Thursday, January 31, 2013

சேட்டை - டிரெய்லர்

                   

                           எனக்கு எப்பவும் நல்ல நாள்,  கெட்ட  நாள் இதுலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. இருந்தாலும் கமலுக்கு ஏற்பட்ட இன்னல்களும், அவருடைய உருக்கமான பேட்டியும் இந்த நாளை மிக மோசமான நாளக்கியது . அந்த கஷ்டத்துக்கு இடையில  இந்த  சேட்டை பட டிரைலரை பார்க்க நேர்ந்தது..  ஆர்யா, சந்தானம் மற்றும் பிரேம்ஜி செய்யும் சேட்டைகள் கொஞ்சம் சோகத்தை மறந்து சிரிக்க உதவியது.. உங்க பார்வைக்காக இதோ..


Wednesday, January 30, 2013

தலைவரின் விஸ்வரூபம்




 தடைகளைத் தாண்டி 
 சரித்திரம் படைத்தவன் 
ஞாபகம் வருகிறதா? 


                  விஸ்வரூபம் படத்திற்காக வைரமுத்துவின் வைர வரிகள் அவை. இன்று நிஜமாகி இருக்கிறது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு விஸ்வரூபத்திற்கு விதித்த தடையை நீக்கி இருக்கிறார். இன்று காலை கலைஞானி பத்திரிக்கையாளர்களை  சந்திக்கிறார். இன்று தமிழகமெங்கும் விஸ்வரூபம் வெளியாகியுள்ளது.   இது குறித்து தலைவர் ஆற்றிய உரை



                     விஸ்வரூபத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஒய் திஸ் கொலைவெறி??


விஸ்வரூபம் - திரை விமர்சனம் இங்கே..

கோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...



                          என்னோட கோவை வலைப்பதிவர் சங்க நண்பர்கள் ,அகிலா, கோவை மு.சரளாதேவி மற்றும் கோவை நேரம் ஆகியோர் கோவை வலைப்பதிவர் பதிப்பகத்தின் மூலம் தங்கள் வலைப்பதிவு படைப்புகளை ஆவணப்படுத்தி புத்தகங்கள் வெளியிட உள்ளார்கள். அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

                           புத்தக வெளியீட்டிலும், அதை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உள்ள சிரமங்களை எழுத்துப் பணியில் உள்ள நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே அவர்களின் உழைப்பிற்கு முழுமையான உங்கள் ஆதரவினையும் அங்கீகாரத்தையும் அளியுங்கள் (புத்தகத்தை வாங்கியும், பிறரிடம் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தும்)


உங்கள் அனைவரையும் அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்.

Tuesday, January 29, 2013

யார் பேசியது?

                            பள்ளி  நாட்களில் என் தந்தையார் பணிபுரிந்த  அதே பள்ளியில்  படித்த காரணத்தால் அதிகப்படியான  குறும்புகள் ஏதும் செய்ததில்லை. அப்படியே செய்தாலும் முடிந்தவரை அவை வெளியே வராமல் பார்த்துக்கொள்வேன். நான்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது.

                      
                               பள்ளியில் படிக்கையில் எப்பொழுதும் முதல் அல்லது இரண்டாம் பெஞ்சுகளில் அமர்வது என் வழக்கம். ஆனால் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றைத் தன் பெயராகக் கொண்ட ஒரு ஆசிரியை தமிழ்ப் பாடம் எடுக்கும் போது மட்டும் பின் வரிசையில் சென்று அமர்ந்து கொள்வேன். அந்தப் பாட வேளையின்  போது வகுப்பே கண்ணுறங்கும்.
தமிழை இன்னும் உயிரூட்டத்துடன் எடுக்கலாம் என்பது என் தாழ்மையான அதே சமயம் வெளியே சொல்லப்படாத கருத்தாக இருந்தது.


                               அப்படி ஒரு முறை நான் பின்வரிசையில் என் பள்ளித் தோழன் ( என் மாமாவின் புதல்வன்) கார்த்தியுடன் அமர்ந்திருந்தேன்.  கடைசி பெஞ்ச் மாணவர்களைப் பார்க்கும் போது நான் மிகவும் உயரம் குறைவாக இருப்பேன். அதனால் ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து விட்டால் என்னைப் பார்ப்பது மிகவும் கடினம். பொதுவாக பின்வரிசை மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்க மாட்டார்கள் என்பதால் ஆசிரியர்களும் அவர்களிடம் கேள்விகளைக் கேட்பது குறைவாகவே இருக்கும்..


                              அன்று அந்த ஆசிரியை சிலப்பதிகாரத்தை பற்றி நடத்தி முடித்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கோ புதிதாய் வெளியாகியிருந்த திரைப்படக் காட்சி ஒன்றைப்  பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு முறை ஆசிரியை மேசையை பிரம்பால் தட்டிய போது சற்று அமைதியானோம். பாடத்தை முடித்துவிட்ட அவர் "யார் கூறியது" என்ற பகுதியை மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ( செய்யுளில் வரும் ஒரு வரியை ஆசிரியர் கூறும் போது அந்த உரையாடலை இலக்கியத்தில் யார் பேசியது என்று கூற வேண்டும்)


                             இச்சமயம் நாங்கள் மீண்டும் சர்ச்சைக்குள் இறங்கிவிட , அப்போது ஆசிரியர் திடீரென்று "யார் பேசியது" என்று எங்களை நோக்கி கேட்க,  ஆசிரியை தன்னிடம் கேள்வியை கேட்கிறார் என நினைத்த கார்த்தி எழுந்து "கண்ணகி டீச்சர்" என்றவுடன் வகுப்பில் சிரிப்பும் ஆரவாரமும் அடங்க சிறிது நேரமானது. ஆசிரியையும் கோபத்தை மறந்து சிரித்தபடியே " உட்காரு கழுதே" என்றார்.

                                   

Friday, January 25, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்

                   

                                   ஒரு நூறு கிலோமீட்டர் பயணம் செய்தால் கடவுளின் விஸ்வரூபத்தை காண முடியுமென்றால் மக்கள் அடித்துக் கொண்டு ஓட மாட்டார்களா? அப்படித்தான் அடித்துப் பிடித்து ஓடினேன் கேரளாவின் எல்லைக்கு ( வேலந்தாவளம் தனலட்சுமி தியேட்டர் - DTS ).  தலைவரின் படத்தை தரிசிக்க வாய்ப்பு கொடுத்த அந்த தியேட்டருக்கு நன்றி கூறிவிட்டு படம் பார்க்க சென்றேன்.மிகவும் சிறிய தியேட்டர்- சாதாரண நாட்களில் 25 ருபாய் தான் அதிகபட்ச டிக்கட்.. ஆனால் இன்றோ நூறு ரூபாய்.. தமிழக அரசினால் பயன்பெற்ற ஒரு கேரள வியாபாரி(!!)


                                     நாம் பலரும் சொல்லக் கேட்ட ஒரு டயலாக் இது.. " இதுவரை தமிழ் சினிமாவில் வராதது".. இந்த மொழி விஸ்வரூபம் படத்திற்கு சாலப் பொருந்தும். இதுவரை வந்ததில்லை, இனிமேல் வரப் போவதுமில்லை.. இது போன்ற ஒரு படத்தை  எடுக்கும் தைரியம் தமிழ் சினிமாவில் கலைஞானியைத் தவிர  யாருக்கும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.. இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் கமலைத் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். நம் நாட்டிலோ ??? .. சரி கதைக்கு வருவோம்..


                                      அணு விஞ்ஞானியான டாக்டர் நிருபமா ( பூஜா) கதக் நடனக் கலைஞரான விஸ்வநாத்தை (கமல்ஹாசன்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் திருமணத்துக்கு பிறகு தான் வேலை செய்யும் லேப்பின் முதலாளி தன்னை விரும்புவதை அறிந்து தானும் விஸ்வநாத்துக்கு துரோகம் செய்கிறார். அது மட்டுமன்றி விஸ்வநாத்திடம் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஒரு பிரைவேட் டிடக்டிவ் உதவி கொண்டு விஸ்வநாத்தை வேவு பார்க்கிறார். ஆனால் விஸ்வநாத்தோ மனைவியின் மேல் உயிரையே விடுகிறார். (தான் சைவமாக இருந்தாலும் மனைவிக்காக சிக்கன் சமைத்துக் கொடுப்பதில் ஆரம்பித்து)


                                       டிடெக்டிவ் விஸ்வநாத்தை பின்தொடர்ந்து ஒரு உண்மையை கண்டறிகிறார். அது விஸ்வநாத் ஹிந்து அல்ல, ஒரு முஸ்லிம் என்பது. இதைக் கேள்விப்பட்ட நிருபமா விஸ்வநாத்தை விவாகரத்து செய்ய தனக்கு தேவையான ஆதாரம் கிடைத்து விட்டதாய்  மகிழ, அதே சமயம் டிடெக்டீவை திசை திருப்ப முயன்று அவரை தெரியாமல் ஒரு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் விஸ்வநாத். துரதிஷ்ட வசமாக அது ஒரு அல் -கொய்தா தீவிரவாதியின் வீடு.தீவிரவாதி டிடெக்டீவை கொலை செய்துவிட்டு அவர் கொண்டு வந்திருந்த டைரியின் மூலமாக நிருபமாவையும், விஸ்வநாத்தையும் தேடி வந்து கடத்திச் செல்கிறார்கள்.


                                       இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் தீவிரவாதி துன்புறுத்திக் கேட்க, தான் ஒரு முஸ்லிம் என்பதை ஒத்துக் கொள்கிறான். மேலும் தன் பெயர் தவ்பீக் என்றும் கூறுகிறார் விஸ்வநாத். தீவிரவாதி விஸ்வநாத்தின் புகைப்படத்தை எடுத்து தன் தலைவனுக்கு அனுப்புகிறான்.. தலைவன் அதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைகிறான். புகைப்படத்தில் அவன் காண்பது அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த மற்றொரு ஜிகாத் தீவிரவாதி!!


                                       சரி, இதுவரை நீங்கள் படித்தது விஸ்வரூபத்தின் முதல் பத்து நிமிடங்கள் தான்.. இதே த்ரில், சஸ்பென்ஸ் படம் நெடுக வியாபித்திருக்கிறது. அது உண்மையில் விஸ்வநாத்தா? இல்லை தவ்பீக்கா? அவர் நடனக் கலைஞரா இல்லை தீவிரவாதியா?  அவருக்கும் தீவிரவாத கும்பலுக்கும் என்ன தொடர்பு..இப்படி படம் பார்க்கப் பார்க்க நம் மனதில் எழும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் முடிச்சுகளையும்  சுவாரஸ்யத்துடனும் அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன்  காட்சிகளுடன் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் கமலஹாசன்.


                                      கதக் நடனமாகட்டும், விஸ்வநாத்தின் உடல் மொழியிலாகட்டும், பின் தீவிராவதியாக வரும் காட்சியிலாகட்டும் கமல் உள்ளம் கவர் கள்வனாகிறார்.. நடிகர் கமல்ஹாசன் இதுவரை சிறப்பான பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் உலகத் திரைப்பட சரித்திரத்தில் தனி இடம் பிடிக்கும். ஒசாமா பின்லேடன் மரணத்துக்கு பிறகு ஒசாமாவின் கூடாரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதே கதை. ஓமராக வரும் ராகுல் போஸ்  கமலின் நடிப்பையும் மீறி கவனிக்க வைக்கிறார்.


                                      பூஜா, கிட்டத்தட்ட தசாவதாரத்தில் அசின் ஏற்ற அதே கதாப்பாத்திரம்.. கொஞ்சம் கிளாமர், நிறைய லொட லொட.. ஆண்ட்ரியா கமலுக்கு பாடிகார்ட் போலவே வருகிறார். நிறைய காட்சிகளில் அவர் இருந்தாலும் பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச டயலாக் " இந்த கதையில எல்லோருக்கும் டபுள் ரோல்.. போறுமா" என்பதுதான். ஒமரின் வலக்கையாக வருபவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  நாசர், உடைகள் வடிவமைத்த கௌதமி, மேக்கப் மேன், சண்டைப் பயிற்சியாளர், முக்கியமாக இதுபோன்ற படத்திற்கு மெருகேற்றும் வண்ணமாக அதிரடி இசையமைத்த சங்கர்-எசான்-லாய்  கூட்டணி இப்படி படத்தின் பலத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.


                                    இந்தப் படத்தின் முடிவில், விரைவில் இரண்டாம் பாகம் வருவதாக தலைவர் அறிவித்துள்ளார்.. முதல் பாகத்தை வெளியிடவே இவ்வளவு தடங்கல்கள்.. என்னுடைய கருத்து இரண்டாம் பாகத்தை லாஸ் ஏஞ்சல்ஸில்  உள்ள எதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வெளியிட வேண்டும்.. தமிழில் ஜாக்கி சான் படங்களை டப்  செய்து வெளியிடுவதை போல இதையும் வெளியிடலாம்.. உங்க கருத்து என்ன??

    93 / 100                                   

Thursday, January 24, 2013

செஞ்சுரி அடித்தார் ஆவி..!


நூறாவது பதிவு    
 
       
                                 இன்றோடு இந்த 'கோவை ஆவி ' எனும் வலைப் பூவை ஆரம்பித்து சரியாக மூன்று வருடங்கள் முடிந்து நான்காமாண்டில் காலடி(?!!) எடுத்து வைக்கிறோம். அது மட்டுமல்ல, இது நான் தமிழில் எழுதும் நூறாவது பதிவு. இந்த நாளில் நான் நூறு பதிவுகள் எழுதுவதற்கு காரணமாக இருந்த எல்லோருக்கும், என் படைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் என் வாசகர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்...

நண்பேண்டா விருது

                                இந்நன்னாளில் என் படைப்புகளைப்  படித்து பின்னூட்டங்களிட்டு என்னை மேன்மேலும் வளரச் செய்யும் எல்லா அன்பு வாசகர்களுக்கு என் சார்பில் சிறு விருது அளிக்க விரும்புகிறேன்..



                                    என் எழுத்துகளுக்கு என்றும் ஆதரவு அளித்து வரும் செந்தில், ஜானு செந்தில்,  அகிலா, 'அப்பாவி தங்கமணி' புவனா, 'அடிச்சுவடு' முனியாண்டி, 'பிலாசபி' பிரபாகரன்,  எல். கே , திண்டுக்கல் தனபாலன்,  'கோவை நேரம்' ஜீவா, 'இனியவை கூறல்' கலாகுமாரன், 'உலகசினிமாரசிகன்' பாஸ்கரன், 'நிகழ்காலம்' எழில், 'ஸ்கூல் பையன்',  'பூந்தளிர்3' சிவகாமி, 'கோவை கமல்' ரமேஷ், 'பெண் என்னும் புதுமை' சரளா,  'மின்னல் வரிகள்' பாலகணேஷ், ' முத்துசிதறல்' மனோ சுவாமிநாதன், 'மணிராஜ்' இராஜராஜேஸ்வரி, 'Intellectual Hut' ராகுல், அனுராதா, வடிவுக்கரசி பாஸ்கர் மதன் மற்றும் உலகெங்கும் உள்ள என் வாசகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..


  

Wednesday, January 23, 2013

உலக நாயகன் கமலஹாசனுக்கு,

உலக நாயகன் கமலஹாசனுக்கு,


                                தமிழ் சினிமாவிற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞனே!! திரை உலகத்தில் சம்பாதித்த பணத்தை கல்யாண மண்டபங்கள் கட்டாமல், ரியல் எஸ்டேட்டில் போடாமல் திரை உலகத்திலேயே விட்டுவிட்டு தமிழ்நாட்டு மக்களிடம் கையேந்தி நிற்கும் அப்பாவியே!! தேவர் மகனில் ஆரம்பித்து உன் ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும் ஏதாவது ஒரு தடையை கிளப்பி திக்கு முக்காடச் செய்து பின் தடுமாற்றத்துடனும், வருத்ததுடனும் வெளியிட வைப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

                                 மேடைகளில் ஆதரவாக பேசும் அரசியல் தலைகளோ, உன்னை நண்பன் என்று கூறிக் கொள்ளும் சினிமாவைச் சேர்ந்த பெரும் புள்ளிகளோ இப்போது ஆதரவுக் கரம் நீட்ட தயங்குவது ஏன்.. தமிழ்நாடு உன் தாய்வீடு என்பதெல்லாம் சரி. வெள்ளைக்காரன் உன்னை புரிந்து கொண்ட அளவு கூட உள்ளூர்காரர்கள் புரிந்து கொள்ளாதது உன் துரதிர்ஷ்டமே!!பொறுத்ததெல்லாம் போதும்.. இனியும் உன் திறமைகளை உணரத் தவறிய மக்கள் வாழும் சமூகத்துக்காக படம் பண்ணத் தேவையில்லை..

                                 இதே படங்களை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் இந்நேரம் ஆறேழு ஆஸ்கர்களை அள்ளியிருப்பாய்.. இப்போதோ  இருக்கும் வீட்டையும் விற்று படம் எடுத்து பேரம் பேசிக் கொண்டிருக்கிறாய். உன் கலைத்திறனை மதிக்கத் தவறிய மண்ணில் இனியும் உன் திறமைகளைக் கொட்டி வீணாக்காதே!! இது கமலஹாசன் எனும் கடவுளிடம் இந்த பக்தன் வைக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்..!


இவண்,
கோவை ஆவி.

Tuesday, January 22, 2013

Les Misérables - திரைத்துளிகள்


                      
                                   பிரெஞ்சு புரட்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட  லே-மிஸ்ரபில் எனும் பிரெஞ்சு நாவலை அதே பெயரில் இப்போது திரைப்படமாக்கியிருக்கிறார்கள்..  டாம் ஹூப்பர் இயக்கிய இந்த படத்தில் ஜேக் ஹியுமேன், ரஸ்ஸல் க்ரோவ், அன்னே ஹேத்தவே மற்றும் அமாண்டா சீப்ரெட்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  இந்த படம் எட்டு பிரிவுகளில்  ஆஸ்கர்  அவார்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நான் பார்த்த படங்களிலேயே ஹரிதாஸ் படத்திற்கு பின் அதிக பாடல்களைக் கொண்ட இசைக் காவியம் இதுதான் (50 பாடல்கள்). 



                                      பசிக்காக பிரட்டை திருடிய குற்றத்திற்காகவும், சிறையிலிருந்து பல முறை தப்ப முயற்சித்த காரணத்துக்காகவும் ஜேன் வால் ஜேன் (ஹியு ஜேக்மேன்) எனும் கைதி பத்தொன்பது வருடங்கள் சிறையிலடைக்கப்படுகிறார். பிறகு பரோலில் வெளியே வரும் இவரை விடாமல் துரத்துகிறார் இன்ஸ்பெக்டர் ஜேவர்ட்( ரஸ்ஸல் க்ரோவ்). பரோலில் விட்டாலும் ஜேனை "மிகவும் ஆபத்தானவன்" என்று முத்திரை குத்தி அனுப்பிவிடுவதால் வேறு எங்கும் வேலை கிடைக்காமல் பசியால் அவதிப்படுகிறார். அப்போது ஒரு பாதிரியார் அவருக்கு உணவளித்து அடைக்கலமும் கொடுக்கிறார். அன்றிரவு அங்கிருந்த வெள்ளிப் பாத்திரங்களை கொள்ளையடித்து செல்கிறான் ஜேன். காவலர்களிடம் பிடிபடும் இவரை பாதிரியார் தான் தான் அவற்றை கொடுத்தனுப்பியதாக சொல்லி காப்பாற்றவும் அப்போதே மனம் திருந்துகிறார் ஜேன். இதே சமயம் ஜேவர்ட் ஜேனை மீண்டும் சிறையிலடைக்க துடிக்கிறார்.



                                       எட்டு வருடங்களுக்கு பிறகு ஜேன் வட பிரான்சின் மான்ட்ரியேல் மாகாண மேயர் ஆகிறார். ஒரு தொழிற்சாலையின் முதலாளியாகவும் இருக்கிறார். அப்போது அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் பேண்டைன் ( அன்னே ஹேத்தவே ) தன்  மகளுக்கு பணம் அனுப்ப முயன்ற குற்றத்துக்காக (?!!) பணி நீக்கம் செய்யப்படுகிறார். அவர் ஜேனிடம் முறையிட்டும் நியாயம் கிடைக்காததால் அவர் விபச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒரு சமயம் மேயர் வீதி உலா வரும் நேரம் பேண்டேனை பார்க்கும் ஜேன் அவருடைய நிலைக்கு தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வுடன் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். அதே சமயம் ஜேவர்ட் குற்றவாளி ஜேன் என்று தவறாக நினைத்து வேறொருவரை கைது செய்ய மேயரிடம் அனுமதி கோருகிறார். மனசாட்சி உறுத்த ஜேன் கோர்ட்டில் தான் யார் என்ற உண்மையை கூறுகிறார். 



                                       மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேண்டைன் குணமடைந்தவுடன் தான் சிறைக்கு வருவதாக கூறுகிறார். இதை ஏற்றுக் கொள்ளாத ஜேவர்ட் அவரை மீண்டும் துரத்துகிறார். உடல்நிலை மோசமடைந்த பேண்டைன் மரணப் படுக்கையில் தன்  மகளை கவனித்துக் கொள்ளும்படி ஜேனிடம் கேட்டுக் கொண்டு உயிர் துறக்கிறார். பேண்டைனுக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவளுடைய மகளை மீட்கிறார். அதோடு சிறுமி கோசெட்டுடன் வேறோர் நகரத்திற்கு பயணப்படுகிறார். ஜேவர்ட் ஜேனை  கைது செய்ய முடியாமல் மீண்டும் ஏமாற்றமடைகிறார்.




                                        ஒன்பது வருடங்களுக்கு பிறகு பசி பட்டினியால் வாடும் மக்குளுக்கு ஆதரவாக ஒரு இளைஞர்கள்(மாணவர்கள்) கூட்டம் என்ஜோல்ராஸ் எனும் மாணவனின் தலைமையில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தயாராகின்றனர். அதில் ஒரு இளைஞன்  மாரியசை கொசெட்டின் பால்ய தோழி எபோனின் விரும்புகிறாள். ஒரு போராட்டத்தின் போது மாரியஸ் இளம்பெண் கொசட்டை (அமாண்டா சீப்ரெட் ) பார்க்க,  முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான். கொசெட்டும் மாரியசை விரும்புகிறான். இந்த சமயத்தில் போராட்டத்தை அடக்குவதற்காக வரும் இன்ஸ்பெக்டர் ஜேவர்ட் உளவாளியாக போராட்டக் குழுவில் ஒருவனாக இணைகிறான். மேலும் அவனுக்கு ஜேனின் இருப்பிடம் தெரிந்துவிடுவதால் ஜேனுக்கு தொல்லை கொடுக்கிறான்.



                                       இதையறிந்த ஜேன் மறுநாள் ஊரைக் காலி செய்து தன் வளர்ப்பு மகள் கொசெட்டுடன் வேறிடம் செல்ல தயாராகிறார். அதே இரவு இளைஞர் அணி மறுநாள் போராட்டத்துக்கு திட்டமிடுகிறார்கள். கொசெட்டோ தன் காதலனை பிரிய மனமின்றி தவிக்கிறாள். இந்தக் காதலை கேள்விப்படும் ஜேன் தன் மகளை மாரியசுடன் சேர்த்து வைக்க முடிவு செய்து போர் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். தன்னையும் போராட்டத்தில் ஒருவனாக இணைத்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறான். இதற்கிடையில் உளவாளி ஜேவர்ட்டை கண்டறியும் போராட்டக் குழு அவனைக் கொள்ளும் பணியை ஜேனிடம் கொடுக்கின்றனர். ஆனால் ஜேனோ  அவனைக் கொள்ளாமல் தப்ப விடுகிறார். தப்பிச் சென்ற ஜேவர்ட் படையுடன் வந்து போராட்டக் குழுவை தாக்குகிறான்.



                                        இந்த தாக்குதலில் என்ஜோல்ராஸ், எபோனின் மற்றும் போராட்டக் குழுவினர் அனைவரும் உயிர் துறக்கின்றனர். மாரியஸ் காயமடைகிறான். அவனை ஜேன் காப்பாற்றி ஒரு பாதாளச் சாக்கடை வழியாக கூட்டி வருகிறான். சாக்கடையின் வெளி வாயிலில் ஜேனைக் கைது செய்ய தயாராக இருக்கிறான் ஜேவர்ட். ஆனால் கடைசியில் மனம் திருந்தி கைது செய்யாமல் விட்டுவிடுகிறான். அதோடு கடமையில் இருந்து தவறியதற்காக பாதாளச் சாக்கடையில் விழுந்து உயிர் விடுகிறான். மாரியஸ் குணமடைந்தவுடன் அவனை கொசெட்டுடன் சேர்த்து வைத்துவிட்டு தன்  பழைய கதை தெரிந்தால் கொசெட் தன்னை வெறுத்துவிடுவாள் என எண்ணி சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு செல்கிறான். ஆனால் உண்மையறிந்த கொசெட் மாரியசின் உதவியுடன் ஜேனை  கண்டுபிடித்து திரும்பி வருமாறு அழைக்கிறாள். மகள் தன்னைப் புரிந்து கொண்ட மகிழ்ச்சியில் ஜேன் தன் உயிரை  விடுவதோடு படம் நிறைவடைகிறது.



                                       எதார்த்த சினிமாக்களின் வரிசையில் இந்தப் படமும் ஓர் நிரந்தர இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல கதை மட்டுமல்லாமல் ஹியு ஜேக்மேன், ரஸ்ஸல் க்ரோவ் மற்றும் அன்னே ஹேத்தவே ஆகியோரின் சிறப்பான நடிப்பில் உருவான இந்த இசைப் பயணத்தை நம்முடைய மக்களும் அரங்கம் நிறைய கண்டுகளித்தது ஆரோக்கியமான விஷயம்..


                                     

Friday, January 18, 2013

பயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 6;  தொலைவு: 7.

மீ இன் மாசெசூசெட்ஸ் (அமெரிக்கா)
( பாஸ்டன் )





                        வேலை நிமித்தமாக அமெரிக்காவின் மாசெசூசெட்ஸ் மாநிலத்தின் வால்தம் நகரில் எட்டு மாத காலம் தங்க வேண்டியிருந்தது. நான் பணிபுரிந்த அலுவலகம் மாசெசூசெட்ஸின் தலைநகரான பாஸ்டனில்  இருந்தது. அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தின் துவக்கமாக அமைந்த "பாஸ்டன் தேநீர் விருந்து" நடந்த பாலத்திற்கு மிக அருகில் இருந்தது அலுவலகம்.


                           வருடத்தில் ஏழு மாதங்கள் பனிப்பொழிவு இருக்குமாதலால் தெருக்கள் எப்போதும் வெண்மை நிறத்தில் காணப்படும். பாஸ்டன் நகரம் அமெரிக்காவின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். பாஸ்டனுக்கு மிக அருகில் கேம்பிரிட்ஜ் நகரில்  புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளது. 



                                   அதிகப்படியான பனிப்பொழிவின் காரணமாக இங்குள்ள மக்களின் முக்கிய பொழுதுபோக்கு ஸ்கீயிங் என்று சொல்லப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு தான். சிறிய குன்று போன்ற பனிச் சரிவில் மேலிருந்து கீழே வருவது தான் இந்த விளையாட்டு.


                                   பனிச்சறுக்கை விளையாட்டு என்று கூறினாலும்,  முதல்முறை செல்பவர்களுக்கு அங்கே முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது இதற்கென பிரத்யேக காலணிகள் உள்ளன.. அந்த காலணிகளில் பொருந்தக் கூடிய தட்டையான ஒரு தகடும் "Pole" என்று சொல்லப்படும் இரு கம்பிகளும் கொடுக்கப்படும்.


                              முதலில் இவற்றை சுமந்து கொண்டு அந்த பனிக்குன்றை ஏற வேண்டும். பின்பு தகட்டை காலணிகளுடன் பொருத்திக் கொண்டு  கால்களை சரித்து மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். பின் சிறு உந்துதல் மூலம் கீழ்நோக்கி நகர ஆரம்பிக்க வேண்டும். போல்களின் உதவி கொண்டு திசை மாற்றவோ, அல்லது வேகத்தை குறைக்கவோ செய்யலாம். 



                                


                                            அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரசுப் பேருந்துகளும், எலெக்ட்ரிக் ரயில்களும்  அதிகம் உள்ள ஒரு மாநிலம் மாசெசூசெட்ஸ்.  உச்சரிக்க சற்று சிரமமான பெயர் தான் என்றாலும் எனக்கு பிடித்தமான ஊர்களில் இதுவும் ஒன்று..!






Sunday, January 13, 2013

சீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) - திரை விமர்சனம்


                               
                               அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, பாட்டி என உறவுகளின் பெருமையையும் அவர்களுக்கிடையே இருந்த பசப் பிணைப்பையும் கூறும் படம் இது. நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.. வயதில் சிறியவரோ பெரியவரோ யாராயினும் நல்லதை கூறினால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற நல்ல கருத்துகளை கூறும் திரைப்படம்.


                                   பார்க்கும் எல்லோரிடமும் இன்முகத்துடன் நல்ல விஷயங்களை மட்டும் பேசும் அப்பா (பிரகாஷ் ராஜ்), பிள்ளைகளை அன்புடனே வளர்க்கும் அன்னை(ஜெயசுதா). பாசக்காரப்  பாட்டி, கோபக்கார அண்ணன் (வெங்கடேஷ்), புத்திசாலித் தம்பி (மகேஷ் பாபு). இவர்கள் வீட்டில் வளரும் உறவுக்காரப் பெண் சீதா(அஞ்சலி), தம்பியை காதலிக்கும் மற்றொரு உறவுக்காரப் பெண் கீதா (சமந்தா) மற்றும் தங்கை (அபிநயா).. இவர்களுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டங்கள் தான் கதை..


                                     அப்பா கேரக்டரில் பிரகாஷ் ராஜ் பின்னி எடுக்கிறார். குறிப்பாக MLA  அவரிடம் சாமியை தூக்கி செல்லும் வாய்ப்பை கொடுக்கும் பொது நடிப்பில் நம் மனசை நெகிழ.  வைக்கிறார்.. தாய் ஜெயசுதாவுக்கு அதிகம்  வேலையில்லையென்றாலும் சின்னவனிடம் பெரியவனை ஹைதராபாத்துக்கு கூட்டி செல்லுமாறு கூறும் காட்சியில் மிளிர்கிறார்.                            


                                     அஞ்சலியின் முதல் தெலுங்கு படம், அசத்தியிருக்கிறார்.. வெங்கடேஷிடம் தன் உணர்வுகளை சொல்லும் இடத்தில் நெகிழ வைக்கிறார். சமந்தா செல்லமாய் வந்து போகிறார். மகேஷ் பாபுவை பார்த்தவுடன் காதலிப்பதும், அவரைச் சுற்றி வருவதுமாய் இருக்கும் அவர் கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்திருக்கலாம். 


                                       படத்தில் இவ்வளவு கேரக்டர்கள் இருந்தாலும் பெரியவன் வெங்கடேஷும் சின்னவன் மகேஷ் பாபுவும் படம் முழுக்க வியாபித்திருக்கிறார்கள். அப்பா அம்மாவிலிருந்து காதலிக்கும் பெண் வரை எல்லோரும் சின்னவனே , பெரியவனே என்று தான் விளிக்கிறார்கள். மகேஷ் பாபு படத்தை முழுவதுமாக தன்  தோளில்  தாங்கி நகர்த்துகிறார்.  அண்ணனை சமாதானப் படுத்துவதிலும், அவரை நல்வழிப்படுத்தும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அதே போல் ரோமென்ஸ் காட்சிகளிலும் கலக்குகிறார். வெங்கடேஷ் கோபப்படும் கேரக்டர் என்பதற்காக எல்லா இடத்திலும் கோபமாக நடந்து கொள்வது அவ்வளவாக மனதோடு ஒட்டவில்லை.


                                     நல்ல தரமான குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த நம் இயக்குனர் விக்ரமனை நினைவு படுத்திய படம் இது.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்பப் படம் பார்த்த திருப்தி.. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்தால்  கூட நன்றாக இருக்கும்.

  70 / 100 





Saturday, January 12, 2013

பொங்கலோ பொங்கல்..




"What is this Pongal?" என் அலுவலக நண்பர் கேட்க..

"It's a festival, Tom"  என்றேன்..

"Oh.. What do you do on that day?" என்று அவர் மீண்டும் கேட்கவே அவருக்கு ஆங்கிலத்தில் பொங்கல் பற்றி சொல்லத் துவங்கினேன்..

" பொங்கலுக்கு முந்தைய தினம் வீடுகளைச் சுத்தம் செய்வோம், வீட்டுக்கு வெள்ளையடித்து அழகு படுத்துவோம். பின் உறவினர்களை அழைத்து இனிப்புகள், கரும்புகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடுவோம்"

"Did you say you make Pongal on that day?" என்று ஒரு குழப்பத்துடன் கேட்டார்..

ஆம் என்று நான் பதிலளிக்கவும்..

"So, Pongal is some kind of food or what?" என்றார்.



 "டாம், பொங்கல் என்பது உணவு தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இரண்டு வகையான பொங்கல் இருக்கிறது.. ஒன்று இனிப்பாக செய்யப்படும் சர்க்கரைப்  பொங்கல், மற்றொன்று சிறிது காரத்துடன் செய்யப்படும் வெண் பொங்கல்" என அவருக்கு புரியும்படியாய் சொல்லவும்..

" Wait, wait.. your festival and the food has the same name?" எனக் கேட்க 

" ஆமா டாம் .. உணவின் பெயரில் இருந்து தான் அந்த பண்டிகைக்கு பெயர் கிடைத்திருக்க வேண்டும்.அமெரிக்காவில் Thanks Giving Day கொண்டாடுவது போல நெல் விதைத்து அறுவடை செய்யும் உழவர்கள் தங்கள் உழைப்பில் உருவான அரிசியில் உணவு சமைத்து உறவினர்களுடன் பகிர்ந்து உண்ணும் ஒரு சிறந்த நாள் இது" என்றேன்."

"Is it celebrated throughout India" என்று அடுத்த கேள்வியை அடுக்க,

" இல்ல டாம் .. பொங்கல் என்பது தமிழ் நாட்டில் மட்டும் கொண்டாடப் படும் ஒரு பண்டிகை. இது போன்ற பண்டிகைகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது."

" So you make Pongal dish only on Pongal day" என்று அவர் கேட்கவும், எனக்கோ பார்த்திபனிடம் மாட்டிக் கொண்ட வடிவேலுவின் நிலைமை ஞாபகத்துக்கு வந்தது..

" அப்படியில்ல, எப்ப வேணும்னாலும் நாம பொங்கல் செஞ்சு சாப்பிடலாம்" என்றேன்.. அதற்கு அவரோ 

" Oh.. Even on Diwali day you make Pongal ?" அவர் செல்லும் ரூட் எனக்கு புரிந்து விட..

" டாம், தீபாவளியன்னிக்கு பொங்கல் செய்யலாம், ஆனா தீபாவளிய  பொங்கல்ன்னு சொல்ல மாட்டோம்.."  என்றபடி அவர் அடுத்த கேள்விக் கணையை தொடுக்கும் முன் அவருக்கு கொஞ்சம் பொங்கல் கொடுத்து விட்டு என் மேசைக்கு நகர்ந்தேன்..



அனைவருக்கும் என் போகி, பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்..!



Friday, January 11, 2013

நாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்



                           அப்பாவின் மெகா ஸ்டார் பட்டத்தையும் சித்தப்பாவின் பவர் ஸ்டார் (நம்ம ஊர் பவர் ஸ்டார் இல்ல ) பட்டத்தையும் சேர்த்து மெகா பவர் ஸ்டார் என்ற அடைமொழியோடு களமிறங்குகிறார் ராம் சரண் தேஜா.. படத்தில் இரு வேடங்களில் வருகிறார்.. இரு கேரக்டர்களும் ஹேர் ஸ்டைல் ஒரே மாதிரி வைத்துள்ளது அழகிய தமிழ் மகன் விஜயை நினைவு படுத்தினாலும் (?!!) இரண்டாவது பாதியில் அதற்கான தேவையை உணர்த்தியிருக்கிறார்கள்..


                            புராதானப் படங்களிலேயே  பார்த்துவிட்ட கதை. வில்லன் ஊரையே மிரட்டி அடக்கி ஆள்கிறான். எதிர்ப்பவர்களை எல்லாம் குத்திக் கொலை செய்கிறான். ஆரம்பத்தில் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க நினைக்கும் தன் அக்காவின் கணவரை ஹீரோ தடுத்து நிறுத்துகிறார். பின்பு அவரைக் குத்திக் கொன்ற பிறகு பொது நலத்துடன்( ?!!) மக்களைக் காக்க தாதாவாகி எல்லோரையும் அழிக்கிறார்.. (திருப்பாச்சி ஞாபகத்துக்கு வருதா?) அடிபணியும் ரவுடிகளின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்கிறார். எதிர்ப்பவர்களை ஆபீஸ் ரூமுக்கு வரவைத்து கவனிக்கிறார் (சிவாஜி தெலுங்குல வந்துதா இல்லையா). முடியலடா சாமி..


                             மகதீராவில் சூப்பர் ஜோடி பட்டம் வென்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் காஜல் அகர்வால். இந்த முறை அமலா பாலும் சேர்ந்து கொள்(ல்)கிறார். ஆனால் என் ஒட்டு ஒரு பாடலுக்கு வந்தாலும்  ராம் சரணுக்கு பொருத்தமாக இருக்கும் சார்மிக்குதான். படம் தொய்வடையும் போதெல்லாம் படத்தை தூக்கி நிறுத்துவது பிரம்மாநந்தத்தின் காமெடிகள் தான். காஜலின் அண்ணனாக வரும் ரவுடி அசத்தல் எக்ஸ்பிரஷன்களில் நம்மை கவர்கிறார்.தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கடைசி குத்து பாட்டு கலக்கல்.


                               ஒருவாறாக நம்ம ஊரில் விஜய் திருந்தி நல்ல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.. அது மாதிரி ஆந்திராவில மாற்றம் ஏதும் நிகழுமா?

  40 / 100                       

Thursday, January 10, 2013

ஆங்கிலேயரை அடித்து விரட்டுமா இந்தியா??

                              பாகிஸ்தானிடம் பஞ்சராகிப் போன நமக்கு கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது ஆறுதல் தந்தது. அதுவும் குறைந்த இலக்கை துரத்திச் சென்ற பாகிஸ்தானை பவுலிங்கில் மடக்கி அடி பணிய வைத்தது நாளை துவங்கும்  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பலம் சேர்ப்பதாய் இருந்தது.



                               சாதனைக் கடவுள் சச்சின் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தொடர்ந்து சில போட்டிகளில் சொதப்பிய சேவாக்கையும் துரத்தி விட்டு முழுக்க முழுக்க இளைஞர்களை நம்பி இறங்கும் இந்தியா சொந்த மண்ணில் சாதிக்குமா ?   நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் யார் யார் என்று பார்ப்போம்.


விராத் கோஹ்லி  -  இந்தியாவின் வருங்கால கேப்டன் என பலராலும் கூறப்பட்ட இளம் வீரர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங்கில் சாதிக்கவில்லை என்றாலும்  பீல்டிங்கில் வழக்கம்போல் கலக்கினார்.  இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி வாணவேடிக்கை  நடத்துவார் என எதிர்பார்க்கலாம்.


அஷ்வின்-   இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழல் மாயஜாலத்தை நிகழ்த்திய இவர் மற்ற போட்டிகளில் சோபிக்கவில்லை என்றாலும் ரன் வேகத்தை கட்டுப் படுத்தவும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கவும் செய்கிறார் பேட்டிங்கிலும் ஜொலிப்பதால் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார்

கம்பீர், ரெய்னா, ஜடேஜா - துவக்க ஆட்டக்காரர் கம்பீர், ரெய்னா இருவரும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சேவாக்கின்  வெளியேற்றம் கம்பீரின் மனதிலும் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதால் இந்த முறை நல்ல துவக்கத்தை இவரிடம் எதிர்பார்க்கலாம். ஜடேஜாவின் பக்கம் அதிர்ஷ்டம் இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான இவர் செயல்பாடு தேர்வாளர்களுக்கு திருப்தி அளித்துள்ளது.


ரஹானே, புஜாரா - சேவாக்கின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் இளம் சிங்கங்கள். ரஹானே டிவென்டி 20 போட்டியில் சாதித்தவர். பூஜாரா டெஸ்டில் கலக்கியவர். இருவரும் ஒருநாள் போட்டிகளில் இனிமேல் தான் தமது திறமையை நிரூபிக்க வேண்டும்.


டிண்டா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் - ஸ்விங் பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தானை திணறடித்தார் புவனேஸ்வர். ஜாகீர் இல்லாததால் டெத் பவுலிங்கை கையாள இஷாந்த் நிச்சயம் உதவுவார். டிண்டா  இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நிரந்தர இடம் பிடிக்கலாம்.


யுவராஜ் சிங்- தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முழு பார்மில் உள்ள ஒரே இந்திய வீரர். இவருடைய சிக்சர்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறப் போவது உறுதி.

ரோஹித், அமித், ஷமி அகமது-   படு கேவலமான பார்மில் உள்ள போதும் ரோஹித்  தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம். அமித் மிஸ்ரா சுழல் ஜாலம் காட்டுவர் என நம்பலாம். புதுமுகம் ஷமி தன்  அட்டகாசமான வேகத்தால் முதல் போட்டியில் கலக்கினார். இனிவரும் போட்டிகளிலும் தொடர  வேண்டும்.


தோனி - விளங்க முடியாத கவிதையாய் இவர். சில நேரம் மோசமாக விளையாடுகிறார். எல்லோரும் சொதப்பும் போது  இவர் விஸ்வரூபம் எடுக்கிறார். என் தனிப்பட்ட கருத்து 2015 உலகக் கோப்பையை மனதில் கொண்டு ஒருநாள் மற்றும் டிவென்டி 20 போட்டிகளுக்கு இளைஞர்கள்  யாராவது ஒருவருக்கு தலைமை பொறுப்பை கொடுத்துவிட்டு இவர் டெஸ்டில் மட்டும் வழிநடத்தினால் நன்று.




How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...