Saturday, February 7, 2015

நான் அடிமை இல்லை..!

         
                          "மச்சான், எம்மேல ஏன் இம்புட்டு கோபம்?"

                          "பின்ன என்ன புள்ள, நேத்து சினிமாக்கு போலாம்னு சொல்லி உன்னை ஆறு மணிக்கு வரச்சொன்னேனே. நீ ஏன் வரல. நான் காத்துக் கெடந்துட்டு வெறுப்பாகிப் போனேன்."

                            "கோவிச்சுக்காத மச்சான், நான் வரணும்னு தான் பார்த்தேன். கிளம்புற நேரத்தில ஆத்தா ஒரு வேலை சொல்லி இருக்க வச்சிடுச்சு. என்னை வெறுத்திடாத மச்சான்."

                             ஆதரவாய் அணைத்துக்கொண்ட அவன் அவள் முதுகை வருடியபடி "என்ன புள்ள இப்படி சொல்லிட்டே. சினிமா கெடக்குது சினிமா. உனக்காக எவ்வளவு நேரம் வேணும்னாலும் காத்துக் கெடப்பேன். "

                               தன்னைப் அவன் புரிந்துகொண்டதை வெளிப்படுத்தும் வண்ணம் அவள் கண்ணில் ஒரு துளி நீர். அவன் கண்ணில் சந்தோஷம்.
 
                                                         --------------


                            "டார்லிங், 'தல' படம் ரிலீஸ் ஆகியிருக்கு. போலாமா?"
                            மறுமுனையில் சிறிது யோசனைக்குப் பின் "ம்ம்.. ஐ'ல் லெட் யூ நோ டா." டொக்.



                             ஐந்து நிமிடம் கழித்து "அம்மா பக்கத்துல இருந்தாங்க, அதான். நீ புக் பண்ணிடு. ஐ'ல் ட்ரை." டொக்.



                             "கமான் யார்.. ஐயம் வெயிட்டிங் பார் பாஸ்ட் பிப்டீன் மினிட்ஸ், வேர் ஆர் யூ?"
                             "டே, கிளம்பும்போது அம்மா ஒரு வேலை கொடுத்திட்டாங்க.. இன்னும் பத்தே நிமிஷம். ஐ'ல் பீ தேர்" டொக்.



                               "ஹே கமான், போற வர்றவனெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்கிறான்.. படம் போட இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு. ஆர் யூ கமிங் ஆர் நாட்?"
                               "டே கோவிச்சுக்காதே, என்னால இப்போ வர முடியும்னு தோணல. ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட் மை சிச்சுவேஷன் டா"
                                "வாட்.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு டிக்கட் புக் பண்ணினேன் தெரியுமா? ஆன்லைன்ல கெடைக்காம ப்ளாக்கில வாங்கி வச்சேன். டூ யூ நோ தி வேல்யு ஆப் மணி?"
                                "டே உனக்கு என்ன விட பணம் தான் பெருசா போச்சா?"
                                "வர முடியலேன்னா முன்னாடியே சொல்லியிருக்கலாமே, இப்படி அலைய வச்சிருக்க வேணாமே.. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்."
                                "எங்க கஷ்டங்கள் உங்களுக்கு எங்க தெரியப் போகுது. நான் ஒண்ணும் உன் அடிமை இல்லை. நீ சொல்ற எடத்துக்கு சொல்ற நேரத்துக்கு வர்றதுக்கு. டோன்ட் கால் மீ எவர்"
                                 "ஏய், நிஷா..!" டொக்.

                                                               ***************



                                  காலையில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை விட்டுவிட்டு வேலைக்கு வந்தது அவனுக்கே பிடிக்கவில்லை. என்ன செய்வது முதலாளியிடம் அவ்வளவு சீக்கிரம் விடுப்பு வாங்கிவிட முடியாது. பக்கத்து வீட்டு அன்னக்கிளி அக்காவிடம் ஒத்தாசைக்கு இருக்க சொல்லிவிட்டு வந்தாலும் இவன் மனம் துடியாய் துடித்தது. வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு கிளம்பிவிட வேண்டுமென்று மனதில் எண்ணியபடி வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அவசர அவசரமாக ஓடி வந்த அன்னக்கிளி அக்காவின் கணவன் சுப்பன் "மாரி, உம் பொண்டாட்டிக்கு கொழந்தை பொறந்திருச்சு பா. ஆண் கொழந்தை." என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு போக முதலாளியிடம் ஓடிச் சென்று விடுப்பு கேட்க அவரோ "அதான் கொழந்தை பொறந்திடுச்சில்ல. வேலைய முடிச்சுட்டு போ மாரி" என்று கூறிவிட சோகத்துடன் வேலைக்கு திரும்பினான்.

                                    தன் வேலையை வேகமாக முடித்துவிட்டு ஆறு காத தூரம் தன் சைக்கிளில் பயணம் செய்து வீட்டிற்கு வர அங்கே அவன் மனைவி கூரைப்பாயில் அமர்ந்திருக்க அருகே தன் மகன் ஆடையின்றி அழகாக தாயின் மார்பை முட்டி பசியாறிக் கொண்டிருந்தான். சற்று நேரம் தன் மகனின் பிஞ்சு கால்களை தன் உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டான். மனைவியின் தலையை அன்போடு வருடிக் கொடுத்தான். ஆசை மேலிட அவள் நெற்றில் முத்தமிட்டான். குழந்தை பசியாறியவுடன் அவன் கைகளில் கொடுத்தாள். அந்தக் குழந்தையை கைகளில் தூக்கிய போது அவன் உள்ளத்தில் பொங்கிய சந்தோஷத்தின் அளவு எல்லையற்று இருந்தது.

                                                    ---------------------

                       
                                     "கண்ணா, இன்னைக்கு எப்படியும் டெலிவரி ஆயிடும்னு நெனைக்கிறேன். என் கூட இரேன்."
                                      "என்னப்பா விளையாடறியா, இன்னைக்கு மண்டே, பிஸி டே. நோ வே. அதுவும் இல்லாம இன்னைக்கு ப்ராஜெக்ட் டெலிவரி மீட்டிங் ஒண்ணு இருக்கு. நான் போயே ஆகணும். நான் இவ்வளவு கஷ்டப்படறதும் உனக்கும் நம் பிள்ளைக்கும் தானே"
                                       "அதில்லப்பா, நீ கூட இருந்தா எனக்கு சப்போர்ட்டா இருக்கும். கொஞ்சம் தைரியமா இருப்பேன்.."
                                        "மீரா, டோன்ட் பீ டிபண்டட். ஒரு கம்பெனில எச்.ஆரா இருக்கிற. இப்படி சைல்டிஷா பேசுறே. டெலிவரி எல்லாம் இப்போ சிம்பிள் மேட்டர். நான் போகும்போது உன்னை ஹாஸ்பிடல்ல விட்டுடறேன். உங்க அம்மாவை வர சொல்லிடு. கிம்மீ எ கால் இப் யூ நீட் எனிதிங்."



                                         பரபரப்புடன் கிளம்பி அவளை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு காரில் அலுவலகம் அடைந்தான். பத்து நிமிடம் மீட்டிங். முடிந்தவுடன் தன் பக்கத்து டெஸ்கில் இருந்த ஸ்டெல்லா இவனிடம் "ஹே ஷிவ், உன் வைப் கன்சீவா இருந்தாங்களே, எப்போ டேட்ஸ் கொடுத்திருக்காங்க?"

                                            "ப்ராப்பப்ளி டுடே.." என்று கூறிவிட்டு தன் டெஸ்க்டாப்பில் இந்தியா ஆஸ்திரேலியா ட்வென்டி-ட்வென்டி மேட்சின் கமெண்ட்ரியை படித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒலித்த அவன் செல்போனை உயிர்பித்து "சொல்லுங்க அங்கிள்" என்றான்.

                                             "மாப்ளே, உங்களுக்கு பையன் பொறந்திருக்கான்" என்று உற்சாகம் பொங்க மறுமுனையில் அவன் மாமனார் கூற "அங்கிள் குட்டிப் பையனோட போட்டோஸ் வாட்ஸ்-ஏப் ல அனுப்புங்க. இஸ் மீரா பைன்?"
என்று கேட்டுவிட்டு போனை வைத்தான். சிறிது நேரத்தில் வந்த புகைப்படங்களை உடனடியாக பேஸ்புக்கில் அப்லோட் செய்ய, படம் போட்ட ஐந்து நிமிடங்களில் இருநூறு லைக்குகள் விழுந்தன..!
                     

                                         ****************************

 


                 இன்றைய சூழலில் நாம் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையாகி வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவிக்க மறந்துவிடுகிறோம். இந்த ஒரு சின்ன தோன்றல் வந்ததாலேயே நேற்று நுண்ணறிவாளர் தினத்தன்று எந்த ஒரு எலக்ட்ரானிக் உபகரணங்களும் இல்லாமல் ஒரு நாள் வாழ்ந்து பார்க்கலாம் என்று தோன்றியது. பல சங்கடங்கள், மனஸ்தாபங்கள், குழப்பங்கள் ஏற்பட்ட போதும் இறுதியில் எல்லோருமே புரிந்து ஏற்றுக் கொண்டார்கள். தவிர நேற்று கிடைத்த நேரத்தில் பல பயனுள்ள வேலைகள் செய்ய முடிந்தது. லைக்ஸ், கமெண்ட்ஸ், மெசேஜ், மெயில், போன் கால் என எந்த தொல்லையும் இல்லாமல் காலை ஆறிலிருந்து மாலை ஆறு மணி வரை கிட்டத்தட்ட ஒரு "ஜென்" நிலையில் சந்தோஷமாக கழித்தேன். இந்த முறைக்கு "Going Mute" என்று பெயரிட்டுள்ளேன். இனி மாதத்தில் ஒரு நாளாவது இதை செயல்படுத்தலாம் எனவும் யோசித்துள்ளேன். நீங்களும் ஒருநாள் ட்ரை பண்ணிப் பாருங்களேன். உங்களுக்கு கிடைக்கும் "சுகானுபவத்தை" பகிர்ந்து கொள்ளவும் மறக்காதீங்க.. ;)


          

14 comments:

  1. இது நல்ல ஐடியாவாத்தான் தோணுது ஆனந்து.. நானும் ஒருமுறை ட்ரை பண்ணிட்டுச் சொல்றேன்.

    ReplyDelete
  2. குட்!நான் கூட ஒரு வருஷம் பேச்சு புக்க காயப் போட்டனே?சுகமோ,சுகம்!

    ReplyDelete
    Replies
    1. மொபைல் தான் முக்கியம் சார்.. அதனால தான் எக்கச்சக்க பிரச்சனைகள் வருது.. எல்லாத்தையும் நிறுத்தணும் ;)

      Delete
  3. முதலில் உங்கள் பதிவு சூப்பர்! அருமை! ...வைஸ் வெர்சா ஆவதும் உண்டு....

    ஆவி! சூப்பர்! யெஸ் ஒரு ஜென் ஸ்டேட்! நானும் அனுபவித்திருக்கின்றேன். அதனால் தான் அப்படி ஒரு மெசேஜ் கொடுத்தேன் உங்களுக்கு....மொபைல் ஆஃப் செய்து 24 மணி நேரம்....திட்டல்கள், கோபங்கள், ஒரு சோகத் தகவலை மிஸ் செய்ததால்.....அதன் பின்னர், இப்பவும் கூட எனது பயணங்களின் போது இரு நாட்கள் கூட ...பேசாமல்...ஆனால் மொபைல் சைலன்ட் மோடில்....அந்த அனுபவம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஆவி! உங்க கட்சி நானும்....

    கீதா

    ReplyDelete
  4. நிச்சயம் நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும். முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் நான் மௌன விரதம் இருந்திருக்கிறேன். இப்போது அடிமை வாழ்வுதான். நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு ஒப்பீட்டுக் கதைகளும் டாப். முகத்திலறையும் உண்மை.

    ReplyDelete
  5. வணக்கம்
    ஆவி அண்ணா

    கலக்கி விட்டீங்கள்..... சூப்பர்... பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நானும் இந்த ஜென் நிலைய வருடத்திற்கு ஒருமுறையாவது ரசித்துவிடவேன் அண்ணா . ஆனால் , ஒருநாள் அல்ல . குறைந்தது ஒருமாதமாவது அப்படியொரு மௌனநிலைக்குச்சென்றுவிடுவேன் . பெரும்பாலும் மொபைல் மற்றும் இன்டர்நெட்டை தவிர்த்தாலே இந்த அமைதி நிலை தானே மனதினுள் ஒட்டிக்கொள்ளும் . பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா .

    ReplyDelete
  7. சுவாமி தங்களுடைய ஆஸ்ரம நேரங்கள் எவ்வபோது என்று அறிந்துகொள்ள ஆசை... ;-)

    ReplyDelete
  8. நல்ல முயற்சி... எல்லாரும் செய்து பார்க்கலாம்...

    ReplyDelete
  9. இது போன்ற சோதனையை நானும் செய்ய வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால் இதுவரை முயற்சி செய்ததில்லை . உண்மையில் செய்ய வேண்டியதன் அவசியம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

    ReplyDelete
  10. நல்ல முயற்சி... நினைத்துப் பார்த்தாலே சிறிது சிரமம் என்று தோன்றினாலும், "சும்மா" என்பது "தவம்"...

    ReplyDelete
  11. நல்ல முயற்சி......

    மாதத்தில் ஒரு நாளாவது இப்படி இருக்க வேண்டும்!

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
    நன்றி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...