Saturday, January 29, 2011

பாதர், என்னை மன்னிச்சுடுங்க!




"பாதர், என்னை மன்னிச்சுடுங்க!"

"மை சன், கடவுளுக்கு முன்னாடி மண்டியிட்டு எவனொருவன் தன் பாவங்களைச் சொல்லி அழுதாலும் அவன் கடவுளால் மன்னிக்கப்படுகிறான். "  சொல்லிக்கொண்டிருக்கும் போதே பாதரின் செல் போன் சிணுங்கியது. பாதர் செல்போனை அணைத்துவிட்டு தனக்கு எதிரில் இருந்த சிறுவனைப் பார்த்தார்.

"இல்ல பாதர், நான் செஞ்ச காரியத்துக்கு, மன்னிப்பு கிடைக்குமான்னு  தெரியல. "

"ஒ மை சன், கவலைப்படாம என்ன நடந்ததுன்னு சொல்லுப்பா. இந்த சின்ன வயசுல நீ என்ன தவறு செய்திருக்கப் போறே, தைரியமா சொல்லு"   மீண்டும் செல்போன் சிணுங்க அதை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு அவன் சொல்வதை கேட்க ஆயத்தமானார்.

"பாதர், இன்னைக்கு காலைல நான் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்கும் போது ரோட்டுல யாரோ ஒரு பெரிய கல்ல போட்டிருந்ததாலே, எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு அதை கடந்து போய்க்கிட்டு இருந்தாங்க."

"சரி"

"அப்போ அந்த வழியா போன நான் இந்த கல் இருக்கறத பாத்துட்டு என் சைக்கிளை ஓரமாக நிறுத்திட்டு அந்த கல்லை ரோட்டின் ஓரத்திற்கு அகற்றிவிடலாம்னு அந்த கல்லுக்குப் பக்கத்தில் போனேன். அந்தக் கல் மிகவும் வலிமையாக இருந்த காரணத்தால் மிகுந்த சிரமப்பட்டு அந்த கல்லை தூக்கி ரோட்டின் ஓரமாய் எறிந்து விட்டேன்"

"ஆஹா, இந்த சின்ன வயசுலயே இவ்வளவு நல்ல குணத்தோடு இருக்கியே. தட்ஸ் குட். நீ ஒரு நல்ல காரியம் தானே பண்ணிருக்கே. அப்புறம் எதுக்கு பாவ மன்னிப்பு"

" கல்லை அகற்றிவிட்ட மன திருப்தியுடன் சைக்கிளை எடுக்கப் போக, யாரோ முனகுவது போன்ற சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்த போது அங்கே ஒரு சிறுவன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்த போது அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே அருகிலிருந்த டெலிபோன் பூத்துக்கு சென்று போன் செய்து ஆம்புலன்சை வரவைத்து அவனை அதில் ஏற்றிவிட்டேன்."

"இந்த வயதில் இவ்வளவு பொறுப்போடும் பக்குவத்தோடும் நடந்து கொண்டிருக்கிறாய், நீ எதற்காக மன்னிப்பு கேட்க வந்தாய் " மிகுந்த மரியாதையுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டார். அப்போதுதான் பாதர் அவனை முற்றிலுமாய் கவனித்தார். நெற்றியில் திருநீறும், கழுத்தில் உத்திராட்சமும் இருந்தது.

"நான் அகற்றிய கல்லின் கீழே ஒரு பெரிய பள்ளம் இருந்தது. அதில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த கல்லை யாரோ அங்கே போட்டிருக்கிறார்கள். ஆனால் அது தெரியாமல் நான் அதை அகற்றிவிட பின்னால் வந்த சிறுவன் அதில் தவறி விழுந்து விட்டான்"

"இதில் உன் குற்றம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதில் எந்த காரியத்தையும் நீ வேண்டுமென்று செய்யவில்லை. ஆதலால் நீ வருத்தப் பட வேண்டிய அவசியமே இல்லை. கவலைப் படாம வீட்டுக்கு போ "

"ரொம்ப நன்றி பாதர்" என்று கூறிவிட்டு சிறுவன் அங்கிருந்து அகன்றான்.

பாதரின் செல்போன் மீண்டும் சிணுங்க அதை உயிர்பித்த பாதர் போனில் வந்த செய்தி கேட்டு சற்று அதிர்ந்து போனார் "பாதர், காலைல ஸ்கூலுக்கு போன உங்க பையன் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடக்கறான். இதுக்கு யார் காரணம்னு இன்னும் தெரியல பாதர். அந்த வழியா கடவுள் மாதிரி வந்த ஒரு சின்னப் பையன் தான் போன் பண்ணினான்."

ஆ..டிஸ்கி: (ஆவியின் டிஸ்கி) "கடவுள் பாதி, மனிதன் பாதி" எனும் தலைப்பில் நான் முன்பு எப்போதோ எழுதியது இது..


Saturday, January 15, 2011

சிறுத்தை - திரை விமர்சனம்


                    "மஹதீரா" புகழ் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த "விக்கிரமார்க்கடு" திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த சிறுத்தை. இயக்குனர் சிவாவுக்கு முதல் பாராட்டு, ஒரிஜினல் ஸ்க்ரிப்டை துளியும் மாற்றாமல் அப்படியே தமிழில் எடுத்ததற்கு!! இரண்டாவது பாராட்டு ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்தது, ஹீரோ கார்த்தி முதல், சந்தானம், தமன்னா  வில்லன், வில்லனின் தம்பி, மகன் மற்றும் அடியாட்கள், மந்திரி உள்பட எல்லாமே பிரமாதமான தேர்வு.

                      கதை நாம் பலமுறை பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும் படுவேகமான திரைக்கதைதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். இடையிடையே காமெடி, சென்டிமென்ட், பாடல்கள் எல்லாமே இருந்தாலும் இது ஆக்க்ஷன் படங்களின் வரிசையில் என்றும் பேசப்படும்.


                      சூர்யாவுக்கு ஒரு காக்க காக்க அமைந்தது போல் கார்த்திக்கு ஒரு சிறுத்தை. இந்தப்படத்தில் இவருக்கு இரட்டை வேடம். இரண்டு வேடங்களுக்கு இடையிலும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களை காட்டுகிறார். பாடி லாங்குவேஜ் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் கேரக்டரில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சீனியர் ஆபிசர் பானுசந்தர் இவரிடம் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் பயம் இருக்க வேண்டும்" என்று சொல்லும்போது "எனக்கும் பயம் இருக்கு சார். எங்க நான் என் கடமைகள முடிக்காம செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்குன்னு " சொல்லிவிட்டு கம்பீரமாக சல்யுட் அடிக்கும் போது ஜொலிக்கிறார்.



                        கார்த்தி சந்தானம் காமெடி கலக்கல் காம்பினேஷன். ராக்கெட் ராஜாவாக வரும் பிக்பாக்கெட் கார்த்தியுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகள் முதல் நாற்பத்தியைந்து நிமிடங்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக கல்யாண வீட்டில் திருடப் போன இடத்தில் தமன்னாவின் அழகில் திடீரென மயங்கிவிட்ட நண்பனின் நிலை தெரியாமல் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடும் சந்தானத்தை அவரைவிட வேகமாகச் சென்று "திருடனைப் பிடிச்சுட்டேன், பொறுமையா வாங்க" என கார்த்தி கூற சந்தானம் திருதிருவென விழிப்பது கிளாஸ்.


                            தமன்னா வழக்கம்போல் கமர்ஷியல் பொம்மையாக வந்து போகிறார். மயில்சாமியின்  உடையிலிருந்து பைக் வரை திருடிக்கொண்டு வரும் காட்சியில் கார்த்தி நின்ற இடத்திலயே சிக்சர் அடிக்க, தமன்னா நடிப்பில் எல்.பி.டபள்யு ஆகிறார். கொஞ்சம் நடிக்கவும் கத்துக்குங்க அம்மணி!! தெலுங்கில் வில்லனின் கதாபாத்திரம் கொடூரமாக இருக்கும். இதில் கொஞ்சம் காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள்.



                          நல்ல திரைக்கதையிலும் சில துளைகள் - ஊரையே தன் கைக்குள் வைத்திருக்கும் வில்லனின் தம்பி காட்டுக்குள் ஒரு காட்டுவாசிபோல் வாழ்வது ஏன்.. ரத்னவேல் பாண்டியனின் மனைவி பூமிகாவுக்கு என்ன ஆனது... தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்.. இதுபோன்ற கேள்விகளுக்கு ஒரு வரியிலாவது விளக்கம் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பொங்கலுக்கு ரிலீசான ஜிலேபிகளில் பட்டை ஜிலேபி இதுவாகத்தான் இருக்கும். சிறுத்தை நிச்சயம் சிங்கத்தை ஓவர்டேக் செய்துவிட்டது!!

85/ 100

Friday, January 14, 2011

2012- பொங்கல் படங்கள் ஒரு அலசல்!!

                              
                                             இந்த பொங்கலுக்கு பல படங்கள் வெளியாகிறது என்றாலும் ஸ்பாட்லைட் இருக்கும் சில படங்களைப் பற்றி அலசுவோம்!!


காவலன்: 
மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படத்தை அப்படியே எடுத்திருந்தால் நல்ல கதையம்சமுள்ள படமாக இருக்கும். இளைய தலைவலிக்காக (ஸாரி .. தளபதிக்காக) ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் வழக்கமான விஜய் படம் போலத்தான் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின் அசின். பல அரசியல் தடைகளை தாண்டி வெளிவரும் படம்.
ஹைலைட்: கிளைமாக்ஸ்


ஆடுகளம்:
தனுஷ் வெற்றிமாறன் வெற்றிக் கூட்டணி மீண்டும் களம் இறங்கியிருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட நிலையில் பொங்கல் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் வருவது இந்தப் படம். நாயகி தாப்சீ தமிழுக்கு புதுசு.
ஹைலைட்:  கோழிச் சண்டை, ஆத்தி ஆத்தி பாடல்


சிறுத்தை:
கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த படம். மீண்டும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். தெலுங்கில் "விக்ரமார்க்கடு" என்ற பெயரில் ரவி தேஜா நடித்து வெற்றி பெற்ற படம். சந்தானத்தின் காமெடியுடன் களை கட்ட வருகிறது. 
ஹைலைட்:  கார்த்தியின் இன்ஸ்பெக்டர் கேரக்டர் மற்றும் வில்லன்.


இளைஞன்:
கலைஞரின் கதை வசனத்தில் பா. விஜய் நடித்து வெளிவரும் படம். கப்பல் கட்டும் தொழிலாளர்களின் கதை. மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன் கதாநாயகிகள். நமீதா வில்லியாக நடித்திருப்பதாக கேள்வி! நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் நடக்கும் கதை.
ஹைலைட்:  கலைஞர் எழுதி பா. விஜய் பேசியிருக்கும் அனல் பறக்கும் வசனங்கள்.


மிரப்பக்காய்: (மிளகாய்)


தெலுங்கில் ரவி தேஜா நடித்து வெளியாகியிருக்கும் நகைச்சுவை திரைப்படம். இன்ஸ்பெக்டராக அவர் நடித்திருக்கும் படத்தில் புதுமுகம் ரிச்சா நாயகியாய் நடித்திருக்கிறார். 
ஹைலைட்:  ரவி தேஜா , சுனில் காமெடி.


அனகனகா ஒ தீருடு: (ஒரு ஊர்ல ஒரு வீரன்)


கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த டிஸ்னி தயாரிப்பில் வெளிவரும் இந்தப் படத்தில் சித்தார்த் மற்றும் சுருதி கமல்ஹாசன் நடித்திருக்கிறார்கள். சிறுவர்களை கவரும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
ஹைலைட்:  கிராபிக்ஸ் காட்சிகள் 


இவை திரையரங்குளில் வெளியாகிறது. இவையல்லாமல் ஆதவனும் அயனும் உங்கள் இல்லம் தேடி வரவிருக்கிறார்கள். இந்தப் பொங்கலை இனிதே கொண்டாடி மகிழுங்கள். பொங்கலோ பொங்கல்!!

Sunday, January 2, 2011

வாய்மை எனப்படுவது யாதெனின்...

                          
                                 தமிழ் என்னும் சொல்லை கேட்கும் போதே சிறு வயதிலிருந்தே எனக்கு ஓர் இனம் புரியா ஈர்ப்பு.. ஆறாம் வகுப்பில் தமிழை இரண்டாம் மொழியாய் எடுத்தவர்களில் நானும் ஒருவன். அவ்வாறு எடுத்தவர்கள் எல்லோரிடமும் "கோனார் தமிழ் உரை" என்ற எளிய தமிழை இன்னும் எளிமையாக்க உதவும் புத்தகம் இருந்தது.
                      
                                என் தந்தை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய் பணிபுரிந்து வந்தார். பள்ளி முடிந்து மாலை நேரங்களில் ட்யுஷன் எடுப்பது வழக்கம். பொதுவாக என்னுடைய பாடப் புத்தகங்கள் எல்லாம் சென்ற வருடம் படித்த மாணவர்களிடமிருந்து பெற்ற புத்தகமாகவே இருக்கும். ஆதலால் பெரும்பாலான சமயங்களில் அதன் அட்டைப்படம் கிழிந்து போயிருக்கும். எனக்கு எப்போதும் புதிய புத்தகங்கள் எடுத்துச் செல்லவே ஆசை. அப்பா மிகவும் கண்டிப்பானதால் புதிய புத்தகங்களுக்காய் என் அம்மாவை அப்பாவிடம் பரிந்துரை செய்யச் சொல்ல அவரோ " இலவசமாய் பழைய புத்தகங்கள் கிடைக்கும் போது புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவானேன். மேலும் காக்கி அட்டையை மேலே போட்டு விட்டால் அதன் அட்டை மறைந்து விடும்" என்பார்.

                            ஒருநாள் காலை நான் எழுந்து வந்தபோது எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. என் தந்தை எனக்காய் ஒரு புதிய கோனார் தமிழ் உரை வாங்கி வந்திருந்தார். அட்டைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த வள்ளுவரைப் பார்த்து எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி . என் சந்தோசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி பள்ளிக்கு எடுத்துச் சென்று மற்ற மாணவர்களிடம் எல்லாம் காட்டினேன். தமிழாசிரியர் பாடம் எடுக்க என் புத்தகத்தை வலியப் போய் நானே கொடுத்தேன். புதிய புத்தகத்தின் உரிமையாளர் என்ற பெருமை என்னை நிலைகொள்ளாமல் செய்ததென்னவோ உண்மைதான். என் நண்பர்கள் நான் தலைகால் புரியாமல் ஆடுகிறேன் என்று சொன்ன வாக்குகளை சட்டை செய்யவே இல்லை.

                            
                             மாலையில் வீடு திரும்பிய நான் என் புத்தகப் பையை மேசை மீது வைத்துவிட்டு கை கால் அலம்புவதற்காகச் சென்றேன். தந்தையார் ட்யுஷனில் பிசியாக இருப்பதை பார்த்த நான் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு பின் படிப்பதற்காக அமர்ந்தேன். புத்தகப் பையை திறந்த எனக்கு பேரதிர்ச்சி. அங்கே திருவள்ளுவரைக்  காணோம். அதாங்க, என் கோனார் தமிழ் உரையை காணோம். அரக்கப் பறக்க பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எவ்வளவு யோசித்தும் எங்கு தொலைத்தேன் என்று நினைவுக்கு வரவில்லை. இதை தந்தையிடம் எப்படி சொல்வது என்ற பயத்தில் கண்ணீர் முட்டியது.
                             
                            சட்டென ஒரு யோசனை தோன்ற, என் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த புத்தகக் கடைக்கு சென்று கோனார் தமிழ் உரை ஒன்றை வாங்கி வந்தேன். அதை மேசை மீது என் தந்தையின் கண்ணில் படுமாறு வைத்துவிட்டு மன திருப்தியுடன் படிக்க ஆரம்பித்தேன் .ட்யுஷன் முடிந்த பின் அவ்வழியே வந்த என் தந்தை மேசை மீதிருந்த புத்தகத்தைப் பார்த்து "என்ன இது" என்றார். "கோனார் தமிழ் உரை" என்றேன். அவரோ விடாமல் "யாருடையது" என்றார். இந்த வினாவை சற்றும் எதிர்பார்க்காத நான் சற்றே தடுமாற்றத்துடன் "என்னுடையது தான்" என்றேன். என் தந்தை என் காதை திருகியபடியே "ஓஹோ, அது உன்னுடைய புத்தகமெனில் இது யாருடையது" என்று அவர் கையிலிருந்த கோனாரை மேசையில் போட்டார். அட்டைப்படத்தில் அழகாய் சிரித்த வள்ளுவர் "வாய்மை எனப்படுவது யாதெனின்.." என்று சொல்வது போலிருந்தது..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...