிலும் சந்தானம் படம் நெடுக "மூக்கின் மேல்" விரல் வைக்க வைக்கிறார்..



                       தமனின் இசையில் இரண்டு பாடல்கள், பரவாயில்லை.. பின்னணி இசை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.. பிரேம்ஜிக்கு சோலோ சாங் எல்லாம் தேவையா.. (அதுக்கு சந்தானத்திற்கு கொடுத்திருக்கலாம்).. சந்தானம் கனவு காணும் முதல் பாடலுக்கு நீது சந்திரா நடனமாடியுள்ளார்.. மொத்தத்தில் கவலைகளை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.. சேட்டை - செம்ம ரகளை..


63 / 100


Wednesday, April 3, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்




                                பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எப்பவும் நல்லது மட்டுமே செய்வார்கள்.. அவர் கண்டிப்பதும், வசை பாடுவதும் நமது நன்மைக்காகவே என்ற கருத்தை சொல்ல முழங்காலை சுற்றி மூக்கை தொட முனைந்திருக்கிறார் இயக்குனர் பாண்டியராஜ். பொறுப்பற்ற இரு இளைஞர்கள் அரசியலில் குதிக்க நினைத்து அடிபட்டு பின் ஒரு நிரந்தர தொழில் தேடி செல்வதை காதல் வார்னிஷ் அடித்து சொல்லியிருக்கிறார்..

                                 

                               இளைஞர்களை ஈர்ப்பதற்காகவோ என்னவோ சிவகார்த்திகேயன் மற்றும் விமலை வைத்து சரக்குடன் படத்தை துவங்குகிறார்.. சிம்பு மற்றும் யுவன் சேர்ந்து பாடும் அந்த புறம்போக்கு பாடலுடன் ஆரம்பித்து முதல் பத்து நிமிட மொக்கை பார்த்து மறுபடியும் ஒன்பதுல குருவான்னு நாம நினைக்கும் போது மூன்று சக்கர (??!!)) ஸ்கூட்டியில் நாயகி ரெஜினா வந்தவுடன் விறுவிறுப்புடன் எழுந்து நிற்பது சிவகார்த்திகேயன் மட்டுமல்ல.. திரைக்கதையும் தான்..



                               நம்பர் ஒன், நம்பர் டூ இடங்களுக்கு வர முடியாவிட்டாலும் ரெஜினா நிச்சயம் தன் நடிப்பிற்காக இன்னும் சில படங்களில் தோன்றுவார் என நம்புவோம். சிவகார்த்திகேயன் நெற்றியில் பட்டையும், கழுத்தில் உத்திராட்ச கொட்டையுடன் மன்னன் ரஜினிகாந்த் போல் ( சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பொறுத்து கொள்ளவும்) அம்சமாக இருக்கிறார். இவருடைய டைமிங் சென்ஸ் பிரமாதம், ஆனால் மெரினா, கேபிகிரா போன்ற படங்களில் வீணடிக்கப் பற்றிருக்கிராரோ என்ற ஐயம்.. சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இவர் பாடும் பாடல்கள் அருமை.. 'எதிர்நீச்சல்'  போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


                             இதுவரை ஒரு ஐந்து ஆறு படங்கள் பார்த்த போதும் ஒன்றில் கூட முக பாவமோ, டயலாக் டெலிவரியோ மாற்றாமல் இதிலும் போரடிக்க வைக்கிறார் விமல். அதிலும் பிந்து மாதவியுடனான இவர் காதல் காட்சிகள் செம போர்.. விமலின் மாமனாராக வருபவர் குடித்துவிட்டு சொல்லும் கதை நல்ல ரசனை. பரோட்டா சூரிக்கு வழக்கம் போல் நண்பர் வேடம். சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.



                            பாடல்கள், பின்னணி  இசை சுமார்.. கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் பட்டையை கிளப்பி இருக்கிறார் பாண்டிராஜ்.. நல்ல மெசேஜ் சொன்ன அவருக்கு ஒரு மெசேஜ்- சென்டிமென்ட் படங்கள் மட்டுமே எடுங்களேன், காமெடி எல்லாம் வேணாமே சார். ரொம்ப சொதப்பறீங்க..


50 / 100




Monday, April 1, 2013

எனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)

                             சில பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அப்படி என் மனதில் இடம்பிடித்த ஒரு சில பாடல்களை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்..



                                 கப்பலேறிப் போயாச்சு, சுத்தமான ஊராச்சு கண்ணம்மா எனத் தொடங்கும் இந்தப் பாடல் இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிய இரவில் நாட்டு விடுதலைக்காக தன் மனைவியை விட்டுப் பிரிந்த கணவனும், கணவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மனையாளின் உணர்ச்சிமயமான வெளிப்பாடுமே இந்தப் பாடல்.  நாடு விடுதலை அடைந்த போது அடைந்த மகிழ்ச்சியை என் தலைமுறையினருக்கு அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இந்த பாடல் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடலாகும்..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...