Sunday, January 2, 2011

வாய்மை எனப்படுவது யாதெனின்...

                          
                                 தமிழ் என்னும் சொல்லை கேட்கும் போதே சிறு வயதிலிருந்தே எனக்கு ஓர் இனம் புரியா ஈர்ப்பு.. ஆறாம் வகுப்பில் தமிழை இரண்டாம் மொழியாய் எடுத்தவர்களில் நானும் ஒருவன். அவ்வாறு எடுத்தவர்கள் எல்லோரிடமும் "கோனார் தமிழ் உரை" என்ற எளிய தமிழை இன்னும் எளிமையாக்க உதவும் புத்தகம் இருந்தது.
                      
                                என் தந்தை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய் பணிபுரிந்து வந்தார். பள்ளி முடிந்து மாலை நேரங்களில் ட்யுஷன் எடுப்பது வழக்கம். பொதுவாக என்னுடைய பாடப் புத்தகங்கள் எல்லாம் சென்ற வருடம் படித்த மாணவர்களிடமிருந்து பெற்ற புத்தகமாகவே இருக்கும். ஆதலால் பெரும்பாலான சமயங்களில் அதன் அட்டைப்படம் கிழிந்து போயிருக்கும். எனக்கு எப்போதும் புதிய புத்தகங்கள் எடுத்துச் செல்லவே ஆசை. அப்பா மிகவும் கண்டிப்பானதால் புதிய புத்தகங்களுக்காய் என் அம்மாவை அப்பாவிடம் பரிந்துரை செய்யச் சொல்ல அவரோ " இலவசமாய் பழைய புத்தகங்கள் கிடைக்கும் போது புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவானேன். மேலும் காக்கி அட்டையை மேலே போட்டு விட்டால் அதன் அட்டை மறைந்து விடும்" என்பார்.

                            ஒருநாள் காலை நான் எழுந்து வந்தபோது எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. என் தந்தை எனக்காய் ஒரு புதிய கோனார் தமிழ் உரை வாங்கி வந்திருந்தார். அட்டைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த வள்ளுவரைப் பார்த்து எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி . என் சந்தோசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி பள்ளிக்கு எடுத்துச் சென்று மற்ற மாணவர்களிடம் எல்லாம் காட்டினேன். தமிழாசிரியர் பாடம் எடுக்க என் புத்தகத்தை வலியப் போய் நானே கொடுத்தேன். புதிய புத்தகத்தின் உரிமையாளர் என்ற பெருமை என்னை நிலைகொள்ளாமல் செய்ததென்னவோ உண்மைதான். என் நண்பர்கள் நான் தலைகால் புரியாமல் ஆடுகிறேன் என்று சொன்ன வாக்குகளை சட்டை செய்யவே இல்லை.

                            
                             மாலையில் வீடு திரும்பிய நான் என் புத்தகப் பையை மேசை மீது வைத்துவிட்டு கை கால் அலம்புவதற்காகச் சென்றேன். தந்தையார் ட்யுஷனில் பிசியாக இருப்பதை பார்த்த நான் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு பின் படிப்பதற்காக அமர்ந்தேன். புத்தகப் பையை திறந்த எனக்கு பேரதிர்ச்சி. அங்கே திருவள்ளுவரைக்  காணோம். அதாங்க, என் கோனார் தமிழ் உரையை காணோம். அரக்கப் பறக்க பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எவ்வளவு யோசித்தும் எங்கு தொலைத்தேன் என்று நினைவுக்கு வரவில்லை. இதை தந்தையிடம் எப்படி சொல்வது என்ற பயத்தில் கண்ணீர் முட்டியது.
                             
                            சட்டென ஒரு யோசனை தோன்ற, என் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த புத்தகக் கடைக்கு சென்று கோனார் தமிழ் உரை ஒன்றை வாங்கி வந்தேன். அதை மேசை மீது என் தந்தையின் கண்ணில் படுமாறு வைத்துவிட்டு மன திருப்தியுடன் படிக்க ஆரம்பித்தேன் .ட்யுஷன் முடிந்த பின் அவ்வழியே வந்த என் தந்தை மேசை மீதிருந்த புத்தகத்தைப் பார்த்து "என்ன இது" என்றார். "கோனார் தமிழ் உரை" என்றேன். அவரோ விடாமல் "யாருடையது" என்றார். இந்த வினாவை சற்றும் எதிர்பார்க்காத நான் சற்றே தடுமாற்றத்துடன் "என்னுடையது தான்" என்றேன். என் தந்தை என் காதை திருகியபடியே "ஓஹோ, அது உன்னுடைய புத்தகமெனில் இது யாருடையது" என்று அவர் கையிலிருந்த கோனாரை மேசையில் போட்டார். அட்டைப்படத்தில் அழகாய் சிரித்த வள்ளுவர் "வாய்மை எனப்படுவது யாதெனின்.." என்று சொல்வது போலிருந்தது..

18 comments:

  1. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    நீங்காத பசுமை நினைவுகள்...

    ReplyDelete
  2. ஆம் தஞ்சை வாசன், அவை என்றும் மறையா இனிமையான நினைவுகள். வருகைக்கு நன்றி.
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. நன்றி எஸ். கே.
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. Tamil version is good compare to your english version.

    ReplyDelete
  5. அப்பா தமிழாசிரியரா? குடுத்து வெச்சவர் நீங்க... எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு... இப்போ ப்ளாக் தான் வடிகால்... எனக்கும் புது புக் அதன் வாசனை இன்னும் பிடிக்கும்... ஹா ஹா... நல்ல பகிர்வுங்க ஆனந்த்... பழைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க...

    ReplyDelete
  6. பசுமையான நினைவுகள்

    ReplyDelete
  7. //எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு.//

    தமிழ் தப்பிச்சது

    ReplyDelete
  8. //அப்பா தமிழாசிரியரா? குடுத்து வெச்சவர் நீங்க... //

    அது உண்மைதான் புவனா!! ஆனால் அதிலும் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யுது!!
    அக்கரைக்கு இக்கரை பச்சை??

    //எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு//

    உங்க பிளாக்ல வர்ற கதைகளும் கவிதைகளுமே அதுக்கு சாட்சி சொல்லும்.

    பொங்கல் நல்வாழ்த்துகள் புவனா!!

    ReplyDelete
  9. //எல் கே said... //எனக்கும் தமிழ் பைத்தியம் உண்டு... இன்றும்... தமிழ் இலக்கியம் தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் இருந்த நாளெல்லாம் உண்டு.//
    தமிழ் தப்பிச்சது//

    ஆயுள் ப்ரூட்டஸ் பட்டத்தை உனக்கு அளித்து கெளரவிக்கிறேன் மிஸ்டர் கார்த்திக்.....grrrrrrrrr....

    ReplyDelete
  10. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

    ReplyDelete
  11. வணக்கம்
    ஆனந்த ராஜா விஜயராகவன்(அண்ணா)

    இந்த வாரம் வலைச்சரப்பணிக்கு எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. அன்பின் ஆவி - வாய்மை எனப்படுவது யாதெனின் - பதிவு அருமை - பொய் சொல்லக் கூடாது உண்மைதான் - ஆனால் வள்ளுவர் பொய் சொல்லலாம் எனவும் குறள் எழுதி இருக்கிறார். கோனார் உரை காணாமல் போனதாக நினைத்து மற்றுமொரு உரை வாங்கி வைத்தது தவறல்ல - பொய்யுமல்ல. பயம் காரணமாக எழுந்த உணர்வு - அவ்வளவுதான் - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. புதிய புத்தகத்தை என்னுடையது என்று கூறியது தவறுதானே ஐயா.. கருத்துக்கு நன்றி ஐயா..

      Delete
  13. அன்பின் ஆவி - தந்தை தமிழாசிரியரா ? நன்று நன்று - என் துணைவியாரும் தலைமைத் தமிழாசிரியர் தான் - 34 ஆண்டுகள் பணி புரிந்து பணி நிறைவு செய்தவர். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா.. அம்மாவுக்கு என் வணக்கங்களை தெரிவித்து விடுங்கள்..

      Delete
  14. வாழ்த்துக்கள் சகோ!
    இன்றுதான் இங்கு வந்தேன்..
    ஆவியின் தளமாதலால் சிறிது பயத்துடன்தான் உள் நுழைந்தேன்...:)

    ஆனால் அப்படி அல்ல என்று கண்டேன்!
    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. தாமதமான வருகையாயினும் மன்னித்து அருள் புரிக....

    ReplyDelete
  16. அணு, படித்தேன், சுவைத்தேன்! - மதன்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...