Thursday, April 30, 2015

ஓடிப் போலாமா? - மினி ஸ்டோரி

   



      "யாத்ரீ க க்ரிப்யா ஜான் தீஜியே" என்று ஹிந்தியில் அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்த அந்த கோவை இரயில் நிலையத்திலிருந்து அந்த பல்சக்கர ஊர்தி புறப்படத் துவங்கியது. அந்த மெகாஸைஸ் வாகனத்தை பிடிக்க ஒரு பெண் முன்னே ஓடி வர, அவள் கரம் பற்றியபடி ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் பேக்கை தோள்களில் சுமந்தபடி ஒரு இளைஞனும் வந்து அந்த நீண்ட நீல நிற கம்பளிப் பூச்சியின் உள்ளே ஏறி தங்களையும் அடைத்துக் கொண்டனர். படிக்கட்டில் நின்றபடியே கோவை தங்களை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்தனர். பீளமேடு ஸ்டேஷனை கடந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவள் அவன் தோள்களில் இதமாக சாய்ந்தபடி "டேய் ரிஷ்விக், இது மணிரத்னம் படம் மாதிரியே இருக்கில்ல." என்றாள். "இல்ல, கவுதம் மேனன் படம் மாதிரி" என்றான் அவள் கன்னங்களை கிள்ளியபடி..
----
          கோவை இரயில் நிலையத்தின் படிக்கட்டுகளுக்கு பின்னிருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடை முன்னர் தன் மணிக்கட்டை திருப்பி அறுபத்தியாறாவது முறையாக மணி பார்த்தான். அப்போதும் சென்ற நொடியில் காட்டியே அதே மணியை காட்டிய குற்றத்திற்காக கடிகாரத்தை வெறுப்புடன் பார்த்தான் கார்த்திக். நெயில் கட்டர்களுக்கு நிரந்தர வேலையிழப்பு கொடுக்கும் மும்மரத்தில் அவன் பற்கள் ஈடுபட்டிருந்தன. அவனுக்கு இடப்புறம் இருந்த பிளாட்பாரத்தில் கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. தன்னை சுற்றி ஒலிக்கும் ஒலிகளை மீறி அவளின் கொலுசொலி அவன் காதுகளில் ரீங்காரமிட்டது. அவன் பார்வை படிக்கட்டுகளை மேய்ந்தது. மல்லிகைப் பூவை அணிந்த அந்த பூவை அவனை நோக்கி வருவதை கண்டதும் அவன் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்தது.

****

        "படிகிட்ட நிக்காதீங்க, டிக்கட்ஸ் ப்ளீஸ்" என்ற டீ.டீ.ஆரின் குரல் கேட்டதும் தான் ஒருவரின் மேல் ஒருவர் மெய்மறந்து சாய்ந்திருந்தது நினைவுக்கு வந்து இருவரும் விலகி நின்றனர். அவன் தன் செல்போனில் டிக்கட்டையும், ஐ.டி கார்டையும் காட்டிவிட்டு உள்ளே நகர்ந்தான்.  இருக்கையை சில நிமிட தேடல்களில் கண்டறிந்த பின் அமரச் சென்றவன் அங்கே ஒரு வயதான பெண்மணி தன் ஜன்னலோர சீட்டில் கண்ணயர்ந்திருப்பதை கண்டான் ரிஷ்விக். அருகே வயதான சிட்டிசன் அஜித் போன்ற உருவத்துடன் ஒரு பெரியவர் அருகே அமர்ந்திருந்தார். இவனைக் கண்டதும் அவர் அந்தப் பெண்மணியை எழுப்ப முயன்றார். அதைத் தடுத்தபடியே,  "வேணாம் அங்கிள், ஆண்ட்டி நல்லா தூங்கறாங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்." என்றபடி எதிரே இருந்த சீட்டைப் பார்த்தான். அதில் இரண்டு வெள்ளைவேட்டி உடுத்திய ஆசாமிகள் அமர்ந்திருந்தனர். பெரியவருக்கு அருகே இருந்த சீட்டில் அந்தப் பெண்ணையும், அவளுக்கு எதிரே இருந்த சீட்டில் தானும் அமர்ந்து கொண்டான்.

----

             "லாவண்யா, வா! நான் பயந்தே போயிட்டேன். இவ்வளவு லேட்டாவா வர்றது?  என்றபடி டிரெயினை நோக்கி நகர்ந்த கார்த்திக்கின் கரங்களை பற்றி இழுத்தாள் லாவண்யா. "லேட்டாச்சு, வண்டி எடுத்துருவான் மா" என்றபடி திரும்பிய அவன் அவள் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர்ப் பூக்களை கவனித்தான். சட்டென தன் கைப்பையை கீழே போட்டுவிட்டு அவள் முகத்தை இரு கைகளிலும் வாரிக் கொண்டான் "என்னாச்சு டா" என்றவனின் மார்பில் சாய்ந்தவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பின் தன் கைகளால் அவனை சற்று பின்னுக்கு தள்ளி விட்டாள். "இல்ல கார்த்திக், நான் உன்கூட வரல."  அவள் சொல்வது புரியாமல் அவளை நெருங்க நினைத்தவனை ஒற்றைக் கைகளால் தடுத்து, "நான் உன் கூட வந்துட்டா அப்பா, அம்மா மரியாதை, தங்கச்சி கல்யாணம்னு எல்லாத்துக்கும் சேர்த்து பிரச்சனை வந்திடும். நம்மள இவ்வளவு வருஷம் பார்த்துக்கிட்ட நம்ம குடும்பத்துக்கு இதுதான் நாம செய்யுற நன்றிக் கடனா?" அவன் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. "எனக்கு உன்னைப் பிடிக்கும் கார்த்திக். நம்ம காதல் உண்மைனா நாம அடுத்த ஜென்மத்துல நிச்சயம் ஒண்ணு சேர்வோம். இந்த ஜென்மத்துல அதுக்கு குடுப்பினை இல்ல. என்னை மன்னிச்சிடு கார்த்திக்." என்றபடி வந்த வழியே திரும்பி சென்றாள். அவனுக்கு பின்னால் நின்றிருந்த புகைவண்டி மெல்ல நகர ஆரம்பித்தது. அவன் அதே இடத்தில் முழங்காலிட்டு சரிந்தான்.


****

           இரயில் திருப்பூரை நெருங்கியது. அந்த வெள்ளைக் கரைவேட்டிகள் இறங்க எத்தனிக்க ரிஷ்விக் "ஹே ரேஷ்மா, இதோ பார் ஜன்னல் சீட்." என்று அவளை சீண்டியபடி ஜன்னலோரத்தில் அமர செல்வது போல் பாவனை காட்ட, ரேஷ்மா பாய்ந்து வந்து அந்த இருக்கையில் அமர்ந்தாள். இந்த சலசலப்பில் எழுந்த சப்தத்தில் கண்விழித்தார் எதிரே இருந்த பெண்மணி. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்த ரேஷ்மாவின் கண்களில் இருந்து நீர் வருவதை கவனித்த ரிஷ்விக் தன் கைக்குட்டையை எடுத்து "ஏய், காத்து நிறைய அடிக்குது போலிருக்கு, இந்தா கண்ணை துடைச்சுக்கோ" என்றான். கைக்குட்டையை வாங்கி தன் மஸ்காரா மேல் பட்டுவிடாமல் கண்ணீரை ஒற்றியவள். "அது காத்துனால இல்ல, பீலிங்ஸ், ஸ்டுப்பிட்" "என்ன பீலிங்ஸ், உங்க அப்பன் அந்த மிலிட்டரி மீசை நியாபகத்துக்கு வந்துட்டாரா?" என்று கிண்டலாக கேட்டான்.  ஆம் என்பது போல் தலையாட்ட "இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல, ஈரோட்டில் இறங்கி பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிடலாம். இந்த ஓடிப் போற ப்ளான் போட்டதே நீதானே? அப்புறம் என்ன பீலிங்ஸ்" என்றான் சற்று கோபமாக. "இடியட், பீலிங்கா இருக்குன்னு தானே சொன்னேன். உன்னை பிடிக்கலை, திரும்பிப் போயிடலாம்னா சொன்னேன்?" என்றபடி அவன் நெஞ்சில் செல்லமாக குத்தினாள்." "ஏய் வலிக்குதுடி.." என்றபடி அவள் கைகள் இரண்டையும் ஒன்றாக பிடித்தபடி கட்டியணைத்தான். ரேஷ்மா தனக்கு எதிரே இருந்த பெண்மணி தன்னையே பார்ப்பதை உணர்ந்து ரிஷ்விக்கின் பிடியிலிருந்து விலகினாள்.
----
               
                 தன் பார்வை அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதை உணர்ந்த அந்த பெண்மணி இப்போது அருகே அமர்ந்த பெரியவரை தேடினாள். அவர் படிக்கட்டின் அருகே நிற்பதை பார்த்ததும் எழுந்து அவரருகே சென்றாள். மெல்ல ஆதரவாய் அவர் தோள்களில் சாய்ந்தபடி "நானும் இப்படி ஒரு தைரியமான முடிவை முப்பத்தியஞ்சு வருஷம் முன்னாடி எடுத்திருந்தா நாமளும் சந்தோஷமா இருந்திருக்கலாம், இல்லையா கார்த்திக்?" என்றாள் லாவண்யா.

                                                                ******



இதை Star Cast வச்சு ஒரு Short பிலிமா எடுக்கலாம்னு ஒரு ஐடியா இருந்தது (கனவுல தான்). அதுக்கு என் சாய்ஸ் அஜித்- அனுஷ்கா (கார்த்திக்-லாவண்யா), சிம்பு-கீர்த்தி சுரேஷ் (ரிஷ்விக்-ரேஷ்மா). இதுல ரிஷ்விக் கதாபாத்திரத்துக்கு சிம்புன்னு போட்டிருக்கிறது நம்ம ஷைனிங்கோட டேட்ஸ் அவ்வளவு சீக்கிரம்  கிடைக்காதுங்கிறதுனால  தான்.. மத்தபடி அவர் தான் அந்த ரிஷ்விக் கேரக்டருக்கு என் முதல் சாய்ஸ். உங்க சாய்சை பதிவு செய்யுங்க.. :)


Monday, April 27, 2015

ஜன்னலோரம்

               ஜன்னலோரம்.. சிறு வயதிலிருந்தே என் பிரியப்பட்ட இருக்கையாக இருந்தது. பேருந்தில் பயணம் என்றாலே எந்த வேலை இருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு பேருந்தில் ஏற தியேட்டரில் முதல் வரிசை டிக்கட் வாங்க அலைமோதும் கூட்டத்தைப் போல் முண்டியடித்துக் கொண்டு நுழைவேன். ஏறியதும் பரபரவென ஓடி பேருந்தின் பின்புற டயர் இருக்கும் இருக்கை சற்று உயரமாக இருக்கும். என் உயரத்துக்கு பொறுத்தமாய் செய்த இருக்கையாகவே அதை எப்போதும் உணர்வேன்.





                  உட்கார்ந்த மறுகணம் ஜன்னல்களை திறந்து அதன் வழி வரும் சுகந்தமான காற்றை சுவாசிப்பேன். சில்லென்ற அந்த தென்றல் முகத்தில் உரசுகையில் விவரிக்க முடியாத ஒரு பேரானந்தம் மனதிற்குள். சில நேரங்களில் பேருந்து வேகமாக செல்லும் பொழுது தென்றல் காற்று சற்று வீச்சு அதிகமாகி முகத்தில் அறையும். அப்போதும் முகத்தை உள்ளிழுக்காமல் காற்றுடன் சண்டை போடுவதில் ஒரு அலாதி பிரியம் எனக்கு. காற்று என் தலைமுடி, இமைகள், நாசித் துவாரங்கள், இதழ்கள் என ஒவ்வொரு பாகமாக வருடிச் செல்வதை பயணம் முழுவதுமாய் அனுபவித்துக் கொண்டே செல்வேன். அந்த அனுபவம் எனக்கு சலிப்பு தட்டியதாய் என்றும் உணர்ந்ததில்லை.

                    பெரும்பாலும் அந்த பயணங்கள் நான் வசித்த கிராமத்திலிருந்து நகரம் நோக்கி செல்வதாகவே இருந்தது. வழியில் தென்படும் ஆட்டுக் குட்டிகள், தட்டிக் கேட்க ஆளில்லாமல் தனி இராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த தெரு நாய்கள், பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்வாங்கும் மாட்டு வண்டிகள், சைக்கிள் டயரை வாகனமாய் ஒட்டிக் கொண்டு வரும் சிறார்கள், தென்னை, பனை மரங்கள், சுற்றிலும் பசுமையாய் தெரியும் வயல் வெளிகள் என ஒவ்வொன்றும் மனதிற்குள் உவகையை தூண்டும். 


                       என்றாவது பேருந்தில் ஜன்னலோரம் கிடைக்காவிடில் அங்கே அமர்ந்திருப்பவரிடம் எப்படியாவது கெஞ்சி, கூத்தாடி, அப்படியும் வேலைக்கு ஆகவில்லை என்றால் வாந்தி வருவது போல் செய்து காட்டி என அந்த இடத்தை எப்படியும் பிடித்து விடுவேன். இந்த அனுபவம் தினமும் கிடைக்க வேண்டியே தினமும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து சென்று படிக்கும் வகையில் இருந்த நகரத்து பள்ளியில் சேர்ந்து படிக்க அடம்பிடித்து சேர்ந்தேன். பேருந்து மட்டுமல்லாமல் இரயில் பயணங்களில் கூட நான் ஜன்னலோர இருக்கையை தேடிச் செல்லும் பழக்கம் என்னுடனே வளர்ந்தது.

                        எல்லாம் சுகமாய் சென்றது, திருமணம் ஆகும் வரை. அவள் அன்று பேருந்தில் என்னைப் பார்த்து அந்தக் கேள்வியை கேட்கும் வரை. "வாசு, எனக்கு ஜன்னலோர சீட்தான் எப்பவும் பிடிக்கும். நான் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கவா?" என்றாள். அவளுடைய ஒற்றைக் கேள்வியின் உள்ளர்த்தம் என் வேர்வரை அசைத்தது. எப்பவும் பிடிக்கும் என்ற ஒற்றை வார்த்தையின் பொருள்  இனி அந்த ஜன்னலோர இருக்கையை எனக்கு எப்போதும் கொடுத்துவிடு என்பதாய் உணர்ந்தேன். மனைவியின் வேண்டுகோளை மறுக்கவும் மனமில்லாமல் என் பிரியப்பட்ட ஆசனத்தை அவளுக்கு தாரை வார்த்தேன்.

                          சந்தோஷத்தோடு இடம் மாறி அமர்ந்த அவள் 'தேங்க்ஸ்' என்றாள். நான் செய்த இந்த அளப்பரிய தியாகத்திற்கு அந்த ஒற்றை ஆங்கில வார்த்தை துச்சமாகப் பட்டது. இருந்த போதும் அவள் என்னைப் போலவே என் விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்தவளாய் இருக்கிறாளே என்ற சந்தோஷம் ஒன்று மட்டுமே என் மனதை அமைதி கொள்ள செய்தது. வேறு வழியின்றி பயணப் பொழுதை கடத்த சுஜாதாவின் புத்தகம் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், என் தோள்களில் எதோ பாரம் அழுத்துவதாய் உணர்ந்தேன். புத்தகத்தை மூடிவிட்டு திரும்பிய போது அங்கே நல்ல உறக்கத்தில் அவள் சிரம் என் தோள்களில்..!
                       

Friday, April 24, 2015

Happi Bday Sanaa!

      

          இன்னும் சில மணி நேரங்களில் எங்கள் குடும்பத்தின் புது வரவை வரவேற்க தயாராய் எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம். என் தங்கை மட்டும் கொஞ்சம் டென்ஷனாய் மேடிட்ட வயிற்றை தடவியபடி கணவர் அருணுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தியபடி முதுகில் ஆதரவாய் தடவிக் கொடுத்து இன்னும் கொஞ்சம் நடக்க வைத்தார். தங்கையை லேபர் ரூமிற்கு அழைத்து செல்லும் வரை உடன் இருந்தேன். முந்தைய நாளின் களைப்பும் சேர்ந்து கொள்ள சுமார் பதினோரு மணிக்கு வீட்டிற்கு சென்றேன். சற்று கண்ணயர்ந்த போதும் புதிதாய் பிறக்கப் போகும் அந்த சிசுவை காணும் ஆவலில் உறக்கம் பிடிபட மறுத்தது. அதிகாலையில் அருண் செல்பேசியில் விளித்து தங்கைக்கு ஓர் இராஜகுமாரி பிறந்திருப்பதாய் சொல்ல உற்சாகம் கரைபுரண்டோட மருத்துவமனை நோக்கி விக்கியையும் (Vignesh) அழைத்துக் கொண்டு பறந்தேன்.
            அந்த மென்மையான பிஞ்சு விரல்களை என் கைகளில் பிடித்தபோது தன் பொக்கை வாய் கொண்டு மெலிதாய் ஒரு புன்னகை செய்தாள் அந்த குட்டித் தேவதை. இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது. ஆனால் இதோ என்று எங்க வீட்டு குட்டி இராஜகுமாரிக்கு Star Birthday. அன்பு செல்லத்திற்கு இந்த மாம்ஸின் பிறந்த நாள் வாழ்த்துகள்! Happi Bday Sanaa!

Friday, April 10, 2015

ஷைனிங் ஸ்டாரும் 600D யும்..!

எச்சரிக்கை: புகைப்படம் பிடித்தல் இணையத்துக்கு கேடு!


                     இதுவரை எப்போதாவது நம்ம ஷைனிங் ஸ்டார் புகைப்படம் எடுக்கையில் அதில் வரும் பிம்பமாகும் வாய்ப்பு பெற்றிருக்கிறீர்களா? அவர் புகைப்படங்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் வாய்ப்பாவது கிட்டியிருக்கிறதா? அட, அவர் புகைப்படம் எடுக்கையில் அந்த வழியாகவாவது  நீங்கள் கடந்து போயிருக்கிறீங்களா? இல்லை என்பது மட்டும் உங்கள் பதிலாக இருந்துவிட்டால் நீங்கள் ஒரு நல்ல சுகானுபவத்தை இழந்து விட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!  தட்ஸ் ஒக்கே..! பரவாயில்லை, அட்லீஸ்ட் இந்த பதிவை படிப்பதால் அந்த அற்புத உணர்வை கொஞ்சம் சுவாசித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்று நீங்கள் சந்தோஷித்துக் கொள்ளலாம்.



                        புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு பொழுது போக்கான விஷயமாக பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அது ஒரு சாதாரண எலக்ட்ரானிக் கருவியல்ல, இராமனின் சிவதணுசு போல்,  கர்ணனின் கவச குண்டலம் போல் என உணர்ந்தது அதை ஷைனிங் ஸ்டைலாக கழுத்தில் மாட்டியிருந்த போது தான். மண்ணில் மடியப்போகும் மனிதர்களைத்தான் புகைப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை,  காதலி மடித்து வைத்த கைக்குட்டையை கூட படமெடுக்கலாம் என்று அவரிடமிருந்து  ஒரு பாடமே கற்றுக் கொண்டேன். அவரிடம் நான் 'ஏலகைவனாய்' கற்றுக் கொண்ட சில அரிய வகை டெக்னிக்குகளை நண்பர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

                         

                        புகைப்படம் எடுக்கும் போது முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று 'காமிரா ஆங்கிள்' (camera angle). ஒரு பொருளை சற்று சாய்வாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் நாமும் அதே அளவு சாய்மானத்தில் (angle) நின்றபடியே தான் எடுக்க வேண்டும். காமிரா எப்போதும் சாய்ந்திருக்கக் கூடாது. லைட்டிங் சரியாக இருக்கிறதா என முப்பது செகண்டுகளுக்கு ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுதல் நலம்.



                           இரண்டாவது Focus, நாம் எடுக்க வேண்டிய ஆட்களை அல்லது பொருட்களை சுமார் இரண்டு நிமிடமாவது குறிபார்க்க வேண்டும். இந்த டெக்னிக்  ஆரம்ப நாட்களில் எளிதாக யாருக்கும் கைவசப்படாது. கொஞ்ச நாட்கள் ஷைனிங்கை உன்னிப்பாக கவனித்தும் பின்னர் தனியே முயற்சி செய்து அழகான புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். (புகைப்படம் எடுக்க நீண்ட நேரம் ஆகிறதே என்று எதிரில் இருக்கும் உங்கள் நண்பர் புலம்பினால் அவருக்கு போட்டோகிராபி பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்க!)

                   

                           மூன்றாவது மற்றும் முக்கியமான குறிப்பு இது. எதிரில் பொறுமையுடன் போஸ் கொடுத்து நிற்பவர்களுக்கு நீங்கள் நிஜமாவே போட்டோ எடுக்கிறீங்களா இல்லையா என்பது கடைசி வரை தெரியக் கூடாது. 'ஒன் மோர்' எனும் வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களை எளிதாக ஏமாற்றலாம். புகைப்படம் எடுத்து முடித்த பின் உடனே அவர்களுக்கு படங்களை மறந்தும் காட்டிவிடக் கூடாது. 'பேஸ்புக் ல அப்லோட் பண்றேன், பாத்துக்குங்க பாஸ்' என்று சமாதானப் படுத்திவிட வேண்டும்.

                              அப்புறம் ஆற அமர இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நன்றாக வந்திருக்கும் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்யவும். அவ்வளவு நாட்களுக்கு பிறகு கிடைச்சதே இலாபம் என்ற நோக்கில் நண்பர்கள் பழைய கணக்குகள் ஒன்றையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். இதில் கூறிய ஒவ்வொரு விதிகளையும் சரியாக பின்பற்றினால் நீங்களும் ஷைனிங் ஸ்டார் போல் அழகான புகைப்படங்கள் எடுக்கலாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை நண்பர்களே!!



Friday, April 3, 2015

நிழலின் காவலன்




விசித்திரங்கள் நிறைந்த விடுகதை 
என் வாழ்க்கை என்றால் -
அதில் விரித்துப் பொருள் 
விளங்க முடியாத புதிர் நீ!

முரட்டுத் தனமான அன்பினால்
உயிரின் அடிவரை நேசித்தாய் 
மென்மையான கோபத்தால் 
நிதமும் என்னை நிந்தித்தாய்.

ன் மகிழ்ச்சியை மையெழுதிய
உன்னிரு கண்கள் சொல்லும்,
உன் சினத்தை பிறைவடிவான
உன்னிதழ்கள் உரைக்கும்.

டலும் காதலின் ஒரு பகுதியென
ஊடகங்கள் பலதும் உணர்த்திய போதும்
உள்ளங்கைகளிலிருந்து காதலின்று உயரே பறந்துவிட 
ஊசலாடும் மனதிற்கு என்ன உரைப்பேன் ஆறுதலாய்?

சிறுபிள்ளையாய் மாரில் தலைவைத்து 
உறங்கிய நாட்களை மறந்துவிட்டு- 
சீற்றத்தின் பிடியில் மதியிழந்து 
எனை நீங்கிச் சென்றாய் 

னக்காய்  சிந்தும் கண்ணீரைக் கூட 
துடைத்திட முடியவில்லை - கதிரவன்
சாய்ந்திடும் தொடுவானத்தை மட்டும் 
தொட்டுவிட முடியுமா என்ன?

நிழலாய் உன்னுடன் நடைபோட 
நினைத்திருந்தேன் முடியவில்லை- போகட்டும் உன்
நிழலின் காவலனாய் தொடர்ந்து வர
நிச்சயம் உன் அனுமதி தேவையில்லை..!

Thursday, April 2, 2015

கொம்பன்.. 100 DAYS OF LOVE

கொம்பன்



                      குட்டிப்புலி படத்துல இருந்த மைனஸ் எல்லாத்தையும் சரி பண்ணி அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. கார்த்திக்கு கிராமத்து வேடம் இயல்பாக அமைந்திருக்கிறது. மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு வெற்றிக்காக இன்னும் நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரம் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். ராஜ்கிரண் வேட்டியை மடித்துக் கட்டிய போதும் அமைதியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதுவும் மாப்பிள்ளை கார்த்தியிடம் பணிந்து போகும் கதாப்பாத்திரத்தில் அசத்துகிறார்.

                         மாமாவாக வரும் தம்பி ராமையா, வில்லர்கள்,  கோவை சரளா  மற்றும் கருணாஸ் ஆகியோருடைய கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இல்லாதது படத்தின் மைனஸ். மேலும் ஜீ.வி பிரகாஷின் இசை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'கருப்பு நிறத்தழகி'' பாடலை தவிர வேறெதுவும் மனதில் நிற்கவில்லை. உன்னிப்பாக கவனித்தால் சாதியின் சுவடுகள் ஆங்காங்கே தென்பட்ட போதும், சாதி குறித்த சர்ச்சை படத்தின் பிரமோஷனுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.

ப்ளஸ் - கார்த்தி, ராஜ்கிரண், ஆக்க்ஷன் காட்சிகள்
மைனஸ் -  பின்னணி இசை, வலுவற்ற இரண்டாம் பகுதி

                                                                  ***



100 Days Of Love




                         துல்கர் சல்மான் கேரளத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் வளர்ந்து வருவதற்கு  அவர் தேர்வு செய்யும் கதாப்பாதிரங்களே சாட்சி. தன்னுடைய மிக மோசமான ஒரு நாளில் தான் சந்தித்த பெயர் தெரியாத ஒரு பெண்ணை தேடிக் கண்டுபிடித்து நூறு நாட்களில் காதல் செய்வது தான் கதை. அதில் வரும் பிரச்சனைகள், சுவாரஸ்யங்கள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றது.

                           அரதப் பழசான இந்த கதைக்கு வலு சேர்ப்பது மூன்றே மூன்று பேர் நாயகன் துல்கர், நாயகி நித்யா மேனன் மற்றும் நண்பனாக வரும் சேகர் மேனன். காதல் தோல்வியில் குடித்துவிட்டு தன் முன்னாள் காதலியை திட்டி ஒரு FB ஸ்டேட்டஸ் போடுவதும், தான் தேடும் பெண் யாரென தெரிந்ததும் 'எஸ்' ஆவதும் என நடிப்பில் வெரைட்டி காண்பிக்கிறார் துல்கர். நித்யா மேனன், இவருடைய மலையாள உச்சரிப்பை நம்ம ஸ்ருதியின் தமிழ் உச்சரிப்போடு ஒப்பிடலாம். மற்றபடி பணக்கார தோழியாய் வந்து போகிறார். துல்கர் குடித்துவிட்டு இவர் வீட்டுக்கு வரும் காட்சியில் நல்ல நடிப்பு. நண்பராக வரும் சேகர் மேனனின் உடல் பருமன் உறுத்தலாக தெரிந்தாலும், அதை தன் இலகுவான நடிப்பில் கடந்து போக செய்கிறார். க்ளீஷேவான முடிவு என்ற போதும் ரசிக்க முடிகிறது.

ப்ளஸ் - துல்கர், சேகர், நித்யா, இசை
மைனஸ் - பின்பாதி இழுவை,

                                                                    ***

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...